ராஜா பதிப்பகத்தினரால் வெளியிடப்படும் பன்னாட்டுப் பன்முகத் தமிழ் ஆய்விதழான 'நவீனத்தமிழாய்வு' (Modern Thamiz Research)) இதழின் மார்ச் 2021 பதிப்பில் எனது, வ.ந.கிரிதரனது,  'குடிவரவாளன்' நாவல் பற்றிய விரிவான ஆய்வுக் கட்டுரையொன்று வெளியாகியுள்ளது. இதனை முகநூல் நண்பரும், பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளருமான சரவணகுமார் அவர்கள் அறியத்தந்திருந்தார். அவருக்கு நன்றி.

எனது 'குடிவரவாளன்' நாவலைப்பற்றி 'அமெரிக்க நாட்டில் அகதியர்கள்: வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் புதினத்தை முன் வைத்து....' என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையினை எழுதியிருப்பவர் க.ஆனந்தராஜன் , முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உராய்வு மையம், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு இந்தியா.

எனது நாவலைத் தேடியெடுத்து வாசித்து இக்கட்டுரையினை எழுதியுள்ளார் ஆனந்தராஜன். இவரது தேடலுக்கு என் வாழ்த்துகள். ஒரு படைப்பு தன் வாசகர்களைத் தானே சென்றடையும் என்பதை நம்புபவன் நான். அந்த வகையில் குடிவரவாளன் தன் வாசகர்கள் பலரைச் சென்றடைந்துள்ளது.  இவரையும் சென்றடைந்துள்ளது. அது மகிழ்ச்சியளிப்பது.