- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். -  பதிவுகள்.காம் -


சித்திரைப்புத்தாண்டை அண்மையில் கொண்டாடினோம்., பலர் சோபகிருது புத்தாண்டு வாழ்த்துகள்  என்று வாழ்த்தினார்கள். சோபகிருது என்னும் வடமொழி சித்திரைப்புத்தாண்டில் எவ்விதம் நுழைந்தது ? சித்திரைப்புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டா என்பதை ஆராய்கிறது சூர்யா சேவியர் (Surya Xavier)  எழுதிய இம்முகநூற் பதிவு. இப்பதிவில் தன் நிலைப்பாட்டை உணர்ச்சி வசப்படாது , தர்க்கபூர்வமாக , ஆதாரங்களுடன் எடுத்துரைக்கின்றார் பதிவாளர்.  இதனை எனக்கு அறியத்தந்த கவிஞர் தம்பாவுக்கு நன்றி. "சித்திரையை ஆண்டின் தொடக்கமாக கருதுபவர்கள் இதைக் கொண்டாடிவிட்டுப் போவதில் பிரச்சனையில்லை. உலகில் பலபகுதிகளில் பலவிதமான ஆண்டு தொடக்கங்கள் கொண்டாடப்பட்டே வருகிறது. இதை தமிழ் புத்தாண்டு என்று சொல்வதில் தான் பிரச்சனை எழுகிறது. '' என்று பதிவாளர் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாம். எம் பால்ய பருவத்திலிருந்து சித்திரைப்புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றோம். அப்படியே கொண்டாடி வருவதில் பிரச்னையில்லை. தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடத் தேவையில்லை.

இப்பதிவில் பதிவாளார் "இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு." என்றும் கூறியிருப்பார். நான் அதனை முற்றிலும் தவறாகக் கருதவில்லை. நானும் இளவேனில் பங்குனி ,சித்திரை, வைகாசி என்றே கருதுகின்றேன். அப்பொழுதுதான் உயிரினங்கள் பலவற்றின் வசந்த காலம் அப்பொழுதுதான் ஆரம்பமாகின்றது. இலை உதிர்ந்த மரங்கள் அப்பொழுதுதான் தளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் பதிவாளர் "முன்பனி (புரட்டாசி - ஐப்பசி),  பின்பனி (கார்த்திகை - மார்கழி)" என்று கூறுவதையும் என்னால் ஏற்க முடியவில்லை. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் பின்பனிக்காலம் 'தை - மாசி'தான்.  அதனால்தான் 'மாசிப்பனி மூசிப்பெய்யும்' என்று நாம் கூறுவதுண்டு என்றும் கருதுகின்றேன். உண்மையில் என் அனுபவத்தின்படி மாசிப்பனி மூசித்தான் பெய்யும். - வ.ந.கிரிதரன் -


கிருஷ்ணரும், நாரதரும் கூடிப்பெற்ற 60 பிள்ளைகளில் 37 வது பிள்ளையின் பெயர் சோபகிருது. - சூர்யா சேவியர் (Surya Xavier)

ஒருமுறை நாரதர், 'கடவுள்' கிருஷ்ணரைப் பார்த்து, "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம்.  அதற்குக் கிருஷ்ணர், "நான் உடன் இல்லாமல், வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தாராம். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றாராம்.

கிருஷ்ணர் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் .  பின் 'கடவுள்' கிருஷ்ணருடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றாராம். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்களாம். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்களாம். இதுதான் சித்திரையை புத்தாண்டு என்று சொல்வதற்கு சொல்லப்படும் புராணக்கதை. இக்கதைக்கு ஆதாரம் எது? சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழ் பண்டிதராகப் பணியாற்றிய ஆ.சிங்காரவேலு முதலியாரால் தொகுக்கப்பட்டு, இராமநாதபுரம் சேதுபதி பரம்பரையில் வந்த பாண்டித்துரை தேவர் உதவியால் 1910 வெளியிடப்பட்ட நூல் அபிதான சிந்தாமணி. அபிதான சிந்தாமணி நூலின் 1392 ம் பக்கத்தில் தான், வருடப்பிறப்பு குறித்த, மேற்கூறப்பட்ட இக்கதை எழுதப்பட்டுள்ளது. 60 பெயர்களில் பிரபவ தொடங்கி அட்சய வரை எதுவும் தமிழ் பெயர் இல்லை.

1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய.

சித்திரையை ஆண்டின் தொடக்கமாக கருதுபவர்கள் இதைக் கொண்டாடிவிட்டுப் போவதில் பிரச்சனையில்லை. உலகில் பலபகுதிகளில் பலவிதமான ஆண்டு தொடக்கங்கள் கொண்டாடப்பட்டே வருகிறது. இதை தமிழ் புத்தாண்டு என்று சொல்வதில் தான் பிரச்சனை எழுகிறது. எனவே தான் தமிழறிஞர்கள் பலகாலங்களில் கூடி தொடர் விவாதங்கள் நடத்தி, ஆய்வு செய்து, தை மாதமே தமிழ்ப்புத்தாண்டு என அறிவித்தார்கள். தமிழறிஞர்கள் யார்?

01. மறைமலை அடிகளார் (1921)
02. தேவநேயப் பாவாணர்
03. பெருஞ்சித்திரனார்
04. பேராசிரியர் கா.நமசிவாயர்
05. இ.மு. சுப்பிரமணியனார்
06. மு.வரதராசனார்
07. இறைக்குருவனார்
08. வ. வேம்பையனார்
09. பேராசிரியர் தமிழண்ணல்
10. வெங்காலூர் குணா
11. கதிர். தமிழ்வாணனார்
12. சின்னப்பத்தமிழர்
13. கி.ஆ.பெ. விசுவநாதர்
14. திரு.வி.க
15. பாரதிதாசனார்
16. கா.சுப்பிரமணியனார்
17. ந.மு.வேங்கடசாமியார்
18. சோமசுந்தர் பாரதியார்
19. புலவர் குழுவினர் (1971)
மலையகத்தில்
01. கோ.சாரங்கபாணியார்
02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்
03. அ.பு.திருமாலனார்
04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்
05. கம்பார் கனிமொழி குப்புசாமி
06. மணி. வெள்ளையனார்
07. திருமாறன்
08. இரெ.சு.முத்தையா
09. இரா. திருமாவளவனார்
10. இர. திருச்செல்வனார்

இவர்களோடு 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி விவாதித்து இதை ஆரிய திணிப்பு என முடிவு செய்தனர். எனவே சித்திரை வருடப்பிறப்பினை விடுத்து தை முதல் நாளே தமிழாண்டின் தொக்கம் என்றார்கள். தை தொடக்கம் என்பதற்கான ஆய்வு என்ன?

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாள் என்பதை ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.

1.வைகறை
2.காலை
3.நண்பகல்
4.எற்பாடு
5.மாலை
6.யாமம்

ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும். அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.

(1 நாழிகை - 24 நிமிடங்கள்
60 நாழிகை - 1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1440 நிமிடங்கள்  என்பது
24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் -1 நாள்.
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்.
ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ,  ஆண்டுக்குரிய தமது வாழ்வை, *ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்*.
1. இளவேனில் - (தை---மாசி)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)
3. கார் - (வைகாசி - ஆனி)
4. கூதிர் - (ஆடி - ஆவணி)
5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)
6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.  காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகிறான். பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். சித்திரையை கொண்டாடுவதில் பிரச்சனையில்லை. சித்திரையும் மாதங்களில் ஒன்று தான். ஆனால் அது தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாட இயலாது.

உச்சபட்சக் குரலெடுத்து பாவேந்தர் பாரதிதாசன் பாடினார்.

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம்  கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

என்றார்.
அன்பும்-நன்றியும்
சூர்யா சேவியர்
14-04-23

நன்றி: சூர்யா சேவியரின் முகநூற் பதிவு