கண்டியிலிருந்து கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை என்னைத்தொடர்புகொண்ட எழுத்தாளர் நொயல் நடேசன், எங்கள் இலக்கிய நண்பர் பேராசிரியர் செ. யோகராசா மறைந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார். உடனே கொழும்பிலிருக்கும் பேராசிரியை சித்திரலேகா மௌனகுருவை தொடர்புகொண்டு அந்தச்செய்தியை ஆழ்ந்த கவலையுடன் உறுதிப்படுத்தினேன். இரண்டு நாட்களுக்கு முன்னர், மகரகமக மருத்துவமனைக்குச்சென்று அவரைப் பார்த்ததாகவும், கவலைக்கிடமான நிலையில் அவர் இருந்ததாகவும் சித்திரலேகா சொன்னார்.

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலக்கியப் பயணத்தில் இணைந்து வந்திருக்கும் எமது அருமை நண்பர் செ. யோகராசாவின் அருமைத் துணைவியார் விஜயதிலகிக்கும் ஏகபுதல்வி சுவஸ்திகாவுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் துயரத்திலும் பங்கெடுத்து இந்த அஞ்சலிக்குறிப்பினை எழுதுகின்றேன்.

இலங்கையில் வடமராட்சி பிரதேசம் பல இலக்கிய ஆளுமைகளையும் கல்விமான்களையும் பெற்றெடுத்த மண். 1949 ஆம் ஆண்டு, கரணவாய் கிராமத்தில் செல்லையா – இலட்சுமி தம்பதியரின் செல்வப்புதல்வனாக பிறந்திருக்கும் யோகராசா, தனது ஆரம்பக்கல்வியை கரணவாய் வித்தியாலயத்திலும் உயர்தரக்கல்வியை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்தவர்.

பாடசாலைப் பருவத்திலேயே கவிதைகள் எழுதத்தொடங்கியிருக்கும் யோகராசா முதலில் கருணையோகன் என்ற புனைபெயரிலேயே இலக்கியப்பிரதிகள் எழுதினார். தமிழில் கலைமாணி பட்டத்தினையும் அதனையடுத்து இளந் தத்துவமாணி பட்டத்தினையும் பெற்றுக்கொண்டு தபால் நிலையத்தில் தனது தொழில் வாழ்வைத் தொடங்கினார். இவரைப்போன்று எனக்குத்தெரிந்த சில இலக்கியவாதிகள் அக்காலப்பகுதியில் தபால் நிலையங்களில் பணியாற்றி வந்தனர். (அமரர்) நாகேசு தருமலிங்கம், அ.யேசுராசா, ரத்னசபாபதி அய்யர் முதலானோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். அவர்கள் இறுதிவரையில் தபால் நிலையங்களில்தான் பணியாற்றினர்.

கருணை யோகன் என்ற பெயரிலேயே யோகராசா முதலில் எனக்கு 1972 ஆம் ஆண்டளவில் அறிமுகமானார். அக்காலப்பகுதியில் நானும் இலக்கியப்பிரவேசம் செய்திருந்தமையால், இவரது எழுத்துக்களை மல்லிகையில் படித்துவிட்டு கொழும்பு சென்று அறிமுகமாகி நண்பனானேன். அக்காலப்பகுதியில் அவர் கொழும்பு -07 இல் நகரமண்டபத்திற்கு அருகிலிருந்த கறுவாக்காடு ( Cinnamon Gardens ) தபால் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அன்றுமுதல் எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான இலக்கிய நண்பராக விளங்கியவர்.

தபாலகத்தில் பணியாற்றிய கருணை யோகன், தனது திசையை பின்னர் மாற்றிக்கொண்டார். கொழும்பிலும் அதன்பின்னர் மாஹோவிலும் தபால் நிலையங்களில் பணியாற்றிவிட்டு, பட்டதாரி ஆசிரியராக மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் புதிய பணியேற்றார். எந்தத்தொழிலில் இருந்தாலும் தேடலுக்கும் ஆய்வுக்குமாக தனது காலத்தை தீவிர இலக்கியம் நோக்கித் திருப்பியிருந்ததுடன், கல்வி தொடர்பாகவும் மேலதிக தகைமைகளை வளர்த்துக்கொள்வதில் பேரார்வம் காண்பித்தார்.

நான் 1987 இல் அவுஸ்திரேலியா வந்தபின்னரும் என்னுடன் கடிதத் தொடர்பிலிருந்தவர். எனது கடிதங்கள் நூலிலும் அவரது கடிதம் இடம்பெற்றுள்ளது.

ஒருதடவை வாகனவிபத்தொன்றில் அவரது அன்புத்துணைவியும் அருமைக்குழந்தையும் காயமடைகின்றனர். துணைவி கொழும்பு பெரியாஸ்பத்திரியிலும் குழந்தை மட்டக்களப்பு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்படுகின்றனர். இருவரும் தெய்வாதீனமாக உயிர்தப்புகின்றனர். எனினும் மேலதிக சிகிச்சைகளுக்காக மேற்கிலும் கிழக்கிலும் அனுமதிக்கப்படுகின்றனர். குடும்பத்தலைவனான யோகராசா, ஊண் உறக்கமின்றி பஸ்ஸிலும் ரயிலிலும் பயணித்து இருவரையும் பராமரிக்கிறார். தனது பல்கலைக்கழக விரிவுரைப் பணிகளையும் கவனிக்கிறார். எழுதுகிறார். வாசிக்கிறார். விரிவுரைக்குத் தேவையான குறிப்புகளை பதிவுசெய்கிறார்.

அவருக்கு அவரது குடும்பம் மாத்திரமல்ல, அவரது மாணவர்களும் முக்கியமானவர்கள். இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில் நிதானமாகப்பேசுகிறார். பதட்டமின்றி இயங்குகிறார். அந்த நிதானம் இயல்பிலேயே அவருக்குரிய குணாம்சம்! அதிர்ந்து பேசத்தெரியாத பண்புகளே அவரது பலம். எளிமையே அவரது வலிமை!

ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமன்றி புகலிட இலக்கிய உலகிலும் மிகுந்த கவனிப்புக்குள்ளான திறனாய்வாளர். அவரால் எழுதாமலும் வாசிக்காமலும் இருக்கவே முடியாது. அவருக்காக அல்ல, மற்றவர்களுக்காக எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டுமிருப்பவர். மாணவர்களுக்காகவும் இலக்கிய உலகிற்காகவும் தன்னை அவ்விதம் வடிவமைத்துக்கொண்டவர். கொவிட் பெருந்தொற்றுக்காலத்திலும் பல மெய்நிகர் அரங்குகளில் தோன்றி உரையாற்றியவர்.

26-12-1994 ஆம் திகதி அவர் எனக்கு எழுதிய கடிதம் இன்றும் எனதுவசம் பத்திரமாக இருக்கிறது. ” வேலைப்பளு, இலக்கியப்பளு, குடும்பப்பளு என இங்கு எமக்கே நேரமில்லாதபோது ‘ புலம்பெயர்ந்து’ வாழ்வோருக்கு அந்த கம்பியூட்டர் உலக வாழ்வில் எங்கே நேரம்வரும்..? என்ற கேள்வியுடன் இலங்கை இலக்கியப்புதினங்களையும் எழுதியிருந்தார்.

முக்கியமாக மட்டக்களப்பின் மூத்த எழுத்தாளர் பித்தன் கே. ஷா அவர்களின் மரணச்செய்தியையும், அவரது நூலொன்றை இரண்டு தமிழ்ப்பேசும் அரசியல்வாதிகள் ( அமைச்சர்களாகவும் இருந்தவர்கள்) வெளியிட்டுத்தருவதாக பொய்வாக்குறுதி வழங்கி ஏமாற்றிய தகவலையும், இறுதியில், மல்லிகைப் பந்தல் வெளியீடாகவே அந்தநூல் வெளியான செய்தியையும், அதனைக்கூடப்பார்க்காமல் அந்த எழுத்தாளர் மறைந்துவிட்ட துயரத்தையும் பகிர்ந்திருந்தார். மட்டக்களப்பு வாசகர்வட்டம், அன்னாருக்காக நினைவஞ்சலிக்கூட்டம் நடத்திய செய்தியும் அந்தக்கடிதத்தில் இடம்பெற்றிருந்தது. எனக்கு அவர் எழுதும் கடிதங்களில் மட்டக்களப்பு புதினங்கள் இருக்கும்.

வடமராட்சியில் பிறந்து வளர்ந்து, கிழக்கிலங்கையில் காலூன்றியிருந்த இந்த இனிய இலக்கிய நண்பர், ஈழத்தின் அனைத்துப்பிரதேச தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களிடம் மட்டுமன்றி சிங்கள எழுத்தாளர்களிடமும் நன்மதிப்பு பெற்றவர். ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்தபின்னர் தோன்றிய புலம்பெயர் இலக்கியம் – புகலிட இலக்கியம் தொடர்பாகவும் திறனாய்வு செய்திருப்பவர்.

நான் இலங்கையிலில்லாத காலப்பகுதியில் எங்கள் நீர்கொழும்பூரில் நடந்த இலக்கியக்கருத்தரங்கில் தனது உரையின் தொடக்கத்தில் என்னை நினைவுபடுத்தியே பேசியிருக்கிறார். இவ்வாறு என்னுடன் அந்நியோன்னியமாக உறவாடியிருக்கும் அவருடைய குடும்பத்தில் 2005 ஆம் ஆண்டு நிகழ்ந்த அந்த கோரமான விபத்துச் சம்பவம் பற்றி அறிந்ததும் ஆறுதல் தெரிவித்து கடிதங்கள் எழுதியிருக்கின்றேன். இலங்கை சென்றவேளையில் கொழும்பு மருத்துவமனையில் அவரது அன்புத்துணைவியாரையும் பார்த்தேன். மினுவாங்கொடைக்கு அருகாமையில் உடுகம்பொலை கிராமத்தில் கொரஸ என்னும் இடத்தில் ஶ்ரீசுதர்மானந்த விஹாரையின் பிரதம குரு, தமிழ் அபிமானி வண. பண்டிதர் ரத்னவன்ஸ தேரோ அவர்கள் நோயுற்றிருப்பதாக அறிந்து அவரையும் பார்க்கச்சென்றபோது யோகராசாவும் உடன்வந்தார்.
மட்டக்களப்பிலிருந்து தன்னைப்பார்க்க ஒரு விரிவுரையாளர் வந்திருப்பதை அறிந்து அந்த பௌத்த துறவி நெகிழ்ந்துவிட்டார். அவரால் யோகராசாவையோ என்னையோ பார்க்கமுடியவில்லை. அவரது கண்பார்வை முற்றாக செயல் இழந்திருந்தது. அந்த நிலையிலும் அந்தத்துறவி எம்மை கிராமவாசிகள் மூலம் உபசரித்தார். இவ்வாறு எனது பயணங்களிலும் இணைந்திருந்தவர்தான் நண்பர் யோகராசா.

நாம் அவுஸ்திரேலியாவில் 1988 இல் ஆரம்பித்து இன்றுவரையில் தொடர்ந்து இயங்க வைத்துக்கொண்டிருக்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் மட்டக்களப்பு பிராந்திய மாணவர் கண்காணிப்பாளராகவும் யோகராசா சமூகத்தொண்டுணர்வோடு இணைந்திருந்தார்.

கிழக்கிலங்கையை 2004 இறுதியில் சுநாமி கடற்கோள் அநர்த்தம் கோரமாக பாதித்திருந்த வேளையில் மட்டக்களப்பு, செங்கலடி, கல்முனை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு முதலான பிரதேசங்களுக்கெல்லாம் சென்றிருந்தேன். கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ரவீந்திரநாத் துணைவேந்தராக அச்சமயம் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் முன்னிலையில் சுநாமியால் பாதிக்கப்பட்ட இருபத்தியைந்து மாணவ மாணவியரை எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் பொறுப்பெற்று தொடர்ச்சியாக நிதியுதவி வழங்கியது. இச்சந்தர்ப்பங்களிலும் நண்பர் யோகராசா எமக்கு தக்க ஆலோசனைகளை வழங்கினார்.

இறுதியாக 2017 ஆம் ஆண்டும் 2019 ஆம் ஆண்டும் கிழக்கிலங்கைக்கு பயணித்தவேளையிலும் யோகராசா எம்முடன் மட்டக்களப்பு, கன்னன் குடா, கல்முனை, பெரியநீலாவணை முதலான பிரதேசங்களுக்கும் வந்தார். எம்மை தனது காரில் இங்கெல்லாம் அழைத்துச்சென்றவர்தான் எனது இலக்கிய நண்பர் செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன்.

இறுதியாக கடந்த ஜூலை மாதம் இலங்கை சென்றவேளையில் அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் போய்விட்டது. நான் கிழக்கிற்கு சென்றபோது, அவர் யாழ்ப்பாணத்தில் நின்றார்.

2005 – 2009 காலப்பகுதியில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெற்ற கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் பேராசிரியர் யோகராசாவை பெரிதும் மதித்துப்போற்றியதையும் அவதானித்திருக்கின்றேன். நாம் 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொழும்பில் நான்கு நாட்கள் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும் கலந்துகொண்டு கருத்தரங்கில் கட்டுரை சமர்ப்பித்திருக்கும் யோகராசா, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலரையும் தன்னுடன் அந்த மாநாட்டிற்கு அழைத்து வந்திருந்தார்.

மாணவர்களும் இலக்கியத்தின்பால் திரும்பவேண்டும் என்பதிலும் அக்கறைகொண்டிருந்தவர். இலக்கியமும் கல்வியும்தான் அவரது கண்கள். அதனால் இலக்கியவாதிகளும் மாணவரும் பெற்ற நன்மைகள் ஏராளம்.

உடுப்பிட்டி கல்வி வலயத்தின் சிறந்த ஆசிரியருக்கான விருது, கலாநிதி பட்ட ஆய்விற்காக பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஞாபகார்த்த விருது, இலங்கை இலக்கியப்பேரவையின் விருது, தேசிய சாகித்திய விருது, வடமாகாண சபை விருது, கலைவாருதி விருது உட்பட பல விருதுகளையும் பெற்றிருக்கும் நண்பர் யோகராசா, தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் முதலான நாடுகளிலும் பல இலக்கியக் கருத்தரங்குகளில் பங்குபற்றியிருப்பவர்.

எழுத்துலகில் தொடக்கத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் படைத்துக்கொண்டிருந்தவர், பின்னர் விமர்சகராகவும் திறனாய்வாளராகவுமே பரவலாக அறியப்பட்டார். அவரது அகதிகள் என்னும் சிறுகதை சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்வையும் பணிகளையும் பாராட்டி மட்டக்களப்பில் பெருவிழா எடுத்தனர். அத்தருணம் வெளியிடப்பட்ட, கருணையோகம் சிறப்புமலரில் பல இலக்கிய ஆளுமைகளும் பேராசிரியர்களும் அவரது சிறப்பியல்புகளையும், இலக்கிய மற்றும் கல்விக்கான பங்களிப்புகள் குறித்தும் விரிவாக பதிவுசெய்துள்ளனர். அந்த மலர் ஆவணமாகவே திகழுகின்றது. பேராசிரியர் யோகராசா தொடர்ந்தும் ஆசிரிய கலாசாலைகளில் விரிவுரையாற்றிக்கொண்டும் இலக்கியத்திறனாய்வு செய்துகொண்டுமிருந்தவர்.

அவருடை நீண்ட பயணத்தில் நானும் ஒரு பார்வையாளனாக இணைந்திருந்தேன். இன்று அவரில்லையே என்பது அறிந்து, அந்தத் துயரத்தைக் கடக்க முயற்சிக்கின்றேன். பேராசிரியர் யோகராசாவின் திடீர் மறைவினால் ஆழ்ந்த துயரத்திலிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், மற்றும் இலக்கிய நண்பர்கள், மாணவர்கள் அனைவருக்கும் தொலை தூரத்திலிருந்து எனது இரங்கலைத் தெரிவிக்கின்றேன். இம்மாதம் 17 ஆம் திகதி அவரது 74 ஆவது பிறந்த தினம். அதனை தமது இனிய குடும்பத்தினருடன் இருந்து கொண்டாடமுடியாமலேயே திடீரென நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார். இனி எம்மிடம் எஞ்சியிருக்கப்போவது யோகராசாவின் நினைவுகளும், அவர் எழுதிவிட்டுச்சென்ற திறனாய்வு இலக்கியப்பிரதிகளும்தான்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.