கவிதை நயம் மற்றும் கவிதைத்தொகுப்பு பற்றி....
 

வாசிப்பும், யோசிப்பும் - 49

கவிதையை நயப்பதற்குக் கடுமையான பயிற்சி வேண்டும். கவிதையிலுள்ள உவமை, உருவகம், குறியீடு, கற்பனை வளம், சொல் வளம் இவையெல்லாவற்றையும் அறிந்து , உணர்ந்து, சுவைப்பதற்குக் கடுமையான பயிற்சி இருந்தால் மட்டுமெ சாத்தியம்.  எனவேதான் கவிதைகளைத் தொகுப்பவர்களுக்குக் கவிதையைச் சுவைக்கத்தெரிந்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் நாம் காண்பதென்ன? கவித்துவமில்லாத கவிதைகளெல்லாவற்றையுயும் தொகுத்திருப்பார்கள். இதற்குக் காரணம் இவ்விதமாகக் கவிதைகளைத் தொகுப்பவர்கள், தொகுக்கப்படும் கவிதைகளின் நயத்தை அறிந்து , சுவைக்கத்தெரியாதவர்களாக இருப்பதுதான்..
 
இவ்விதம் தொகுக்கப்படும் கவிதைத்தொகுப்புகளை அவர்களது குழுவினருக்கு ஆதரவாக இயங்கும் திறனாய்வுப் பெருந்தகைகளை அல்லது தமிழகத்து இலக்கிய ஆளுமைகளை அழைத்துச் சிறப்பித்து நூல்களை வெளியிட்டு வைப்பார்கள். அவ்விதம் அழைக்கப்பட்ட ஆளுமைகளும் தம் பங்குக்கு ஏதாவது கூறி வைப்பார்கள். அத்துடன் சரி. ஒரு சில மாதங்களில் மறக்கடிக்கப்பட்ட தொகுப்புகளாக அவை மாறிவிடும்.

இந்நிலை மாற வேண்டுமானால், ஆக்கங்களைத் திறனாய்வுக்குட்படுத்து[பவர்கள், கவிதைகளின் நயத்தினை உணர்ந்து, புரிந்துகொள்ளக்கூடியவர்களாக இருத்தல் வேண்டும்.
 
'கவிதை நயம்' பற்றி அதே பெயரில் கலாநிதி கைலாசபதி கவிஞர் இ.முருகையனுடன் இணைந்து நூலொன்றினை எழுதியிருக்கின்றார். நூலினைத் தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியிட்டிருக்கின்றார்கள். சிறிய நூலென்றாலும் கவிதை பற்றி, கவிதை நயம் பற்றி, அழகாக விளக்கப்பட்டிருக்கும் நல்லதொரு நூலென்பேன். கவிதைகளைத் தொகுக்க விழைபவர்கள் குறைந்தது இது போன்ற நூல்களையாவது படித்துத் தம் அறிவினை வளர்த்தபின்னர் தொகுப்பார்களென்றால் , அவ்விதம் உருவாகும் தொகுப்புகளும் தரமானதாக அமைந்துவிடும்.


கவிதை: போர் சூழ் உலகில் யார் வாழ நினைப்பார்?    - வ.ந.கிரிதரன் -
 
 

வாசிப்பும், யோசிப்பும் - 49

 


"

 

போர் சூழ் உலகில்
யார் வாழ நினைப்பார்?
 முடிவற்ற தொடராய்த்
 தொடரும் போர்கள்!
 மானுடர் போர்கள் இம்
 மாநிலத்தில் அவர்தம் விளையாட்டோ?
 காசாவில், காங்கோவில், இந்து சமுத்திரக்
 கண்ணீர்த்தீவில் , மத்தியகிழக்கில் ,
இன்னும் இன்னும்
 இத்தரையின் பல்திசையும்
 எத்தனை எத்தனை போர்கள்!
 இணையச் சமுத்திரத்தில்
 மரணக்காவிகளாய்.
 நீந்திவரும் பிம்ப மீன்கள்.
பால் மணம் மாறாப் பாலகர்கள்,
 பருவப் பெண்கள், முதுமையில்
 முடங்கிய மானுடர்...
 இன்னும் எத்தனை மானுடர்
 இரத்தத்தைக் காவிவருமிந்த
 மீன்கள்?
 போர் சூழ் உலகில்
யார் வாழ நினைப்பார்?
 யார் வாழ நினைப்பார்?
 யார் வாழ நினைப்பார்

 


 

யுத்தத்தின் கோர விளைவுகளை வெளிப்படுத்தும் 'இரு பெண்கள்' (Two Women).
 
1_twowomenposter.jpg - 31.44 Kbஇத்தாலிய நடிகையான சோபியா லோரென் ஹாலிவூட்டினையும் கலக்கிய சிறந்த நடிகைகளிலொருவர். சோபியா லோரேன் என்றதும் அவரது கவர்ச்சிகரமான உடல்வாகினைத்தான் பலரும் முதலில் நினைவுக்குக்கொண்டு வருவார்கள். சோபியா லோரேன் அழகான உடல்வாகுகொண்டவர் மட்டுமல்லர் அற்புதமான நடிகைகளிலுமொருவர். முதல் முதலாக ஆஸ்காரின் சிறந்த நடிகைக்கான விருது ஆங்கிலமொழியிலில்லாத ஒரு திரைப்பபடத்தில் நடித்த நடிகையொருவருக்காகக் கொடுக்கப்பட்டதென்றால், அவ்விருதினைப் பெற்ற நடிகை சோபியா லோரென்தான். புகழ்பெற்ற இத்தாலிய நாவலாசிரியர்களிலொருவரான அல்பேர்ட்டோ மொராவியோ (இவரது படைப்புகளில் பாலியல் சம்பவங்கள் சிறிது தூக்கலாகவிருக்கும். அதனால் சிலர் எஸ்.பொ.வை இவருடன் ஒப்பிடுவதுமுண்டு) எழுதிய நாவலான 'இரு பெண்கள்' (Two Women) என்னும் நாவலினை மையமாக வைத்து உருவான Two Women கறுப்பு/வெள்ளைத் திரைப்படம் 22 சர்வதேச விருதுகளைச் சோபியா லோரென்னுக்கு அள்ளிக்கொடுத்த திரைப்படம்.. போர் மக்கள் மேல் ஏற்படுத்திய விளைவுகளைப் பார்ப்பவர் நெஞ்சினை அதிரவைக்கும் வகையில் விபரிக்கும் திரைப்படமிது. 'விட்டோரியோ டி சிகா'வின் (Vittorio De Sica) இயக்கத்தில் வெளியான ( Vittorio De Sica புகழ்பெற்ற இத்தாலியத் திரைப்பட இயக்குநர். இவரது திரைப்படங்கள் நான்கு தடவைகள் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளன. புகழ்பெற்ற The Bicycle Thief திரைப்படத்தினை இயக்கியவர் இவர்தான்.) இத்திரைப்படத்தின் கதைச் சுருக்கமிதுதான்:
 
விதவையான சிசிரா ரோம் நகரில் வசிக்கும் கடை உரிமையாளர். பன்னிரண்டு வயதுள்ள, சமய ஈடுபாடுமிக்க ரோசிட்டா என்னும் மகளுடன் வாழ்ந்து வந்தவர் சிசிரா. இரண்டாவது உலக மகா யுத்தக் காலகட்டத்தில் நேசப்படைகளின் ரோம் மீதான குண்டு வீச்சிலிருந்து தப்புவதற்காக சிசிரா தனது மகளுடன் தனது சொந்த இடமான , மலைப்பாங்கான கிராமப்புறமான மாநிலத்துக்குச் செல்கின்றார்.
 
அங்கு சிசிராவுக்கு கம்யூனிஸ்ட் கோட்பாடுகளில் ஈடுபாடுமிக்க இளைஞரான மைக்கல் என்பவர் மீது ஈடுபாடு ஏற்படுகின்றது. ரோசிட்டாவும் மைக்கலை அப்பா ஸ்தானத்தில் வைத்துப் பழகுவதுடன், இருவருக்குமிடையில் அப்பா - மகள் உறவு தீவிரமாக உருவாகின்றது. இதற்கிடையில் மைக்கலை ஜேர்மன் படையினர் கைது செய்து விடுகின்றார்கள். மலைப்பாங்கான அப்பிரதேசத்தினை அவர் அறிந்தவரென்பதால், அவர் தமக்கு உதவியாக இருக்கக்கூடுமென்ற நோக்கத்திலேயே ஜேர்மானியப் படையினர் அவரைக் கைது செய்கின்றார்கள்.
 
நேசப்படைகள் ரோம் மீதான ஜேர்மனியரின் ஆக்கிரமிப்பினை முடிவுக்குக் கொண்டுவந்ததும் , சிசிரா மகளையும் கூட்டிக்கொண்டு ரோம் நகர் நோக்கிச் செல்கின்றார். செல்லும் வழியில் பிரெஞ்சு இராணுவத்தின் மொராக்கோ வீரர்களால் , கிறிஸ்தவ ஆலயமொன்றில் வைத்துத் தாயும் , மகளும் கூட்டாகப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அந்நிகழ்வு சிறுமியான ரோசெட்டாவை உளவியல்ரீதியில் மாற்றி விடுகின்றது. சிறுமியான அவள் சிறுமித்தனத்தினை இழந்து விடுகின்றாள்.

பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட தாயும், மகளும் அருகிலுள்ள கிராமமொன்றில் அடைக்கலம் புகுகின்றார்கள். அங்கு ரோசெட்டா இரவுகளில் தாய்க்குத் தெரியாமல் அவளைவிட வயதான பையனொருவனைச் சந்திக்கச் செல்கின்றாள். ஆரம்பத்தில் மைக்கலைத் தேடித்தான் மகள் செல்வதாகத் தாய் நினைக்கின்றாள். இதற்கிடையில் மைக்கலும் மொராக்கன் வீரர்களினால் (அவர்களைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய) கொல்லப்பட்ட விபரத்தை அறிந்துகொள்கின்றாள்.

வழக்கம்போல் இரவினில் தன் ஆண் நண்பனைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பும் மகளைத் தாய் கண்டிக்கின்றாள். அவளை முகத்திலும் அறைகின்றாள். மகளுக்கும் மைக்கல் இறந்த் விடயத்தைக் கூறுகின்றாள். பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதிலிருந்து உளவியல் ரீதியாக தன் குழந்தைத்தன உணர்வுகளிலிருந்து விலகிய நடத்தையைக் கொண்டிருந்த மகள், மைக்கலின் இறப்புச் செய்தியினைக் கேள்விப்பட்டதும், மீண்டும் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுவதற்கு முன்னர் இருந்த குழந்தைத்தனத்தை மீளப்பெறுகின்றாள்; குழந்தையாகி அழுகின்றாள். மகளைத் தாய் ஆறுதல் படுத்துவதுடன் படம் முடிகின்றது.
 
இத்திரைப்படத்தில் மைக்கலாக நடித்திருப்பவர் பிரபலமான பிரெஞ்சு நடிகர் Jean-Paul Belmondo. [ எப்பொழுதும் சிரித்துக்கொண்டிருப்பவர் போல் காணப்படும் தோற்றம் கொண்டவர். என் மாணவப் பருவத்தில் எனக்குப் பிடித்த நடிகர்களிலொருவராக விளங்கியவர். அக்காலகட்டத்தில் இவரது The Brain எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களிலொன்று. கொள்ளையர்களிலொருவராக நடித்திருப்பார். படம் முழுவதும் விழுந்து விழுந்து சிரிக்கலாம். இவரது, நான் பார்த்த இன்னுமொரு திரைப்படம் 'போர்சலினோ'].
 
யுத்தங்கள், அதன் விளைவான போர்க்குற்றங்கள் எத்தகைய விளைவுகளை அப்பாவி மக்கள்மீது ஏற்படுத்தி விடுகின்றன என்பதை விபரிக்கும் 'இரு பெண்கள்' சர்வதேசத் திரையுலகின் முக்கியமான படைப்புகளிலொன்று.

 


 

குட்டிக்கதை 1: அவனும், இவனும்!

வாசிப்பும், யோசிப்பும் - 49

அவனது வாழ்க்கையின் மிகவும் பிரதானமான விடயங்கள் புத்தகங்களும், வாசிப்பும் மற்றும் இயற்கை சுகித்தலும்தாம்.   நூல்கள் வாங்குவதற்கு அவன் பணம் செலவழிக்கத் தவறுவதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு கணங்களையும் எத்தகைய சூழலிலும் அனுபவிக்க அவன் தவறியதேயில்லை. கட்டடக்காட்டினுள்ளும் அவனால் இயற்கையின் விசித்திரங்களை, விளையாட்டுகளை இரசிக்க முடியும். அவன் இதுவரையில் எதனையும் தான் தவற விட்டு விட்டதாகக் கருதவேயில்லை. இருப்பு எப்பொழுதுமே இன்பமளிப்பதாகவும்,  புதிர் நிறைந்ததாகவுமிருந்தது. பிரபஞ்சத்துப் புதிர் பற்றிச் சிந்திப்பது அவனுக்கு இன்பத்தைத் தந்தது. விண்ணில் சிறகடிக்கும் புள்ளினங்கள் அவன் நெஞ்சினில் களிப்பினை ஏற்றின.

இவன் அவனுக்கு எதிர்மாறானவன். வாழ்க்கையின் பெரும்பகுதியைப் பணம் பண்ணுவதற்கே அவன் செலவிட்டான். சொத்துகளைக் குவிப்பதில் ஒரு வெறியுடன் அவன் செயல்பட்டான். எந்த நேரமும் அவனது சிந்தனை பணம் பண்ணுவதிலும், மேலும் எவ்விதம் செல்வத்தை அதிகரிக்கலாம் என்பதிலேயே அவனது கவனமிருந்தது. முதுமை அவனது ஓட்டத்தைச் சிறிது தடுத்தபொழுது அவன் சிந்திக்கத் தலைப்பட்டான். இன்னும் எத்தனை நாளைக்கோ என்று எண்ணினான். அதற்குள் எல்லாவற்றையும் அனுபவித்து விடவேண்டுமென்று எண்ணினான். மீண்டும் ஓடத்தொடங்கினான். இப்பொழுது அவனது ஓட்டம் இழந்ததாகத் தான் கருதியதை அனுபவிப்பதிலிருந்தது. ஆனால் தான் இதுவரையில் தான் இழந்ததுதான் என்ன என்பது பற்றி அவனுக்குச் சரியாகத்தெரியாமலிருந்தது.

அவனும் , இவனும் ஒரு நாள் சந்தித்துக்கொண்டார்கள்.

அவன் கூறினான்: "இன்னும் கொஞ்சக் காலம் தான். அதற்குள் எல்லாவற்றையும் அனுபவித்து விடவேண்டும். எங்களுக்குப் பிடித்ததை நாம் செய்ய வேண்டும்."

இவன் தனக்குள் நினைத்துக்கொண்டான்: 'அதைத்தானே நான் இத்தனை வருடங்களாகச் செய்துகொண்டு வருகின்றேன்.'