இவர் ஒரு பண்டிதர். கலாநிதி. அறிவியல், வரலாறு, கவிதை, கட்டுரை, நாவல் என இலக்கியத்தின் பன்முகத்திறமை மிக்க எழுத்தாளர். முக்கியமான மரபுக் கவிஞர். தமிழ் மொழியின் மீது தீராத பற்று மிக்கவர். அதனை இவரது கவிதைகள், கட்டுரைகள், நூல்கள் வெளிப்படுத்தும். இலங்கையில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் அனைத்து விருதுகளும் இவருக்குக் கிடைத்துள்ளன. இருந்தும் இலங்கைத் தமிழ்க் கவிதைகள், படைப்புகள் பற்றி எழுதும் பலரும் மிகச் சாதாரணமானவர்களைப்பற்றியெல்லாம் குறிப்பிட மறப்பதில்லை , ஆனால் இவரை மறந்து விடுவார்கள். ஏன்? 'இருபதாம் நூற்றாண்டுத் ஈழத்தமிழ் இலக்கியம்' நூலில் கூட இவரது கவிதைப்பங்களிப்பு பற்றிக் குறிப்பிடப்பட்டதாகத் தெரியவில்லை.

இவரது கவிதைகள், கட்டுரைகள், நூல்கள் பலவும் மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அதன் மூலம் இவரது அளப்பரிய இலக்கியப் பங்களிப்பை இன்றைய தலைமுறையினரும் அறிந்துகொள்ள முடியும்.

இவர் மீதான இலக்கிய இருட்டடிப்பு காரணமாக நானும் கூட இவரது படைப்புகளைப்பற்றி பெரிதாக, அண்மைக்காலம் வரையில் கவனத்திலெடுத்திருக்கவில்லை. எடுத்தபோது இவரது பங்களிப்பு என்னைப் பிரமிக்க வைத்தது. இவர்தான் எழுத்தாளர் க.சச்சிதானந்தன். “சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்” என்னும் புகழ்பெற்ற வரிகளுக்குச் சொந்தக்காரர். அவரது 'தமிழ்க்கவிப்பித்து'என்னும் கவிதையின் ஈற்றடிகள் அவை. அவரது இவ்வரிகளையும் "ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும் ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்" என்னும் கவிஞர் இராஜபாரதியின் கவிதை வரிகளையும் போட்டுக் குழப்பிக் கொள்வோர் பலர். சிலோன் விஜேந்திரன் தொகுத்த ஈழத்துக் கவிதைக்கனிகள் தொகுப்பு நூலில் கவிஞர் இராஜபாரதியின் இவ்வரிகளைக்கொண்ட கவிதையை வாசித்திருப்பதாக நினைவு.

எழுத்தாளர் க.சச்சிதானந்தனை, பண்டிதர் க.சச்சிதானந்தனை என் யாழ் இந்துக்கல்லூரிக் காலகட்டத்தில் அறிந்திருக்கின்றேன். ஆனால் அவரது படைப்புகளை அப்போது நான் வாசித்திருக்கவில்லை. என்னுடன் படித்த சக மாணவனான கணநாதனின் தந்தையார்தான் பண்டிதர் க.சச்சிதானந்தன் என்று அறிந்திருக்கின்றேன். கணநாதன் ஒருபோதும் தனது தந்தையாரைப்பற்றி எமக்குக் கூறியதில்லை. ஆனால் பத்தாம் வகுப்பில் எமக்குச் சமயம் படிப்பித்த ஆசிரியர் சோமசேகரசுந்தரம் ('சோமர்')எப்பொழுதும் அவனிடம் அவனது தந்தையாரான பண்டிதர் க.சச்சிதானந்தனைப்பற்றி விசாரிப்பார். அதன் மூலமே அவனது தந்தையின் இலக்கியப் பங்களிப்பு பற்றி முதன் முதலில் அறிந்துகொண்டேன்.


கவிதை: தமிழ்க் கவிப் பித்து (ஆனந்ததேன் தொகுப்பிலிருந்து)

-  க.சச்சிதானந்தன் -

பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை - எனைப்
போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை
மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை - அந்த
மாரன் அழகெனக்கு வேண்டியதில்லை.

கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா
தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று
செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா.

உண்ண உணவெனக்கு வேண்டியதில்லை - ஒரு
உற்றார் உறவினரும் வேண்டியதில்லை
மண்ணில் ஒரு பிடியும் வேண்டியதில்லை - இள
மாதர் இதழமுதும் வேண்டியதில்லை.

பாட்டில் ஒருவரியைத் தின்றுகளிப்பேன் - உயிர்
பாயும் இடங்களிலே என்னை மறப்பேன்
காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன் - அங்கு
காயும் கிழங்குகளும் தின்று மகிழ்வேன்.

மாட மிதிலைநகர் வீதிவருவேன் - இள
மாதர் குறுநகையில் காதலுறுவேன்
பாடியவர் அணைக்கக் கூடி மகிழ்வேன் - இளம்
பச்சைக் கிளிகளுடன் பேசி மகிழ்வேன்.

கங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் - பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் - அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.

செம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து - அங்குச்
சென்று கசிந்தழுது நொந்து விழுவேன்
அம்பொன் உலகமிர்து கண்டனேயடா - என்ன
ஆனந்தம் ஆனந்தம் கண்டனேயடா.

கால்கள் குதித்துநட மாடுதேயடா - கவிக்
கள்ளைக் குடித்தவெறி ஏறுதேயடா
நூல்கள் கனித்தமிழில் அள்ளிடவேண்டும் - அதை
நோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிடவேண்டும்.

தேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை - அவர்
தின்னும் சுவையமுது வேண்டியதில்லை
சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் - என்றன்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்


முகநூற் எதிர்வினைகள்:

Perumal Ganeshan
பயிற்சிக்கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளர்

Ambikaipahan Gulaveerasingam
ஆக, சிறந்த தகவல். நன்றிகள்.

Thassim Ahamed
எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா நடித்த''எங்கள் தங்கம்'' படத்தில் ''நான் அளவோடு ரசிப்பவன்''எனும் பாடல் ஆரம்பிக்க முன் எம்.ஜி.ஆர்.
“சாவில் தமிழ்படித்துச்
சாகவேண்டும் - என்றன்
சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்”
என்ற வரிகளைப் பேசி நடித்துள்ளார்.

கு. சரவணன்
இவர் தான்சார்ந்த தமிழரசுக்கட்சியின் திருமலை யாத்திரை தொடர்பாகவும் நூல் எழுதியுள்ளதாக ஞாபகம்

Sivanesaselvan Arumugam
G|reat personality

Velthas Vimala
பண்டிதர் சச்சி யாழ் பல்கலைக்கழக நூலகத்துக்கு உச்சி வெயிலையும் பொருட்படுத்தாது தினமும் வருகைதரும் சிறந்த வாசகர். அவரது நடத்தையால் என்னை ஊக்குவித்த பெருமகன். வாழ்ந்து காட்டியவர். உண்மையான ஆத்மா.

Nadarajah Parthiepan
நல்ல எழுத்தாளர்.

Michael Collin
அருமையான தகவல். ராஜபாரதி, சச்சிதானந்தன் கவிதை தொடர்பாக எனக்கும் ஒரு குழப்பம் இருந்தது. இன்று அது தீர்ந்தது. மிக்க நன்றி

Sinnathurai Thillainathan
இலங்கை தமிழரசுக்கட்சியை ஆரம்பித்த ஆறுபேர்களில் பண்டிதர் சச்சியும் ஒருவராவர் பல வருடங்களாக பஞ்சாங்கத்தையும் கணித்துள்ளார் பன்முக ஆளுமை கொண்ட பேரறிஞர் தும்பளையை … See more

Mylvaganam Mahalingam
பலாலி, ஆசியர் விசேட பயிற்சிக் கலாசாலையில் நீண்டகாலம்,விரிவுரையாளராக கடமையாற்றிய பேரறிஞர்.1974/75-ஆண்டுகளில்,அவரிடம் உளவியல் கல்விகற்றபெருமைஎனக்குண்டு.அவரை,நாம் எல்லோரும்"சைக்கோலஜி-சச்சி"என்றேஅழைப்போம் . மிகத் திறமையான,விரிவு ரையாளராகப் பலராலும் அறியப்பட்டவர்.

ஜவாத் மரைக்கார்
Mylvaganam Mahalingam நான், திக்குவல்லை கமால் முதலியோர் பலாலியில் 1973/74 இல் கற்றோம். சச்சியைப் பெரிய பண்டிதர் என்றும் தமிழ்மாறனை சின்னப் பண்டிதர் என்றும் அழைத்தோம்.

Lunugala Sri
இவரின் மகள் பத்மாசினி. தற்போது லண்டனில் வசிக்கிறார். அவரும் நானும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றியுள்ளோம். அவரும் அப்பா என்று சொல்லுவதை விட சச்சி என்றே அதிகமாக சொல்லுவார்.

Lunugala Sri
ஆனந்தன் என்ற பெயரில் எழுதியவரும் இவர் தான். ஆனந்தன் இவரின் மகன்.

Thambirajah Elangovan
இவர் குறித்த எனது கட்டுரைகள் தினகரன் - தினக்குரல் - ஐ. பி. சி. தமிழ் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. முகநூலிலும் பதிவு உள்ளது.

Boopal Chinappa
பணம் பாய்ச்சி விருதுகள் வழங்கும் காலத்தில் நாங்கள் வாழ்கின்றோம், அப்படி என்றால் இவரை யார் கவனிப்பார்கள்??

Thassim Ahamed
Boopal Chinappa கிரிதரன் நவரட்ணம் அவர்களின் இந்த தேடற்கரிய பதிவுடன் அது அதாவது ஐயா பற்றிய பதிவுகள் தொடரவேண்டும் ஆர்வமுள்ளவர்கள் முன்வருவது காலத்தின் கட்டாய தேவையாகும்

நா. விச்வநாதன்
மாவட்டிபுரம் சச்சிதானந்தன் எனக் கவிஞரை அறிவோம். குறிப்பிட்டவரிகள் பாரதிதாசன் என்று தமிழகத்தில் சொல்வர். கவிஞர் வி.ரி இளங்கோவன் தான் தெளிவுபடுத்தின்ர்.

Yogananthan Kanakasooriyam
ராஜபாரதி , சச்சிதானந்தன் இருவருடைய கவிதைகளும் வேறானவை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டேன் அருமையான தகவல்

Hafiz Issadeen
பண்டிதர் சச்சிதானந்தன் அவர்களிடம் தமிழ் கற்கும் அரு வாய்ப்பு எனக்கு பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கிடைத்தது. கம்பராமாயணத்தில் அவர் கற்பித்த மிதிலைக் காட்சிப் படலம் அரை நூற்றாண்டு கடந்த பின்னரும்கூட இன்றும் நினைவிலிருக்கிறது. அற்புத ஆற்றல்கள் பல கொண்ட ஆளுமை அவர்.

Jamuna Indrakumar
இவரைப் பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றிஉங்களுக்கும்!

Siva Kumaran
ஆய்வுகள் தொடர்பில் கதைத்திருந்தேன்

Raveendran Nadesan
பலாலி ஆசிரிய கலாசாலையில் எமக்கான கல்வியியல் விரிவுரையாளர்; இடப்பெயர்வின் பின்னர் வவுனியாவில் சந்தித்த ஞாபகம் உண்டு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வன்னிப் பிராந்திய குள நீர்ப்பாசனம் பற்றி எழுதி உள்ளார் என எண்ணுகிறேன், நேரடி உரையாடலிலும் அதனைச் சிலாகித்துக் கூறினார். ‘யாழ்ப்பாணக் காவியம்’ (தலைப்பு சரியா தெரியவில்லை) அவரது இறுதிக்காலப் படைப்புகளில் ஒன்று. செங்கையாழியன் இவரது சிறுகதை ஒன்றை முதல் தலித் இலக்கியப் படைப்பாகத் தனது ஈழச் சிறுகதை வரலாற்று நூலில் எழுதி உள்ளார் (அதனை ஏற்க இயலாத காரணம் பற்றி எனது கட்டுரை ஒன்றில் எழுதி இருப்பதாக ஞாபகம்).
பலாலி ஆசிரிய கலாசாலையில் (1981-2) அவரைப் பிரமிப்புடன்தான் எல்லோரும் பார்த்தோம்; ஆட்கள் இல்லாத பாடங்கள் கற்பிக்கும் பொறுப்பு அவருக்கானது. அப்போது உப அதிபராக இருந்து ஓய்வு பெற்றார் என நினைக்கிறேன்!
அவரைக் கவனங்கொள்ள வைக்கும் முயற்சிக்கு நன்றிகள் பல!

Giritharan Navaratnam
Raveendran Nadesan //‘யாழ்ப்பாணக் காவியம்’ (தலைப்பு சரியா தெரியவில்லை) // சரியான தலைப்பு. நூலகம் தளத்திலுள்ளது.