" கத்தோலிக்க அடிப்படை வாதத்திற்குள் நின்று இலக்கியம் பற்றிய புரிதல்கள் இல்லாமல் எழுத்தாளனுக்கு எதிர் நிலையில் நின்று பேசப்படும் குரல்களாகவே பல குரல்கள் அடிபட்டுப் போவதை முக நூலில் காண்கிறேன். "

இது போன்ற கருத்துகள் உங்களைப்போன்ற எழுத்தாளர்களிடமிருந்து வருகையில் எங்களைப் போன்ற நூலை வாசிக்காத எழுத்தாளர்கள் உடனடியாக மதவாதிகளே புத்தக எரிப்புக்குக் காரணமானவர்கள் என்று கருதத் தொடங்குகின்றோம்.

ஆனால் இது பற்றி அன்பர்கள் சிலர் என்னுடன் தொடர்புகொண்டு கூறிய கருத்துகளின் அடிப்படையில் இந்நூலுக்கான எதிர்ப்பை மதத்துடன் பிணைக்க முடியாதுபோல்தான் தெரிகின்றது. ஏனென்றால் அவ்வன்பர்கள் கூறிய கருத்துகளின் அடிப்படையில் அவரது ஊரவர்கள் பலர் , மதகுரு உட்பட, இந்நூல் வெளிவர உதவியிருக்கின்றார்கள். நூலை வாசிக்காமலேயே உதவியிருக்கின்றார்கள். ஆனால் நூலை வாசித்தபின் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்பதங்கள், ஊரிலுள்ள பெண் ஒருவர் பற்றிய கதை போன்ற விடயங்களே நூலெதிர்ப்புக்குக் காரணம் என்று தெரிகின்றது. அவ்வெதிர்ப்பை மதவாதிகளின் எதிர்ப்பாகத் திசை திருப்புவதற்கு மேற்படி உங்கள் கூற்று காரணமாகவிருக்கிறதோ என்று நான் ஐயுறுகின்றேன்.

'ஒரு நிஜக் கதை இலக்கியமாக்கப்பட்டிருக்கிறது.' என்று நீங்கள் கூறுவதால் மேற்படி அன்பர்கள் கூறுவதுபோல் உண்மைக்கதையொன்றும் இக்கதைத்தொகுப்பில் உள்ளதென்பதை அறிய முடிகின்றது. அந்த உண்மைக் கதையை , எழுத்தில் பாவிக்க முடியாத சொற்பதங்கள் மூலம் எழுதியதன் மூலம் அந்தக் குடும்பம் ஊர் முன் தலைகுனிந்து, கூனிக்குறுகி நிற்பதாக மேற்படி அன்பர்கள் கூறினார்கள். இது பற்றிய உங்கள் கருத்தென்ன?

"இவ்வாறான மக்கள் சமூகத்தின் மத நம்பிக்கைகள், பிற்போக்கான தன்மைகள் எல்லாவற்றையும் தவிர்த்து இக்கோபத்தை அணுக முடியாதா?" என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அந்த அன்பர்களின் கூற்றுகள் இதை மறுக்கின்றன. ஊரிலுள்ள பெண்ணொருத்தியின் கதையைக் கேவலமாக எழுதியதால்தான் எதிர்ப்பே தவிர, எதிர்ப்பு மதரீதியிலானது அல்ல என்பது அவர்களது வாதம்.  எழுத்தாளர் டானியல் ஜெயந்தனும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் மத எதிர்ப்பாளர்கள் சிலரும் காணப்பட்டார்கள் என்று அவரது பதிவொன்றில்குறிப்பிட்டிருக்கின்றார். இது மதத்துக்கப்பால் எதிர்ப்பாளர்கள் ஊர் என்னும் அடிப்படையில் இணைந்திருக்கின்றார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதுபோல் தெரிகிறது. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?