அத்தியாயம் இருபத்தியொன்று: பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்! கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்!

தொலைகாட்சியில் காட்டுயிர்கள் பற்றிய ஆவணக்காணொளியொன்று ஓடிக்கொண்டிருந்தது. மிருகங்கள் ஒன்றையொன்று கொன்று தின்று இருப்பில் தப்பிப் பிழைக்கும் கொடூர காட்சிகளை உள்ளடக்கும் காணொளி.

"என்ன கண்ணா, அப்படியென்ன டிவியிலை போய்க்கொண்டிருக்கு நீ ஆர்வமாய்ப் பார்க்கிறதுக்கு" என்று கூறியபடி வந்தாள் மனோரஞ்சிதம். வந்தவள் அருகில் நெருங்கி அணைத்தாள்.

"காட்டுயிர்களைப் பற்றிய காணொளியொன்று கண்ணம்மா. தப்பிப்பிழைத்தலுக்காக உயிர்கள் ஒன்றையொன்று கொன்று தின்பதை விபரிக்கும் காணொளி. பார்ப்பதற்குக்  கொடூரமான காட்சிகளைக்கொண்டது. நீ தாங்க மாட்டாய். பேசாமல் போய்விடு கண்ணம்மா" என்றேன்.

"கண்ணா, நான் இது போன்ற பல 'டொக்குமென்ரி'களைப் பார்த்திருக்கின்றேன். என்னால் இவற்றைத் தாங்கிக்கொள்ள  முடியும். கொடூரமானவைதாம். ஆனால் இருப்பு இப்படித்தானே இருக்கிறது கண்ணா"

"கண்ணம்மா,  நீ கூறுவதும் சரிதான். எனக்கு இதனைப் பார்க்கையில் பாரதியின் கவிதை வரிகள் சில நினைவுக்கு வருகின்றன."

"என்ன வரிகள் கண்ணா?"

"கண்ணம்மா, அவரின் விநாயகர் நான்மணி மாலை என்னும் கவிதையில் நினைவில் நிற்கும்படியான , ஆழ்ந்த பொருளுடைய பல வரிகளுள்ளன. அவரது புகழ்பெற்ற வரிகளான ' நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்வ் இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்.' என்னும் வரிகள் இக்கவிதையில்தான் வருகின்றன.  இக்கவிதையில் வரும் மேலும் சில வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை  கண்ணம்மா."

"என்ன வரிகள் கண்ணா?"

"கண்ணம்மா, அவை இவைதாம்:

பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்.
மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவுமென் வினையா விடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புட நிணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானாகா சத்து நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ்
சாவு நீக்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க என்பேன்! இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுள மிரங்கி
'அங்ஙனே யாகுக' என்பாய், ஐயனே! "

" கண்ணா, நானும்  இவ்வரிகளை வாசித்திருக்கின்றேன். "

"ஆனால் கண்ணம்மா, சக உயிர்களுடன் அன்புகொண்டு, மிருக வதை தவிர்த்து மனிதர் வாழும் ஒரு நிலை வருவதற்குச் சாத்தியமுண்டு. ஆனால் இங்கு வாழும் மிருகங்கள் ஒன்றையொன்று கொன்று வாழாமல் இருப்பதற்கு ஒரு போதுமே சாத்தியம் ஏற்படப் போவதில்லை.  புலி மானைக் கொல்லாவிட்டால் , அதன் குட்டிகள் தப்பிப்பிழைப்பது எப்படி?  கழுகு ஏனைய உயிரினங்களைக் கொல்லாவிட்டால் அதன் குஞ்சுகள் தப்பிப்பிழைப்பது எப்படி?  எதற்காக இப்புவியில் இவ்விதமான உணவுச்சங்கிலியை அடிப்படையாகக்கொண்டு இருப்பு படைக்கப்பட்டுள்ளது. அல்லது பரிணாமத்துக்குள்ளாகியுள்ளது. இதனைத்தான் என்னால் ஒருபோதுமே புரிந்துகொள்ள முடியவில்லை கண்ணம்மா."

"கண்ணா, இருப்பின் இயல்பு இதென்று ஏற்றுக்கொண்டு வாழ்வதைத் தவிர வேறு வழியேதும் இருப்பதாகத் தெரியவில்லை. "

"மண்மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் யாவும்  இன்பமுற்றன்புட நிணங்கி வாழ்ந்திட பாரதி  விரும்பியதுபோல் செய்தால் எவ்வளவு நன்றாகவிருக்கும்?  பாரதியையும் இருப்பில் உயிர்களுக்கிடையில் நிலவும் வன்முறை பாதித்திருக்க வேண்டும். அதனால்தான் அவனால் இவ்விதம் கோரிக்கை வைக்க முடிகின்றது. "

"கண்ணா, பாரதி ஓர் அற்புத மானுடன். அவனால் எவ்விதம் இவ்விதமெல்லாம் சிந்திக்க எழுத முடிந்தது என்று நானும் அடிக்கடி சிந்திப்பதுண்டு. வியப்பதுண்டு."

"இருப்பின் இந்தக் கோணல்தான் எனக்கு இவ்விருப்பே ஒருவித 'புறோகிறா'மோ என்னும் சந்தேகத்தை அடிக்கடி ஏற்படுத்துகின்றது.  அதற்கு முக்கிய காரணம் இங்குள்ள உயிரினங்கள்,  விருட்சங்கள் அனைத்தின் அடிப்படையே  டி.என்.ஏ.  ஆலமரத்தின் மிக நுண்ணிய விதையிலுள்ள டி.என்.ஏ அதனை எவ்வளவு பிரமாண்டமான விருட்சமாக வளர உதவுகின்றது.  இந்த டி.என்.ஏயின் அடிப்படையில் உருவான இருப்பில்தான் எத்தனை வகை உயிரினங்கள். கண்ணம்மா , உனக்கு ஒன்று தெரியுமா? காளானின் டி.என்.ஏ  மானுடரின் டி.என்.ஏயுடன் பெருமளவு  ஒத்திருக்கின்றது. இதுபோல் இங்குள்ள அனைத்து உ யிரினங்களின் டி.என்.ஏக்களும் மானுட டி.என்.ஏயுடன் பல்வேறு வீதங்களில் ஒத்திருக்கின்றது. "

"இருப்பு எத்துணை அற்புதம் கண்ணா!"

"உண்மைதான் கண்ணம்மா. ஆனால் ஏன் இவ்விதம் இருப்பை இதனை உருவாக்கிய புறோகிறாமர் உருவாக்கினார்? அதுதான் புரியவில்லை. பிறப்பிலிருந்து இறப்பு வரையில்  உயிர்கள் அனைத்தும் எத்தனை வகையான இன்ப, துன்ப உணர்வுகளுக்கு உள்ளாகின்றன. நிலையற்ற இருப்பில் இவை எதற்காக? இதுதான் எனக்குப் புரியவில்லை கண்ணம்மா"

இதைக் கேட்டதும் மனோரஞ்சஞ்சிதம் " எனக்கும்தான் கண்ணா" என்றாள்.  மறுகணமே "கண்ணா, இருப்பை இருப்பதுபோல் ஏற்றுக்கொள்வோம். இன்பமாக இருப்போம். என்றும் இருக்கும் வரை இன்று புதிதாய் பிறப்ப்போம்." என்றாள் அவளுக்கேயுரிய வழக்கமான அந்தப் புன்சிரிப்புடன்.

மனோரஞ்சிதம் இவ்விதம்  கூறவும் அவளைக் காதலுடன்  நோக்கினேன்.  கூடவே  "இவ்விருப்பில் என் இன்பமே நீதான் கண்ணம்மா" என்று கூறியவாறே வாரியிழுத்து அணைத்துக்கொள்கின்றேன்.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.