- மோகன் அருளானந்தம் -
நண்பர் மோகன் அருளானந்தம் மட்டக்களைப்பைச் சேர்ந்தவர். மட்டக்களப்புப் புனித மைக்கல் கல்லூரி மாணவர். கட்டடக்கலைஞர். என்னுடன் படித்தவர். பல வருடங்களுக்குப் பின்னர் அவருடன் உரையாடும் சந்தர்ப்பத்தை சமூக ஊடகமான 'வாட்ஸ்அப்' ஏற்படுத்தித்தந்தது. கட்டடக்கலை இறுதியாண்டில் இவர் என் அறை நண்பராகவுமிருந்தவர். தற்போது ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்.

மோகன் அருளானந்தமை நினைத்ததும் எனக்கு இரு மேனாட்டு நாவலாசிரியர்கள் நினைவுக்கு வருவார்கள். ஒருவர் அல்பேர்ட்டோ மொறாவியோ. அடுத்தவர் அலிஸ்டர் மக்லீன். அல்பேர்ட்டோ மொறாவியோ புகழ்பெற்ற இத்தாலிய நாவலாசிரியர். இவரது நாவல்களிலொன்றான 'இரு பெண்கள்' (Two Women) இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் ரோமில் வாழ்ந்துகொண்டிருந்த ஓரு விதவைப்பெண்ணும் , அவரது இரு பதின்ம வயதுப்பெண்களும் யுத்தத்தினால் எதிர்கொள்ளும் சவால்களை, பாலியல் வன்முறைகளை  (நாசிகள் & நேசப்படைகளிடமிருந்து) விபரிக்கும். திரைப்படமாக வெளியானது . அதில் நடிகை சோபியா லாரென் நடித்திருந்தார். அதற்காக அவருக்குச் சிறந்த நடிகையென்ற ஆஸ்கார் விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. அடுத்தவர்  அலிஸ்டர் மக்லீன் 'ஹன்ஸ் ஓஃப் நவரோன்' (The Guns of Navarone,) போன்ற சாகச நாவல்களை எழுதிய ஸ்கொட்டிஸ் எழுத்தாளர். இவர்கள் இருவரின் நாவலகளையே அதிகமாக வாசித்துக்கொண்டிருப்பார் மோகன்.  இவரை நினைத்ததும் இந்நாவலாசிரியர்களும் கூடவே நினைவுக்கு வருவார்கள்.

இவரைப்பற்றி நினைத்ததும் நினைவுக்கு வரும் இன்னுமொரு விடயம்.இவரது திருமணம். திருமணம் 1981இல் நடந்தது. அப்போது நிலவிய அரசியற் சூழல் காரணமாக எம்முடன் படித்த ஏனைய பல்கலைகழக மாணவர்கள் எவருமே அத்திருமணத்துக்குச் சென்றிருக்கவில்லை. நான் மட்டுமே சென்றிருந்தேன். அவர் நீண்ட காலமாகப் பாடசாலைக் காலத்திலிருந்து காதலித்த சுபா என்னும் பெண்ணொருவரையே திருமணம் செய்திருந்தார். இன்றுவரை அதே மாறாக் காதலுடன் வாழ்ந்து வருகின்றார்கள். இவருக்கு இரு பெண் குழந்தைகள். இருவரும் படித்து ஒருவர் மருத்துவத்துறையிலும் , மற்றவர் கட்டடக்கலைஞராகவும் பணியாற்றுகின்றார்கள். அவர்களிலொருவருக்கு இரு குழந்தைகளுமிருக்கின்றார்கள். இன்று தாத்தாவாக வலம் வரும் மோகன் தற்போது அதிகமாக இசையிலும், வாசிப்பிலும் நேரத்தைச் செலுத்துவதாகக் கூறினார். ஆனால் அதே இளமைமிக்க உடல்வாகுடன் காட்சியளிக்கின்றார்.

மோகன் அருளானந்தம் சிறந்த பாடகர். இவர் முறையாகச் சங்கீதம் கற்றவரல்லர் என்று நினைக்கின்றேன். ஆனால் இனிமையாகப் பாடுவார். கேள்வி ஞானத்தாலும், குரல் வளத்தாலும் இனிமையாகப் பாடுவார். எம் பல்கலைகழகக் காலகட்டத்தில் ஓய்வு நேரங்களிலெல்லாம் இவரைப் பாடக்கேட்டு நாம் சுற்றியிருந்து இரசிப்பதுண்டு. இன்றும் பாடுவதை இவர் நிறுத்தவில்லை. பாடல்கள் சிலவற்றை  இவர் குரலில் கேட்டு இரசிப்போமா நண்பர்களே.

மோகன் அருளானந்தம் பாடிய தமிழ் மெல்லிசைப் பாடல்கள் சில : https://www.youtube.com/watch?v=vKY0wp9DcZQ

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.