உள்ளார்ந்த கலை , இலக்கிய ஆற்றல்களை கொண்டிருப்பவர்கள், தமது தாயகம் விட்டு, வேறு எந்தத் தேசங்களுக்கு புலம்பெயர்ந்து செல்ல நேரிட்டாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்தியே வருவார்கள். அதற்கு எமது புகலிட தமிழ் கலை, இலக்கிய உலகில் சிறந்த உதாரணமாகத் திகழ்பவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான யாழ். பாஸ்கர். இவர் இந்தத் துறைகளில் தடம் பதித்து, வளர்ந்து ஆஸ்திரேலியா நாட்டில் இதழ் ஆசிரியராகவும் மலர்ந்தவர். யாழ்ப்பாணம் கொட்டடியைச்சேர்ந்த இவர், தனது ஆரம்பக்கல்வியை கொட்டடி நமசிவாயா பாடசாலையிலும், நவாந்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்ப்பாடசாலையிலும் பயின்று, பின்னர் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியில் இணைந்தார்.

கல்வியை நிறைவுசெய்துகொண்டு, 1984 ஆம் ஆண்டிலேயே கடலைக் கடக்கத் தொடங்கியவர். இவர் ஒரு கிரேக்க கப்பலில் வேலைக்குச்சேர்ந்து சமுத்திரங்கள் பலவற்றை கடந்து பயணித்திருப்பவர். இவர் சென்று திரும்பிய தேசங்களின் பெயர்களே சற்று நீளமானது. கடலோடியாக அமெரிக்கா, மெக்சிக்கோ, ஆர்ஜன்டைனா, நைஜீரியா, போலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி என சுற்றியலைந்துவிட்டு, இறுதியில் 1988 ஆம் ஆண்டளவில் இந்தியாவை வந்தடைந்தவர்.இலங்கையில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்த அக்காலப்பகுதியில் தாயகம் திரும்பாமல், கடல் வாழ்க்கை இனிப்போதும் எனக்கருதியதனாலோ என்னவோ, ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு நிரந்தரமாக வந்து சேர்ந்தார்.

யாழ். பாஸ்கர், ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் ம. பாலசிங்கம் அவர்களின் மருமகனும், பிரான்ஸில் வதியும் எழுத்தாளர் கலா. மோகன், டென்மார்க்கில் வதியும் இலக்கியவாதியும் மொழிபெயர்ப்பாளரும் அரசியல் பிரமுகருமான டென்மார்க் தருமகுலசிங்கம் ஆகியோரின் நெருங்கிய உறவினருமாவார். 1989 நடுப்பகுதியில் எனது சமாந்தரங்கள் கதைத் தொகுதியின் வெளியீட்டுவிழா மெல்பனில் நடைபெற்ற காலப்பகுதியில், அதில் உரையாற்றுவதற்கு சிட்னியிலிருந்து வருகை தந்த எழுத்தாளர் எஸ். பொ. அவர்களினால், எனக்கு அறிமுகமானவர்தான் யாழ். பாஸ்கர்.

அன்று முதல் கலை இலக்கியவாதியாகவும் இதழாசிரியராகவும் தன்னை படிப்படியாக வளர்த்துக்கொண்டார். இயல்பிலேயே கலை ஆர்வம் மிக்கவர் என்பதை அக்காலப்பகுதியிலேயே இனம்காணமுடிந்தது. எனது நண்பர் இராஜரட்ணம் சிவநாதன் அங்கம் வகித்திருந்த மெல்பன் தமிழ்க்கலை மன்றம், அவ்வேளையில் மெல்பன் பார்க்வில் பல்கலைக்கழக உயர்தரக் கல்லூரியில் கலைமகள் விழாவை நடத்தியது.
அதற்கு குவின்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து இலங்கை வானொலியில் முன்னர் பணியாற்றிய கலைஞரும் பிரிஸ்பேர்ண் தமிழ் ஒலி வானொலி ஊடகவியலாளருமான சண்முகநாதன் வாசுதேவனின் தலைமையில் நாம் கவியரங்கும் நடத்தினோம்.

யாழ். பாஸ்கர் கலைஞனின் கண்ணீர் என்ற நாடகத்தின் பிரதியை வைத்திருந்தார். அது ஒரு வரலாற்று நாடகம். அதில் வரும் சிற்பியின் பாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்தார். அதன்பின்னர் பண்டார வன்னியன், மாவை நித்தியானந்தனின ஐயா லெச்சன் கேட்கிறார், எஸ். பொ.வின் வலை முதலான நாடகங்களிலும் முருகபூபதி, அருண். விஜயராணி, பாடும் மீன் சு. ஶ்ரீகந்தராசா, கண்ணன் ஆகியோரின் நாடகங்களிலும் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தார்.

மெல்பன் திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் அரங்கேறிய கடன்பட்டார் நெஞ்சம் என்ற கூத்திலும் இடம்பெற்றார். இவ்வாறு மெல்பனில் தமிழ் நாடகக் கலைக்கு உயிர்ப்பூட்டி வந்த யாழ். பாஸ்கருக்கு தாமும் ஒரு இலக்கிய சிற்றிதழை நடத்தவேண்டும் என்ற எண்ணம்1989 இலேயே மனதில் உதித்தது. எஸ்.பொ.விடமும் ஆலோசனை கேட்டார். அவரை பிரதம ஆலோசகராகவும் டென்மார்க்கிலிருந்து தர்மகுலசிங்கம், தமிழ்நாட்டிலிருந்து இளம்பிறை எம். ஏ. ரஹ்மான், ஆகியோரை துணை ஆசிரியர்களாகவும் இணைத்துக்கொண்டு அக்கினிக்குஞ்சு இதழை ஆரம்பித்தார்.

முதல் இதழ் 1991 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியானது. தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தில் இவ்விதழ் அச்சாகி வெளிவந்தது. மெல்பனில் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இவ்விதழின் வெளியீட்டு அரங்கு மொறாபீன் சமூக மண்டபத்தில், பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி காசிநாதர் தலைமையில் நடந்தது. இந்த அரங்கில் எஸ்.பொ. , முருகபூபதி, அருண். விஜயராணி, மாவை நித்தியானந்தன், விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மருத்துவர் இராஜன் இராசையா, சட்டத்தரணி செ. ரவீந்திரன் ஆகியோர் உரையாற்றினர். முதல் இதழ் மகாகவி பாரதியின் அட்டைப்படத்துடன் வெளியானது. தொடர்ந்தும் தமிழ்நாட்டிலிருந்தே அக்கினிக்குஞ்சு அச்சாகி வெளிநாடுகளுக்கு பறந்தது. எஸ்.பொ. இதில் கொண்டோடி சுப்பர், அபிமன்யூ முதலான புனைபெயர்களில் அரசியல், இலக்கிய தொடர்களும் எழுதினார். தரமான சிறுகதைகளும் வெளிவந்தன. யாழ். பாஸ்கர் மனம்விட்டுப் பேசுவோம் என்ற தலைப்பில் ஆசிரியத் தலையங்கங்களை வரவாக்கினார்.

தமிழ்நாட்டில் அச்சமயம் தினமணி பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் சென்னைக் கடிதம் என்ற தலைப்பில் தமிழக புதினங்களை தொடர்ந்து எழுதினார். கவிஞர் அம்பி, அக்காலப்பகுதியில் பாப்புவா நியுகினியிலிருந்தார். அவரது இரண்டு உலகம் என்ற கவிதைத் தொடருக்கும் அக்கினிக்குஞ்சு களம் வழங்கியது. ஈழத்தின் மூத்த எழுத்தாளர்கள் மு. தளையசிங்கம், வ. அ. இராசரத்தினம் , கே.வி. நடராஜன், இலங்கையர்கோன், மாத்தளை சோமு, முருகபூபதி , யாழ்ப்பாணம் நெல்லியடியில் நிகழ்ந்த எறிகணை வீச்சில் குடும்பத்துடன் பலியாகிப்போன எழுத்தாளர் நெல்லை க. பேரன், சீன இலக்கிய மேதை லூசூன் உட்பட சிலரது சிறுகதைகளும் தமிழக கவிஞர் எஸ். வைத்தீஸ்வரனின் கவிதைகளும் அக்கினிக்குஞ்சு இதழில் இடம்பெற்றன. பத்தி எழுத்துக்கள் பலவும் இதில் வெளியாகின. அச்சமயம் லண்டனிலிருந்து பேராசிரியர் சிவசேகரம் எழுதிய எதிர்வினைகளும் பதிவாகின.

முதலில் தமிழ்நாட்டிலிருந்தும், பின்னர் ஆஸ்திரேலியாவிலிருந்தும், இவ்விதழை யாழ். பாஸ்கர் தொடர்ந்து வெளியிட்டாலும், வழக்கம்போன்று சிற்றிதழ்களுக்கு நேரும் நெருக்கடியை இவரும் சந்தித்தார். அதனால் சிறிது காலம் அதன் வருகை தடைப்பட்டது. எனினும், எவ்வாறாயினும் மீண்டும் அக்கினிக்குஞ்சுவை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் இவரது மனதில் அக்கினிக்குஞ்சாகவே கனன்றுகொண்டுதானிருந்தது. கணினியின் தீவிர பாய்ச்சலையடுத்து, அக்கினிக்குஞ்சை பத்தாண்டுகளுக்கு முன்பே இணைய இதழாக்கினார்.

கலை, இலக்கியம், சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், அரசியல், சினிமா, ஆன்மீகம், வரலாறு உட்பட பல துறைகள் சார்ந்த ஆக்கங்களுக்கும் இவ்விணைய இதழில் களம் வழங்கி வருகிறார். அவுஸ்திரேலியா, இலங்கை, இந்தியா , கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளைச்சேர்ந்த ஆக்க இலக்கியவாதிகளுக்கு சிறந்த களம் வழங்கி வரும் யாழ். பாஸ்கரின் அயராத உழைப்பு விதந்து போற்றுதலுக்குரியது. சிறுகதைகள், தொடர்கதைகள், கவிதைகள், தொடர் கட்டுரைகள் என்பனவற்றுக்கு யாழ். பாஸ்கரின் அக்கினிக்குஞ்சு சிறந்த களம் வழங்கி வருகின்றது.

இலங்கை உட்பட புகலிட படைப்பாளிகள் பங்கேற்ற மெகா தொடரான விழுதல் என்பது எழுகையே அக்கினிக்குஞ்சு இணைய இதழிலும் வெளியானது. இந்தியா, இலங்கை, ஐரோப்பா ( ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி ) கனடா, அமெரிக்கா, லண்டன் ஆகிய நாடுகளில் வசிக்கும் படைப்பாளிகளை ஒருங்கிணைத்து தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின்  கந்தையா முருகதாசன் ஊடகவியலாளர் பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தியும் மேற்கொண்ட கடின உழைப்பின் மூலம் இத்தொடர் வெளியாகி தற்போது நூலுருவாகியுள்ளது.

அக்கினிக்குஞ்சு வருடாந்த விழாக்களையும் நடத்தி வாழ்நாள் சாதனையாளர்களையும் பாராட்டி விருது வழங்கி கௌரவித்து வந்துள்ளது. இதற்காகவெல்லாம் யாழ். பாஸ்கர் செலவிட்ட நேரம் மிகவும் பெறுமதியானது. இலங்கையில் தன்னை அர்ப்பணித்து மல்லிகை கலை, இலக்கிய இதழை 45 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிட்டு சாதனை புரிந்து மல்லிகை ஜீவா என்ற பெயரை நிரந்தர அடையாளமாக்கி, இந்த 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எம்மை விட்டுப்பிரிந்திருப்பவர் டொமினிக் ஜீவா.

அவரது நினைவாக இம்மாதம் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் Berwick மூத்த பிரஜைகள் மண்டபத்தில் ( Berwick senior citizens hall - 112 High Street, Berwick VIC 3806) நடைபெறும் மல்லிகை ஜீவா நினைவரங்கத்தில் யாழ். பாஸ்கர் அவர்களுடைய அளப்பரிய கலை, இலக்கிய சேவையை பாராட்டி கௌரவிக்கின்றோம். வாழும்போது வாழ்த்தும் மரபை பின்பற்றி, இந்த தொடர் கலை, இலக்கிய ஊழியனுக்குரிய பாராட்டை விருது வழங்கி கொண்டாடுகின்றோம்.

- * காலைக்கதிர் 17-12- 2021 பதிப்பில் வெளியான கட்டுரை. பதிவுகளுக்கு அனுப்பியவர்: எழுத்தாளர் முருகபூபதி. -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.