மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியும், வடமொழியும்!

" யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்.
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்!"

இங்குள்ள 'நாமமது தமிழரெனக் கொண்டிங்கு' என்னும் தொடரில் வரும் 'நாமம்' வடசொல்.

'யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர் போல், இளங்கோ போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை"

இதில் வரும் 'பூமி' வடசொல்.

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்'

"மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை"

இங்கு வரும் 'மகிமை' வடசொல். சாத்திரங்கள் வடசொல்.

இவை போல் பாரதியாரின் புகழ்பெற்ற கவிதைகள் அனைத்திலிருந்தும் வடசொற்களை *சுதந்திரம், அக்கினி, பாதகம், மோகம் என்பவை போன்ற) பலவற்றை எடுத்துக்காட்டலாம்.

இவற்றுக்காகப் பாரதியாரின் கவிதைகளில் வடமொழி கலந்துள்ளன என்று ஒதுக்க முடியுமா? இல்லை. ஒதுக்க முடியாது.  தமிழ்மொழியில் வள்ளுவன், இளங்கோ, கம்பனுக்கு அடுத்த மிகப்பெரும் கவியாக நான் அவனையே கருதுவேன்.  ஏனென்றால் நான் தமிழ்மொழி என்று கருதுவது இன்று வாழும் தமிழ் மொழியைத்தான். இதுவரைகாலமும், பிறமொழிகள் பலவற்றிலிருந்து பல சொற்களை உள்வாங்கி வளமடைந்து, பரிணாமம் அடைந்து இன்று எம் மத்தியில் வழங்கும் தமிழ் மொழியைத்தான். தற்போது வழங்கும் தமிழ் வாழும் தமிழ். இனியும் வாழப்போகும் தமிழ். ஏற்கனவே வாழ்ந்த தமிழ். இத்தமிழை ஏற்பதில் எனக்கு எவ்விதத்தயக்கமும் இல்லை.

தமிழ், தனித்தமிழ் என்று ஆவேசமாகக் கூக்குரல் இடும் கட்டுரைகள் பலவற்றை அவ்வப்போது பத்திரிகைகளில் பார்த்திருக்கின்றேன். அவற்றிலெல்லாம் வடமொழிச்சொற்களையெல்லாம் தூய தமிழ்ச்சொற்களாகக் கருதிப் பாவித்திருப்பார்கள்.
தமிழா, வடசொல்லா அல்லது ஏனைய  மொழிச் சொல்லா என்று பிரித்துப்பார்க்க முடியாத அளவுக்குத் தமிழ் ஏனைய மொழிகளைப்போல் சொற்களை உள்வாங்கி வளமடைந்திருக்கின்றது. இவற்றையெல்லாம் அகராதிகள் கொண்டு பிரித்துப்பார்த்துக் கருத்தறிந்து பேசுவது , எழுதுவதென்றால் நடைமுறைச் சாத்திரமானதொன்றா?  இதனால் யாருக்குப் பயன்?

விருத்தாலசம் என்ற தன் பெயரைத் தமிழாக்கி மறைமலையடிகள் என்று வாழ்ந்து மறைந்தார் தமிழ் அறிஞரான மறைமலையடிகள். தனித்தமிழ் என்று ஆவேசமாகக் குரல் எழுப்புவோரில் அவரது எழுத்துகளை இன்று படித்தவர்கள் எத்தனை பேர்? தமிழில் பிறமொழிகளின் ஆதிக்கம் என்று ஆய்வுகள் செய்வது அவசியம். ஏனென்றால் தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சியை அறிவதற்கு அவ்வகையான ஆய்வுகள் அவசியம். அவ்விதமான ஆய்வுகளைச் செய்பவர்கள் போற்றுதலுக்குரியவர்கள். தமிழ் அறிஞர் மறைமலையடிகளும் அவ்வகையான அறிஞர்களில் ஒருவர்.

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்" - பாரதியார் -


கம்பர்

கம்பராமாயணம் பற்றிய விக்கிபீடியாக் கட்டுரையில் பின்வருமாறு வருகின்றது:

" வடமொழி கலவாத தூய தமிழ்ச்சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர், தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார்."

உண்மையில் கம்பர் வடசொல் கலவாத தூய தமிழ்ச் சொற்களையா கம்பராமாயணத்தில் பாவித்திருக்கின்றார். முதலில் கம்பராமாயணம் என்னும் பெயரிலேயே வட சொல் கலந்துள்ளது.  ராமாயணத்திலுள்ள அயணம் வட சொல். கம்பராமாயணத்தைக் கம்பர் பால காண்டம், யுத்த காண்டம், சுந்தர காண்டம் என்று பிரித்திருக்கின்றார். இங்குள்ள பால, யுத்த, சுந்தர எல்லாமே வடசொற்கள். கம்பர் வடசொற்களை நிறையப் பாவித்துள்ளார். ஞானம், சந்திரன், ஆரம், அண்டம்,  ஆதி, அஞ்சலி..  என்று  பல வடமொழிச் சொற்கள் கம்பராமாயணத்தில் கலந்துள்ளன. கம்பராமாயணம் இணையத்தில் முழுமையாக உள்ளது. நேரம் கிடைக்கும்போது வரிவரியாக ஆராய்ந்து பாருங்கள். வட சொற்கள் பலவற்றை நீங்கள் காண்பீர்கள்.

என்னைப்பொறுத்தவரையில் அனைத்துப் பிறமொழிச் சொற்களையும் உள்வாங்கியதால் தமிழ் வளமடைந்ததாகவே கருதுகின்றேன். ஆங்கிலம் கூட அதிக அளவில் பிறமொழிச் சொற்களை உள்வாங்கியுள்ள மொழி. பிறமொழிச் சொற்களை உள்வாங்கினாலும் அவற்றைத் தமிழில்தானே எழுதுகின்றோம். அப்படியிருக்கையில் தமிழ் எப்படி அழியும்?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.