மீஜி சின்ரோ ஆலயம் ( Meiji Shrine ) யப்பான் செல்பவர்கள் தவிர்க்க முடியாத இடம். அதாவது இந்தியாவில் புது டெல்கியில் பிர்லா மந்தீர் என பிர்லாவின் பெயரால் கோவில் இருப்பது போல் இங்கு மீஜி என்ற யப்பானிய மன்னரின் பெயரால் இந்த ஆலயம் உள்ளது . இந்த ஆலயம் மன்னரால் கி.பி. 1800 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இந்த ஆலயம் இருப்பது, உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மரங்களால் உருவாக்கப்பட்ட 175 ஏக்கர் காட்டுக்குள்ளே நாம் நடந்து போக வேண்டும். இந்த காடு இருக்கும் நிலம் ஆரம்பத்தில் மன்னருக்கு சொந்தமானது .

நாங்கள் போனபோது பகல், இலையுதிர்காலத்து மம்மல்ப் பொழுதாகக் கசங்கி விட்டது. ஆனாலும் அக்காலத்தில் மட்டும் தெரியும் அருங்காட்சி : வானத்தை நோக்கி எரியும் தீக்கொழுந்துகளாக தெரிந்த யப்பானிய மாப்பிள் இலைகளைக் கண்களால் தரிசிக்க முடிந்தது. இயற்கையழகு எம்மை சுற்றிவரக் காடாகச் செழித்திருக்கும் இந்த இடத்திலுள்ள ஆலயம் வனத்திடையே மரத்தால் கட்டப்பட்ட அழகான கட்டிடம். நமது ஊரில் போல் கோயில் கட்ட இயற்கையை அழிக்கவில்லை.

இதுவே யப்பானில் பெரிய சின்ரோ ஆலயமாகும். கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் புதுவருடத்திற்கு முன்னைய நாளிலும் புதுவருட தினத்திலும் இங்கு வருவார்கள் . இந்த ஆலயங்களில் எங்கள் ஊரில் திருமணங்கள் நடப்பது போன்ற சடங்குகளும் நடக்கும். பிள்ளை பிறந்தால் அல்லது வயதுக்கு வந்தால் இங்கு அது ஒரு வைபவமாக நடக்கும்: எங்கள் கோயில்களில் நடக்காதது. மரணக்கிரியைகளை சின்ரோ ஆலயங்களில் நடத்த முடியாது. ஆனால் , பௌத்த ஆலயங்களில் நடத்தலாம் என வழிகாட்டி கூறினார்.மனிதர்களில் வாழ்வின் தருணங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது. ஆலய வளாகத்தின் உள்ளே சென்றதும் தெரிந்தது: ஆலயத்தின் முன்பு ஒரு பலகை தொங்கியது. அதில் மடித்த கடுதாசிகள், பழங்களாகத் தொங்கின. நெருங்கிப் பார்த்தபோது புரிந்தது: நீங்கள், உங்கள் எதிர்கால விருப்பங்களை, வேண்டுதலை எழுதிப் போட முடியும். நான் ஒன்றை நெருங்கிப் பார்த்தபோது, விக்டர்- ஆன் இருவரது பெயர் எழுதி அதன் கீழ் அவர்கள் காதல் நிலைக்க வேண்டும் என ஒரு கடுதாசியில் எழுதியிருந்தது. அதாவது ஜப்பானியரைப் பின்பற்றி எங்களைப்போல் ஊர் பார்க்க வந்தவர்கள் எழுதியிருக்கிறார்கள் என நினைத்தேன்.

இங்கு மியூசியம் உள்ளது. அத்துடன் யுத்த அழிவுகளின் புகைப்பட கண்காட்சியும் உள்ளது.இந்த ஆலயம் இரண்டாவது யுத்தத்தில் அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது.

இந்த ஆலயம் ஏன் முக்கியத்துவப்படுகிறது?

மீஜி அரசரே 1868இல் யப்பானை மீளக் கட்டமைத்தவர். அதற்கு முந்தைய காலங்களில் யப்பான், எந்த அன்னியர்கள் உள்ளே அனுமதிக்காது தனியாக நிலவுடைமை சமூகமாகப் பல நூறு ஆண்டுகள் இருந்தது. ஆனால் 1868ல் மிஜீ அரசரால் மேற்கு நாட்டவர்கள் உள்ளே அழைக்கப்படுவதும், புதிய போர் சாதனங்கள், கட்டிடத் தொழில்நுட்பம் என்பன உள்வாங்கப்படுகிறது . அக்காலத்தில் பிரித்தானியர்கள் முக்கியமாக வருகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் பிரான்சியர்கள் என வருகிறார்கள்

இந்த மீளமைப்பில் அரசர் ஐந்து கட்டளைகளை நாட்டுக்கு வகுக்கிறார் (Charter Oath in Five Article 14ம் திகதி மார்ச் மாதம் 1868 என ஒரு அறிக்கை இந்த சின்ரோ ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்தது.

கீழே உள்ளது எனது மொழிபெயர்ப்பாகும்

1) மக்கள் சம்பந்தப்பட்ட எல்லா விடயங்களும் மக்களிடையே பேசித் தீர்மானிக்கப்படும்

2) சமூகத்தின் படிகளில் மக்கள் எந்த தரத்திலும் இருந்தாலும் அவர்கள் இதயசுத்தியுடன் முழு திறமையுடன் நாட்டுக்கு உழைக்க வேண்டும்.

3) பழைமையான பழக்கங்கள், சடங்குகள் கைவிடப்பட்டு, பொது அறிவுக்கு ஒத்த விடயங்கள் கைக்கொள்ளவேண்டும்.

4) நாட்டின் புதிய அறிவை பெருக்கும் அதேவேளையில் மன்னரை முன்வைத்து அமைந்துள்ள நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரம் பேணப்பட வேண்டும்.

5) இறுதியாக இந்த நாடு பெரிய மாற்றத்தை எதிர் நோக்கியபடி உள்ளதால் மன்னராகிய நான் முக்கியமான விடயங்களில் ஈடுபடும்போது இதயசுத்தியுடன் உங்கள் ஆதரவு தேவையாகும். அதை நீங்கள் நல்கவேண்டும்.

மன்னரின் கட்டளைகள் இக்காலத்தில் எமக்குச் சாதாரணமாக இருந்தாலும், இன்றும் யப்பானில் மக்கள் நடத்தைகளில் அக்காலத்தின் கட்டளைகள் பிரதிபலிப்பதைப் பார்க்க முடிந்தது. உதாரணமாக ஒன்று யப்பானில் உணவகங்களில் ஒருவர் உணவருந்திய பின் அந்த மேசையை அவரே சுத்தமாகத் துடைத்துப் பாவித்த கலங்களை மீண்டும் வேறு ஒரு இடத்தில் வைத்துவிட்டுப் போவார்கள். எங்களை அறியாது நாங்கள் இதைச் செய்வதுடன் , இப்பொழுது செய்ததுடன் அந்த பழக்கம் கோவிட்டாக எங்களையும் தொற்றிக்கொண்டது.

உலகத்தில் குற்றச் செயல்கள் மிகவும் குறைந்த நாடு. வழக்கு தொடர்ந்தால் 99 வீதம் தண்டனை உண்டு. அதே வேளையில் தண்டனை அதிகமானது என்பதும் குறிப்பிடவேண்டும். பாதைகள் மட்டுமல்ல பார்த்த எல்லா இடங்களும், வயதானவர்களுக்குப் பாதுகாப்பான நாடாகத் தெரிந்து.

மீஜி சின்ரோ ஆலயம் ஒரு சிறிய பகுதி என்ற போதிலும் புவியின் பல இடங்களைப் புரிந்து கொள்ள மேசையில் வைக்கப்பட்ட சிறிய பூகோளப் பந்துபோல் முழு யப்பானையும் எமது மனக்கண்ணில் கொண்டு வந்தது.

யப்பான் தனது பாரம்பரியத்தையும் கலாச்சார விழுமியங்களையும் பாதுகாத்தபடி மேற்கத்தைய தொழில்நுட்பம், கல்வி, விஞ்ஞானம் என்பவற்றை மிகவும் கவனமாக உள்வாங்கியது மட்டுமல்ல, தொடர்ந்து உள்வாங்கியபடி இருக்கிறதென்பதை முதல்நாளிலே தெரிந்து கொண்டேன்.

சின்ரோ ஆலயங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளது. அவைகளுக்கு விக்கிரகம் இல்லை. மக்கள் இந்தியக் கிராமங்களில் வழிபடுவதுபோல் தங்களுக்குப் பிடித்த இயற்கையின் சக்திகளை வழிபடுவார்கள் . இப்படியான ஆலயங்கள் முன்பு திரைச் சீலையோ அல்லது ஒரு பலகையே தொங்கும் . அதாவது கடவுளை மக்கள் காணக்கூடாது என்பதே இங்குள்ள தத்துவம்.

இதை விட நாங்கள் அழைத்துப் போகப்படாத இடம்- (Yasukuni Shrine) . இதுவும் மிஜீ ஆலயத்திற்குப் போகும் வழியில் உள்ளது . இதே மிஜீ மன்னரால் நாட்டுக்காகப் போரில் ஈடுபட்டு இறந்தவர்களை நினைவு கூரும் வகையில் கட்டப்பட்டது. இங்கு சீனா-யப்பான் யுத்தத்தில் இறந்தவர்கள் மற்றும் இரண்டாவது உலகப்போரில் இறந்தவர்களுக்கான நினைவுத் தூபிகள் உள்ளன . இப்போர்களால் பாதிக்கப்பட்ட சீனர்கள், அவுஸ்திரேலியர்கள், அமெரிக்கர்களின் பார்வையில் போரில் ஈடுபட்ட யுத்த குற்றவாளிகளாகக் கணிக்கப்பட்ட தளபதிகளது பெயர் கொண்ட சின்னங்கள் இங்குள்ளன. இவற்றை  நாங்கள் தனியே வந்து பார்க்க முடியும் எனச் சொல்லப்பட்டது. எங்களது குழுவில் வந்தவர்கள் எல்லோரும் அவுஸ்திரேலியர்கள் என்பதால் யப்பானியர்களின் ராஜதந்திர நடவடிக்கையாக எங்களை இங்கு அழைத்து செல்வது தவிர்க்கப்பட்டது என நினைக்கிறேன்.

தொடரும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.