- அண்மையில் முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட 'எனக்குப் பிடித்த திரைப்படப்பாடல்கள்' பற்றீய கருத்துகளை 'வாசிப்பும், யோசிப்பும்' பகுதியில் ஒரு பதிவுக்காகப் பகிர்ந்து கொள்கின்றேன். 'வாசிப்பும் யோசிப்பும்' பகுதியில் வாசித்தவற்றையும், யோசித்தவற்றையும், வாசித்து யோசித்தவற்றையும் பகிர்ந்துகொள்கின்றேன். இத்திரைப்படப்பாடல்கள் கேட்டு யோசித்தவையென்பதால் யோசிப்பும் பகுதிக்குள் அடக்கலாம், அத்துடன் பாடல் வரிகளை வாசித்ததால் 'வாசிப்பும், யோசிப்பும்' பகுதிக்குள்ளும் அடக்கலாம். எனவே இப்பகுதிக்கும் இவை பொருத்தமானவையே. - வ.ந.கி- 

ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி!

எனக்கு மிகவும் பிடித்த பழைய திரைப்படப் பாடல்களிலொன்று 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி'. எம்.எஸ்.வி/ டி.கே.ராமமூர்த்தி ஆகியோரின் இசையில் எஸ்.ஜானகியின் நெஞ்சையள்ளும் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் எம்ஜிஆர்/சரோஜாதேவி இணைந்து நடித்த 'பாசம்' திரைப்படத்தில் வருகிறது. டி.ராமண்ணாவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மேற்படி 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி' பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் மருதகாசி. இந்தத் திரைப்படத்தில் எம்ஜிஆர் திருடனாக நடித்திருப்பார். அத்திருடனைக் காதலிக்கும் நாயகியாக வரும் சரோஜாதேவி மாட்டு வண்டியில் மேற்படி பாடலைப் பாடியபடி வருவார். திருடனைக் காதலிக்கும் நாயகி தன் காதலைப் கூறும் பாங்கு சுவையானது. ஒரு திருடனின் வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருக்கும் விடயங்களைக் கொண்டே கவிஞர் மருதகாசி இப்பாடலை இயற்றியிருப்பார். காட்டில் நாயகியைக் கண்ட திருடனான நாயகன் தன் இயல்பின்படி அவளிடன் உள்ளதைக் கொடு என்று வற்புறுத்தவே நாயகியோ கையில் எதுவும் இல்லாத காரணத்தால் தன் கண்ணில் உள்ளதைக் கொடுத்து விட்டேன் என்று பின்வருமாறு பாடுகின்றாள்எனக்கு மிகவும் பிடித்த பழைய திரைப்படப் பாடல்களிலொன்று 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி'. எம்.எஸ்.வி/ டி.கே.ராமமூர்த்தி ஆகியோரின் இசையில் எஸ்.ஜானகியின் நெஞ்சையள்ளும் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் எம்ஜிஆர்/சரோஜாதேவி இணைந்து நடித்த 'பாசம்' திரைப்படத்தில் வருகிறது. டி.ராமண்ணாவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மேற்படி 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி' பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் மருதகாசி. இந்தத் திரைப்படத்தில் எம்ஜிஆர் திருடனாக நடித்திருப்பார். அத்திருடனைக் காதலிக்கும் நாயகியாக வரும் சரோஜாதேவி மாட்டு வண்டியில் மேற்படி பாடலைப் பாடியபடி வருவார். திருடனைக் காதலிக்கும் நாயகி தன் காதலைப் கூறும் பாங்கு சுவையானது. ஒரு திருடனின் வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருக்கும் விடயங்களைக் கொண்டே கவிஞர் மருதகாசி இப்பாடலை இயற்றியிருப்பார். காட்டில் நாயகியைக் கண்ட திருடனான நாயகன் தன் இயல்பின்படி அவளிடன் உள்ளதைக் கொடு என்று வற்புறுத்தவே நாயகியோ கையில் எதுவும் இல்லாத காரணத்தால் தன் கண்ணில் உள்ளதைக் கொடுத்து விட்டேன் என்று பின்வருமாறு பாடுகின்றாள்:

காட்டில் ஒருவன் எனைக் கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்றே
கண்ணில் உள்ளதை கொடுத்து விட்டேன்

அது மட்டுமா திருட வந்த அவனைத் தானே திருடி விட்டதாகவும் கூறுகின்றாள். நாயகிக்கோ திருடுவதில் நாயகனைப்போல் பரிட்சயமில்லை. இதுதான் அவளது முதல் திருட்டு. முதல் திருட்டு என்பதால் அவளுக்குப் போதிய அனுபவமில்லை. அதனால் அவனை அவளால் முழுவதுமாகத் திருட முடியாமல் போய் விட்டதாம்.

அவன்தான் திருடன் என்றிருந்தேன்.
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல் முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்

அத்துடன் அவன் மேல் காதல் கொண்ட நாயகி தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அந்தத் திருடனைக் கைது செய்து தன் உள்ளத்துச் சிறையினில் வைக்கப்போவதாகவும் அதிலிருந்து அவனை என்றுமே விடுதலை செய்யப்போவதில்லையென்றும், இவ்விதம் அவனைக் கைது செய்து ஆயுள் தண்டனைக் கைதியாகச் சிறையினுள் வைப்பதற்குத் தான் ஒருபோதும் விளக்கம் கூறப்போவதில்லையென்றும் கூறுகின்றாள்:

இன்றே அவனை கைது செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்லவும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது

ஒரு திருடனைக் காதலிக்கும் நாயகியென்பதால், திருடனுடன் சம்பந்தப்பட்ட திருட்டு, சிறை, கைதி, விடுதலை போன்ற சொற்களை வைத்தே பாடலை இயற்றிய கவிஞரின் சொல்நயம் என்னைக் கவர்ந்தது. அத்துடன் மெல்லிசை மன்னர்களின் இசையும், எஸ்,ஜானகியின் குரலும் மேற்படி பாடல் என்னைக் கவர்வதற்கு மேலதிகக் காரணங்கள். அத்துடன் கன்னடத்துப் பைங்கிளியின் காதல் ததும்பும் குறும்புடன் கூடிய நடிப்பையும் தவிர்ப்பதற்கில்லை. எத்தனை தடவைகள் கேட்டாலும் ஜானகியின் உள்ளத்தைக் கவரும் அந்தக் குரல் என் உள்ளத்தைத் திருடத் தயங்குவதில்லை. அவ்விதம் என் உள்ளத்தைத் திருடிவிடும் இந்தக் குரலுக்கும் என்றுமே என் உள்ளத்திலிருந்தும் விடுதலை கிடையாது. நீங்களும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். உங்கள் உள்ளங்களையும் திருடிவிடுமிந்தப் பாடல். அதன்பின் உங்கள் உள்ளங்களிலிருந்தும் என்றுமே இந்தப் பாடலுக்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை.


'அதோ அந்தப் பறவைபோல் வாழவேண்டும்'

எம்ஜிஆர் , ஜெயலலிதா நடிப்பில், பி.ஆர்.பந்துலு தயாரிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் 'அதோ அந்தப் பறவை போல' பாடல் மிகவும் புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களிலொன்று. கண்ணதாசன் எழுதிய இப்பாடல்  விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைப்பில் டி.எம்.செளந்தரராஜன் மற்றும் குழுவினர் பாடிய பாடல். ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதமயப்பட்ட காலத்தில் போராளிகள் பலரின் பிரியமான பாடல்களிலொன்றாக விளங்கிய பாடல்களிலொன்று. நீண்ட காலம் இலங்கை வானொலியில் இந்தப் பாடல் ஒலிபரப்பாமல் இருந்ததற்குக் காரணம் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் பாடலென்பதால்தான்எம்ஜிஆர் , ஜெயலலிதா நடிப்பில், பி.ஆர்.பந்துலு தயாரிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் 'அதோ அந்தப் பறவை போல' பாடல் மிகவும் புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களிலொன்று. கண்ணதாசன் எழுதிய இப்பாடல்  விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைப்பில் டி.எம்.செளந்தரராஜன் மற்றும் குழுவினர் பாடிய பாடல். ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதமயப்பட்ட காலத்தில் போராளிகள் பலரின் பிரியமான பாடல்களிலொன்றாக விளங்கிய பாடல்களிலொன்று. நீண்ட காலம் இலங்கை வானொலியில் இந்தப் பாடல் ஒலிபரப்பாமல் இருந்ததற்குக் காரணம் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் பாடலென்பதால்தான். இந்தப் பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. முக்கிய காரணம் பாடலின் வரிகளில் சில. அடுத்தது எம்ஜிஆரின் துடிப்பான அனைவரையும் கவரும் உற்சாகமூட்டும் நடிப்பு. திரைப்படத்தில் அடிமைகளின் தலைவனாக வரும் எம்ஜிஆர் அனைவருக்கும் விடுதலையில் நம்பிக்கை ஊட்டும் வகையில் பாடுவதாக வரும் வரிகள் கொடிய அடக்கு ஒடுக்குமுறைகளுக்குள் வாழும் மக்களுக்கு எப்பொழுதும் நம்பிக்கையினையும், ஆறுதலையும் தருவன. 'விண்ணில் எவ்வளவு ஆனந்தமாக, சுதந்திரமாகப் பறவை பறக்கிறது. அதனைப் போல் சுதந்திரமாகச் சிறகடித்துப் பறக்குமொரு வாழ்க்கை வேண்டும். கடலின் நீரலைகள்தாம் எவ்வளவு சந்தோசமாக, எந்தவித அச்சமுமற்று ஆடி, ஓடி வருகின்றன. இந்த அலைகளைப் போல் அடிமைத்தளைகளுக்குள் வாழும் நாமும் ஆனந்தமாக ஆடும் வாழ்க்கை வேண்டும்' என்று தன்னை நம்பியிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையினையும், அடைய வேண்டிய விடுதலை என்னும் இலட்சியத்தையும் எடுத்துரைக்கின்றான் தலைவன். இந்த வானில், இந்த மண்ணில் நாம் பாடுவதும் உரிமைக்கீதமாகவே இருக்கட்டுமென்கின்றான். தலைவனது நம்பிக்கையூட்டும் கூற்றினால் நம்பிக்கைகொண்ட ஏனைய அடிமைகளும் அவனுடன் சேர்ந்து விடுதலைக் கனவுடன் ஆடிப்பாடுகின்றார்கள்.

தலைவன் தொடர்கின்றான். இங்கு வீசும் காற்று நம்மை அடிமை என்று ஒதுக்குவதில்லை. கடல் நீரும் அடிமையென்று எம்மைச் சுடுவதில்லை. நாம் அடிமைகள் என்று காலம் நம்மை விட்டு விலகி நடப்பதில்லை. காதல், பாசம், தாய்மை போன்ற பந்தபாசங்களும் நம்மை மறப்பதில்லை. எம்மை அவை சுதந்திரம் மிக்க மனிதர்களாகவே நடாத்துக்கின்றன. தாயில்லாமல் யாரும் பிறப்பதில்லை. சொல், மொழியில்லாமல் யாரும் பேசுவதில்லை. பசியில்லாமல் யாரும் வாழுவதில்லை. அதுபோல் விடுதலைக்காகப் போராடும் மக்கள் வேறு வேறு பாதைகளில் செல்வதில்லை. இவ்விதமாகத் தொடர்ந்தும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் தலைவன் அடிமைச் சூழலில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் அனைவரும் அச்சமின்றி ஆடிப்பாடிட, சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு விடுதலை வேண்டும். வானம் ஒன்று. இந்த மண்ணும் ஒன்று. அதுபோல் விடுதலைக்காக நாம் பாடும் கீதமும் ஒன்றாகவேயிருக்கட்டும். அது விடுதலைக்கான உரிமைக் கீதமாகவேயிருக்கட்டும் என்று தொடர்ந்தும் நம்பிக்கையூட்டிப் பாடுகின்றான். தலைவனின் நம்பிக்கையும், உற்சாகமும், ஆட்டமும் அவனைச் சுற்றியிருந்த அனைவரையும் பற்றிக்கொள்கிறது. எல்லோரும் அவனுடன் சேர்ந்து விடுதலைக்கனவுடன், நம்பிக்கையுடன், தம் மண்ணில் வாழும் மக்களின் அடிமை வாழ்வை உடைத்தெறிவதற்காக 'அதோ அந்தப் பறவை போல் வாழ வேண்டும்' என்று உரிமைக் கீதம் இசைக்க ஆரம்பிக்கின்றார்கள்.

எம்ஜிஆரின் உற்சாகமும், மகிழ்ச்சியும் ததும்பும் நடிப்பும் அவரது ஆடை அலங்காரங்களும். இந்தப் பாடலில் எனக்குப் பிடித்த ஏனைய விடயங்கள். சிறுவயதில் நெஞ்சில் வாழ்வின் சுமைகளற்று உல்லாசமாகத் திரிவோம். அந்தச் சமயங்களில் உள்ளங்களின் ஆழங்களில் பதிந்துவிடும் எவையும் பின்னர் அழிவதில்லை. அழியாத கோலங்களாக மானுட வாழ்வுடன் நிலைத்து நின்றுவிடுகின்றன. அவ்விதம் அழியாத கோலங்களாக பதிந்துவிட்ட தருணங்களிலொன்றுதான் இந்தப் பாடலும், திரைப்படமும். எத்தனைதரம் கேட்டாலும் சலிக்காத, மனதுக்கு இன்பமூட்டும் பாடல்களிலொன்று கவிஞர் கண்ணதாசனின் 'அதோ அந்தப் பறவை போல் வாழ வேண்டும்.' 'சிட்டுக்குருவியைப் போல் சிறகடிக்க ஆசைப்பட்டான் மகாகவி பாரதி. கவிஞர் கண்ணதாசனோ 'அடிமைத்தளையறுத்து, அச்சமற்ற ஆடிப்பாடி அதோ அந்தப் பறவைபோல் வாழ வேண்டுமென்று' விடுதலை நாடி உரிமைக்கீதமிசைக்கின்றார். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எமதுள்ளமும் விண்ணில் பறக்கும் சுதந்திரப்புள்ளாகச் சிறகடிக்க ஆரம்பித்துவிடுகின்றது.


புதிய மனிதா! பூமிக்கு வா!

அண்மைக்காலத் திரைப்படங்களில் என்னை மிகவும் கவர்ந்த திரைப்படமாக ரஜனிகாந்தின் 'எந்திரன்' திரைப்படத்தைக் குறிப்பிடலாம். தமிழ்த் திரையுலகில் அவ்வபோது விஞ்ஞானப் புனைவுகளை மையமாக வைத்துத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும் (எம்ஜிஆரின் 'கலையரசி' இவ்வைகையான முயற்சி என்பதால் குறிப்பிடப்படவேண்டியதென்றாலும், அதனை இயக்கியவர்களுக்குப் போதிய அறிவுலகப் பின்னணி இல்லாததால் சில இடங்களில் முட்டாள்தனமாகக் காட்சிகளை அமைத்திருப்பார்கள்.அண்மைக்காலத் திரைப்படங்களில் என்னை மிகவும் கவர்ந்த திரைப்படமாக ரஜனிகாந்தின் 'எந்திரன்' திரைப்படத்தைக் குறிப்பிடலாம். தமிழ்த் திரையுலகில் அவ்வபோது விஞ்ஞானப் புனைவுகளை மையமாக வைத்துத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும் (எம்ஜிஆரின் 'கலையரசி' இவ்வைகையான முயற்சி என்பதால் குறிப்பிடப்படவேண்டியதென்றாலும், அதனை இயக்கியவர்களுக்குப் போதிய அறிவுலகப் பின்னணி இல்லாததால் சில இடங்களில் முட்டாள்தனமாகக் காட்சிகளை அமைத்திருப்பார்கள். குறிப்பாக புவியீர்ப்பு குறைந்த கிரகத்தில் எந்தவித விண்வெளி ஆடைகளுமில்லாமல் நடப்பது போன்ற காட்சிகளைக் குறிப்பிடலாம்.0 'எந்திரன்' தமிழில் வெளிவந்த விஞ்ஞானப்புனைவுகளை மையமாக வைத்து வெளிவந்த முக்கியமானதொரு திரைப்படமாகவே எனக்குப் படுகிறது. இந்தத் திரைப்படத்தின் அடிப்படை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 'எந்திர மனிதனை' உருவாக்குவது பற்றி நிறையச் சிந்தித்திருக்கின்றார்கள். அதற்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் பங்களிப்பு முக்கிய காரணம். இவ்விதம் உருவாக்கப்படும் 'எந்திர மனிதனின்' ஆக்கபூர்வமான விடயங்களை உள்வாங்கிக் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கும் 'புதிய மனிதா' என்னும் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இப்பாடலின் வரிகளை நன்கு சிந்தித்துக் கவிஞர் எழுதியிருக்கின்றார். இந்தப் பாடல் 'புதிய மனிதா' என்று தொடங்குகின்றது. இதற்காக யாராவது எதற்காக இவ்விதம் படைக்கப்படும் கம்யூட்டர் மனிதனை ஏன் ஒரு பெண்ணாகப் படைத்திருக்கக் கூடாது என்று கேட்டுவிட்டாலும் என்பதைப் பற்றிக் கவிஞர் சிந்தித்திருக்க வேண்டும். அதனால்தான் அதற்கொரு பதிலையும் பாடலில்

'ஆண் பெற்றவன் ஆண் மகனே
ஆம் உன் பெயர் எந்திரனே'

என்று அவரால் எழுதியிருக்க முடிகிறது. ஆனால் இத்தர்க்கம் வலுவற்றது. யாராவது திருப்பி 'அப்படியானால் 'பெண்கள் பெற்றவர்கள் எல்லாரும் பெண்களா?' என்று கேட்டுவிடும் அபாயமிருப்பதைப் புரிந்துகொள்ளாமல்தான் கவிஞர் அவ்வரிகளை எழுதியிருக்க வேண்டும். அவ்விதம், கேட்டுவிட்டால் கவிஞர் வைரமுத்துவின் தர்க்கத்தின்படி அவரும் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவரை ஒரு பெண்தானே பெற்றிருக்கின்றார். இதற்கு எதிர்வாதமாக 'இவ்விதம் கூறமுடியாது. ஏனென்றால் ஆணும் பெண்ணும் சேர்ந்து உருவான படைப்பல்லவா மானுட இனம்' என்று யாராவது கேட்கலாம். அவ்விதமிருந்தாலும் கவிஞரின் வாதம் 'ஆண் பெற்றவன் ஆண் மகனே' என்றிருப்பதால் அதனடிப்படையில் 'பெண் பெற்றவள் பெண் மகளே' என்றுதானே வரும் என்று யாராவது வாதிக்கலாம். இவ்விதமாகத் தர்க்கங்கள் எழலாம். ஆனால் அவற்றையும் மீறி இத்திரைப்படமும், இந்தப் பாடலும் பிடித்திருப்பதற்கு முக்கியமான காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

'கருவில் பிறந்த எல்லாம்
மரிக்கும்
அறிவில் பிறந்தது
மரிப்பதே இல்லை'

என்ற வரிகள் என்னைக் கவர்ந்தவை. கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும் என்று மானுடர் தொடக்கம் இப்பூவுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தையும் குறிப்பிடலாம். ஆனால் இவ்விதம் கூறுவது ஒருவிதத்தில்தான் சரி. ஏனென்றால் எம் இருப்பு பற்றிய போதிய விளக்கம் இன்னும் எமக்கில்லை. கருவில் பிறக்கும் எல்லாவற்றையும் படைத்தது எது? யார்? என்று கேட்டால் என்ன பதில்? ஒருவேளை எம்மைவிடப் பல்பரிமாணங்கள் மிக்க உயிரினமொன்றின் அறிவின் விளைவாக நாம் இருந்துவிட்டால் என்றொரு கேள்வி எழுவதையும் என்னால் தவிர்க்கமுடியவில்லை. அவ்விதமாயின் 'அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை' என்றும் கூறுவதற்கில்லை என்றாகிவிடுமல்லவா? ஆனாலும், அவ்விதமானதொரு சாத்தியக்கூற்றினைத் தவிர்த்துவிட்டுப் பொருளுலகே உண்மையென்பதை அடிப்படையாகக் கொண்டால் 'கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்' என்பதை அறுதியானதொரு முடிவாகக் கொள்ளலாம். இப்பாடலின் எல்லாவரிகளும் திரைப்படத்தில் வரும் பாடலில் இடம்பெறவில்லை. ஆனால் நான் இங்கு குறிப்பிடுவது திரைப்படத்தில் வரும் பாடல் வரிகளையும், இணையத்தில் கிடைக்கபெற்ற முழுமையான பாடல் வரிகளையும்தாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

இவ்விதமான கேள்விகளையெல்லாம் எழுப்பும் தன்மை மிக்கதாக இப்பாடலின் வரிகள் இருப்பதால் எனக்கு இப்பாடல் பிடித்திருக்கின்றதென்றும் கூறலாம். சிந்தனையைத் தூண்டும் வரிகள் இவை. அத்துடன் இயந்திர மனிதரைப் பொறுத்த அளவில் அவர்களுக்கு மொழிகள் பலவற்றைக் கற்பதும், மிகவும் இலகுவாக, விரைவாக வாசிப்பதும் சாத்தியம். ஈரல், கணையம் , இதயம் போன்றவை இல்லாததால் அவற்றால் ஏற்படக்கூடிய நோய்கள் பற்றிய கவலைகளில்லை. தந்திரம் மிக்க மனிதர் நிலைத்து வாழ்வதில்லை. ஒரு நாள் அவர்கள் வீழந்துதான் போகின்றார்கள். ஆனால் இயந்திர மனிதருக்கு இந்த விடயத்திலும் சாதகமான அம்சம்தானிருக்கிறது. அவர்கள் மானுடர்களைப் போல் வீழ்வதில்லை. தொடர்ந்து வாழ்கின்றார்கள். இவற்றை விபரிக்கும் பாடலின்

'நான் கற்றது ஆறுமொழி
நீ பெற்றது நூறுமொழி
ஈரல் கணையம் துன்பமில்லை
இதயக் கோளாறேதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை
எந்திரம் விழ்வதில்லை'

என்னும் வரிகளும் எனக்குப் பிடித்த வரிகள்தாம்.

பொதுவாக ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் சாதகமான அம்சங்களுடன், பாதகமான அம்சங்களையும் உள்ளடக்கித்தானிருக்கின்றன. அணுச்சக்தியை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம். பூவுலக அழிவுக்கும் பயன்படுத்தலாம். தொலைக்காட்சி போன்ற வெகுசன ஊடகங்களைத் தகவல் பரிமாற்றத்திற்கு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தலாம். அதே சமயம் மானுட சமுதாயத்தில் விம்பங்களின் மூலம் ஆளுமைகளைக் கட்டமைத்து, சமுதாயத்தை அவ்வாளுமைகளின் கைகளுக்குள் அடிமைப்படுத்துவதற்கும் பாவிக்கலாம். இந்த புதிய தொழில் நுட்பத்தின் சாதக, பாதக விளைவுகளையும் கவிஞர் வைரமுத்து சிந்தித்திருக்கின்றார். அந்த ஆரோக்கியமான் சிந்தனையும் எனக்குப் பிடித்திருக்கின்றது. அந்தச் சிந்தனையை விபரிக்கும் பாடலின் வரிகளான

'மாற்றம் கொண்டு வா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால்
உலகை மாற்று
எல்லா உயிரிக்கும்
நன்மையாயிரு
எந்த நிலையிலும்
உண்மையாயிரு'

என்ற வரிகள் புலப்படுத்துகின்றன. 'உனது ஆற்றலாம் மானுட இனத்துக்கு உயர்வு செய். உலகை மாற்று. எல்லா உயிர்களுக்கும் நன்மையாகவிரு. எந்த நிலையிலும் உண்மையாயிரு' என்று 'புதிய மனிதனான எந்திர மனிதனை நோக்கிக் கவிஞர் வேண்டுகின்றார். மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் நன்மையாகவிரு என்கின்றார். கவிஞரின் அந்த நோக்கம் எனக்குப் பிடித்திருக்கின்றது. அதனாலும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ரஜனிகாந் என்னைப் பொறுத்தவரையில் மிகச் சிறந்த நடிகர். ஆனால் அவர் மேல் கட்டமைக்கப்பட்ட சுப்பர் ஸ்டார் ஆளூமை அவர் சிறந்த நடிகராகத் தரவெண்டிய படைப்புகளுக்கான சாத்தியங்களைத் தடுத்துவிட்டது தமிழ்த் திரையுலகின் துர்ப்பாக்கியம். 'முள்ளும் மலரும்', 'எந்திரன்' இவ்விரண்டு திரைப்படங்களும் எனக்கு மிகவும் பிடித்த ரஜனியின் திரைப்படங்கள்.


பாடல்களின் முழு வரிகளும் கீழே:


1. ஜல் ஜல் எனும் சலங்கையிலே

திரைப்படம்:பாசம்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன,டி.கே. ராமமூர்த்தி
இயற்றியவர்:மருதகாசி
பாடகர்கள்:எஸ்.ஜானகி

ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சல வென சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே

காட்டில் ஒருவன் எனைக் கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்றே
கண்ணில் உள்ளதை கொடுத்து விட்டேன்
(ஜல் ஜல் )

அவனே திருடன் என வந்தான்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல் முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்
(ஜல் ஜல் )

இன்றே அவனை கைதி செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்லவும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது

2. அதோ அந்த பறவை போல வாழவேண்டும்

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

3. புதிய மனிதா

இசையமைப்பாளர் - ஏ. ஆர். ரஹ்மான்
பாடியவர்கள் - S.P.பாலசுப்ரமணியம்,ஏ. ஆர். ரஹ்மான், க்ஹடிஜா ரஹ்மான்
பாடல்கள் - வைரமுத்து

புதிய மனிதா
பூமிக்கு வா!

எஃகை வார்த்து
சிலிகான் சேர்த்து
வயருடி உயிருட்டி
ஹர்ட்டிச்கில் நினைவுட்டி
அழியாத உடலோடு
வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி
ஏழாம் அறிவை
எழுப்பும் முயற்சி

மாற்றம் கொண்டு வா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால்
உலகை மாற்று
எல்லா உயிரிக்கும்
நன்மையாயிரு
எந்த நிலையிலும்
உண்மையாயிரு

எந்திரா... எந்திரா...
என் எந்திரா

நான் கண்டது ஆறறிவு
நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறுமொழி
நீ பெற்றது நூறுமொழி
ஈரல் கணையம் துன்பமில்லை
இதயக் கோளாறேதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை
எந்திரம் விழ்வதில்லை

கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்
அறிவில் பிறந்தது
மரிப்பதே இல்லை

இதோ
என் எந்திரன்
இவன் அமரன்

நான் இன்னொரு நான்முகனே
நீ என்பவன் என் - மகனே
ஆண் பெற்றவன் ஆண் மகனே
ஆம் உன் பெயர் எந்திரனே
நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது வெளி
நான் நாளைய ஞான ஒளி

நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது
பொருள் வடிவம்
நீ கண்டது ஒரு பிறவி
நான் காண்பது பல பிறவி

ரோபோ ரோபோ
பன்மொழிகள் கற்றாலும்
என் தந்தை மொழி
தமிழ் அல்லவா!

ரோபோ ரோபோ
பல கண்டம் வென்றாலும்
என் கர்த்தாவுக்கு
அடிமை அல்லவா!