டால்ஸ்டாய் இறைவன் போலவே, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். உடல்
உருக்குலைந்து, கசங்கி, சிறுத்துப்போய் இருந்தாலும் களைப்பினால் அல்லது சலிப்பினால் எழுந்ததாய் இருக்க வேண்டும்-உதடுகளைக் குழந்தைகள் போல் பிதுக்கி, குவித்துச் சீழ்கை அடிக்க முயன்று கொண்டிருந்தார்-எங்கோ ஒளிந்திருந்த ஒரு சிறு பறவையைத் தன் கூர்மையான கண்களால் தேடியப்படி. பற்றைகளும் அடர்ந்த தழைகளுமாய் இருந்த ஓரிடத்தில் இருந்து அந்த குருவி மறைந்தவாறே பாடியபடி இருந்தது. “உயிரை வாட்டி எடுக்கிறது. முழு உயிரையும் கொடுத்துப் பாடுகிறது… ஆனால் ஒரே ஒரு ராகம்… என்ன குருவி…”.
சிவந்த மார்பை உடைய இவ்வகை குருவிகளை நான் அறிவேன். சின்னஞ்சிறியவை. சொல்லத் தொடங்கினேன் - முக்கியமாக இக்குருவிகளில் இருக்கும் பொறாமை குணத்தைப் பற்றிச் சொல்ல முற்பட்டேன்.
“அப்படியா. பொறாமையா?-வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு ராகம். இதற்குள் பொறாமை வேறு! மனிதனுக்கோ, அவனது இதயத்தில் ஆயிரம் ராகங்கள் உண்டு. அவனது ஆத்மாவில் இருந்து. இருந்தும் அவன் பொறாமை கொள்வதற்காகச் சபிக்கப்படுகின்றான்… எப்படி?”
“ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் தருணங்களில், அவ் ஆண்மகன் தான் சொல்ல நினைக்காத உண்மைகளைக்கூட அவளிடம் மனம் திறந்து ஒப்புவிக்கின்றான். அதன் பின்னர், அவன் அது குறித்தெல்லாம் முற்றிலுமாய் மறந்து போயிருப்பான். ஆனால், அவள்? அவள் அதையெல்லாம் நினைவில் வைத்திருப்பாள். ஏன்? தன்னைத் தாழ்த்திக் கொள்ளவேண்டி வருமோ என்ற அச்சம்தான் காரணம். பொறாமை இங்குதான் உருவாகின்றது. எங்கே தன்னைக் கீழ்மைப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்து பிறக்கின்றது. எனவேதான் உன் ஆன்மாவை இறுகப் பற்றுபவளே அபாயகரமானவள் - உனது ----- அல்ல”.
“ஆனால் உங்களது KREUTZER SONATA வேறு விதமாய் ஒலித்திருக்கின்றதே….”.
சாந்தமாயிருக்க, அடர்ந்த தாடியின் அடியில் இருந்து வெளிப்பட்டுவரும் ஓர் கள்ளப் புன்னகை நெளிய கூறினார்: “நான் குருவி அல்ல”.
2
பொறாமையைப் பற்றித் தமிழ் இலக்கியம் பல்வேறு கருத்தாக்கங்களை முன்வைத்திருக்கின்றது. திருக்குறளின் அழுக்காறு அதிகாரம் தொடக்கம், பல்வேறு பண்டை இலக்கியங்கள் வரை இதன் தீமைகள் குறித்துப் பேசுவதாக உள்ளன.
மகாபாரதம், இராமாயணத்தில் கூட இவ் அம்சங்கள் தொடப்படவே செய்கின்றன. இவற்றைக் கொண்டவளாய்த்தான் பெண் நிறுத்தப்படுகின்றாள். மொத்தத்தில் இது ஓர் தீய பழக்கமாகக் காட்டப்படுதல் இயற்கையானதும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாகவும் இருக்கின்றது. ஆனால், கார்க்கி காலத்து ரஷ்ய இலக்கியங்கள் இதனையே வேறு விதமாய் அணுகப் பார்த்தன.
கார்க்கியின் சிறுகதையான ‘முதல் காதலில்’ பின்வரும் பொருள்பட வரிகள் வருகின்றன: “பொறாமைப்படும் வயதுக்கு இன்னும் நான் வந்து சேர்ந்திருக்கவில்லை… இள ரத்தம் என்னுள் சீறிப் பாய்ந்துக் கொண்டிருந்தது. ஊற்றைப்போல் வாழ்வு என்னுள் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது”.
“ஆனால், குறிப்பிட்ட ஓர் கணத்தில், ஓர் காதலன் தன் காதலியிடம் தன்னைத் திறந்து போடவே செய்கிறான். தான் எதிர்நோக்கும் சவால்கள், தன் அக உலகு, தனது ஆன்மா - இவற்றை அவளிடம் அவன் திறந்து காட்டவே செய்கின்றான் - ஏதோ பாவ மன்னிப்பை அவளிடம் இருந்து கோருவது போல. ஒருவேளை அவள், அத்தகைய தருணங்களில் அவனுக்கு அவள் ஓர் கடவுளாகக் காட்சியளிக்கக் கூடும். ஆனால் வேறு ஒரு ஆடவனிடத்திலும் இது நிகழலாம். அவள் அப்போது கதைக்கக் கூடும். இவை எல்லாமே ஓர் திட்டமிட்ட சதி எனக் கூறுதல் ஆகாது. ஓர் குறிப்பிட்ட அன்னியோன்யத்தின் போது அவள் என்னைப் பற்றியும் என் சிந்தனை உலகைப் பற்றியும் என் ஆன்மாவைப் பற்றியும் பிறன் ஒருவனிடத்தில் கூறவும் கூடும். பொறாமை உணர்வானது இங்கிருந்தே பீறிடுகின்றதோ என்பதை அறியேன். ஆனால், என் உலகு இப்படியாய்க் காட்டிக் கொடுக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் என்னைப் பீடிக்கவே செய்கின்றது”.
டால்ஸ்டாய் பற்றிய கார்க்கியின் பதிவுகள் 1901-1902 காலப்பகுதியில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், கார்க்கியின் ‘முதல் காதல்’ 1923லேயே வெளியிடப்படுகின்றது. வேறு வார்த்தையில் கூறினால், மனித உறவுகளை மேலும் ஆழமாய்ப் பார்க்க டால்ஸ்டாயும், காலமும் கார்க்கிக்கு உதவியிருக்கலாம்.
இருப்பினும் இருவரது பார்வைகளும் வித்தியாசம் கொண்டவையாக இங்கு தென்பட செய்கின்றது. ஒருவர் பொறாமையில் பீடிக்கப்படும் பெண் குறித்தும் மற்றவர் பொறாமையில் பீடிக்கப்படும் ஆண் குறித்தும் பேசத் துணிகின்றனர்.
பெண்களை அனுதாபத்தோடு அணுகுவது கார்க்கியின் பண்புகளில் ஒன்றாகின்றது. இருந்தும் டால்ஸ்டாய்–கார்க்கியின் சம்பாசனையானது, விடயங்களைச் செழுமையாக்குகின்றது என்பதில் சந்தேகமில்லை.
3
மாலையில் நடந்து செல்லும்போது திடீரெனக் கூறினார்: “ஒரு மனிதன் பூகம்பத்தினால் - அல்லது கொடிய நோயினால் பாதிப்புறலாம். ஒருவேளை இது அவனது உள்ளார்ந்த ஆத்மாவையும் பாதித்து வேதனை தருவதாகவும் இருக்கலாம். ஆனால், மிக கொடுமையான வேதனையைத் தரக்கூடியது யாதெனில், படுக்கையறை ஒன்றேயாகும். அன்றும், இன்றும், என்றும் இது இப்படியேத்தான் இருக்கின்றது”. இதனைக் கூறும் போது, மாசுமருவற்ற அமைதி அந்த முகத்தில் ஜொலிக்க, ஏதோ மிக கடினமான சுமையை இறக்கி வைத்துவிட்ட ஆசுவாசம் அவரில் பொங்கியதைக் காணக்கூடியதாக இருந்தது. எந்தக் கருத்துமே, அவரது ஆன்மாவை அப்படியே பற்றிப் பிடித்துக் கொள்கின்றது. சிலவற்றை அவர் உடனேயே பிடுங்கியெறிந்து விடுவதும், வேறு சிலவற்றை, ரத்தத்தை வேண்டுமட்டும் குடித்து முடித்த பின்னர், திருப்தியுடன் தன்னாலேயே சுருண்டு கீழே விழும் அட்டையைப் போலவும் இருக்கின்றது.
இன்னும் ஒரு சமயம் ஸ்டொய்சிசம் (விருப்பு வெறுப்பு அற்ற பார்வையை உள்ளடக்கும் சிந்தனை) பொறுத்து ஆழமான ஓர் சம்பாசனையில் நாம் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அவர் முகம் சுழித்து கடுமையுடன் கூறினார்: “பஞ்சு வைத்து தைக்கப்படவில்லை. வெறுமனே தைக்கப்பட்டதாகும்”
இவ்வார்த்தைகளுக்கும் ஸ்டொய்சிசத்திற்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போல் இருந்தது.
எனது முகத்தில் ஓடிய அதிர்ச்சி ரேகைகளைக் கணத்தில் அவதானித்த அவர் உடனடியாக, அவசர அவசரமாகக் கூறினார், அடுத்த அறைக்கு இட்டுச்செல்லும் நடைபாதையைத் தன் கண்களால் சுட்டிக் காட்டியபடி: “அவர்கள் - தைக்கப்பட்ட ஓர் படுக்கை விரிப்பு பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்”. “அந்த ரேனான் (RENAN) ஒரு மிட்டாய்க் கலைஞன்தான். வெறும் தொண தொணப்பு. ஆனால் நீ நன்றாகவே எழுதுகின்றாய் - உனது சொந்த வார்த்தைகளைப் பாவித்து-நூல்களில் இருந்து நீ பொறுக்கியெடுப்பது குறைவாகவே இருக்கின்றது. ஆழ்ந்த நம்பிக்கையோடுதான் நீ வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதாயும் இருக்கின்றது...”.
ஆனால், உடனடியாகவே தனக்குத்தான் கூறிக் கொள்வதுபோல கூறினார்: “சமயங்களில் ஒரு நல்ல ரஷ்ய வார்த்தையை நீ உபயோகிக்கவே செய்கின்றாய். ஆனால் கூடவே, ‘absolutely’ போன்ற ஓர் ஒவ்வாத வார்த்தையையும் இணைத்து அதே வசனத்தில் சேர்த்து விடுகின்றாய்…”. சில சமயங்களில் அவர் என்னைக் கண்டிக்கவும் செய்தார்: “வெவ்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் வார்த்தைகளை இடம் மாற்றிப் போட்டு விடாதே-ஒருபோதும் இதை செய்யாதே…”
வார்த்தைகளின் கனதியை ஆழ உணரும் அவரது கொடிய பார்வை சில சமயங்களில் வெறும் மன வியாதி சம்பந்தமானதோ என்று என்னை சந்தேகப்படக்கூட வைக்கும். ஒருமுறை கூறினார்: “ ‘Botch’ என்பதும் ‘Bitch’ என்பதும் ஒரே நூலில் ஒரே வசனத்தில் வருவதைக் கண்டு வருத்தப்பட்டேன். என்னால் தூங்க முடியவில்லை. அந்தளவிற்கு அது அருவருப்பு தருவதாய் இருந்தது. மனநிலையைப் பாதித்துவிட்டது. கிட்டத்தட்ட நோயில் விழுந்து விட்டேன்”.
“மொழிவல்லுனர்களை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது இருக்கின்றது. கிட்டத்தட்ட, புழுதியைப் போல் காய்ந்து இருக்கின்றார்கள். ஆனால், அவர்களின் முன்னால்தான் அளப்பரிய தேவைப்பாடும் கொட்டிக் கிடக்கிறது. எங்களது வினைச்சொற்கள் எங்கள் மொழியை எப்படி வந்து அடைந்தன - எப்படி தோற்றம் பெற்றன – என்பதை எல்லாம்-அறியாதோராகத்தானே நாம் இருக்கின்றோம்…”
டஸ்டாவஸ்கியின் மொழி ஆளுமை குறித்து அவர் பேசுவார்:
“அருவருப்பூட்டக்கூடிய விதத்தில்தான் அவர் எழுத துணிந்தார். இத்தகைய நடையை அவர் வேண்டுமென்றே கைக்கொண்டார் எனலாம். ஆமாம். வேண்டுமென்றேதான். அவரது சொந்த மனப்போக்கில். படாடோபம் அல்லது மற்றவரிலிருந்து தன்னை உயர்த்திக் காட்டும் ஒரு எண்ணப்பாடு என்பது அவரது பாணியின் அடிநாதமாகின்றது. உதாரணமாக, ‘IDIOT’ டை எடுத்துக்கொள்: ‘வெற்று பேச்சு’ (SWANK), ‘பளபளப்பான நட்புரிமை’ இப்படியாக முரண்பட்டு ஒலிக்ககூடிய சொற்கள் ஒன்றாய்க் குவிக்கப்பட்டு இருக்கும். போதாதற்கு நாட்டு மொழியையும் (Colloquial) அந்நியமொழி கலவைகளையும் ஒன்றுகலக்கி எழுதுவதில் மட்டற்ற மகிழ்ச்சி உடைய மனிதராக திகழ்ந்தார். ஆனால், மன்னிக்க முடியாத தவறுகள் என்பன அவரது எழுத்தில் அவ்வப்போது காணப்படவே செய்தன. அவரது, ‘IDIOT’ கூறுவான்: ‘கழுதையானது பெறுமதிமிக்க உபயோககரமான மனிதன்தான்’ என. ஆனால், இதைக் கேட்ட ஒருவரும் சிரித்தபாடில்லை. ஆனால், இவ்வார்த்தைகள் பொதுவில் சிரிப்பலைகளை உண்டுபண்ண வேண்டும். குறைந்தபட்சம் இப்போக்குக் குறித்த ஒரு சிறு குறிப்பையாவது இங்கு எழுப்பபட்டிருக்க வேண்டும். தன் மூன்று சகோதரிகளின் முன்னிலையிலேயே அவன், இதனைக் கூறுவதாக உள்ளது-அந்த மூன்று சகோதரிகளுமே அவனைக் கேலி செய்வதில் விருப்பம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள் - முக்கியமாக அகல்யா. இந்நூலானது, மோசமானது என்பதை விட, மியாஸ்கின் ஒரு மனப் பிறழ்வு கொண்ட மனிதன் என்பதனைக் கருத்தில் கொள்வது போதுமானது. இதற்கு மாறாக ஒரு ஆரோக்கியமான ஆளாக மியாஸ்கின் படைக்கப்பட்டிருப்பானேயானால், அவனது இதயத்தின் நல்லியல்பானது, எம்மை தொட்டுவிடக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால், டஸ்டாவஸ்கிக்கு ஆரோக்கியமான மனிதர்களைப் படைத்துக்காட்டும் வல்லமை கிடையாது. அவருக்கு ஆரோக்கியமான மனிதர்கள் என்பது ஆகவே ஆகாத விடயமாகின்றது. அவரே ஓர் நோயாளிதான். இது, அவரை மேலும் உறுதிப்படுத்துவதாய் இருக்கின்றது. ஏன், இவ் உலகமே அவரை பொறுத்தமட்டில் நோயுற்று, பிணி பிடித்ததாய்த்தான் உள்ளது…”
அவர் எனக்கும் Sullerருக்கும் Father Sergiusஇன் வீழ்ச்சிக்குக் காரணமாய் இருந்த பகுதியை வாசித்துக் காட்டினார். ஒரு ஈவிரக்கமற்ற காட்சிதான் அது. Suller மனக்கிளர்ச்சி பொறுக்காது நெளிந்தார்.
“என்ன விஷயம் - உனக்குப் பிடிக்கவில்லையோ…”
“மிகக் கொடுமையாக - ஈவிரக்கமற்றதாய் இருக்கின்றது - டஸ்டாவஸ்கி போல”
“அந்த அபலைப் பெண்…. - தட்டையான அவளது மார்பு… …. ஏன் Father Sergius ஓர் ஆரோக்கியமான அழகான பெண்ணிடம் மையலுற்று, அப்பாவத்தைப் புரிந்திருக்கலாமே…”
“உண்மைதான். ஆனால் அத்தகைய பாவமானது எந்த ஒரு நியாயப்பாட்டையும் உள்ளடக்கிக் கொள்ளப் போவதில்லை. ஆனால், இந்தப் பெண்ணுக்காய் இப்படி Father Sergius கொள்ளக்கூடிய பரிதாபம் அல்லது பட்சாதாப உணர்வானது முக்கியமானது. யாரையும் கவராத ஓர் அபலைப் பெண்ணாய் இருக்கின்றாள் அவள்…”
“விளங்கவில்லை”
“முக்கியமான விடயங்கள் உனக்கு எப்போதுமே விளங்காத விடயங்களாகவே இருக்கின்றன லியோஸ்கா”. “அதைப் புரிந்து கொள்வதற்கான நெளிவு சுளிவு உன்னிடம் இருப்பதாகவும் இல்லை…”.
“அன்ட்ரியின் மனைவி இடையே புகுந்துவிட, இந்த சம்பாசனை அத்துடன் முடிவடைந்தது”.
Suller அவளுடன் வெளியே கிளம்பி செல்லும்போது, அன்போடு அவதானித்தபின் மெதுவாக என்னிடம் கூறினார் டால்ஸ்டாய்: “லியோஸ்கா போன்ற தூய்மைமிக்க மனிதனை நாம் காண்பது அரிது. அவன் பிழை செய்தாலும் கூட அது, அவன் பிறர் மீது கொண்ட பரிதாப உணர்வினால் அல்லது பச்சதாப உணர்வினால் உருவான ஒன்றாகவே இருக்கும்…”.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.