எழுத்தாளர் புதுமைப்பித்தனின் முக்கிய சிறுகதைகளில், பலராலும் அடிக்கடி நினைவுக் கூரப்படும் கதைகளிலொன்று இச்சிறுகதை. கதைக்குப் பங்கங்கள் மொத்தம் இரண்டே இரண்டுதாம். சிறந்த சிறுகதையொன்று பக்கங்களின் எண்ணிக்கையை வைத்து நிர்ணயம் செய்யப்படுமொன்றல்ல. அதற்கு உதாரணமாக விளங்கும் சிறுகதைகளிலொன்றுதான் பொன்னகரம்.

நம்மவரில் பலருக்குச் சிறுகதையொன்றின் வடிவம் அல்லது கூறும் பொருள் பற்றிய புரிதல் போதிய அளவில் இல்லையென்பதையும் உணர முடிகின்றது. அவர்கள்தம் ஆதர்ச எழுத்தாளர்கள் பல பக்கங்களை உள்ளடக்கிய சிறுகதைகளை எழுதியிருந்தால் இவர்களும் அவற்றையே , அவ்விதம் எழுதுவதையே சிறுகதையொன்றினை எழுதுவதற்குரிய வழியாகக் கருதிக்கொள்வார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அதிக அளவில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளைப் படித்திருக்க மாட்டார்கள். படித்திருந்தால் சிறுகதையொன்றின் தரத்தினை நிர்ணயிப்பது அதன் பக்கங்களின் எண்ணிக்கை அல்ல என்பதைப் புரிந்துகொண்டிருப்பார்கள்.

இன்னும் சிலர் இருக்கின்றார்கள். இவர்களுக்குச் சிறுகதைகள் என்றால் அது வெளிப்படுத்தும் அம்சம் என்ன என்பதைப்பற்றிய புரிதல் இல்லாமலிருக்கும். உதாரணத்துக்கு ஒரு சிறுகதை கருத்தினை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தால் உடனேயே அதனைப் பிரச்சாரமாகக் கருதி விடுவார்கள். இவ்விதம் இவர்கள் கருதுவதற்கு முக்கிய காரணம் போதிய அளவிலான வாசிப்பு இல்லாததே. ஒரு சிறுகதையானது ஒரு கருத்தினை மையமாகக்கொண்டு எழுதப்பட்டிருக்கலாம். ஓருணர்வினை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கலாம். ஓரிடத்தைப்பற்றிய அல்லது ஒரு விடயத்தைப்பற்றிய விவரணச்சித்திரமாக இருக்கலாம். ஓரிடத்து மாந்தரைப்பற்றிய நடைச்சித்திரமாக இருக்கலாம். ஒரு தேடலை வெளிப்படுத்துவதாக இருக்கலாம். நான் இங்கு என்ன கூற வருகின்றேனென்றால் ஒரு சிறுகதையை ஒருவர் வாசித்து முடிக்கையில் அச்சிறுகதை அதனை வாசிக்கும் வாசகர் ஒருவருக்கு ஏற்படுத்தும் விளைவையே குறிப்பிடுகின்றேன்.

இவ்விதமாக ஒரு சிறுகதையைப் பற்றிய புரிதல் இல்லாத ஒருவர் ஆனை பார்த்த அந்தகரைப்போல் தன் பார்வையில் சிறுகதையைப் பார்ப்பார். விமர்சிப்பார். இவர்கள் இலக்கியத் திறனாய்வு செய்யத்தொடங்கினால் விளைவு எப்படியிருக்கும்? ஆனால் இவ்விதமானவர்களே நம் கலை, இலக்கிய உலகில் அதிகமாக இருப்பது துரதிருஷ்ட்டவசமானது. இலக்கிய ஆனையினை முழுமையாக அறியாமலேயே அதனைப்பற்றி முற்றும் அறிந்ததாகக் கருதிக்கொள்ளும் அந்தகர்கள் இவர்கள்.

மீண்டும் சிறுகதை பற்றிய புரிதலுக்கு வருவோம். புதுமைப்பித்தனின் பொன்னகரம் கதைக்கே வருவோம். இந்தக் கதையை வாசித்து முடிக்கையில் வாசகர் ஒருவருக்கு ஏற்படும் விளைவு என்ன?

இந்தச்சிறுகதை கருத்தொன்றினைக் கூருகின்றது என்று உணர்வாரா? ஒரு குறிப்பிட்ட வர்க்கத்து மக்களின் வாழ்க்கையின் குறுக்கு வெட்டு என்று புரிந்து கொள்வாரா? நடைச்சித்திரம் என்று உணர்ந்து கொள்வாரா? அல்லது மாநகரமொன்றின் குறிப்பிட்ட பகுதியின்றின் சமூக, பொருளியல் நிலையினைப் படம் பிடித்துக்காட்டும் விவரணச்சித்திரம் என்று விளங்கிக்கொள்வாரா? அம்மாளுவை இந்த நிலைக்கு ஆளாக்கிய இச்சமூகத்தின் மீது அறச்சீற்றத்தினை அவ்வாசகர் கொள்வாரா? உண்மையில் இவை அனைத்தையுமே இவ்விரு பக்கச் சிறுகதை இதனை வாசிக்கும் வாசகர் ஒருவருக்கு ஏற்படுத்துகின்றது. அதனால்தான் இச்சிறுகதை புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இச்சிறுகதையின் இன்னுமொரு சிறப்பு: இதில் பாவிக்கப்பட்டுள்ள மொழி. கூரிய வாளாக வாசகர் இதயத்தை வெட்டிச் செல்லும் மொழி. அம்மாளுவை இந்நிலைக்கு ஆளாக்கிய இச்சமூகத்தின் மீது வாசகர் ஒருவரை ஆத்திரப்பட வைக்கும், விமர்சிக்க வைக்கும் மொழி.

எழுத்தாளர்களே, கலையிலக்கியத் திறனாய்வாளர்களே! நிறைய வாசியுங்கள். நிறையச் சிந்தியுங்கள். அவர் சொன்னார். இவர் சொன்னார் என்று கதையொன்றினை பிறர் பார்வையில் பார்க்காதீர்கள். அவர் சொன்னதை உள் வாங்குங்கள். இவர் சொன்னதையும் உள்வாங்குங்கள். உள்வாங்கிச் சிந்தித்து உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள். செய்தால் நிச்சயம் உங்கள் படைப்பாற்றல் மேன்மேலும் வளரும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

இச்சமயத்தில் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி தனது மனக்கண் நாவலுக்கான முடிவுரையில் சிறுகதை பற்றிக் கூறிய கருத்துகளைச் இங்கு சுட்டிக்காட்டுவதும் பொருத்தமானதே. அவர் கூறியிருப்பார்:

"சிறுகதை வேகமாக ஒரே மூச்சில் நிலத்தை நோக்கிக் குதிக்கும் நீர் வீழ்ச்சியைப் போன்றது. மின்னலின் வேகம் அதிலிருக்கும். "

சிறுகதையும் அப்படித்தான் நீர் வீழ்ச்சியைபோலிருக்க வேண்டும். மின்னலின் வேகத்தில் வீழும் நீர் வீழ்ச்சிதான் சிறுகதையும். ஆடி , அசைந்து செல்லும் நதியல்ல சிறுகதை. அது நாவல் என்றும் மேற்படி முடிவுரையில் கூறியிருப்பார் அ.ந.க.

இதுவரை புதுமைப்பித்தனின் பொன்னகரம் சிறுகதையினை வாசிக்காதவர்களுக்காக அதனைக் கீழே தந்துள்ளேன்.


சிறுகதை: பொன்னகரம் - புதுமைப்பித்தன் -

பொன்னகரத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்களா? நமது பௌராணிகர்களின் கனவைப் போல் அங்கு ஒன்றுமில்லை. பூர்வ புண்ணியம் என்று சொல்லுகிறார்களே, அந்தத் தத்துவத்தைக் கொண்டு, நியாயம் என்று சமாதனப்பட வேண்டிய விதிதான். ஒரு சில 'மகாராஜர்களுக்காக' இம்மையின் பயனைத் தேடிக்கொடுக்கக் கடமைப்பட்டு வசிக்கும் மனிதத் தேனீக்களுக்கு உண்மையில் ஒரு பொன் நகரந்தான் அது.

ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து, அது தான் அங்கு 'மெயின்' ராஸ்தா. கைகோர்த்த நான்கு பேர் வரிசை தாராளமாகப் போகலாம். எதிரே வண்டிகள் வராவிட்டால், இதற்குக் கிளையாக உள் வளைவுகள் உண்டு. முயல் வளைகள் போல்.
இந்தத் திவ்வியப் பிரதேசத்தைத் தரிசிக்க வேண்டுமானால்... சிறு தூறலாக மழை சிணுசிணுத்துக் கொண்டிருக்கும் பொழுது சென்றால்தான் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். வழி நெடுகச் சேற்றுக் குழம்புகள். சாலையோரமாக 'முனிசிபல் கங்கை' - அல்ல, யமுனைதானே கறுப்பாக இருக்கும்? - அதுதான். பிறகு ஓர் இரும்பு வேலி, அதற்குச் சற்று உயரத் தள்ளி அந்த ரயில்வே தண்டவாளம்.
மறுபக்கம், வரிசையாக மனிதக் கூடுகள் - ஆமாம், வசிப்பதற்குத்தான்!

தண்ணீர்க் குழாய்கள்? இருக்கின்றன. மின்சார விளக்கு? ஞாபகமில்லை - சாதாரண எண்ணெய் விளக்கு, அதாவது சந்திரன் இல்லாத காலங்களில் (கிருஷ்ண பட்சத்தில்) ஏற்றி வைத்தால் போதாதா?

பொன்னகரத்துக் குழந்தைகளுக்கு 'மீன் பிடித்து' விளையாடுவதில் வெகு பிரியம். அந்த முனிசிபல் தீர்த்தத்தில், மீன் ஏது? எங்கிருந்த பணக்கார வீடுகளிலிருந்தோ, சில சமயம் அழுகிய பழம், ஊசிய வடை, இத்யாதி உருண்டு வரும். அது அந்த ஊர்க் குழந்தைகளின் ரகசியம்.
ரயில்வே தண்டவாளத்தின் பக்கத்தில் விளையாடுவதில் என்ன ஆனந்தமோ? வேலி இருக்கத்தான் செய்கிறது. போகக் கூடாது என்ற சட்டம் குழந்தைகளுக்குத் தெரியுமா? 'போனால்' பெற்றோருக்குத் தான் கொஞ்சம் பாரம் ஒழிந்ததே! குழந்தைகள் தான் என்ன, 'கிளாக்ஸோ' 'மெல்லின்ஸ் பூட்' குழந்தைகளா, கம்பி இடையில் போக முடியாமலிருக்க? புகைந்தோடும் அந்த இரும்பு நாகரிகத்திற்கு, வரிசையாக நின்று "குட்மார்னிங் சார்!" என்று கத்துவதில் ரொம்ப ஆனந்தம் அவர்களுக்கு. அதுதான் அவர்களுக்குக் கிடைக்கும் ஆரம்ப ஆங்கிலக் கல்வி.
ஐந்து மணிக்கு அப்புறந்தான் ஊர் கலகலவென்று உயிர் பெற்று இருக்கும். அப்பொழுதிருந்து தான் அவ்வூர்ப் பெண்கள் தங்கள் வேலையைச் செய்வார்கள். சாராய வண்டிகள், தண்ணீர் எடுக்கவரும் பெண்கள்! அங்கு தண்ணீர் எடுப்பது என்றால் ஒரு பாரதப் போர்.

இள வயதில் நரைத்தது போல் பஞ்சு படிந்த தலை, மாசடைந்த கண்கள் - விடிய விடிய மின்சார 'ஸ்பின்டிலை'ப் (கதிர்) பார்த்துக் கொண்டு இருந்தால், பிறகு கண் என்னமாக இருக்கும்? கண்கள்தாம் என்ன இரும்பா? உழைப்பின் ஆரோக்கியத்தால் ஏற்பட்ட கட்டமைந்த அழகு. ஆரோக்கியமா? அது எங்கிருந்து வந்தது? பாக்டீரியா, விஷக் கிருமிகள், காலரா இத்யாதி அங்கிருந்துதானே உற்பத்தி செய்யப் படுகின்றன! எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்று ஆசையிருந்தால் எல்லாம் நடக்கும். பழைய கற்காலத்து மனிதன், புலி சிங்கங்களுடன் குகையில் வாழ்ந்து வந்தான்; அவைகளும் அவனைக் கொன்றன; அவனும் அவைகளைக் கொன்றான். அதற்காக வலிமையற்று, வம்சத்தை விருத்திசெய்யாமல் செத்தொழிந்தா போனான்? வாழ்க்கையே ஒரு பெரிய வேட்டை, அதற்கென்ன?

கழுத்தில் ஒரு கருப்புக் கயிறு - வாழ்க்கைத் தொழுவின் அறிகுறி. அதைப் பற்றி அங்கு அதிகக் கவலையில்லை. அது வேறு உலகம் ஐயா, அதன் தர்மங்களும் வேறு.

அம்மாளு ஒரு மில் கூலி. வயது இருபது அல்லது இருபத்திரண்டிற்கு மேல் போகாது. புருஷன் 'ஜட்கா' வைத்திருக்கிறான்; சொந்த வண்டிதான். அம்மாளு, முருகேசன் (அவள் புருஷன்), அவன் தாயார், தம்பி, முருகேசன் குதிரை - ஆக நபர் ஐந்து சேர்ந்தது அவர்கள் குடும்பம். இருவருடைய வரும்படியில்தான், இவர்கள் சாப்பாடு - (குதிரை உள்பட), வீட்டு வாடகை, போலீஸ் 'மாமூல்', முருகேசன் தம்பி திருட்டுத் தனமாகக் கஞ்சா அடிக்கக் காசு - எல்லாம் இதற்குள் தான். எல்லாரும் ஏகதேசக் குடியர்கள் தான். 'டல் ஸீஸ'னில் பசியை மறக்க வேறு வழி? பசி, ஐயா, பசி! 'பத்தும் பசி வந்திடப் பறந்துபோம்' என்று வெகு ஒய்யாரமாக, உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே, அங்கு நீர் ஒரு நாள் இருந்தால் உமக்கு அடிவயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம்!

அன்றைக்கு முருகேசனுக்குக் குஷி, அவனும், அவன் குதிரையும் 'தண்ணி போட்டு' விட்டு ரேஸ் விட்டார்கள். வண்டி 'டோ க்கர்' அடித்தது. ஏர்க்கால் ஒடிந்தது. குதிரைக்கு பலமான காயம். முருகேசனுக்கு ஊமையடி. வீட்டில் கொண்டுவந்து போடும்பொழுது பேச்சு மூச்சில்லை. நல்ல காலம் குடித்திருந்தான், இந்த மாதிரி வலி தெரியாமலாவது கிடக்க. வீக்கத்திற்கு என்னத்தையோ அரைத்துப் பூசினாள் அம்மாளு. அப்பொழுதுதான் சற்று பேசினான். அவனுக்குப் பால் கஞ்சி வேண்டுமாம்! அம்மாளுவுக்குக் கூலிபோட இன்னும் இரண்டு நாள் இருக்கிறது. வீட்டில் காசேது?

அம்மாளு தண்ணீர் எடுக்க வருகிறாள்.

'கும்'மிருட்டு பஞ்சாங்கத்தின்படி இன்றைக்குச் சந்திரன் வரவேண்டும். ஆனால் அது மேகத்தில் மறைந்து கொண்டால் முனிசிபாலிடி என்ன செய்ய முடியும்?

எப்பொழுதும்போல் இரைச்சல்தான். ஒருவாறு தண்ணீர் பிடித்தாய்விட்டது. திரும்பி வருகிறாள். சந்தின் பக்கத்தில் ஒருவன் - அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாகக் 'கண்' வைத்திருந்தவன். இருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்து விட்டாள். ஆம், புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான்! என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்!

மணிக்கொடி, 6-5-1934