சக கவிஞர் லீனா மணிமேகலையின் சமீபத்திய ஆவணப்படமான ‘காளி’ சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, அதன் போஸ்டர். காளி புகை பிடிப்பதாகவும், கையில் LGBT (ஓரினப்புணர்ச்சியாளர்கள், திருநங்கைகள் முதலியவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பு) பதாகையைப் பிடித்திருப்பதாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பது. இந்து மதக் கடவுள் காளிமாதாவை இந்தச் சித்தரிப்பு அவமதிப்பதாய் ஆவணப்பட இயக்கு னரும், அதில் நடித்திருப்பவருமான கவிஞர் லீனா மணிமேகலை ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்களில் பேசுபொருளாகியிருக்கிறார். அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டிருக் கின்றன. அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சிலர் குரல் கொடுக்கிறார்கள்.

படைப்புச் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்களுக்கு அடி பணிய மாட்டேன் என்று கவிஞர் லீனா மணிமேகலை கூறியிருக்கிறார். கனடாவில் தன் மீது வந்திறங்கும் காளி பல இடங்களை அங்கு சுற்றிப் பார்த்து, பல மனிதர்களோடு பேசிப் பழகி ‘அன்பு செழிக்கவேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்துவதாகவே தன் படம் அமைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். ‘என் உயிரே போனாலும் பரவா யில்லை என்ற விதமாக அவர் பேசியிருப்பது - கொலை மிரட்டல் வந்ததுபோல் கருதவைக்கிறது. அப்படி வராத பட்சத்தில் இந்த வரி தேவை யில்லை என்று தோன்றுகிறது.

புகைபிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிப்பது என்பது உண்மையே ஆனால், அதற்காக அது அத்தனை பாவகரமான செயலா? காளி மாதா புகைபிடிப்பதாகக் காண்பிப்பது அத்தனை அடாத செயலா? தீயவர்களின் ரத்தத்தையே குடித்தவளல்லவா அவள்!

படைப்புகளில் கடவுளர்களை, குறிப்பாக இந்துக் கடவுளர் களை கேலி செய்வது இழிவுபடுத்துவது என்றிருக்கும் வழக்கத்தைக் கண்டனம் செய்ய வேண்டுமானால் எத்தனையெத்தனையோ திரைப் படங்கள், தொலைக் காட்சித் தொடர்கள், நிகழ்ச்சிகள், சமூக ஊடகங்களில் இடம்பெரும் பதிவுகள், அரசியல் தலைவர்களின் பேச்சுகள் என நிறைய இருக்கின்றன.

வேற்று மதங்களின் கடவுளர்களைப் பழிப்பதில்லையே என்ற கேள்வி அநாவசியம். யாருடைய நம்பிக்கைகளையும், பற்றுக்கோடுகளையும், ஏன், தாம் சார்ந்த மதத்தின் நம்பிக்கைகளையும்கூட யாரும் ஏன் பழிக்கவேண்டும்? அப்படியே அவற்றில் ஆகாதன இருந்தாலும் அவற்றை கண்ணியமாகச் சுட்டிக்காட்ட முடியும். நாத்திக வாதத்தை பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் அத்தனை தர்க்கபூர்வமாகப் பேசியிருப்பார்!

லீனா மணிமேகலை நுண்ணுணர்வு வாய்ந்த கவிஞர் – திரைப்பட இயக்குனர். அவர் தன்னுடைய திரைப்படங்களை வெற்றுப் பிரச்சார மேடைகளாக உருவாக்குவதில்லை என்பதற்கு அவருடைய சமீபத்திய படம் மாடத்தி சிறந்த எடுத்துக்காட்டு.

அவருடைய கருத்துகள் சிலவற்றோடு _ அரசியல்ரீதியானவையும் மற்றவையும் _ நாம் உடன்படாமல் இருக்கலாம். அதற்காக, அவர் காளியை மதிப்பழிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சித்தரித்திருப்பதாக, அவருடைய ஆவணப்படத்தைப் பார்க்காமலேயே கூறுவது நியாயமல்ல.

அவருடைய சில படைப்புகள் சமூகத்தின் வெவ்வேறு பிரிவினரின் கண்டனத் தையும் எதிர்ப்பையும் சந்தித் திருக் கின்றன. அவருடைய சமீபத்திய படம் மாடத்தியே கூட அத்தகைய எதிர்ப்பைச் சந்தித்தது. எனவே, ஒரு குறிப்பிட்ட மதத்தை, பிரிவினரை மதிப்பழிப்பது அவரு டைய நோக்கம் என்று சொல்ல வியலாது. அவர் தனக்கு சரியெனப்பட்டதை எழுதுகிறார்; படைக்கிறார். அவ்வளவே.

அவரை இப்போது எதிர்ப்பவர்கள் அவருடைய சமீபத்திய காளி ஆவணப் படத்தைப் பார்த்திருப்பார்களா, தெரிய வில்லை.

இந்துக் கடவுளர்களை அவற்றின் சாராம்சம் தெரியாமல் சகட்டுமேனிக்குக் கேவலம் செய்யும் போக்கு அதிகரித் திருக்கிறது என்பது உண்மையே. அதே சமயம் காளி உட்பட கடவுளர்கள் எல்லோரையும், எல்லாவற்றையும் உள்ளடக்கியவர்கள். நம்பிக்கையாளர்களும் சரி, அவநம்பிக்கையாளர்களும் சரி அவர்களை குத்தகைக்கு எடுத்திருப்பதாய், கொத்தடிமைகளாய், பாவிக்கவோ, நடத்தவோ இயலாது; நடத்தவும் கூடாது.

கடவுளின் அல்லது கடவுள் என்ற கருத்தாக்கத்தின் சாராம்சத்தையும் வீச்சை யும் விரிவையும் ஒடுக்கி குறுக்கி கடவுளைத் தங்கள் துருப்புச் சீட்டாய்ப் பயன்படுத்தும் போக்கை கடவுள் மறுப்பாளர்களும் சரி, கடவுள் பற்றாளர்களும் சரி, கைவிட வேண்டியது அவசியம்.

ஒருவரின் மதத்தை, கடவுள் நம்பிக்கையைப் பழித்தல் ஒருவகையில் அவரு டைய பிறப்பை, பெற்றோரை, முன்னோர்களையெல்லாம் பழிப்பதாகிறது. இந்த உளவி யல் புரிந்துகொள்ளப்படவேண்டியது இன்றியமையாதது.

பொதுமேடைகளில் பேசுபவர்கள், சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்கள், படைப்பாளிகள், அரசியல்வாதிகள், அறிவுசாலிகள் என அனைவருமே இவற்றையெல்லாம் மனதில் கொண்டு செயல்பட்டால் மிகவும் நல்லது.

ஏனெனில், ஊரில் அமைதி குலையும்போதெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவது சாமானியர்களே.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.