இதுவரை கால்கமும் காஞ்சிரமோடை எஞ்னும் இப்பகுதியை நான் காஞ்சிரமொட்டை என்றே அறிந்திருந்தேன். இப்பகுதியை நான் அறியக் காரணமாகவிருந்தது எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று நடத்திய காந்தியத்தின் 'நாவலர் பண்ணை'த் தன்னார்வத் திட்டம். அப்பொழுது மருதோடை வரை மட்டுமே பஸ் செல்லும். அங்கிருந்து பண்ணைக்கு மூன்று மைல்கள் வரையில் நடக்க வேண்டும். இத்தூரத்தைக் குறைப்பதற்காக காஞ்சிரமோடைக் காட்டினூடு பாதை அமைப்பதும் அத் தன்னார்வத்திட்டத்தின் ஓரம்சம். அத்திட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றவர்களில் நானுமொருவன். அப்பொழுது நான் என் படிப்பை முடித்து வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது அப்பகுதி மக்கள் அப்பகுதியைக் காஞ்சிரமொட்டை என்றே அழைத்தார்கள். அல்லது அவ்விதமே எனக்குக் கேட்டது. அதனால் அப்பகுதியின் பெயர் அவ்விதமே என் மனத்தில் படிந்து விட்டது. அண்மையில் எழுத்தாளர் 'பண்டிதர்' க.சச்சிதானந்தனின் 'யாழ்ப்பாணக் காவியம்'நூலின் முன்னுரையை படிக்கும் வரையில் அவ்விதமே எண்ணியிருந்தேன். படித்ததுமே அப்பகுதியின் பெயர் காஞ்சிமோடை என்றும் , அதன் வரலாற்று முக்கியத்துவம் பற்றியும் அறிந்துகொண்டேன்.

'யாழ்ப்பாணக் காவியம்' நூலில் எழுத்தாளர் 'பண்டிதர்'க.சச்சிதானந்தன் எழுதியுள்ள முன்னுரையில் காஞ்சிரமோடை பற்றிக் கூறப்பட்டுள்ள பகுதிகள் வருமாறு:

" 1958ம் ஆண்டு சிறியேன் நெடுங் கேணியிலிருந்து மருதோடை வழியாகக் காஞ்சிரமோடை சென்று அங்கிருந்து காட்டுப்பூவரசங் குளத்தைக் கடந்து பணிச்சமடு என்னுமிடத்துக்குப் பலமுறை செல்லவேண்டியிருந்தது. இங்கு குறிப்பிடும் காடு மிக அடர்ந்தது. கொடிய வனவிலங்குகளும் பேராபத்தக்களும் நிறைந்துள்ளன. பனிச்சமடுவென்னும் ஏரியின் கரையிலே சிலநாள் வசித்த சிறியேன், மிக உயர்ந்த பாலை மரமொன்றின் உச்சியில் மூன்றாம் அடுக்குப் பரணில் நித்திரை செய்து வந்தேன். ஒருநாள் நள்ளிரவில் கடலிரைவது போல் நீரின் ஒசை கேட்டுப் பயந்தேன். ஆனால் நீர்ப்பெருக்கு சிறியேன் இருந்த இடத்தை அடையவில்லை. மறுநாள் சிறியேனும் வேறு பணியாளர்களும் பாதையற்ற காடுவழியே நீரோசைத் திசைநோக்கிச் சென்றோம். அக்காடுகளிலெல்லாம் இடிந்த பிள்ளையார் கோவில்களும், சிவன்கோவில்களும், தூண்களும் தூபிகளும் வாயிற்படிகளும் காணப்பட்டன. கருங்கல் வேலைகளும் சிற்பங்களும் அங்கங்கே போன வழி யெல்லாம் சிதறிக் கிடந்தன. ஈற்றில் ஒருயர்ந்த பிரதேசத்துக்கு வந்தபொழுது, கருங்கல்லாற் கட்டப்பட்ட ஒரு பெரிய அணைக்கட்டுக் காணப்பட்டது. அங்கு பிரயோகிக்கப்பட்ட நீள்சதுரக் கனவடிவக் கருங்கற்கள் மிகப்பிரமாண்ட மானவை; அன்றியும் கருங்கல் வேலை மிக உன்னதமானது. அணையின் நடு விலே சில கருங்கற்கள் குலைந்தமையால் அந்த இடைவழியாக நீர் மிக உயரத்திலிருந்து குதிக்கிறது. ஒரு நீர்வீழ்ச்சிபோன்று குதிப்பதால் பேரிரைச்சல் உண்டாகிறது. விழுமிடத்தில் மிகப் பலமாக நீர்சுழன்று அகப்பட்டவற்றைப் பல பரிவலுவுடன் இழுத்துச் செல்கிறது. கால் வைக்கப்பயமாக இருக்கும். வழிந்த நீர் சிற்றாறு போல் ஒடுகின்றது. அதன் இருமருங்கிலும் கண்ட இயற்கைக் காட்சியை என்னென்பது பூக்களின் மகரந்தம் சொரிந்து, பசுமை கலந்தபொன்போன்று நிலத்திற் பரந்திருப்பது நெஞ்சை அள்ளுகிறது. எத்தனை வண்ணச் சேர்க்கைகள் கொண்ட வண்ணாத்திப்பூச்சிகள்! விதம் விதமான புள்ளிசைகள், மிருகங்களின் உறுமல்கள்! இந்த நீர்வீழ்ச்சியின் ஓசை மனத்தைப் பறையடித்துக் கிளர்த்தியது. அதன் உன்னதம் உள்ளத்தை மீட்டியது. அந்த எழுச்சியே இக்காவியத்தைப் பாடுவதற்குச் சுருதியாயிற்று.

பின்னர் காஞ்சிர மோடையில் வாழ்ந்த முத்தரம்மான் என்ற மூத்தோரை இதன் வரலாறு பற்றிச் சிறியேன் கேட்டேன். அவர், "இது பரராசன் அணைக்கட்டு என்று கூறினார். இங்கு கருங்கற்களில் பல எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவை மங்கியிருந்தன. இவ்வணைக்கட்டுப் பற்றிச் சரித்திரநூல்களில் தேடியபோது ஒன்றுங் கிடைக்கவில்லை. இப்பிரதேசம், வட, வடமத்திய, கீழ் மாகாணங்கள் பொருந்துமிடத்தில் தமிழ்ப் பிரதேசத்தில் உள்ளது. பதவியாவின் வடக்கே பத்துப் பதினொரு மைல் தூரத்திலுள்ளது. புறோகியர் என்பார். புறோகியர் (BrOhior 1934 P 41) இது பற்றிக் குறிப்பிட்டிருப்பவற்றைக் கீழே மூலத்திலுள்ளவாறு ஆங்கிலத்தில் தருகின்றோம்.

"About ten or eleven miles down more or less sinuous course of Ma. Oyo, which passes out the breach of Padaviya tank, there is an ancient stone dam or weir which is entitled to take one of the foremost place among the structures of the kind in Ceylon. This is known Varnardi Palam.Only one authority has ever inspected this monument of labour. Parker Sessional paper, XX11 of 1886"

வண்ணாத்திப் பாலமென்று இதை வழங்குவர். கீழ் மாகாணத்தில் இயன் ஓயாப் பகுதியிலும், ஒரு வண்ணாத்தி பாலமுண்டு. அதனையும் இதனையும் வேறு பிரித்துக் கொள்க. இந்த அணைக்கட்டைக் கடந்து கிழக்கே சென்றால் கொக்கிளாய் தென்னமரவடி போன்ற இடங்களை அடையலாம். பதவியாப் பகுதி பற்றி இந்திரபாலா (1972, பக். 95) ஆராய்ந்துள்ளார். பதவியாவிலே கண்டெடுக்கப்பட்ட சாசனம் பதிவியாவுக்கு மறு பெயர் மதீபதி கிராமம் என்று கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலே குறிப்பிட்ட அணைக்கட்டைச் சுற்றி எத்தனையோ இடிந்த கோவில்கள் இருக்கின்றன. கல்லெழுத்துக்கள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி எழுதிய நூல்கள் கைக்கெட்டவில்லை. மக்கள் வாழுந்ததற்கடையாளமாக, கிணறுகள், பாத்திரங்கள், மனைச்சிதைவுகள் காணப்படுகின்றன. பேராபத்துக்கள் நிறைந்த பிரதேசமானபடியால் அங்கு சரித்திராசிரியர்கள் செல்லவில்லை போலும்! "

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.