எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14!

அ.ந.கந்தசாமியின் 'எதிர்காலச் சித்தன் பாடல்!' 

எழுத்தாளர் அ.ந.கந்தசாமி (அறிஞர் அ.ந.கந்தசாமி என்ற அழைக்கப்பட்டவர்) அவர்களின் நினைவு தினம் பெப்ருவரி 14. அவர் நினைவாக இந்நினைவுக் குறிப்பு வெளியாகினறது. கதை, கவிதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் சகல துறைகளிலும் காத்திரமாகக் கால் பதித்தவர் அ.ந.க. பத்திரிகையாசிரியராக (தேசாபிமானி, ஆரம்பகால சுதந்திரன், இதழாசிரியராகவும் (இலங்கைத் தகவற் திணைக்கள வெளியீடான ஶ்ரீலங்கா சஞ்சிகை) அவரது பங்களிப்பு பரந்து பட்டது. இதுவரை அவரது வெளிவந்த படைப்புகள்: வெற்றியின் இரகசியங்கள் , உளவியல் நூல் (பாரி நிலையம், 1966), மதமாற்றம் (நாடகம், வெளியீடு: தேசிய கலையிலக்கியப் பேரவை), மனக்கண் (மின்னூல்,அமேசன் - கிண்டில் பதிப்பு, வெளியீடு: பதிவுகள்.காம்), 'நான் ஏன் எழுதுகிறேன்' (மின்னூல், அமேசன்-கிண்டில் பதிப்பு, 14 கட்டுரைகளின் தொகுப்பு), எதிர்காலச்சித்தன் பாடல் (கவிதைத்தொகுப்பு, மின்னூல்: அமேசன் - கிண்டில் பதிப்பு, வெளியீடு : பதிவுகள்.காம்). மார்க்சியக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட அ.ந.க சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும் விளங்கியவர். இலங்கைத் தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவராகக் கருதப்படுபவர். 

தமிழ்க் கவிதைப்பரப்பில் குறிப்பாக இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைப்பரப்பில் எழுதப்பட்ட முக்கியமான கவிதைகளிலொன்றாக நான் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) 'எதிர்காலச் சித்தன் பாடல்' என்னும் கவிதையினைக் கூறுவேன். ஆனால் இலங்கைப் பேராசிரியர்கள் அல்லது இந்திய விமர்சக வித்தகர்களின் பார்வையில் இக்கவிதை ஏன் படவில்லை என்பது புரியாத புதிர் என்பேன். பேராசிரியர் நுஃமானின் பார்வையில் கூட அ.ந.க.வின் சிறந்த கவிதைகள் எதுவும் பட்டதாக இதுவரை அவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் எவற்றிலும் நான் கண்டதில்லை (அ.ந.க.வின் ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையை மட்டும் . 'தேன்மொழி' கவிதையிதழின் ஐப்பசி 1955 பதிப்பில் வெளியான 'கடைசி நம்பிக்கை' என்னும் கவிதையை மட்டும் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்). விமர்சகர்கள் எவரது பார்வையிலும் படாத அ.ந.க.வின் சிறந்த கவிதைகளைப்பற்றி எழுத்தாளர்கள் பலர் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அந்தனி ஜீவா, அகஸ்தியர் , முருகையன் என்று பலர் குறிப்பிட்டிருக்கின்றார்கள். கவிஞர் முருகையன் இக்கவிதையின் சிறப்பைச் சிலாகித்துக் கூறியிருந்ததை வாசித்திருக்கின்றேன். (இன்று இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதிவரும் சி.ரமேஷ் கூட அ.ந.க.வின் படைப்புகளைத் தவற விட்டிருக்கின்றார். அண்மையில் ஜீவநதி பதிப்பகம் வெளியிட்ட 'ஈழத்து நாவல் சிறப்பித'ழில் ஈழத்து நாவல்கள் பற்றிய சி.ரமேஷின் நீண்ட நெடுங்கட்டுரையில் தினகரனில் வெளியாகி வாசகர்களின் பாராட்டுதல்களைப்பெற்ற 'மனக்கண்' நாவல் பற்றியோ, அவர் மொழிபெயர்ப்பில் சுதந்திரன் பத்திரிகையில் வெளியான எமிலி சோலாவின் 'நானா' நாவல் பற்றியோ குறிப்புகள் எவற்றையும் காண முடியவில்லை. இத்தனைக்கும் அ.ந.க.வின் படைப்புகள் இணையத்தில் நிறையவே கிடைக்கின்றன. ஜெயமோகன் கூடத் தனது தமிழ் நாவல் இலக்கியம் பற்றிய நூலில் அ.ந.க.வின் 'மனக்கண்' பற்றிக் குறிப்பிடத்தவறவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.)

இத்தருணத்தில் எனக்கு மிகவும் பிடித்த அ.ந.க.வின் இக்கவிதையை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகின்றேன். அ.ந.க மக்கள் இலக்கியம் படைத்த எழுத்துலகச் சிற்பி. மார்க்சிம் கோர்க்கி போன்ற எழுத்தாளர்கள் வழியில் தன் எழுத்துலகப் பாதையை அமைத்துக்கொண்டு மக்களுக்காக இலக்கியம் படைத்தவர் அவர். இக்கவிதையிலும் அவரது அந்தச் சமுதாயப்பிரக்ஞையைக் காணலாம். பேதங்கள் நிறைந்த மானுடரின் இவ்வுலகில் போர்கள் மலிந்திருக்கின்றன பேதங்கள் காரணமாக. இன, மத, மொழி, வர்க்கம் என எத்தனை வகையான பேதங்கள். அவற்றால் விளையும் பூசல்கள்தாம் எத்தனை. அ.ந.க சிந்திக்கின்றார். இவ்வகையான முரண்பாடுகள், போர்கள் எவையுமில்லாத மனிதர்கள் அனைவரும் ஓரினமாக, ஒரு குலமாக , சரிக்குச் சமமாக வாழும் சமுதாயத்தை அவர் கற்பனை செய்கின்றார். இவ்வித சமுதாயத்தை உள்ளடக்கிய உலகமாக எதிர்கால உலகம் இருந்தால் என்று அவர் சிந்திக்கின்றார். அவ்விதமானதொரு எதிர்கால உலகில் வாழும் எதிர்கால மனிதரைக் கற்பனை செய்கின்றார். விளைவு? அற்புதமான, மிகச்சிறந்த நெடுங்கவிதையொன்று பிறந்து விடுகின்றது. எதிர்கால மனிதனை அவர் காலக்கடல் தாண்டிச் சந்திக்கின்றார். அவனுடன் உரையாடுகின்றார். அவன் கூறும் அவன் வாழும் அனைத்துப் பிரிவுகளுமற்ற  எதிர்கால மானுட சமுதாயம் பற்றிச் சிந்திக்கின்றார். அவர் அவனை நிகழ்கால உலகுக்கு வரும்படி அழைப்பு விடுக்கின்றார். 'பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும் பாருக்கு', 'எங்கும் தீதுகளே நடம்புரியும் நிலைமை'யிலுள்ள 'மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய வாழ்வேற்றிச் செல்வாய்' என்று வேண்டுகின்றார். அவ்விதம் செய்தால் நவகால மானுடரின் 'எண்ணங்கள் விரிவடையும்' என்கின்றார்.

ஆனால் அந்த எதிர்காலச்சித்தனோ நிகழ்காலத்துக்கு வர மறுக்கின்றான். 'ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர். ஞானத்தைக் காண்பாரோ? ' என்று சந்தேகம் கொள்கின்றான். அவ்விதம் '[காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால் கட்டாயம் எனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார். ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக் கொன்ற அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?' என்றும் கூறுகின்றான். 'ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு யான்வரேன் நீபோவாய்' என்கின்றான். எமாற்றத்துடன் நிகழ்கால மனிதன் 'தீதுகளே நடம்புரியும் நிலைமை'யிலுள்ள 'பாதகர்களால் முழுமடைமைப் போர்கள் ' சூழ்ந்த பாருக்குத் திரும்புகின்றான்.

இக்கவிதை இன்னுமொரு சிறப்புக்குமுரியது. நிகழ்கால மனிதனொருவன் காலக்கடல் தாண்டி எதிர்கால உலகுக்குச் சென்று, அங்கு வாழும் மனிதனொருவனைச் சந்தித்து, உரையாடி, மீண்டும் பூமிக்குத் திரும்புவதையும் விபரிக்கின்றது. அவ்வகையில் இந்நெடுங்கவிதையை ஓர் அறிவியல் கவிதையென்றும் கூறலாம். நவகாலத்தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட முதலாவது அறிவியற் கவிதையாகவும் இதனைக்கூறலாமென்று எண்ணுகின்றேன். நானறிந்த தகவல்களின் அடிப்படையில் இதனைக் கூறுகின்றேன். எழுத்தாளர் சுஜாதா அவர்கள் கவிஞர் மீராவின் கவிதையொன்றினைச் சுட்டிக்காட்டி அதுவே நவீனத் தமிழ் இலக்கியத்தில் வெளியான அறிவியற் கவிதையாகக் குறிப்பிட்டிருந்ததை வாசித்திருக்கின்றேன். அது தவறு. கவிஞர் மீராவின் எழுதுவதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே அ.ந.க 'எதிர்காலச்சித்தன் பாடல்' எழுதியிருக்கின்றார்.


வரதர் வெளியிட்ட 'தேன்மொழி' கவிதை இதழின் முதலாவது இதழ் புரட்டாசி 1955இல் வெளியானது. அதில் வெளியான அ.ந.க.வின் நெடுங்கவிதை 'எதிர்காலச்சித்தன் பாடல்'


அ.ந.க.வும் மலையக இலக்கியப் பங்களிப்பும் பற்றிய குறிப்புகள்!

அ.ந.க.வின் மலையக மக்கள் பற்றிய இலக்கியப் பங்களிப்பு பற்றி எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் அ.ந.க பற்றித் தினகரனில் எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

1. "கம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய காலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின் எல்பிட்டி என்னுமிடத்தில் சிலகாலம் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள் மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களினுரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார்."

2. "இனிமேல் தான் நான் நாவல் துறையில் அதிக அக்கறை காட்டப் போகின்றேன்" எனக் குறிப்பிட்டார். மலையகத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்சிகளை வைத்து 'களனி வெள்ளம்' என்ற நாவலை எழுதிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். 'களனி வெள்ளத்திற்கு' முன்னால் கால வெள்ளம் அவரை அடித்துச் சென்று விட்டது. 'நாவல் துறையில் காட்டப்போகும் அதே அக்கறையை உங்கள் உடல் நிலை பற்றியும் காட்டுங்கள்' என்றேன். கடும் நோயின் பாதிப்புக்கிடையில் அ.ந.க கணிசமான அளவு எழுதியது வியப்புக்குரியது."

3. "தொழிலாளியாக வாழ்ந்த அவரது சொந்த அனுபவமே, அவரது கதைகளுக்கு உயிரூட்டிற்று என்று விமர்சகர்கள் கூறுவது போல் தொழிற்சங்கவாதியாகச் சிலகாலம் இருந்த அ.ந.க. தோட்டத் தொழிலாளர்களுடன் இரண்டறக் கலந்து அவர்களின் துன்ப, துயர்களை உணர்ந்ததால், தோட்டத் துரைமார்களின் அதிகாரங்களை நேரில் கண்டதால் அவைகளைத் தமது சிறுகதைகளில் தத்ரூபமாகச் சிருஷ்ட்டித்தார் என்றே கூறவேண்டும்."

அ.ந.க.வின் படைப்புகள் பல பல்வேறு சஞ்சிகைகளில், பத்திரிகைகளில் சிதறிக்கிடக்கின்றன. எழுத்தாளர் அகஸ்தியர் தினகரனில் எழுதிய 'அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள்!' என்னும் கட்டுரையில் இருவரினதும் மலையக மக்கள் மீதான பங்களிப்புப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவார்:

"அ.ந.கந்தசாமியின் 'நாயினுங் கடையர்' அவர் காலப் படைப்பாளி அ.செ.முருகானந்தனின் 'காளி முத்துவின் பிரஜா உரிமை' படித்ததுண்டா? அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள். தோட்டக்காட்டார் என்ற மலையகத் தொழிலாளர்களுக்காக இருவரின் பேனா முனைகள் எமது காலத்திற்கு முன்பே போர் முனைகளாயின. இரு கதைகளும் சான்று."

அ.ந.க தனது இறுதிக்காலத்தில் களனி வெள்ளம் என்றொரு நாவலைத் தோட்டத்தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதிக்கொண்டிருந்ததாக அந்தனி ஜீவா தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் கட்டுரையில் குறிப்பிடுவார். அ.ந.க.வின் அந்நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், 83 இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் செ.க. கூறியதாக ஞாபகம்.

தமிழ்முரசு (சிங்கப்பூர்) 17 ஜூன் 1955 பதிப்பில் அ.ந.க.வின் தோட்டத்தொழிலாளர்கள் பற்றிய சிறுகதையொன்று வெளியாகியுள்ளது. இதன் பெயர் 'குடும்ப நண்பன் ஜில்'. இதுவரை எங்குமே பேசப்பட்டிராத அ.ந.க.வின் இந்தச் சிறுகதையினைத் தேடித்தேடிக் கண்டுபிடித்து 'பதிவுகள்' இணைய இதழே முதன் முதலாகப் பிரசுரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைப் 'பதிவுகள்' இணைய இதழில் வாசிக்கலாம்.

அ.ந.க.வின் (கவீந்திரன் என்னும் புனைபெயரில் எழுதிய) தோட்டத் தொழிலாளர் பற்றிய 'பாரதி' இதழில் வெளிவந்த கவிதை கீழே:

தேயிலைத் தோட்டத்திலே

- அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) -

1.
காலையிலே சங்கெழுந்து பம்மும்! "நேரம்
கணக்காச்சு! எழுந்துவா! தூக்கம்போ தும்.
வேலைசெய வேண்டு"மெனச் சொல்லு மஃது!
வேல்விழியாள் உடன்வித்தாள்! துடித்தெழுந்தாள்!
பாலையுண வேண்டுமெனப் பாலகன் தான்
பதறுமன்றோ?என நினைத்தாள் பாய்மேற்பாலன்
காலைமெல வருடினாள் கமலப் பூபோல்
கண்விரித்துக் காலையுதைத் தெழுந்தான் பாலன்!

2.
முகத்தைமெல முத்தமிட்டாள்! ராசா வென்றாள்!
முத்தம்பின் முத்தமிட்டு முறுவலித்தாள்!
அகத்தினிலே அணைகடந்த அன்பின் வெள்ளம்
அமுதமாய் மார்பிடையே சுரக்கவஃதை
அகம் குளிரப் பசிதீர உடல்வளர
அருந்தட்டும் குழந்தையென அணைத்துக் கொள்வாள்!
முகம்மலர வாய்குவித்துச் சிரத்தையோடு
முழித்தவண்ணம் பாலகந்தான் பருகுகின்றான்!

3.
அன்னையுளம் அழகிய பூங்கனவுபல
அரும்பிவரும்! சின்னவந்தப் பாலகன்தான்
மன்னவன்போல் மல்லார்ந்த புயத்தனாகி
மண்ஞ்செய்து மக்கள்பல பெற்று வேண்டும்
பொன்னோடும் பூணோடும் சிறக்க வாழ்வான்!
பொறாமைப்பேய் உறவினரை விழுங்கும் உண்மை!
என்னென்ன நினைவெல்லாம் என்மனத்தே!
எனநினைந்து தன்னுள்தான் வெட்கிக்கொள்வாள்!

4.
பால்குடித்துமுடிய அந்தக் குழந்தை இன்பப்
பசுமுகத்தில் பால்வடியக் கலகலென்று
மால்தீர உளத்துன்ப மாசு ஓட
மனங்குளிரச் சிரித்துத்தன் கையை ஆட்டி
காலையுதைத் திருள் தீரும் காட்சி நல்கும்!
காரிகை மனத்தின்பம் சீறிப் பொங்கும்!
நாலைந்து முத்தமந்த வெறியிற் கொட்டி,
நங்கைதன் வேலைக்குக் கிளம்புகின்றாள்!

5.
பானையிலே தண்ணீரில இட்டிருநத
பழயதனை எடுத்தே உண்டுமிஞ்ச
மானைநிகர் கண்ணாள் தன் மணவாளர்க்கு
மற்றதனை வைத்துவிட்டு விரைந்து சென்று
கானகத்து மூங்கிலிலே வேய்ந்த கூடை
கழுத்தினிலே பின்புறமாய்த் தொங்கவிட்டு
தானெழுந்து விரைவாள் தன் வேலைக்காடு!
தன் கண்ணின் ஓரத்தைத் துடைத்துக்கொள்வாள்!


இதுவரை வெளியான அ.ந.கந்தசாமியின் நூல்கள்!

1. வெற்றியின் இரகசியங்கள். (வாழ்க்கையின் வெற்றிக்கான உளவியல் நூல், 1966) - பாரி பதிப்பகம் (தமிழகம்)
2. மதமாற்றம் (நாடகம், 1989) - எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் (இலங்கை)

 அ.ந.கந்தசாமியின் மின்னூல்கள்!

1.மனக்கண் (நாவல்) - அமேசன் -கிண்டில் பதிப்பு, 2021, வெளியீடு: பதிவுகள்.காம்
2. எதிர்காலச்சித்தன் பாடல்: அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) கவிதைள் அடங்கிய தொகுப்பு! (அமேசன் - கிண்டில் பதிப்பு, 2021) - வெளியீடு: பதிவுகள்.காம்
3. நான் ஏன் எழுதுகிறேன்?: அறிஞர் அ.ந.கந்தசாமியின் பதினான்கு கட்டுரைகளின் தொகுப்பு! (அமேசன் - கிண்டில் பதிப்பு, 2021) - வெளியீடு: பதிவுகள்.காம்

அ.ந.கந்தசாமியின் மின்னூல்களுக்கான அ.ந.கந்தசாமியின் மின்னூல்கள்


தினகரன் பத்திரிகையில் தொடராக வெளியாகி, வாசகர்களின் பேராதரவைப்பெற்ற நாவல் மனக்கண். பின்னர் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் ஒலிபரப்பப்பட்டது.  தினகரனில் வெளியான அத்தியாயங்களிலொன்றினைக் கீழே காண்கின்றீர்கள். 'மனக்கண்' நூலுக்கான ஓவியங்களை வரைந்தவர் ஓவியர் மூர்த்தி. 

'மனக்கண்' நாவலின் மின்னூற் பதிப்பை வாங்க:  அ.ந.கந்தசாமியின் மின்னூல்கள்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.