நான்கு நாட்களுக்கு முன் அதிரடியாக ஒரு செய்தி மின்னஞ்சல் பெட்டிக்குள் விழுந்திருந்தது. வாசிப்பதற்கு முன்னரே படங்கள் உள்ளடக்கத்தின் பெரும்பாகத்தை வெளிப்படுத்தி விட்டன. தலைப்பு அசத்தலாக இருந்தாலும் தலைக் கதிரையில் இருந்தவரைக் கண்டதும் சப்பென்று போய்விட்டது. ஆனாலும் முயற்சிகளின் நோக்கம் நல்லதாயின் அவை ஆராயப்பட வேண்டும் என்பதில் சம்மதம் உண்டென்ற படியால் உள்ளே சென்றேன்.

அது என்னவோ உலகத்தின் பல பிரகடனங்கள் இமாலய ‘உச்சி’ முகர்ந்துதான் செய்யப்படவேண்டுமென்ற விதியோ தெரியாது. ‘இமாலயப் பிரகடனம்’ என்ற பெயருடன் வந்தவற்றில் இது முதலும் கடைசியுமல்ல. திம்பு வும் பிரகடனப் பிரசித்தி பெற்றதுதான். இவற்றில் எப்பிரகடனமாவது வெற்றி பெற்றுள்ளவையா என்பதை அறிய சாத்திரி ஒருவர் அமர்த்தப்பட்டுள்ளார்.

அறிக்கை உலகத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டு கனடிய தமிழர் பேரவையினால் அஞ்சல் செய்யப்பட்டிருந்தது. அறிக்கை நீட்டி விசாலித்து எழுதப்பட்டிருந்தது. அதில் ஆச்சரியம் கொள்ளத் தேவையில்லை. அதன் சாராம்சம் இதுதான்.

உலகத் தமிழர் பேரவையும் சிறந்த இலங்கைக்கான சங்கங்கள் (Sangha for Better Sri Lanka) என்ற அமைப்பும் கூட்டாக எடுத்த முயற்சியின் பலனாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு உரையாடல் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்தது என்றும் அதன் பலனாக ஏப்ரல் 2023 அன்று நேபாளத்திலிருக்கும் நாகர்கோட் என்னுமிடத்தில் இரு தரப்புகளும் சந்தித்திருந்தார்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதன் பலனாக உருவாகியதே ‘இமாலயப் பிரகடனம்’. இவ்வேளையில் ஜூலை -ஆகஸ்ட் 1985 இல் பூட்டானில் இருந்து வெளியிடப்பட்ட ‘திம்பு பிரகடனம்’ உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். அது பற்றிப் பின்னே பார்க்கலாம்.

நாகர்கோட்டில் சந்தித்தவர்கள் இலங்கையின் பல மாவட்டங்களிலுமுள்ள நிக்காயா எனப்படும் புத்த குருமார் சங்கங்களின் பிரதிநிதிகளும் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுமாவர். இப்புத்த குருமார்களில் அஸ்கிரிய பீடாதிபதி, மல்வத்த பீடாதிபதி, வட-கிழக்கு மாகாணங்களுக்கான பீடாதிபதி, முன்னாள் இலங்கை மனித உரிமைகள் சபை அங்கத்தவராக இருந்த தேரர் உள்ளிட்ட முக்கியமான தேரர்கள் இருந்தார்கள். ரத்தினச் சுருக்கம் கருதி எவரது பெயர்களும் இங்கு குறிப்பிடப்படவில்லை.
பிரகடனம்

ஒரு குறிப்பிட்ட இனத்தின் கருத்தியல் அடிப்படைகளில் காலத்தை வீணடிக்காது இலங்கையை ஒரு புதிய முற்போக்கான நாடாக உருவாக்கவேண்டுமென்ற விழைவில் உருவாக்கப்பட்ட இப்பிரகடனம் ஆறு அம்சங்களைக் கொண்டிருக்கிறது

    எந்தவொரு சமூகமும் தனது அடையாளத்தையும் வாழிடப் பெருமையையும் இழந்துவிடலாமென்ற அச்சமில்லாது வாழக்கூடிய பன்முக அடையாளத்தைப் பாதுகாத்தல், ஊக்குவித்தல்;

    பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீள்தல், உள்ளூர் உற்பத்தி, புலம் பெயர் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டாரின் முதலீடுகளுக்கு வசதிசெய்து கொடுத்தல், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்வதை உறுதிசெய்தல் ஆகிய செயற்பாடுகளின் மூலம் இலங்கையை ஒரு உறுதியான மத்திம வருமான நாடாக மாற்றுதல்;

    தனியார் மற்றும் கூட்டுரிமைகள், சகல மக்களின் சமத்துவம், சமக்குடியுரிமை, பொறுப்புள்ள நிறுவனங்கள், மாகாணங்களுக்குப் போதுமான அதிகாரப் பகிர்வு ஆகியவற்றை உறுதிசெய்யவல்ல புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கல்; அது நிறைவேற்றுப்படும்வரை ஏற்கெனவே இருக்கும் அரசியலமைப்பின் பிரிவுகளை விசுவாசத்துடன் செயற்படுத்தல்;

    ஒன்றிணைந்த, பிரிக்கப்படாத நாட்டில் மக்களின் மத, கலாச்சார மற்றும் இதர அடையாளங்களை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கான மதிப்பை வழங்குதல், இன, மத சிறுபான்மைக் குழுக்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுதல்;

    கடந்த காலங்களிலிருந்து கற்றுக்கொண்டு பொறுப்புக்கூறல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் இதுபோன்ற துன்பங்கள் இனிமேல் நிகழாது என்பதை உறுதிசெய்யக்கூடிய நல்லிணக்கம் கண்ட இலங்கையொன்றை உருவாக்குதல்;

    இரு-தரப்பு, பல்-தரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச கடமைகளை நிறைவேற்றுதல், சுயாதீனமானதும், மாறியல்பு கொண்டதுமான வெளிவிவகாரக் கொள்கையைப் பின்பற்ற நடவடிக்கைகளை எடுத்தல், உலகின் அமைதியான, வளமான, ஜனநாயக நாடுகளின் மத்தியில் பெருமதிப்பைப் பெற்ற ஒரு நாடாக இலங்கையை உருவாக்குதல்

இப்பிரகடனம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி விக்கிரமசிங்கவைச் சந்தித்து இவ்விருதரப்பும் மேற்கண்ட பிரகடனத்தை அவருக்குச் சமர்ப்பித்திருந்தது. இதைத் தொடர்ந்து இலங்கையின் 25 மாவட்டங்களிலுமுள்ள அனைத்து மத சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்து மத சமூகங்களுக்கிடையேயான செயற்குழுக்களை உருவாக்குவதே தமது நோக்கம் எனவும் அதே வேளை இப்பிரகடனம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்கப்பட்டதுடன் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமெனத் தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதே வேளை புலம்பெயர் சமூகங்கள் வதியும் நாடுகள் மற்றும் இந்தியா ஆகியவற்றுடன் தாம் உரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்கள்.


இமாலயப் பிரகடனம் குறித்து பலரும் பலவித கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். எதிர்பார்த்த வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துவிட்டார். புலம்பெயர் எதிர்க்கட்சிகள் கொடுக்குகளை இழுத்துக்கட்டிக்கொண்டு வெட்டி ஒட்டல்களுடன் வண்ண வண்ண அறிக்கைகளையும், ‘உங்கள் குழய்களையும்’ விடத் தொடங்கிவிட்டார்கள். அது முற்றிலும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதில் ஒருவரும் ஏமாறியிருக்கமாட்டார்கள்.

இலங்கையில் இதுவரை நடைபெற்ற இனக்கலவரங்கள், ஒப்பந்த முறிவுகள், அத்துமீறிய குடியேற்றங்கள், நில அபகரிப்புகள் போன்றவற்றின் பின்னால் அரசியல்வாதிகளுடன் புத்த சங்கக்காரரே இருந்துவந்துள்ளார்கள். அதே வேளை சிங்கள இனவாதிகளும் தமது அரசியல் தேவைகளுக்காக அவர்களையே பாவித்து வந்திருக்கிறார்கள். அந்த வகையில் சங்கக்காரர்களோடு முதலில் பேசுவது அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 2015 ம் ஆண்டு தேர்தலில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு பின்னணியில் இப்படியானதொரு நடவடிக்கையே எடுக்கப்பட்டிருந்தது. அதில் சம்பந்தப்பட்ட தேரர் சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்ட நேர்மையான ஒருவர். எனவே இது சாத்தியமாகாது என உதறித்தள்ளிவிட முடியாத ஒன்று.

ஆனால் இப்பிரகடன உருவாக்க முயற்சியில் ஏன் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளின் பங்கு இருக்கவில்லை என்பது ஒரு கேள்வி. இதர அரசியல் கட்சிகள், சிவில் சமூகங்கள், மதத் தலைவர்களுடன் உரையாடல்களை மேற்கொள்ள வேண்டுமென்பது வலியுறுத்தப்பட்டிருப்பது நல்லது.

அடுத்த வருடம் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றேயாகவேண்டும் எனக் கங்கணம் கட்டிவிட்டார். தன்னை ஒரு ‘தெரிவுசெய்யப்படாத ஜனாதிபதி’ என நகைப்புக்குள்ளாக்குவது அவர்க்கு மிகுந்த கவலை தருவது என அவரே கூறியிருக்கிறார். “என்னைத் தெரிவுசெய்து அனுப்புங்கள், நான் வெட்டிப் புடுங்கி விடுவேன்” என்ற பிரகடனத்தை அவர் ‘எத்தினிக்’ வாலாக்களிடம் பலதடவைகள் கூறியிருக்கிறார். Known devil is better than an unknown angel என்ற வாசகம் நமக்குப் பாடமாகிவிட்டதொன்று. நமக்கென்று ஒரே ஒரு பாதைதான் திறக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த ‘டெவிலுடன்’ தான் வாழ்க்கையை நடத்வேண்டும்.

இந்தப் பிரகடனத்தின் சூத்திரதாரிகளில் ரணில் இல்லாமல் இருக்க முடியாது. 2002 ரணில் தலைவரிடம் கையெழுத்து வாங்கிய ஒப்பந்தம் கிழித்தெறியப்படுவதற்கு சங்கக்காரர் தான் காரணமெனக் கூறப்பட்டது. எனவே இப்போது ரணில் சங்கக்காரரிடம் முதலில் கையெழுத்தை வாங்கியிருக்கலாம். நம்மவர்கள் இதற்குள் உள்வாங்கப்பட்டிருக்கலாம். யார் குத்தினாலும் பறுவாயில்லை. குத்தாமல் குறைசொல்லக்கூடாது.

நாட்டைப் பொருளாதாரச் சீரழிவிலிருந்து கொண்டுவரக்கூடிய வல்லமை ரணிலுக்கு மட்டும்தான் உண்டு. அமெரிக்க குளிசைகள் இல்லாமல் அவரும் இயங்க மாட்டார். கொஞ்சம் முண்டுபவர்களுக்கு அமெரிக்கா மற்ற குளிசைகளைக் கொடுத்துவிடும். இதை நன்காக அறிந்த மகிந்தர் நாடு சரிப்பட்டு வரும் வரைக்கும் இளவரசனைப் பொத்தித் தான் வைத்திருப்பார். நாடு சரிப்பட்டு வந்த பிறகு ரணிலைப் பழிகூறி மகனை ஜனாதிபதியாக்குவது அவரது கனவு. எனவே ரணிலுக்கு இன்னுமொரு தவணை கட்டாயம் கொடுக்கப்படும்.

இப் பிரகடனம் பற்றி இந்திய ஊடகங்கள் எதையும் பேசவில்லை. ஜுஜுப்பி விசயம் என விட்டிருக்கலாம். அல்லது மூன்றாவது துவாரகாவைக் கண்டுபிடிப்பதில் மினக்கெட்டுக்கொண்டு இருக்கலாம். இந்தியாக்கும் ரணிலுக்கும் பெரிதாக ஆகாது. என்றாலும் சங்கக்காரர் தான் இலங்கையில் நாட்டாண்மைக் காரர். அவர்களிலும் அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகள் மேலோங்கிகள். அவர்களையும் உள்வாங்கி இப்பிரகடனம் வார்க்கப்பட்டிருந்தால் அது நல்ல முயற்சி. அல்லது அவர்களால் தான் இப்பிரகடனம் கிழித்தெறியப்படும்.

என்ன இருந்தாலும் பேரவைக்காரரின் முயற்சியைக் குறைகூற வேண்டியதில்லை. “ட்றை பண்ணினனாங்கள் சரி வரேல்லை” என்று சொல்வதற்காவது ஒரு சந்தர்ப்பமாக இருக்கட்டும். வெற்றியாகி விட்டால் எல்லோருமே வெடி கொழுத்தலாம். இப்போதைக்கு வாழ்த்துக்கள்.

நன்றி: மறுமொழி.காம்