எழுத்தாளர் டொமினிக் ஜீவாமல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் மறைவுச் செய்தியினை முகநூல் கொண்டு வந்தது. அவரது மறைவு துயரினைத் தந்தாலும் அவரது நிறைந்த வாழ்வு மகிழ்ச்சியைத் தந்தது. அவர் பூரணமான, நிறைந்ததொரு வாழ்வினை வாழ்ந்து முடித்துள்ளார். தான் விரும்பியதை, விரும்பியவாறு எவ்வித சமரசங்களுக்கும் இடங்கொடுக்காது செய்து , வரலாற்றில் ஆழமான தடத்தினைப் பதித்துச் சென்றுள்ளார். அது மகிழ்ச்சியைத் தந்தது.

எழுத்தாளராக, இதழாசிரியராக, அறச்சீற்றம் மிக்க சமூக, அரசியற் செயல் வீர்ராக அவரது இருப்பு பெருமைப்படத்தக்கதோர் இருப்பு. எத்தனை பேருக்கு இவ்விதமானதோர் இருப்பு அமையும்?

இருப்பில் நிலவிய சமூக, அரசியல் பிரச்சினைகளை, வர்ண, வர்க்க வேறுபாடுகளைக்கண்டு ஒதுங்கிச் செல்லாமல் , இறுதிவரை உறுதியாக, தெளிவாகத் தனது எழுத்துகளூடு, இதழினூடு , தத்துவார்த்த அடிப்படையில் , சமரசங்கள் எவற்றுக்கும்  இடங்கொடாது முடிந்தவரை போராடிச் சென்றார். இதிலிருந்து நாம் படிக்க வேண்டியவை பற்பல. தன் இருப்பினூடு மானுட இருப்புக்கான அர்த்தம்தனை அனைவருக்கும் எடுத்துக் காட்டியவர் டொமினிக் ஜீவா அவர்கள்.

'மல்லிகை' மூலம் அவர் இலக்கியத்தில் விழுதுகள் பலவற்றை உருவாக்கிய ஆலமரம்! அந்த ஆழமரம் தந்த நிழலில் இளைப்பாறியவர்கள்தாம் எத்தனை! எத்தனை!

தனிமரம் தோப்பாகுவதில்லை என்பார்கள். அதனை மாற்றியமைத்தவர் டொமினிக் ஜீவா அவர்கள். தனிமரங்களும் தோப்பாவதுண்டு என்பதைப் பெருமையுடன் எடுத்துக்காட்டியவர் அவர்.

தமிழ் இலக்கிய வரலாற்றில், முற்போக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் டொமினிக் ஜீவா அவர்களின் பெயர் நிலைத்திருக்கும்! அவரது பன்முகப்பங்களிப்புகளூடு அவர் இருப்புக்கு அழிவென்பதில்லை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.