- எழுத்தாளர் மு.மேத்தாவுடன் 'ஓவியா பதிப்பக' உரிமையாளர் எழுத்தாளர் வதிலைப்பிரபா -

ஓவியா பதிப்பக உரிமையாளரும், 'மகாகவி' சஞ்சிகையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருமான திரு.வதிலைப்பிரபா அவர்கள் கவிஞர் மு.மேத்தா அவர்களைச் சந்தித்து 'மகாகவி' சஞ்சிகை, ம. சேரனின்  "மூனு கோடு நோட்டு" (சென்ரியு கவிதைகள்) மற்றும் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த எனது நாவலான 'நவீன விக்கிரமாதித்தன்' ஆகியவற்றைக் கொடுத்தது பற்றிய தகவலினை அனுப்பியிருந்தார். அவருக்கு என் நன்றி.  அக்காட்சிக்கான புகைப்படத்தினையும் அனுப்பியிருந்தார். அதனையே இங்கு காண்கின்றீர்கள்.

                      - கவிஞர் மு.மேத்தா -

அவர் அனுப்பியிருந்த தகவல்: "சற்றுமுன் கவிவேந்தர் மு. மேத்தா அவர்களது கரங்களில் 'மகாகவி' மற்றும் வ. ந. கிரிதரன், கனடா எழுதிய 'நவீன விக்கிரமாதித்தன்'  நாவல், ம. சேரன் எழுதிய 'மூனு கோடு நோட்டு'  சென்ரியு கவிதைகள்... மு. மேத்தா அவர்கள் பழைய மதுரை மாவட்டக்காரர். தற்போது அது தேனி மாவட்டம். பெரியகுளம் அவரது ஊர். நானும் 10 ஆண்டுகள் பெரியகுளம் நகரில் தான் வசித்தேன். கவிஞர் வைரமுத்து, முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இருவரும் பெரியகுளம்தான். நான் பிறந்த மாவட்டமும் தேனி மாவட்டம்தான்."

கவிஞர் மு.மேத்தாவை நான் முதன் முதலில் அறிந்து கொண்டது அவரது கவிதையொன்றின் மூலம் அல்ல.  அவரது சிறுகதையொன்றின்  மூலம்.  என் பால்ய  பருவத்தில் நான் வாசிக்கத்தொடங்கியிருந்த சமயத்தில் தமிழக வெகுசன இதழ்களில் மூழ்கிக் கிடந்தேன். அப்பொழுது ஆனந்தவிகடன் மாதாமாதம் மாவட்டச் சிறப்பிதழ்களை வெளியிட்டு வந்தது. சேலம் மாவட்டச் சிறப்பிதழ், மதுரை மாவட்டச் சிறப்பிதழென்று தஞ்சாவூர் மாவட்டச் சிறப்பிதழென்றும் ஒரு சிறப்பிதழ் வெளிவந்தது.

அம்மாவட்டச் சிறப்பிதழ்களில் அம்மாவட்ட மண் வாசனை மணக்கும் சிறுகதைகள் வெளியாவதுண்டு. அவ்வகையில் தஞ்சாவூர் மாவட்டச் சிறப்பிதழில் இரு  கதைகள் தேர்வாகி வெளிவந்திருந்தன. அதிலொன்று மேத்தாவின் சிறுகதை. அப்பொழுதுதான் அவரை நான் முதன் முதலாக அறிந்தேன். இவ்விதம் அறிமுகமான மு.மேத்தாவின் கைகளில் என் அண்மைக்கால நாவலிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

கவிஞர் மேத்தா நினைவில் நிற்கும் காலத்தால் அழியாத திரைப்படப்பாடல்கள் பலவற்றையும் எழுதியுள்ளார். அவற்றில் ஒன்று 'உதய கீதம்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இவ்வினிய பாடல் 'பாடும் நிலாவே'.

மு.மேத்தா, எஸ்.பி.பி & எஸ்.ஜானகி , இளையராஜா, மோகன் & ரேவதி கூட்டணியில் உருவானது இப்பாடல்.

கவிஞர் மு.மேத்தாவின் திரைப்படப் பாடல்கள்.