இலங்கையின் முக்கிய கேலிச்சித்திரக்காரர் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் அவந்த ஆர்டிகலா.  'டெய்லி மிரர்', 'அத்த' ஆகிய பத்திரிகைகளில் வெளியாகும் அவரது கேலிச்சித்திரங்கள் தனித்துவமானவை. முக்கியமானவை. மிகுந்த வரவேற்பைப்பெற்றவை. சமூக,அரசியல் நிகழ்வுகளை படைப்புத்திறமையுடன், சமுதாயப்பிரக்ஞையுடன் விமர்சிப்பவை.

இலங்கை பல கேலிச்சித்திரக்காரர்களைக் கண்டுள்ளது. விஜேரூபகே விஜேசோமா (.Wijerupage Wijesoma)  அவர்களில் புகழ்பெற்ற கேலிச்சித்திரக்காரர். அவரது கேலிசித்திரமே அவந்தா ஆட்டிகல முதன் முறையாக , அவர் சிறுவனாகவிருந்த சமயம் எதிர்கொண்ட கேலிச்சித்திரம்.

பின்னர் விஞ்ஞானத்துறையில் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவர் அதனை உதறிவிட்டு முழுநேரமாகக் கேலிச்சித்திரக்காரராக இயங்கத் தொடங்கி விட்டார். இலங்கையின் முக்கிய கேலிச்சித்திரக்காரர்களிலொருவராக அவர் தன்னை அடையாளப்படுத்திவிட்டார்.

அவரது கேலிச்சித்திரங்கள் சமூக, அரசியல் நிகழ்வுகளை உள்வாங்கி, படைப்புத்திறமையுடன், தனித்துவம் மிக்கவையாகப் படைக்கப்படுகின்றன. அதே சமயம் அவை சமுதாயப் பிரக்ஞை மிக்கவையாகவும் அமைந்துள்ளன. அதனால் அவை பார்ப்பவர் உள்ளங்களில் ஒரு பார்வையிலேயே பதிந்து விடுகின்றன. உதாரணத்துக்கு அண்மையில் அவர்  கோவிட் தொற்று நோய் சமூக, அரசியலில் ஏற்படுத்திய விளைவுகளை மையமாகக்கொண்டு உருவாக்கிய கேலிச்சித்திரங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.
அவந்த ஆர்ட்டிகல கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  என் முகநூல் நண்பர்களிலொருவரான எழுத்தாளர் காத்யான அமரசிங்ஹ கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். என்னுடன் கட்டடக்கலை பயின்று அத்துறையில் ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் ஆரியரத்தின கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவ்விதம் கேகாலை மாவட்டத்தைச்சேர்ந்த கலைஞர்களைப் பார்க்கையில் கேகாலை  இவர்களைப்போல் மேலும் பலரைக் கலைத்துறையில் உருவாக்கியுள்ளதா என்பதை ஆராய்ந்திடும் எண்ணம் தோன்றுகின்றது.


இனவாதம், கோவிட் ஆகியவற்றை மையமாகக்கொண்டு அவர் உருவாக்கிய கேலிச்சித்திரங்களுடன் அவரது  புகைப்படத்தையும் பகிர்ந்துகொள்கின்றேன். அண்மையில் தமிழ்ப்பகுதிகளில் பொலிசார் முகக்கவசம் அணியாதவர்களைக் கைது செய்த முறையினைக் கருப்பொருளாகக் கொண்ட கேலிச்சித்திரம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைப்பது. உபகண்ட, சர்வதேச அரசியலுக்குள் விழுந்து கிடக்கும் இலங்கையின் நிலையினைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. புகைப்படத்தை ஆஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் பெண் ஊடகவியலாளரான Smriti Daniel அவர்களின்  SmritiDaniel.com வலைப்பதிவிலிருந்து பெற்றுக்கொண்டேன். நன்றியுடன் இங்கு பாவிக்கின்றேன்.



இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.