ஒலி எந்த உயிரினத்தையும் ஒரு கணம் திசைதிரும்ப வைக்கும். தொட்டிலில் அழும் குழந்தை, திடீரென ஒரு வேற்று ஒலியைக் கேட்டதும், தன் அழுகையைச் சட்டென நிறுத்திவிடுகிறது. எங்கோ ஒரு மூலையில் தானியங்களைக் கொறித்துக்கொண்டிருக்கும் ஒரு முயல்க்குட்டி சற்றே தொலைவில் ஏதோ ஒரு சத்தம் கேட்டதும் அது கொறிப்பதை நிறுத்தித் தன் காதுகளை மேலே உயர்த்திச் சு10ழ்நிலையை அவதானிக்கிறது. உலகிலுள்ள உயிர் வர்க்கங்கள் யாவுமே ஒலி அலைகளையும் ஒலிக் குறிப்புகளையும் வைத்தே தம்மையும் தம் இனத்தையும் எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்கின்றன.

மனிதன் தன் நாவினால் எழுப்பும் ஒலியின் சிறு சிறு அசைவுகளே வெவ்வேறு வடிவெடுப்பதைக் காண்கிறோம். இந்த ஒலி அசைவுகளே நாளடைவில் ஒலிக்குறிப்புகளாக மாறி மொழிகளாக உருவெடுத்திருக்கலாம். உதாரணமாக - அ.. ஆ.., உ.. ஊ.., ஒ.. ஓ.., தா.. தீ.., போ.. வா.., சி.. சு10.., அம்.. ஆம்.., ஓடு.., பாடு...  என ஓர் எழுத்து ஈரெழுத்துச் சொற்களாக மொழி மெல்ல மெல்லப் பரிணமித்திருக்கலாம்.

இவ்வாறு மொழி தோன்றி வளரும்போது மனிதன் தன் உணர்வுப் பரிமாற்றங்களை உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தி தனதுதேவைகளைப் பூர்த்திசெய்யக் கற்றுக்கொண்டான். காலப்போக்கில் தன் உணர்வுகளை இசையாகப் பாடியும் ஆடியும் மகிழ்ந்தான். சரி கம பத நி என்னும் ஏழு சுரங்களுக்குள் எத்தனை இராகம் என்பதுபோல எழுத்துக்களின் ஒலியளவு கூடிக் குறையும்போது வௌ;வேறு இசை வடிவங்கள் அழகிய இராகங்கள் பிறக்கின்றன என்பது பேரதிசயமே.

காற்றோடு கலந்த இந்த ஒலி அலைகளே இசைக் கருவிகளுள் புகுந்து நெளிந்து குழல் இசை என்றும் யாழ் இசை என்றும் வீணா கானமென்றும் பற்பல இன்னிசைகளாகி எம் காதுகளைக் குளிர்விக்கின்றன.  மேலும் மொழியோடு இசை கலந்து இன்னிசைப் பாடல்கள் பிறபபெடுக்கின்றன. இந்த இசைக்கு மயங்காத உயிர்கள் ஏது..? அதனால் அன்றோ குழந்தைகள் இசையை, இசைப் பாடல்களைத் தம்மை மறந்து இரசிக்கின்றார்கள். தாளம்போட்டு ஆடிப்பாடித் தம் மகிழ்வைத் தெரிவிக்கின்றார்கள்.

தாயின் கர்ப்பத்திலிருக்கும்போதே சிசுக்கள் இசையை இரசிக்கத் தொடங்குகின்றன. உறக்கமின்றி அழுது அடம்பிடிக்கும் குழந்தை தாயின் தாலாட்டைக் கேட்டவுடன் பெட்டிப் பாம்பாக மாறி அமைதியாகத் தூங்கிவிடுகிறது. இந்தக் குழந்தைகளே தொட்டிலில் விழித்திருக்கும்போது தன் நாவினை அசைத்துப் பலவித ஒலிகளை எழுப்பி - அவ்வொலியைக் கேட்டு மகிழ்ந்து விளையாடுகின்றன. குழந்தைகளின் நாக்கே அவர்களுக்குப் பிடித்த மிகப்பெரிய விளையாட்டுக் கருவி என்கிறார் மொழிநூல் வல்லுநர் ஓட்டோ ஜெஸ்பர்சன் (Otto Jesperson). குழந்தைகள் மென்மையான ஒலிகளை கவனிக்கிறார்கள். காதுக்கினிய ஒலிகளை விரும்பிக் கேட்கிறார்கள். அவர்கள் மொழியே ஒலியின் தொகுதியாகத் தான் முதலில் தொடங்குகிறது.

நாயைத் தோ.. தோ.. என்பார்கள். குழந்தையைப் பாப்பா என்பார்கள். பாட்டனாரை தாத்தா என்பார்கள். அவர்களின் பேச்சே இப்படித்தான் தொடங்குகிறது. இதில் ஒருவகை ஒலி அமைதி இருப்பதைக் காணலாம் என்கிறார் குழந்தைகளுக்காகவும் தன் ஆக்கங்களை வழங்கிய கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்.

மேலும் குழந்தைகள் பறவைகள் மிருகங்களின் ஒலிக் குறிப்புகளைக் கூர்ந்து கேட்டு இரசித்து தாமும் திரும்ப அபிநயத்துக் காட்டி மகிழ்கின்றார்கள். இன்னிசைக் கருவிகளின் சுகமான இராகங்களை விரும்பிக் கேட்டு மகிழ்கிறார்கள். அவர்களது கருத்துப் பரிமாற்ற மொழியாக ஒலியே இருக்கின்றது.

முதன்முதலாக அன்னை வயிற்றிலிருந்து ப10மியை முத்தமிடும் குழந்தை தன் வருகையை உணர்த்துவது, தேவையைக் கேட்பது அழுகை என்னும் ஒலிக்குறிப்பின் மூலமே என்றால் அது மிகையல்லவே. இந்த அழுகையென்னும் ஒலிக்குறிப்பின் மூலமே குழந்தை இந்த மண்ணில் வந்து முதன்முதலாகச் சுவாசிக்கின்றது. குழந்தையின் முதன் மொழியே அழுகைதான். இவ்வாறு காதில் கேட்கும் ஒலியில் ஒருவித இசை அமைதியை, இனிமையைத் தேடுகின்றன மழலைகள்.

மொழியோடு இசை சேரும்போது நல்ல நல்ல இசைப்பாடல்கள் தோன்றுகின்றன. இந்த ஓசை நயம்மிக்க இசைப்பாடல்களே மழலைகளைக் கவர்கின்றன. எனவே மழலைப் பாடல்களில் கருத்து நயங்களோடு, ஓசை இனிமைக்கு முதலிடம் அளிப்பதே சிறப்பாகும். அப்போதுதான் அது மழலைகளால் விரும்பப்படும்.

இவ்வாறு ஒலிக்குறிப்புகளையே மொழியாகக்கொண்டு தம் தேவைகளைப் பூர்த்திசெய்த மழலைகள் மெல்ல மெல்ல மொழியைக் கற்கத் தொடங்குவது மழலைப் பாடல்களில்தான்..! ஒலி இன்பத்தை நுகர்ந்த மழலைகள் மொழி இன்பத்தைக் காணத் தொடங்குவதே இந்த இசைப் பாடல்களில்தான்..! எனவே மழலைப் பாடல்கள் மொழியைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகின்றன. ஆதலால் எழுத்துக்கள் - சொற்கள் மழலைப் பாடல்களில் நன்கு கவனிக்கப்படவேண்டும். சரியான உச்சசரிப்புப் பழக்கத்தை மழலைப் பாடல்கள் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள பாடல்கள் உதவ வேண்டும். அம்மா, அப்பா என அவர்களின் குடும்ப உறவுகளின் சிறப்பை, உயர்வை இப்பாடல்கள் சொல்லித்தர வேண்டும். உறவுகளின் பாசம், நேசம் புரியவைக்கப்பட வேண்டும். பறவைகள் விலங்குகள் என பிற உயிர்களை நேசிக்கக் கற்றுத்தர வேண்டும்;

மொத்தத்தில் நல்ல பழக்க வழக்கங்களை - பண்பாடுகளை விதைக்கப்பட வேண்டிய இடம் - களம் மழலைப் பாடல்களே..! எனவேதான் மழலைப் பாடல் ஆசிரியர்கள் இங்கே முக்கியத்துவம் பெறுகிறார்கள். மழலைகள் உள்ளம் கீறல்கள் அற்ற வெள்ளைத்தாள் என்பதை உணர்ந்து அங்கே நல்ல சிந்தனைகள் விதைக்கப்பட வேண்டும்.

'குழலினிது யாழினிது என்பர்தம்
மக்கள் மழலைச்சொல் கேளாதோர்.."

மழலை மொழியே ஒருவித இசையாகத்தனிருக்கும். எழுத்தையோ சொல்லையோ நீட்டி உச்சரித்து அதை ஒரு இசையாக்கிப் பாடுவது போலிருக்கும் அவர்தம் மொழி. உதாரணமாக - அம்.. மா... வா... ... அப்... பம்.. தா... .. என்பது போலிருக்கும் மழலைப் பேச்சுகள்..!

இந்த மழலைகளுக்கான அதாவது ஐந்து வயதிற்குக் கீழ்ப்பட்ட குழந்தைகளுக்காக எழுதவதே மழலைப் பாடல்களாகும். குறைந்த இலகுவான சிறிய சொற்களைக்கொண்ட ஓசை இனிமையுள்ள நான்கு வரிப் பாடல்களாக மழலைப் பாடல்கள் இருப்பதே சிறப்பு. இலகுவில் மழலைகள் உச்சரிக்கக்கூடியதாகவும் மனதில் பதியும் அழகான அடிகளாகவும் பாடல்கள் இருப்பதே இங்கு முக்கியம்.

                            - குழ. கதிரேசன் -

உதாரணமாக குழ. கதிரேசனின் மழலைப்பாடல் இங்கு கவனிக்கத்தக்கது.

'பள்ளிக்குப் போவேன்
பாடம் படிப்பேன்
துள்ளிக் குதிப்பேன்
துணிவாய் இருப்பேன்;"

இவ்விதம் தொல்காப்பியக் காலப் 'பிசி விடுகதை" குழந்தை இலக்கியப் படைப்புகள் தொட்டு, குழந்தைப் பாடல்கள் பல்வேறு வடிவங்களில் அதாவது மழலைப் பாடல்கள் - குழந்தைப் பாடல்கள் - சிறுவர் பாடல்கள் - நாடோடிப் பாடல்கள் - நீதிப் பாடல்கள் - கதைப் பாடல்கள் - சிறுவர் காவியப் பாடல்கள் - நாடகப் பாடல்கள் - மொழிபெயர்ப்புப் பாடல்கள் - சிறுவர் சினிமாப் பாடல்கள் - சிறுவர் வில்லிசைப் பாடல்கள் என்றும் சிறுவர் புதுக் கவிதைவரை வளர்ச்சி கண்டுள்ளது மகிழ்ச்சிக்குரியதே.

ஊருக்கெல்லாம் ஒரு விளக்கு - அது என்ன..? நிலா..

இவ்வாறு 'பிசி விடுகதை" வடிவில் தொடங்கிய குழந்தை இலக்கிய வரலாற்றில் அடுத்து நாடோடிப் பாடல் வரிசையில்...

'கை வீசம்மா கை வீசு..
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு..

என அழகான பாடல்களைக் காண்கின்றோம்.

அடுத்த வரவாக ஒளவையார், அதிவீரராம பாண்டியன், உலகநாதர் போன்றோரால் சமுதாய மேன்மை கருதிக் குழந்தைகளுக்காக நீதிப் பாடல்கள் புனையப்பட்டன. ஒளவையாரின் ஆத்திசூடி இங்கு குறிப்பிடத்தக்கது.

       - கவிமணி தேசியவிநாயகம்பிள்ளை -

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் சிறுவர் இலக்கியத்தில் - சிறுவர் பாடல் வரிசையில் பொற்காலம் என வர்ணிக்கப்படுகிறது. எளிமையும் இனிமையும் நிறைந்த கருத்துத் தெளிவுமிக்க சிறிய சொல்லடுக்குகளில் சிறு வரிகளில் பாடல்கள் படைக்கப்பட்டன. கவிமணி தேசியவிநாயகம்பிள்ளையின் 'தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு.." இங்கே குறிப்பிடத்தக்கது. பாரதியாரின் 'ஓடி விளையாடு பாப்பா"வை யாரால் மறக்கமுடியும். கவிமணியும் பாரதியும் குழந்தைப் பாடல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகினர். குழந்தைப் பாடல்களுக்குப் புது இலக்கணம் வகுத்ததுபோல் பாடல்களை இலகுவாக்கினர்.

தொடர்ந்துவந்த அழ வள்ளியப்பா, அய்யாசாமி போன்றோர் குழந்தை இலக்கியத்திற்குப் பொக்கிசமாகக் கிடைத்தனர். அய்யாசாமியின் 'பாலராமாயணக் காவியம்" குறிப்பிடப்பட வேண்டிய படைப்பாகும். அழ வள்ளியப்பாவின் 'மலரும் உள்ளம"; பாடல் தொகுதிகள் இவரது குழந்தை இலக்கியப் படைப்பின் வெற்றியைக் கோடிட்டுக் காட்டுகின்றது. இவர் குழந்தைப் பாடல்களை எழுதவதோடு நிற்காமல் குழந்தை இலக்;கிய வளர்ச்சிக்காகவே முற்றும் உழைத்தவர். இவரது வெற்றிகள் குழந்தைக் கவிஞர் பரம்பரையே உருவாகக் காரணமாக அமைந்தது. இவரது சேவையைப், புகழை 'குழந்தை இலக்கிய வரலாறு" படைத்துத் தந்த டாக்டர் பூவண்ணனின் 'அழ வள்ளியப்பாவின் வாழ்க்கை வரலாறு" என்னும் நூலே பறைசாற்றி நிற்கிறது.

                       - அழ வள்ளியப்பா -

அழ வள்ளியப்பாவின்

'கண்ணன் எங்கள் கண்ணனாம்.."

'தட்டு நிறைய லட்டு.."

என்ற பாடல்கள் குழந்தைகளால் மறக்கமுடியாத இனிய பாடல்களாகும்.

மேலும் மலேசிய நாட்டு குழந்தைக் கவிஞர்களில் சி. வேலுச்சாமி இங்கு குறிப்பிடத்தக்கவர். இவரது 'தேனியைப் பார்..", பாட்டுப் பாடலாம்.." ஆகிய பாடல் தொகுதிகள் சிறப்பு மிக்கவை.

இலங்கையில் குழந்தை இலக்கியத்தை வளர்த்தெடுத்தவரகளில்; தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவர் முதன்மையானவர். இவரது 'ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை.. " என்னும் பாடலை யாரால் மறக்க முடியும்.

 - தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவர் -

அடுத்துக் குழந்தைகளால் மறக்கமுடியாத அம்மாவின் அன்பைச் சொல்லும் 'காலைத்தூக்கி கண்ணிலொற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா.." பாடலைத் தந்த வித்துவான் வேந்தனார் இன்னும் பல இனிய பாடல்களைத் தந்துள்ளார்.

இந்த வரிசையில் முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி, பண்டிதர் க. வீரகத்தி, வித்துவான் சி. குமாரசாமி, மதுரகவி இ. நாகராஜன், திமிலைத்துமிலன், யாழ்ப்பாணன், பா. சத்தியசீலன், த. துரைசிங்கம் உட்பட இன்றைய குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் பலரது ஆக்க முயற்சிகள்; குழந்தை இலக்கியத்தை ஈழத்தில் முன்னெடுத்துச் செல்கின்றன.

தமிழகத்தில் சண்முகசுப்பையாவின் 'கண்ணன் என் தம்பி.." சிறுவர் புதுக்கவிதைத் தொகுப்பு 1972 - ல் வெளிவந்தமை சிறுவர் இலக்கிய உலகின் ஓர் முன்னெடுப்பெனக் கொள்ளலாம்.

சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் குறிப்பாகக் குழந்தைப் பாடல்கள் - சிறுவர் புதுக்கவிதைவரை வளர்ந்துள்ளமை பெருமைக்குரியதே. இவ்வாறு உலகெங்குமுள்ள குழந்தை இலக்கியப் படைப்பாளிகளின் படைப்புகளாலும் முயற்சியாலும் குழந்தை இலக்கியம் பொலிவு பெற்றுள்ளமை மகிழ்ச்சிதரக்கூடியதே..!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.