கட்டுரையாசிரியர் - முனைவர் கு.வளர்மதி, உதவிப்பேராசிரியர், இளங்கலைத் தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி -


முன்னுரை

இன்றைய உலகில் பெண்களின் பங்கு மகத்தானது. ‘மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணியின் வாக்கினை ஏற்ற பல தலைவர்களுள் அண்ணல் காந்தியடிகளும் ஒருவர். பெண்ணைக் காட்டிலும் சிறந்தது வேறு இல்லை என திருவள்ளுவரும், வருங்காலம் பெண்ணுடையது தான் என வினோபாஅடிகளும் கூறுகின்றனர். அடிப்படையில் ஆண், பெண் இருவருக்கும் ஆன்மா ஒன்றே. இருவருக்கும் உணர்வுகளும் ஒன்றே. ஒருவர் மற்றவர் உதவியின்றி வாழமுடியாது. ஆண் காலங்காலமாக பெண் மீது ஆதிக்கம் செலுத்தி வந்திருப்பினும், ஆடவரிடையே தோன்றிய மகான்கள் பெண்ணை ஆணுக்குச் சமமென்றே மதித்திருக்கிறார்கள். பெண்களின் முன்னேற்றத்தில் காந்தியடிகளின் பங்கு கணிசமானது என்பதை மறைக்க முடியாது. காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்களை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

அகிம்சையின் அவதாரம் - பெண்

அகிம்சை என்றால் எல்லையற்ற அன்பு. அதற்கு எவ்வளவு துன்பம்வரினும் ஏற்கும் ஆற்றல் உண்டு. பெண் தனது தாயன்பை உயிரினங்கள் அனைத்திலும் வெளிப்படுத்துகிறாள். போரில் மூழ்கி அமைதிக்காகத் தவித்துக் கொண்டிருக்கும் உலகிற்கு அவ்வமுதைப் புகட்ட வேண்டியவர்கள் பெண்களே ஆவர். அகிம்சையின் அவதாரம் பெண் என்கிறார், காந்தியடிகள்.

பெண் முன்னேற்றத்திற்கான அடிக்கல்

பெண்முன்னேற்றம் குறித்து அண்ணல் காந்தியடிகள், முதலில் சீதை, தமயந்தி, திரௌபதி போன்ற தூய உறுதிவாய்ந்த தீரமாதரைத் தோற்றுவித்தாக வேண்டும். நாம் அவர்களை உண்டாக்கிவிட்டால், இன்றைய சூழலில் பெண்கள் சொல்லுபவையும் செய்பவையும் சாஸ்திரங்களைப் போலவே மதிக்கப்பெறும் என்கிறார்.

தியாகத்தின் உறைவிடம்

பெண்ணினத்தை பலவீனமானது என்றல்ல, ஆணை விட சிறந்ததே என்று கருதுகிறார் அண்ணல் காந்தியடிகள். ஏனென்றால் இன்றும் பெண்ணினமே தியாகத்திற்கும், வாய்திறவாது கஷ்டங்களைச் சகிப்பதற்கும், பணிவுக்கும், பக்திக்கும், ஞானத்திற்கும் உறைவிடமாக இருந்து வருகிறது.

பெண்ணுரிமை

வீட்டிலேயே பெண் அடிமையாக வாழ்வதனைக் காந்தியடிகள், நம் அநாகரிகத்தின் சின்னமென்று கருதினார். இன்று அதிகப்பெண்கள் அரசியலில் கலந்து கொள்வதில்லை. பெரும்பாலோர் சுயமாகச் சிந்திப்பதில்லை. தம் பெற்றோர் அல்லது கணவர் ஏவலைச் செய்வதோடு திருப்தியாயிருக்கிறார்கள். பெண்களை இழிவுபடுத்தியதன் விளைவாக கடுந்தண்டனையை ஆண்கள் அனுபவித்தேயாக வேண்டும். பெண் ஆணின் வலைக்குத் தப்பிஇ தன் தகுதியையும் பெருமையையும் உணர்ந்து அவர்கள் இயற்றியுள்ள சட்டங்கள்இ சம்பிரதாயங்கள் ஆகியவற்றை மீறிக் கிளம்பும்போது அது அகிம்சை முறையில் இருந்தால் தக்கபயன் அளிக்கத் தவறாது என்பது அண்ணல் காந்தியடிகளின் நம்பிக்கையாகும். ‘நான் பெண்ணாகப் பிறந்திருந்தால், பெண்களெல்லாம் தம் கைப்பாவைகள் என்று ஆண்களிடையே நிலவும் கட்டுக்கதையை எதிர்த்துப் புரட்சி செய்வேன்’ என்று 1927-ஆம் ஆண்டு யங்இந்தியா நாளிதழில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கான உரிமையில் அண்ணல் காந்தியடிகள் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். ஆண்களுக்கு இல்லாத சட்டரீதியான சிரமங்கள் எதுவும் பெண்களுக்கும் இருக்கக்கூடாது என்பது காந்தியடிகளின் கருத்தாகும். பெண் பிள்ளைகளும் ஆண்பிள்ளைகளும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்கிறார்.

ஆணும் பெண்ணும் சமம்

ஆண்களும் பெண்களும் ஒரே கல்வி நிலையங்களில் பயிலும் கூட்டுக்கல்வி முறையை காந்தியடிகள் வலியுறுத்தினார். இந்தச் சோதனைமுயற்சியினை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும் என்பது காந்தியடிகளின் விருப்பமாகும். பெண்களுக்குத் தக்க கல்வியளிக்க வேண்டுமென்று காந்தியடிகள் விரும்பினார். பெண், ஆடவனது சமஅறிவுள்ள சகி. அவன் ஈடுபடும் எல்லா காரியங்களிலும் கலந்து கொள்ள உரிமையுள்ளவள். ஆணைப்போலவே சுதந்திரமாக வாழ வேண்டியவள். ஆடவனுக்குத் தன்துறையிலுள்ள தலைமையும் உரிமையும் பெண்களுக்கும் தன்துறையில் இருத்தல் வேண்டும்.

ஆணும் பெண்ணும் சமமென்றால் அவர்கள் செய்யும் வேலைகளும் ஒன்றாயிருக்க வேண்டும் என்பதல்ல. ஒரு பெண் வேட்டையாடுவதையோ ஈட்டியை எடுத்து வீசுவதையோ சட்டம் தடுக்காதிருக்கலாம். ஆனால், ஆண்களுக்கே உரிய இம்மாதிரியான காரியங்கள் செய்ய இயல்பாகவே கூசும் சுபாவம் கொண்டவர்கள். இயற்கை இருபாலரையும் ஒன்றையொன்று நிரப்பும் வகையில் அமைத்திருக்கிறது. உருவங்களைப் போலவே அவர்கள் வேலையும் வெவ்வேறானவை.

பெண்களைத் தம்நண்பர்கள் என்று எண்ணாது, தம்மை அவர்களின் அதிபர்களென்று எண்ணி ஆடவர் உலகம் அடிமைப்படுத்துகின்றனர். பழக்கவழக்கமும் சட்டமும் சேர்ந்து பெண்ணை அடக்கி வந்திருக்கின்றன. தன்வாழ்க்கையை உருவாக்குவதில் ஆண்களுக்கு இருக்கின்ற உரிமை பெண்களுக்கும் உண்டு. தன் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு இருத்தல் வேண்டும். சமுதாயத்தில் வரதட்சணைக் கொடுமை ஒழிந்து, ஆணும் பெண்ணும் சமமாக வேண்டும்.

கைப்பாவையல்ல பெண்

நாட்டில் பெண்ணுக்கு அளிக்க வேண்டிய சரியான கல்வி, தனது கணவனுக்கு கைப்பாவையல்ல என்பதை உணர்த்த வேண்டும். ஆண்களைப் போன்று பெண்களுக்கும் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய உரிமை உண்டு. சீதையை இராமனுக்கு அடிமைபூண்டு வாழ்ந்தவள் என்று எண்ணுகிறவர்கள், அவள் அனுபவித்த சுதந்திரத்தின் சிறப்பையோ இராமன் எல்லா விஷயங்களிலும் அவளுக்கு அளித்து வந்த மதிப்பையோ புரிந்து கொள்ளவில்லை என்று தான் ஆகிறது. தன்னையும் தன்மானத்தையும் காத்துக்கொள்ள முடியாத கையாலாகாத பெண்ணல்ல சீதை என்பது அண்ணலின் கருத்தாகும்.

கைம்பெண் மணம்

கணவன் இறந்தபின்பு, பெண்கள் கைம்மை வாழ்க்கை மேற்கொள்கின்றனர். சிறுவயதினரான விதவைகளுள்ள வீட்டார் தைரியமாகத் தம்பொறுப்பிலுள்ள அக்குழந்தைகளுக்கு மறுமணமல்ல, முறைப்படி நன்றாக மணம்செய்வித்து இச்சீர்திருத்தத்தைத் தொடங்க வேண்டும். ‘மறுமணம்’ என்று சொல்லாதது அவர்களுக்கு முதலில் நடந்தது மணமே அல்ல என்பதனால்தான், என்று யங் இந்தியா நாளிதழில் 1926-இல் காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்.

தாய்மை

பெண்ணின் தாயன்பு எப்போதும் காந்தியடிகளுக்கு உயர்ந்ததும் உவகையளிப்பதுமாகவே இருந்தது. ஒருதாய் தன்குழந்தைகளை உயிருக்கு உயிராக நேசிக்கும்போது அவர்களை வளர்க்கும் அறிவு அவளுக்கு இல்லாமல் இருக்கலாம் என்ற மிலிபோலாக்கின் கருத்திற்கு ‘அன்பே அவளுக்கு அதையும் கற்றுக்கொடுக்கும்’ என்கிறார், காந்தியடிகள்.

கருத்தடைக்குப் புலனடக்கம்

பிறக்கும் குழந்தைகளின் தொகையைக் கட்டுப்படுத்துவதற்குள்ள தலையாய ஒரேமுறை புலனடக்கமே ஆகும். செயற்கை முறைகளினால் கட்டுப்படுத்துதல் மனித இனம் தற்கொலை செய்துகொள்ளுதலாகும். அவை சரியாக இருந்தபோதும் செயற்கைமுறைகளினால் தீங்கே விளையும் என்பது காந்தியடிகளின் கருத்தாகும்.

பெண் மானம்

பெண்ணைப் பாதுகாத்தல் ஆண்களின் கடமையென்றாலும் தன்னைக் காக்க ஆடவன் ஒருவன் இல்லாதபோதும், இப்புனிதப்பணியை அவன் செய்யத் தவறியபோதும் இந்தியப்பெண் யாரும் என்ன செய்வேன்? என்று ஏங்கக்கூடாது என்கிறார், காந்தியடிகள். ஒருபெண் தாக்கப்படுகையில் அவள் இம்சை, அகிம்சை பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. அப்போது அவளின் முதற்கடமை ‘தற்காப்பே’ ஆகும். தன்மானத்தைக் காப்பதற்கு அவளுக்குத் தோன்றும் எந்த முறையையும் அல்லது சாதனத்தையும் அவள் உபயோகித்துக் கொள்ளலாம். கடவுள் அவளுக்கு நகங்களும் பற்களும் அளித்திருக்கின்றார். அவற்றை அவள் தன்னால் முடிந்த மட்டும் உபயோகித்துக் கொள்ளலாம். சாகத்துணிந்த ஆடவனாலும் பெண்ணாலும் தன்னை மட்டுமல்லஇ பிறரையும் தன்னுயிரை அளித்துக் காக்க இயலும்.

தேவதாசிகள் ஒழிப்பு

சட்டத்திற்கும் நியாயத்திற்கும் மாறாக தன் இச்சைக்காக செயல்படும் சிலரால் பல பெண்களின் வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது. பெண்கள் சிலர் இதற்கு கட்டாயமாக்கப்பட்ட கொடுமைகளும் நிகழ்ந்துள்ளது. இப்பெண்களை தேவதாசிகள் என்று அழைப்பதனால், மதத்தின் பெயரால் இறைவனையே அவமானப்படுத்துகிறோம். இத்தகு கொடுமைகளிலிருந்து விடுத்துப் பெண்களைப் பாதுகாக்க வேண்டும். தேவதாசி முறையை ஒழிப்பதற்காக, இந்தியா விடுதலை அடைந்ததை அடுத்து 1947, அக்டோபர் 9-ஆம் நாளன்று ‘தேவதாசி ஒழிப்புச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது.

பெண்களுக்கென்று இழைக்கப்பட்ட அநீதிகள் எண்ணிலடங்காதவைகள். இதுபோன்ற சமூகநோயிலிருந்து விடுபட, தூயோர் ஒவ்வொருவரும் தாம் எங்கிருந்தாலும் தம் சுற்றுவட்டாரங்களில் தீமையில்லாது பார்த்துக் கொள்ளவேண்டும் என்று காந்தியடிகள் வலியுறுத்தினார்.

ஆபரணப் பித்தம்

ஆபரண சேர்க்கையானது அழகு சேர்ப்பதற்காகப் பயன்படும் ஒரு சாதனமே ஆகும். விலை அதிகமுள்ள நகைகள் அணிவதனால், பொருளாதார அளவில் நாட்டிற்கு நிச்சயம் ந~;டமே என்பது அண்ணலின் கருத்து. ஏனெனில், தொழிலுக்குப் பயன்படக்கூடிய அவ்வளவு முதலீடுகளும் முடக்கப்பட்டும் தேய்ந்தும் போகிறது. இந்தச் சுயதூய்மை இயக்கத்தில் ஆண்களும் பெண்களும் தம் ஆபரணங்களை அளிப்பதால், சமூகத்திற்கு நிச்சயம் நன்மையே என்பது காந்தியடிகளின் எண்ணம் ஆகும்.

போராட்டக் களத்தில் பெண்கள்

உலகிலேயே பெண்களை அதிகஅளவில் திரட்டி நடத்தப்பட்ட போராட்டங்களில் மிகவும் பிரம்மாண்டமானது இந்தியப்போராட்டம் என்றால், முன்னோடிப் போராட்டம் என்பது தென்னாப்பிரிக்காவில் நடந்த சத்தியாக்கிரகம்தான். இவையாவுமே காந்தியடிகளால்தான் சாத்தியமானது. கிறிஸ்துவத் திருமணங்களைத் தவிர மற்ற திருமணங்கள் ட்ரான்ஸ்வாலில் செல்லாது என்று அந்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது. இதனை எதிர்த்து, ‘ட்ரான்ஸ்வால் சகோதரிகள்’ என்று அழைக்கப்பட்ட 11பேர் கொண்ட குழுவானது காந்தியடிகளால் அமைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் நியூகேஸில் சுரங்கப்பகுதிகளுக்குச் சென்றார்கள். அங்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்தி பேரளவிளான போராட்டங்களை நடத்தி வெற்றியும் பெற்றனர்.

இந்தியாவில் பெண்களின் நிலை

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சாதி ஆணவக்கொலைகள் போன்றவை காந்தியடிகளை வேதனைக்குள்ளாக்கியது. இந்தியர்கள் தங்கள் பெண்களை அடிமையிலும் மோசனான நிலையிலேயே வைத்திருந்தனர். பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை ஒழிக்காமல், தேசவிடுதலை சாத்தியமில்லை என்றே காந்தியடிகள் கருதினார்.

பொதுவாக பலகூட்டங்களில் பேசும்போது, காந்தியடிகள் தன்கையைக் காட்டி முதல்விரல் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமத்துவம்; இரண்டாவது விரல் நூல் நூற்றல்; மூன்றாவது மது உள்ளிட்ட போதைவகைகளைத் தவிர்த்தல்; நான்கு இந்து - முஸ்லீம் ஒற்றுமை; ஐந்து ஆண்-பெண் சமத்துவம் போன்றவைகள் நிறைவேற்றப்படல் வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண்களையே தனது வழித்துணையாகவும் உறுதுணையாகவும் தேர்ந்தெடுத்துக்கொண்டார். அவரோடு விவாதிக்கும்படியும், மாறுபாடான கருத்தைக் கொண்டிருந்தால் தைரியமாக வெளிப்படுத்தும்படியும் பெண்களை காந்தியடிகள் ஊக்குவித்தார். முடிவுகளை எடுப்பதில் மனைவிக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென்றும் காந்தி கூறினார்.

தற்காலப் பெண்கள்

பெண்கள், மேனாட்டாருக்கே பொருத்தமான பழக்கவழக்கங்களைப் பின்பற்றிப் பயனில்லை; இந்தியச் சூழ்நிலைக்கும் இயல்புக்கும் பொருத்தமான முறைகளைக் கையாள வேண்டும். நம் பண்பாட்டின் சிறந்த அம்சங்களை விடாது பற்றிப் பாதுகாப்பதில் கலங்காத உறுதியும்இ அதன் தீயஅம்சங்களைத் தயங்காது விலக்குவதில் திடமும் பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தற்காலப் பெண்கள் ஆடை அணிவது காற்று, மழை வெயிலிலிருந்து தன் உடலைக் காக்க அல்;ல. பார்ப்போர் கவனத்தைக் கவரவே! பல செயற்கை அழகுசாதனங்களைக் கொண்டு, பலபெண்கள் இயற்கை செய்யத் தவறியதைச் செய்து, விசித்திரமாகக் காட்சியளிக்கிறார்கள். அகிம்சைவழி இதுமாதிரியான செயல்கள் பெண்களுக்கு உகந்ததல்ல என்கிறார், காந்தியடிகள். சுதந்திர காலகட்டத்தில் இருந்த பெண்களின் நிலை கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் பன்மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. பெண்களின் முன்னேற்றமானது சமத்துவ சமுதாயத்திற்கு இன்றியமையாததாகும்.

தொகுப்புரை

    பெண்களுக்கு அளிக்கப்பட்ட அநீதிகள் குறித்தும் அவற்றிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் குறித்தும் அண்ணல் காந்தியடிகளின் வலிமைமிக்க கருத்துகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

    சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும் அவர்களின் அடிப்படைத் தேவைகள், உரிமைகள், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவை அனைத்துத்தரப்பு பெண்களுக்கும் தடையின்றி கிடைக்கப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளான வரதட்சணைக் கொடுமை, தேவதாசி முறை போன்றவற்றிலிருந்து முழுமையாகப் பாதுகாத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென்பதே அண்ணல் காந்தியடிகளின் கருத்தாகும் என்பது புலப்பட்டுள்ளது.

    பெண்களின் இயல்புகள் குறித்தும், சமுதாயத்தில் பெண்களின் முக்கியத்துவம் மற்றும் தற்காலப் பெண்களின் மனநிலை குறித்தும் பலதளங்களில் குறிப்பிடப்பட்ட அண்ணல் காந்தியடிகளின் கருத்துகள், ‘காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்கள்’ எனும் இக்கட்டுரையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி