பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் மறைந்துவிட்டதாக முகநூல் மூலம் அறிந்தேன். மிகவும் துயர் தரும் செய்தி. நான் மதிக்கும் தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவர் இவர். இவரது இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் முக்கியத்துவம் மிக்கவை.

இவரை நான் சந்தித்ததில்லை. இவரது படைப்புகளூடு மட்டுமே அறிந்திருக்கின்றேன். எனது 'அமெரிக்கா' நாவல் தனிப்பதிப்பாக, இலங்கையில் 'மகுடம்' பதிப்பாக வெளியானபோது அதற்கு சிறப்பானதோர் அணிந்துரையினை எழுதியிருந்தார். அதனை எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருப்பேன்.

இவரைப்போன்ற ஆய்வுத்தேடல் மிக்க பேராசிரியர்களை மிகவும் அரிதாகவே காணமுடியும் சூழலில் இவரது மறைவு எதிர்பாராதது. இவர் பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் 'பதிவுகள்' சார்பிலும், தனிப்பட்டரீதியிலும் ஆழ்ந்த இரங்கல்.