வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்எழுத்தாளர் வ.ஐ.ச. ஜெயபாலனை மீண்டும் முகநூலில் சந்தித்தபொழுது எழுந்த நினைவலைகளின் பதிவிது. கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனென்று பலராலும் அறியப்படுபவர்; அண்மைக்காலமாக இந்திய மத்திய அரசின் விருதுபெற்ற நடிகராகவும் 'ஆடுகளம்' ஜெயபாலன் என்றும் அறியப்படுகின்றார். கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனென்று அறியப்பட்டாலும் , இலக்கியத்தின் பல்துறைகளிலும் தன் ஆளுமையைப்பதித்தவர், பதித்து வருபவர் இவர் என்பதால் எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலன் என்று இவரை அழைப்பதே பொருத்தமானதென்று படுகிறது.

இன்று சிறிது முரட்டுத்தனம் மிக்கவராகவும், சிறந்த கவிஞர்களிலொருவராகவும் அறியப்படும் ஜெயபாலன் நான் சந்தித்த காலகட்டத்தில் வித்தியாசமான ஆளுமை மிக்கவராகவிருந்தார். மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவராக, வாய்க்கு வாய் 'ராசா' என்று அழைக்குமொருவராக, ஈழத்துத் தமிழர்களின் சமூக, அரசியல் பற்றிய விடயங்களைச் சம்பாஷிப்பதில் மிகவும் ஆர்வம் மிக்கவராக விளங்கியவராக இவ்விதமாகவே என் நினைவினிலிருக்கின்றார். 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' பற்றிய ஆய்வுக்காக, ஈழத்தமிழர்களின் வரலாற்றினைக்கூறும் நூல்களிலொன்றான 'யாழ்ப்பாண வைபவமாலை'யினைப்பெறுவதற்காக இவரை முதன் முதலாகச்சந்தித்திருக்கின்றேன். அதன் பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகைக்கு இவரது கவிதை வேண்டிச் சந்தித்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில இவருடன் சைக்கிளில் யாழ்நகரில் திரிந்த நாள்கள் நினைவிலுள்ளன.

அதன் பின்னர் கொழும்பில் சந்தித்திருக்கின்றேன். அப்பொழுது இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஏதோவொரு பாடத்திட்டத்தில் (அரசியல் சம்பந்தமானதாகவிருக்கலாம்) சேர்ந்து படித்துக்கொண்டிருந்தார். அக்காலகட்டத்தில் லங்கா கார்டியனில் இவரது ஆங்கிலக்கட்டுரைகள் சில வெளிவந்திருந்தன. அப்பொழுது நான் கொட்டாஞ்சேனைப்பகுதியிலுள்ள நண்பரொருவரின் உறவினரின் வீடொன்றில் மேலும் சில நண்பர்களுடன் தங்கியிருந்தேன். வழக்கம் போல் இரவு நேரம், கல்கிசையில் தங்கியிருந்த நண்பர்கள் சிலரைச்சந்தித்துவிட்டு கொட்டாஞ்சேனைக்குப் பஸ்ஸில் திரும்பிக்கொண்டிருந்தபொழுது இடையில் இவரைச்சந்தித்தேன். அப்பொழுதெல்லாம் ஜெயபாலன் சம்பாஷிப்பதில் மிகுந்த ஆர்வம் மிக்கவராக விளங்கினார். தான் இறங்கவேண்டிய இடத்தையும் விட்டு என்னுடன் ஆர்மர் வீதி வரும்வரையில் சமூக, கலை, இலக்கியம் மற்றும் அரசியல் பற்றி உரையாடிக்கொண்டே வந்தார். ஆரம்ர் வீதியில் நான் இறங்க வேண்டிய இடத்திலும் இறங்கி, மேலும் பத்துப் பதினைந்து நிமிடங்கள் வரையில் உரையாடியபின்னரே சென்றார். அதன் பிறகு அவரை நான் சந்தித்தது 'டொராண்டோ', கனடாவில்தான்.

தேடகம் அமைப்பினர் நடாத்திய கருத்தரங்கொன்றிற்கு வந்திருந்தார். அப்பொழுது நான் பார்த்த ஜெயபாலன் ஆளூமையைப்பொறுத்தவரையில் மிகவும் மாறியிருந்தார். சிறிது முரட்டுச்சுபாவம் மிக்கவராக அவர் மாறியிருந்ததாக உணர்ந்தேன். தேடகம் கருத்தரங்கிலும் சிறிது உணர்ச்சிவசப்பட்டு. ஆத்திரமுற்றவராக அவர் கருத்துகளைக்கூறியபோது சிறிது ஆச்சரியமாகவிருந்தது. நான் முதலில் சந்தித்ததற்கும், பின்னர் சந்தித்ததிற்குமிடையில் அவரது வாழ்க்கை ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் பின்னிப்பிணைந்திருந்தது. அதன் காரணமாக அவரது ஆளுமை மாறியிருந்திருக்கலாம் என்று தோன்றியது.

அதன் பின்னர் அக்காலகட்டத்தில் கனடாவுக்கு வருகை தந்திருந்த அமரர் எஸ்.பொ. அவர்களுடனான சந்திப்பின்போது சந்தித்தேன். அச்சமயம் அவருடன் ஓரிரு நிமிடங்கள் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது அவர் யாழ் 'ஈழநாடு' பத்திரிகையில் (எண்பதுகளில்) 'யாழ் நகரின் பழமையின் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்று' நான் எழுதிய கட்டுரை பற்றிக்குறிப்பிட்டு, அக்கட்டுரை வெளியாகிய பின்னர் நான் பாதுகாக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்த கட்டடங்களிலொன்றான யாழ் பழைய சந்தையிலிருந்த கங்கா சத்திரத்தை யாழ் மாகநரசபை இடித்ததையும் நினைவு கூர்ந்திருந்தார். அதன் பின்னர் ஜெயபாலனை நேரடியாகச் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

ஜெயபாலனின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதையாக இக்'கள்ளிப்பலகையும் கண்ணீர்த்துளிகளும்' கவிதையினையே கூறுவேன். இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்துபோனதுக்கு இக்கவிதை கூறும் பொருளும், பாவிக்கப்பட்டிருக்கும் மொழியும்தாம் காரணம். அகவலோசை மிகுந்த கவிதையில் (இக்கவிதையில் அதிகமாக ஈரசைசீர்களே காணப்படுகின்றன) மரபுக்கவிதைக்குரிய அம்சங்கள் பல அமைந்திருப்பதும், பொருத்தமாக அவை கையாளப்பட்டிருப்பதும் (குறிப்பாக அடிகளில், சீர்களில் காணப்படும் மோனைச்சொற்கள் போன்றவை) குறிப்பிடத்தக்கது. அதனால்தான் கவிதை வாசிக்கும்போது நெஞ்சை ஈர்க்கிறது.

இக்கவிதையில் எனக்கு மிகவும் பிடித்த வரிகளாகப் பின்வருவனவற்றைக்கூறுவேன்:

* "ஒரேஒரு முறையே வாழுமிவ் வாழ்வில்
கையா லாகாத கோழையைப் போல
கொடுமையும் சூதும் நிறைந்த உலகை
சகித்தும் ரசித்தும் பாவனை செய்தும்
சான்றோன் என்று மாலைகள் சூட
நானும் எனது நண்பரும் விரும்போம்"

* தடைகள் சீனப் பெரு மதிலாயினும்
தகர்க்கும் பணியினைப் பேனைக் குச்சியால்
ஆர்வமாய்ச் செய்வேன் அங்குரார்ப்பணம்.
தடைகளைத் தகர்த்தும் விலக்கியும்
தொடர்ந்து
அதிமானிடனாய் முன்சென்றிடுவோம்.
விழுமிடத் தெமக்கோர் நடுகல் நிமிர்த்தி
எமது பிள்ளைகள் பெண்டுகள் தொடர்வார். "

* "குனிந்து நடக்கும் கூழங்கையர்கள்
பெறுமதி கூடிய காலணி இலங்கும்
கால்களைத் தேடி முத்தம் கொடுப்பர்.
பொன்முலா மிட்ட சவப்பெட்டிப் பரிசால்
உலகம் அவர்களைக் கெளரவம் செய்யும்.
வெளிப் பூச்சற்ற கள்ளிப் பலகையும்
வெம்மை நிறைந்த கண்ணீர்த் துளிகளும்

எங்களுக்காக இருக்கவே செய்யும்."


முழுக்கவிதையும் வாசிப்புக்காக கீழே:

கள்ளிப் பலகையும் கண்ணீர்த் துளிகளும்

- வ.ஐ.ச.ஜெயபாலன் -

முரட்டு மேதை என்பர் மேலோர்
'இங்கிதம் அறியான் அறியான்' என்பர்
கபடம் நிறைந்த இளம் சீமாட்டிகள்
ஓயாது துரத்தும் சவக்குழி விழுங்குமுன்
ஒரேஒரு முறையே வாழுமிவ் வாழ்வில்
கையா லாகாத கோழையைப் போல
கொடுமையும் சூதும் நிறைந்த உலகை
சகித்தும் ரசித்தும் பாவனை செய்தும்
சான்றோன் என்று மாலைகள் சூட
நானும் எனது நண்பரும் விரும்போம்.
வீணையோடும் தூரிகையோடும்
மூலைமட்டம் ஸ்டெதஸ்கோப் அரிவாள்
சம்மட்டி போன்றவை பழகிப் போன
கைகளை உயர்த்தி நெஞ்சுகள் நிமிர்த்தி
எனது தோழர் புடை சூழ்வார்கள்.
பொன்னாய் அழகு பொழியினும் விலங்கை
அப்பிய மலமாய் அருவறுத் தெறிவோம்.
வெடி மருந்துகள் தோய்ந்த எம்நாவு
ஓய்ந்திருக்காது.
தடைகள் சீனப் பெரு மதிலாயினும்
தகர்க்கும் பணியினைப் பேனைக் குச்சியால்
ஆர்வமாய்ச் செய்வேன் அங்குரார்ப்பணம்.
தடைகளைத் தகர்த்தும் விலக்கியும்
தொடர்ந்து
அதிமானிடனாய் முன்சென்றிடுவோம்.
விழுமிடத் தெமக்கோர் நடுகல் நிமிர்த்தி
எமது பிள்ளைகள் பெண்டுகள் தொடர்வார்.
கடலின் மணலை எண்ணித் தீர்ப்பினும்
மானிடர் எமது வம்சக் கொடியை
சவக்குழி உனக்கு
விழுங்கித் தீர்த்திடல் முடியுமோ?
விலங்கும் சிறையும் வளைத்திடல் கூடுமோ?
விடுதலை பெற்ற தோழியரோடு
கட்டாந் தரையின் வாழ்வே உவப்பு.
பெரிய இடத்துச் சீமை நாய்களாய்
கார்ப்பவனி வரும் இல்லறக் கனவில்
எமது தோழர் தோழியர் தேயார்.
கொடிய உலகம் சான்றோன் என்னவும்
இளம் சீமாட்டிகள் இனியவன் என்னவும்
குனிந்து நடக்கும் கூழங்கையர்கள்
பெறுமதி கூடிய காலணி இலங்கும்
கால்களைத் தேடி முத்தம் கொடுப்பர்.
பொன்முலா மிட்ட சவப்பெட்டிப் பரிசால்
உலகம் அவர்களைக் கெளரவம் செய்யும்.
வெளிப் பூச்சற்ற கள்ளிப் பலகையும்
வெம்மை நிறைந்த கண்ணீர்த் துளிகளும்
எங்களுக்காக இருக்கவே செய்யும்.

- நுட்பம் 1980, மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வெளியீடு

 


 

2. இசை கேட்கும் நெரம் இது: 'நிலவு தூங்கும் நேரம்.'

குறுந்தொகையில் பதுமனார் (நெய்தல் திணை) எழுதிய கவிதையொன்று:

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

"நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே"

 

 

'இந்த யாமப்பொழுதில் ஊர் மக்களெல்லாரும் தூங்கி விட்டனர். ஆனால் ஊரே தூங்கும் இந்த நள்ளிரவுப் பொழுதில் என்னால் மட்டும் தூங்க முடியவில்லையே.' என்னும் கருத்துப்பட அமைந்துள்ள குறுந்தொகைப்பாடலிது. இவ்விதம் தூங்க முடியாமல் தவிப்பவர் யார்? யாராகவுமிருக்கலாம். வாழ்க்கைப்பிரச்சினை காரணமாக ஒருவரால் இவ்விதம் தூங்க முடியாமலிருக்கலாம். அல்லது காதலர்கள் ஒருவரையொருவர் எண்ணி இவ்விதம் தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருக்கலாம்.

இந்தக் கருத்துப்பட அமைந்துள்ள பாடல்களில் உடனடியாக நினைவுக்கு வருவது 'ஊரு சனம் தூங்கிடுச்சு' அடுத்தது 'நிலவு தூங்கும் நேரம்'.

ஊரு சனம் தூங்கிடுச்சு ஊதற் காற்றும் அடிச்சிடுச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ தெரியலையே.

ஜானகியின் குரலில், இசைஞானியின் இசையில் 'மெல்லத்திறந்தது கதவு' திரைப்படத்தில் வரும் இந்தப்பாடலும் பதுமனாரின் குறுந்தொகைக்கவிதையின் கருத்தினையொட்டி ஊர் துஞ்சும் வேளையிலும், துஞ்சாத உள்ளத்தின் நிலையினைச்சித்திரிக்கிறது.

இது போல் இன்னுமொரு பாடல். அதுவும் இசைஞானியின் இசையில் வெளிவந்த பாடல்தான். ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் ஒலிக்கும் பாடலான 'நிலவு தூங்கும் நேரம், நினைவு தூங்கிடாது.' என்று அவன் பாட, அவளோ 'இரவு தூங்கினாலும், உறவு தூங்கிடாது' என்கின்றாள். இங்கும் கவிஞர் சங்கக்கவிஞர் பதுமனாரின் கருத்தினையொட்டித் தன் கற்பனையைத்தட்டி விட்டுள்ளார்.

பதுமனாரின் சொல்வளமும், கற்பனைச்சிறப்பும் மிக்க குறுந்தொகைக்கவிதை எனக்குப்பிடித்த குறுங்கவிதைகளிலொன்று. பதுமனார் இக்குறுங்கவிதையில் இன்னுமொரு புரட்சியினையும் செய்துள்ளார். இலக்கணத்தைச் சிறிது மீறியுமுள்ளார். 'ஓர் யான்' என்று சொற்களை அடுக்கியுள்ளார். தமிழ் இலக்கணப்படி ஓர் என்னும் சொல்லானது உயிர் எழுத்துடன் ஆரம்பமாகும் சொல்லொன்றுக்கு முன் அல்லவா வரவேண்டும். ஆனால் இங்கு ஓர் என்னும் சொல்லைத்தொடர்ந்து வந்திருப்பது 'யான்' அல்லவா? ஆனால் இலக்கணத்தை மீறுவது எழுத்தாளர்களின் உரிமைகளிலொன்றல்லவா. அன்று பதுமனார் போன்றவர்கள் மீறினார்கள். அண்மையில் கூட அமரர் ஜெயகாந்தன் 'ஒரு உலகம்' என்று தன் நாவலான 'ஒரு மனிதன். ஒரு வீடு. ஒரு உலகம்' என்று மீறியிருக்கிறாரல்லவா.

மேலுள்ள இரு பாடல்களிலும் எனக்குக் கூடுதலாகப்பிடித்த பாடலாக 'நிலவு தூங்கும் நேரம்' பாடலையே குறிப்பிடுவேன்.

'நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்து, நனந்தலை உலகமும் துஞ்சும் இரவில் துஞ்சாதிருக்கும் உள்ளமொன்றின் தவிப்பினை வெளிப்படுத்தும்' பதுமனாரின் குறுந்தொகைக்கவிதையினை ஞாபகப்படுத்துவதாலும். இசைக்காகவும், பாடகர்களின் குரலினிமைக்காகவும், கவிஞரின் கற்பனையாற்றலுக்காகவும் இப்பாடல்களிரண்டும் எனக்குப் பிடிக்கும். கேட்டுப்பாருங்கள் உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.