கோவிட்- 19 பேரிடர் 2020 – 1921 ஆம் ஆண்டுகளில் ஒரு பக்கம் உலக மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்க, மறுபக்கம் முன்னேறிய நாடுகள் விண்வெளி சார்ந்த தமது நடவடிக்கைகளை மிகவும் கவனமாக நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறன. கோவிட் பேரிடரைக் காரணம் காட்டி அவற்றைத் தள்ளிப் போடவோ அல்லது நிறுத்திவைக்கவோ முடியாத ஒரு நிலையில் விண்வெளி சார்ந்த நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. பல நூறு விண்கலங்களும், ரோபோக்களும் விண்வெளியில் வலம் வந்து கொண்டிருப்பதால், அவற்றின் நடவடிக்கைகள் பூமியில் உள்ள கட்டுப்பாட்டு நிலையங்களில் இருந்துதான் கண்காணிக்கப்படுகின்றன. அதனால் பூமியில் இயங்கும் கட்டுப்பாட்டுத் தளங்கள் தொடர்ந்தும் இயங்கத்தான் வேண்டும். கோவிட் காரணமாக சில விண்வெளித் தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தாலும், தேவை காரணமாக அவை இப்போது மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டன.

அரசியலை ஓரம் தள்ளிவிட்டு இந்த நாடுகள் அறிவியல் நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதற்குக் காரணம் எதிர்காலம் விண்வெளி நிகழ்வுகளில்தான் தங்கி இருக்கப் போகின்றது என்பது தெளிவாகப் புலனாகின்றது. 6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில் நாடுகளைப் பிடிப்பதில் ஈடுபட்டது போல, இப்போ கிரகங்களைப் பிடிப்பதில் நாடுகளிடையே போட்டிகள் ஆரம்பமாகி விட்டன. எனவே 2021 ஆம் ஆண்டு நடந்த சில விண்வெளி நிகழ்வுகளை இங்கே தருகின்றேன்.

விண்வெளிப் பயணத்தை முதன் முதலாக ஸ்புட்னிக் மூலம் 1957 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்துப் பல சாதனைகளை நிலைநாட்டிக் காட்டியது ரஸ்யாதான். அதைத் தொடர்ந்து அமெரிக்காவும், சீனாவும் இப்பொழுது சாதனை படைக்கத் தொடங்கிவிட்டன. இந்த வருடம் செவ்வாய்க்கிரகம் நோக்கிய ரோபோக்களின் பயணத்தில் அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகள் ஈடுபட்டிருந்தன. 2021 செவ்வாய் நோக்கிய முதல் பயணத்தை அமீரகத்தின் ஹோப் விண்கலம் ஆரம்பித்ததைத் தொடர்ந்து சீனா அனுப்பிய விண்கலம் 2021 மே மாதம் ரோவரைத் (China’s Tianwen-1 mission) தரை இறக்கம் செய்தது. பெப்ரவரி 18 ஆம் திகதி நாசாவின் (NASA’s Perseverance rover) ரோவர் செவ்வாயில் தரை இறக்கப்பட்டது. இதில் அமெரிக்கா வெற்றிகரமாக ஹெலிகொப்டர் ஒன்றையும் செவ்வாய்க் கிரகத்தில் பறக்க விட்டிருந்தது. முதன்முதலாக வேற்றுக் கிரகத்தில் பறந்த ஹெலிக்கொப்டர் என்ற பெயரை அமெரிக்காவின் இன்ஜெனுட்டி என்ற சிறிய ஹெலிக்கொப்டர் தட்டிக் கொண்டது. செவ்வாய் கிரகத்தில் இதுவரை 16 பறப்புகளை மேற்கொண்டிருந்தது தானியங்கியான இந்த ஹெலிகொப்டர். இதன் முதலாவது பறப்பு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது. அமெரிக்காவைத் தொடர்ந்து செவ்வாய்க் கிரகத்தில் இரண்டாவதாக ரோபோவை இறக்கிய பெருமை சீனாவுக்கு உரியது.

எல்லா கிரகங்களிலும் தேடுதல்கள் வேகமாக நடைபெறுகின்றன. புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்களில் ரோவர்கள் தரை இறங்கி இருக்கின்றன. குறுங்கோள்களிலும் ரோவர்களின் தரை இறக்கங்கள் நடைபெற்றிருக்கின்றன. அக்ரோபர் 16 ஆம் திகதி லூசி என்ற விண்கலம் நாசாவால் விண்வெளி நோக்கி அனுப்பப்பட்டது. 12 வருடங்கள் பயணிக்கப்போகும் இந்த விண்கலம் முக்கியமான ஏழு விண்கற்களைப் பற்றி ஆய்வு செய்ய இருக்கின்றது. வியாழன் கிரக மண்டலத்தில் உள்ள ஆறு விண்கற்களையும், அதிக விண்கற்கள் அடங்கிய பட்டியில் இருந்து தெரிவு செய்த ஒரு விண் கல்லையும் இது ஆய்வு செய்யும். 2011 ஆம் ஆண்டு ஆனுப்பப்பட்ட யூனோ விண்கலம் தொடர்ந்தும் வியாழன் கிரகத்தை ஆய்வு செய்கின்றது. 2025 ஆம் ஆண்டுவரை இதன் சேவை நீடிக்கப்பட்டிருக்கின்றது. நவெம்பர் மாதம் 24 ஆம் திகதி DRAFT என்ற விண்கலம் டிமோபோஸ் என்ற விண்கல்லைத் தாக்கித் திசை திருப்புவதற்காக அனுப்பப்பட்டது. 24,000 கிலோ மீட்டர் வேகத்தில் விண்கல்லைத் தேடிச் செல்லும் இந்த விண்கலம், 2022 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் பிற்பகுதியில் குறித்த இலக்கை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் பூமியை நோக்கி வரும் ஆபத்தான விண்கற்களை இனிவருங்காலங்களில் திசை திருப்ப முடியும்.

சந்திரனின் மறுபக்கத்திற்கு அனுப்பப்பட்ட சீனாவின் சாங்-4 தரைஇறங்கியும் யூரு- 2 ரேவரும் சந்திரனின் மறுபக்கத் தரையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. சீனா தனக்கான விண்வெளி நிலையம் ஒன்றை 29 ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு விண்வெளியில் அமைக்கத் தொடங்கி இருக்கிறது. தியாங்காங் (Tiangong) என்ற அதற்கான வேலைகள் விண்வெளியில் தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கின்றன. கட்டுமானப் பணிக்காக சென்ற யூன் மாதம் 17 ஆம் திகதி, நி ஹாய்ஷெங், லு பூமிங், ராங் ஹாங்போ ஆகிய மூன்று விண்வெளி வீரர்களை சீனா தனது விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி இருந்தது. இதுவரை 14 சீனவீரர்கள் விண்வெளிக்குச் சென்றிருக்கிறார்கள். இவர்களில் லீ யாங் என்ற பெண்மணியும் அடங்குவார். இந்தத் திட்டம் 2024 ஆம் ஆண்டு முழுமையாக நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வர்ஜின் கேலக்டிக் நிறுவனமும் மற்றும் ப்ளு ஒரிஜின் நிறுவனமும் விண்வெளிக்குச் சுற்றுலாப் பயணிகளை அனுப்பியதன் மூலம் 2021 யூலை மாதம் சாதனை படைத்திருந்தனர். அந்த வரிசையில் மூன்றாவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் செப்ரெம்பர் மாதம் 2021 தனியார் விண்வெளிப் பயணத்தில் இணைந்து கொண்டது. இதுவரை மூன்று கோடீஸ்வரர்களும், வேறுசில விண்வெளிச் சுற்றுலாப் பயணிகளும் விண்வெளி சென்று வந்திருக்கிறார்கள். விண்வெளித் தொலைநோக்கியான Imaging X-ray Polarimetry Explorer டிசெம்பர் மாதம் 9 ஆம் திகதி விண்வெளிக்கு நாசாவால் அனுப்பப்பட்டது. நாசா நிறுவனமும் இத்தாலிய விண்வெளி நிறுவனமும் கூட்டாகச் செயற்பட்டன. 188 மில்லியன் டொலர் பெறுமதியான இந்தத் தொலைநோக்கி கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் நட்சத்திரங்கள், கருந்துளைகள், சுப்பநோவா போன்றவற்றை ஆய்வு செய்ய இருக்கின்றது. இதேபோல கிறிஸ்மஸ் தினத்திலன்று 25 ஆம் திகதி ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளி நோக்கி அனுப்பப்பட்டது. இது மில்லியன் மைல்களுக்கு அப்பால் சென்று தகவல்களைச் சேகரிக்க இருக்கின்றது. பிரபஞ்சத்தின் தொடக்க காலத்தில் பெரும் வெடிப்பு காரணமாக நட்சத்திரங்கள் எப்படித் தோன்றின, அகச்சிவப்பு ஒளி என்பது போன்ற பல தகவல்களைப் பின்நோக்கிச் சென்று சேகரித்துப் பூமிக்கு அனுப்ப இருக்கின்றது.