என் பால்ய , பதின்ம பருவத்துத் தோழர்களில் முக்கியமான இருவரை என்னால் மறக்க முடியாது. அவர்களுடன் என்னால் முடிந்த வரையில் நான் தொடர்பிலிருந்தேன். ஒருவர் என் சிந்தனையாற்றலை வளர்ப்பதற்கு உதவினார். அடுத்தவரோ என்னை எழுதுவதற்கு ஊக்குவித்தார். நான் எழுதுவதற்கு அவர் மிகவும் உதவியாகவிருந்தார். அவர் தந்த ஊக்கமே என்னை மேலும் மேலும் எழுத வைத்தது.  என் பால்ய பருவத்திலிருந்து பதின்ம மற்றும் இளமைப்பருவங்களிலும் அவர் என்னை ஊக்குவித்துக் கொண்டேயிருந்தார். இவர்கள் இருவரையும் என்னால் ஒரு போதுமே மறக்க முடியாது. என் வாழ்நாள் முழுவதும் என் நினைவுகளில் இவர்கள் நிறைந்தேயிருப்பார்கள்.

இவர்களுடன் களிப்புடன் கழித்த நாட்களை நான் அடிக்கடி எண்ணிப்பார்ப்பதுண்டு. மறக்க முடியாத இன்பம் மிக்க நாட்கள் அவை. இவர்களுடன் கழித்த பொழுதுகள் இனியவை.

ஆனால் என் நண்பர்களிருவருக்கும் ஏற்பட்ட நிலை என்னை அதிர்ச்சியடைய வைத்தது. அப்போது நான் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திலிருந்ததால் உடனடியாக ஓடிச்சென்று அவர்களைப்பார்க்க என்னால் முடியவில்லை. ஆம்! அவர்கள் ஜூன் 1, 1981 அன்று  எரித்துச் சிதைக்கப்பட்டார்கள். எரிந்து குற்றுயிருடன் அவர்களிருந்த கோலம் கண்டு உலகமே ஒரு கணம் அதிர்ந்தது. ஆம்! என் நண்பர்களான யாழ் நூலகத்தையும், ஈழநாடு பத்திரிகையையும் தாம் குறிப்பிடுகின்றேன். என்னைப்பொறுத்தவரையில் அவை அஃறிணைகளல்ல. உயர்திணைகள். அவைகள் அல்ல. அவர்கள். உயிர் நண்பர்கள். என் இனிய பால்ய, பதின்மப் பருவத்து நண்பர்கள் எரியுண்ட தினம்  ஜூன் 1. அவர்களுடன் கூட யாழ் சந்தை எரிந்தது. யாழ் எம்.பி. யோகேஸ்வரனின் வீடு, கார் எரிந்தன.

இன்று யாழ் நகர் மீண்டும் எழிலுடன் திகழ்கின்றது. யாழ் நூலகம் பொலிவுடன் திகழ்கின்றது. ஈழநாடு என்னும் பெயரில் புதியதொரு பத்திரிகை வெளியாகின்றது. ஆனால் வரலாறு ஒருபோதுமே அழிந்து விடுவதில்லை. வரலாற்றுச்சுவடுகள் நினைவுகளில், பல்வகை ஊடகங்களில், படைப்புகளில் நிலைத்து நிற்கும்.

என் இனிய நண்பர்களே! உங்கள் வாழ்வில் ஏற்பட்ட துயரநாளை இன்று நினைவு கூர்கின்றோம். என்றும் நினைவு கூர்வோம். நீங்கள் எனக்கு, எம் மக்களுக்கு, மக்களுக்கு ஆற்றிய சேவைக்கு எம்மால் கைம்மாறு ஒரு போதுமே செய்ய முடியாது. தன்னலமற்றைசேவைகளை வழங்கினீர்கள். அவற்றுக்காக நன்றி நண்பர்களே!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.