- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  - ஆசிரியர்  


நமது உடலின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் நரம்பு மண்டலமே கட்டுப்படுத்தி உடலின் சீரான செயல்பாட்டிற்கு காரணமாக விளங்குகிறது. நரம்பு மண்டலம் பல பிரிவுகளாக பிரிந்து உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. தானியங்கி நரம்பு மண்டலம் என்பது நரம்பு மண்டலத்தின் ஓர் முக்கிய பிரிவாகும். இந்த தானியங்கி நரம்பு மண்டலம் சிம்பதடிக் நரம்பு மண்டலம் மற்றும் பாரா – சிம்பதடிக் நரம்பு மண்டலம் என இரண்டு பிரிவாக பிரிந்து செயல்படுகிறதுநமது உடலின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் நரம்பு மண்டலமே கட்டுப்படுத்தி உடலின் சீரான செயல்பாட்டிற்கு காரணமாக விளங்குகிறது. நரம்பு மண்டலம் பல பிரிவுகளாக பிரிந்து உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. தானியங்கி நரம்பு மண்டலம் என்பது நரம்பு மண்டலத்தின் ஓர் முக்கிய பிரிவாகும். இந்த தானியங்கி நரம்பு மண்டலம் சிம்பதடிக் நரம்பு மண்டலம் மற்றும் பாரா – சிம்பதடிக் நரம்பு மண்டலம் என இரண்டு பிரிவாக பிரிந்து செயல்படுகிறது.

சூழ்நிலை சாதாரணமாக இருக்கும் போது தானியங்கி நரம்பு மண்டலத்தின் பாரா – சிம்பதடிக் நரம்பு மண்டலம் நமது உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கட்டுப்படுத்தி வரும். இச்சாதாரண சமயங்களில் நாம் மூச்சை ஆழமாக இழுத்து விடாமல் மேலோட்டமாக மூச்சு விடுவோம். இரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கும். இதயத்துடிப்பும் இயல்பாக இருக்கும். உடல் வியர்க்காது. சுரப்பிகள் இயல்பாக செயல்பட்டு சரியான அளவில் ஹார்மோன்களை சுரந்து கொண்டிருக்கும்.

நாட்டில் சாதாரண் சமயங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீஸ் படை உள்ளது. திடீரெனெ ஏதாவது கலவரம், அடிதடி, ரகளை போன்றவை ஏற்பட்டு விட்டால் அவைகளை சமாளிக்க உள்ளது தான் அதிரடிப்படை. சாதாரண போலீஸ் படையால் சமாளிக்க முடியாத விஷயங்களை இந்த அதிரடிப்படை கட்டுப்படுத்தி விடும். இவர்களுக்கு என சிறப்பு பயிற்சிகளும், ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதைப் போலவே தானியங்கி நரம்பு மண்டலத்தின் அதிரடிப் பிரிவே சிம்பதடிக் நரம்பு மண்டலம் ஆகும். நமக்கு உணர்ச்சிகளும் மனவெழுச்சிகளும் சூழ்நிலையின் காரணமாக ஏற்படும் போது அச்சூழ்நிலையை சமாளிக்க ஏதுவாக பல உடலியல் மாற்றங்களை ஏற்படுத்துவது சிம்பதடிக் நரம்பு மண்டலமே ஆகும்.

அமைதியாக அமர்ந்திருக்கும் ஒருவரை திடீரென நாய் ஒன்று கடிப்பதற்காக துரத்துகிறது என வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அமைதியான ஊரில் கலவரம் ஏற்பட்டது போன்று நமது உடல் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படும். தானியங்கி நரம்பு மண்டலத்தின் அதிரடிப் பிரிவான சிம்பதடிக் நரம்பு மண்டலம் உடனே உடலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடும். அப்போது உடலில் என்னென்ன நிகழும் என்பதை கவனியுங்கள்:-

இதயத்துடிப்பு மிக் அதிகமாகும் எனவே உங்கள் இதயம் வழக்கத்தை விட படப்டவென அடித்துக் கொள்ள ஆரம்பிக்கும். இதயத்துடிப்பு அதிகரித்து இரத்தத்தை பம்ப் செய்வது அதிகரிப்பதால் இரத்த அமுத்தம் அதிகமாகும். சாதரணமாக இதயம் துடிக்கும் போது இரத்த அழுத்தம் 120 ஆகவும், இதயம் ஓய்வெடுக்கும் போது இரத்த அழுத்தம் 80 ஆகவும் இருக்கும். மன நெருக்கடி அதிகமானால் எல்லை மீறிப்போய் இரத்த அழுத்தம் எக்கச்சக்கமாய் ஏறிவிடும். உலகிலேயே அதிக இரத்த அழுத்தம் கொண்ட மிருகம் ஒட்டகச்சிவிங்கி தான். இப்போது நீங்களும் ஒட்டகச்சிவிங்கியை போல் உயர் இரத்த அழுத்தம் கொண்டவராக மாறிவிடுவீர்கள்.

துரத்திவரும் வெறிநாயிடமிருந்து தப்பித்து வெகுதூரம் ஓடிப்போய் ஒளிந்து கொள்ள வசதியாக உங்கள் கால்களுக்கு அதிக இரத்தம் அனுப்பி வைக்கப்படும். எனவே கால்கள் புத்துணர்வு பெற்று அதிக வேகத்துடன் ஓட ஆரம்பிக்கும். அதைப் போலவே மூளையில் உள்ள செல்கள் விரைவாகவும், ஆற்றலுடனும் புத்துணர்வுடனும் செயல்பட்டு சமயோசிதமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது. அப்போது தான் நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும். எனவே மூளைக்கும் அதிக இரத்தம் அனுப்பி வைக்கப்படும். மூளைக்கும் கால்களுக்கும் அனுப்பத் தேவையான அதிக இரத்தம் எங்கிருந்து வந்தது? நெருக்கடி நேரங்களில் உயிரை பாதுகாத்துக் கொள்வதே முக்கியம். எனவே வயிறு, ஜீரன மண்டலம் போன்றவற்றிக்கு அனுப்பப்படும் இரத்தம் மூளைக்கும் கால்களுக்கும் திருப்பி விடப்படும். அவசரகாலம் முடிந்தவுடன் மீண்டும் இரத்த ஓட்டம் சகஜ நிலைக்கு திரும்பி விடும்.

இது மட்டுமல்லாமல் பின்வரும் மாற்றங்களும் நம் உடலில் ஏற்படுகின்றன:

•இரத்தத்தில் சர்க்கரை சக்தியின் அளவை அதிகப்படுத்துவதற்காக கல்லீரலிருந்து அதிக அளவு சர்க்கரை சக்தி திரட்டப்படும் இதன் மூலம் அவசர காலங்களில் நம் உடலில் சக்தி இல்லையென்றாலும் நம்மால் அத்தியாவசியமான வேலைகளை செய்து கொள்ள முடியும்.

•அவசர நேரங்களில் நம் உடல் மிக வேகமாக செயல்படுகிறது. எனவே உடலின் வெப்பநிலையும் உயர்கிறது. இதை சமாளிக்க நம் உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை சுரக்கின்றன. உடல் ஈரம் பட்டவுடன் தன் வெப்பத்தை குறைத்துக் கொள்கிறது. கோடை காலங்களில் காவடி எடுத்து ஆடும் பக்தர்கள் மீதும், அவர்கள் நடந்து செல்லும் பாதையிலும் குடம்குடமாக தண்ணீர் ஊற்றி அவர்களின் உடல் வெப்பத்தை குறைப்பதை போன்றதுதான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை சுரப்பதும்.

•அவசர காலங்களில் இரத்தம் விரைவாக உறைந்து இரத்தப்போக்கு நின்றுவிடும். உதாரணமாக திருடன் ஒருவன் திருடியதை ஒருவர் பார்த்து சத்தம் போட்டு ஊரைக் கூட்டி விட்டார் என வைத்துக் கொள்வோம். ஊரே சேர்ந்து அவனை துரத்துகிறது. தப்பிக்க ஓடும் திருடனை முள் கிழிக்கிறது. அதை அவன் கண்டு கொள்ளாமல் ஓடினாலும் கூட அவனுக்கு ஒன்றும் ஆகாது. சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் கிழிந்த இடத்தில் இரத்தம் தானாக உறைந்து போயிருக்கும். இதுவே சாதாரண சமயத்தில் ஏதாவது சிறிது காயம் ஏற்பட்டிந்தாலும் கூட இரத்தம் போய்க்கொண்டே இருக்கும். அவ்வளவு சீக்கிரம் நிற்காது.

•தோல் வழக்கத்திற்கு மாறாக மொரமொரப்பு கொண்டதாக மாறிவிடும். தோலில் உள்ள மயிர்கால்கள் குத்திட்டு நிற்கும்.

•கண்மணிப் பாவை விரியும் எனவே அதிக விழிப்புணர்வுடன் சூழ்நிலையில் நடக்கும் எல்லாவற்றையும் விரைவாக காண முடியும்.

•மேலோட்டமாக மூச்சு விட்டது போய் இப்போது மூச்சு விடுவது மிக விரைவாகவும் அதே சமயத்தில் மிக ஆழமாகவும் நடைபெரும். எனவே உடலில் உள்ள செல்களுக்குத் தேவையான அதிக அளவு ஆக்ஸிஜன் கிடைக்க வழி ஏற்படுகிறது.

இதுவரை நீங்கள் படித்த உடலியல் மாற்றங்கள் யாவும் சிம்பதடிக் நரம்பு மண்டலத்தின் தூண்டுதலாலேயே ஏற்படுகின்றன. எதற்காக இவ்வாறு உடல் செயல்பாடுகள் மாற வேண்டும்?

அவசர காலங்களில் நம் உயிரும் உடலும் மிகவும் முக்கியம். அவ்விரண்டையும் காப்பாற்றவே இத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. பின்னர் சாதாரன சூழ்நிலை ஏற்பட்டவுடன் இவையாவும் சகஜ நிலைக்கு திரும்பி விடுகின்றன.


மன அழுத்தத்தினால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்

உடலுக்கு ஏற்படும் நோய்கள் எல்லாம் உடலில் தோன்றும் கோளாறுகளால் மட்டுமே ஏற்படுகின்றன என்பது சரியல்ல. சில உடல் நோய்கள் மனதில் ஏற்படும் பிரச்சனைகளாலும் ஏற்படுகின்றன என்பது உளவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ள உண்மை ஆகும். மன அழுத்தத்தினால் நமது உடல் உறுப்புக்கள் தீவிரமாக பாதிக்கப்படுகின்றன. இதற்குக் காரணம் நமது உடலின் படைப்புத் தத்துவம் ஆகும். ‘பயன்படுத்து – பாழ்படுத்து’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே நம் உடல் படைக்கப்பட்டு இருக்கிறது.

உங்களிடம் ஒரேயொரு நல்ல சட்டை இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். வேறு உடைகள் ஏதுமில்லாததால் தினமும் ஒரு சட்டையையே துவைத்து, இஸ்திரி செய்து அணிந்து கொண்டே வருகிறீர்கள். நான்கு மாதம் கழித்துப் பார்த்தால் விலையுயர்ந்த, தரமான சட்டை கூட முதுகுப் புறம் வெளுத்து சாயம் போயிருக்கும். தொடர்ந்து அதையே அணிந்து கொண்டிருந்தீர்கள் என்றால் துணி தேய்ந்து கிழியத் தயாராகி விடும். அதற்கு மாறாக, உங்களிடம் இருபது சட்டைகள் இருக்கின்றன என வைத்துக் கொள்ளுங்கள். எல்லா சட்டைகளையும் மாற்றி மாற்றி அணிந்து கொண்டே வந்தால் உங்களிடம் உள்ள தரம் குறைந்த சட்டை கூட நான்கு ஆண்டுகள் நன்றாக உழைக்கும். இதற்கு காரணம் குறைவாக பயன்படுத்துவதே ஆகும். இந்த சட்டை தத்துவத்தின் அடிப்படையிலேயே நம் மனித உடலும் படைக்கப் பட்டிருக்கிறது. உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் படைக்கப்பட்டு இருக்கிறது.

எனவே, நமது உடலின் உறுப்புகள் சாதாரணமாக, அளவாக வேலை செய்து வந்தால் நீண்ட நாட்களுக்கு இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும். அதற்கு மாறாக அடிக்கடி அளவுக்கு அதிகமாக வேலை செய்து கொண்டிருந்தால் விரைவிலேயே அவ்வுறுப்புக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, இதயம் வேகமாக துடிப்பது மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படக்கூடிய ஓர் உடலியல் மாற்றம். என்றாவது ஒருநாள் ஏதாவது ஓர் பிரச்சனையின் காரணமாக மன அழுத்தம் ஏற்படலாம், அதனால் இதயம் வேகமாக துடிக்கலாம். அவ்வப்போது ஆபத்து ஏற்படலாம், அதனாலும் இதயம் வேகமாக துடிக்கலாம் ஆனால் எப்போதும் எதற்கெடுத்தாலும் மன அழுத்தம் ஏற்பட்டு இதயம் வேகமாக துடித்துக் கொண்டே இருந்தால் இதயத் தசைகளின் சுருங்கி விரியும் தன்மை விரைவில் குறைந்து போய்விடும். எனவே இதயத்தின் செயல்பாடு விரைவிலேயே பாதிக்கப்பட்டு விடும். ஓரிரு சமயங்களில் இருக்கும் உயர் இரத்த அழுத்தம் நமது உடல் செயல்பாடுகளை துரிதப்படுத்தி அவசர செயல்களுக்கு ஆயத்தப்படுத்தும். ஆனால் அன்றாடம் நமது உடல் உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டிருந்தால் நமக்கு ஏற்படப்போவது இரத்தக் கொதிப்பு.

அவ்வப்போது பதட்டம் ஏற்படுவதால் உங்கள் உடல் வியர்க்கலாம். அதனால் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால் ஆழ்மனதில் உள்ள மன அழுத்தத்தின் காரணமாக ஏன் என்றே தெரியாமல் எப்போதும் உங்கள் உடல் வியர்த்துக் கொட்டிக் கொண்டே இருந்தால் உங்கள் உடல் பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். கோடையிலும் குளிர்காலத்திலும் வற்றாத நீர் வீழ்ச்சியாக வியர்த்துக் கொட்டிக் கொண்டிருக்கும் நீங்கள் மன அழுத்தம் என்னும் சூறாவளியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறீர்கள்.

தொடர்ந்து மன அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கும் ஒருவரின் உடலில் அதீத உடல் செய்ல்பாடுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். எனவே விரைவாகவே செயலாற்றிக் கொண்டிருக்கும் உறுப்புகள் யாவும் விரைவாகவே தங்களின் செயல்பாடுகளை முடித்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

மன அழுத்தத்தினால் தோற்றுவிக்கப்படும் தீவிர செயல்பாடுகளால் நம் உடல் பாதிக்காத வண்ணம் அதை காப்பாற்ற வேண்டும். எனவே மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ள முயற்சி எடுப்பது முக்கியமாகும்.


மன அழுத்தத்தின் நிலைகள்

நம் சக்திக்கு மீறிய பிரச்சனைகளை நாம் சமாளிக்க நேரிடும் போது ஏற்படும் மன அழுத்தம் நம் உடல்நிலையை பாதிக்கிறது. மன அழுத்தத்தை உண்டாக்கும் சூழ்நிலையை வெல்ல முயலும் நமது உடலும் மனமும் மூன்று நிலைகளில் மன அழுத்தத்தை எதிர்த்து போராடுகின்றன. அந்நிலைகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்:

நிலை 1 : எச்சரிக்கை அடையும் நிலை

எதிரி நாட்டு படைகள் நம் நாட்டின் மீது படையெடுத்து வர வாய்ப்புள்ளது என்றால் ஒரு மன்னர் என்ன செய்வார்? எதிராளியை எதிர் கொள்ள தன்னையும் தன் படைவீரர்களையும் தயார்படுத்திக் கொள்வார். தன் வீரர்களை எச்சரித்து எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கச் செய்வார். எதிரிகள் சில நேரம் எதிர்பார்த்தபடியே தாக்கலாம். அப்போது போரிட வேண்டிய நிலை ஏற்படும். சில நேரங்களில் எதிரிகள் வெறுமனே இருந்துவிடக் கூடும். அப்போது மன்னருக்கும் படைவீரர்களுக்கும் பிரச்சனை ஏதுமில்லை. எப்போதும்போல் அன்றாட வேலைகளை தொடங்கி விடலாம்.

மேற்சொன்ன உதாரணத்தை போல நம் உடலும் மன அழுத்தத்தினால் ஏற்படப் போகும் அபாயத்தினை சமாளிக்க தன் சக்தியெல்லாம் திரட்டி தயாராக இருக்கும். பிரச்சனை தீவிரமானது எனில் அதை எதிர்த்து போரட ஏதுவாக நம் மூளையும் தசைகளும் தயாராக இருக்கும். பிரச்சனை சுமூகமாக் முடிந்து விட்டது எனில் நம் உடல் சாதாரண நிலைக்கு திரும்பி விடும். இந்த நிலை எச்சரிக்கை அடையும் நிலை எனப்படும்.

நிலை 2 : எதிர்த்துப் போராடும் நிலை

போர் என்று வந்துவிட்டால் பிறகு வாழ்வா-சாவா என்று நிலைதான். ஒன்று எதிரி புறங்காட்டி ஒட வேண்டும் அல்லது நாம் எதிரியின் தாக்குதலால் சீரழிய வேண்டும். தோற்று விடுவோம் என்று தெரிந்தால் எந்த மன்னனும் சுலபத்தில் விட்டுவிட மாட்டான். தன்னால் முடிந்த அளவு எல்லா ஆயுதங்களையும் பிரயோகித்துப் பார்ப்பான்.

அதைப் போலத்தான் பிரச்சனை என்று வந்து விட்டால் அதை நாம் சுலபத்தில் விட்டுவிட மாட்டோம். இந்நிலையில் நம் உடல் ஹார்மோன்கள், உடலிலுள்ள தாதுப் பொருட்கள் மற்றும் இரத்தத்திலுள்ள சர்க்கரை சக்தி ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தி மன அழுத்தத்தினால் ஏற்படும் உடலியல் மாற்றங்களை சமாளிக்க முயலும். மிதமிஞ்சிய சக்தியை பிரயோகிப்பதால் சில நேரங்களில் பிரச்சனையை வென்றெடுத்து வெற்றிகொள்வோம். சில நேரங்களில் பெரும் பிரச்சனை நம்மையும் நம் பெரும் சக்தியையும் வென்று விடும். இறுதியில் நம்மை கொன்றும் விடும். இந்நிலையை எதிர்த்து போராடும் நிலை எனலாம்.

நிலை 3 : எல்லாம் முடிந்த நிலை

பெரும் விபத்து ஒன்றில் மாட்டிக் கொண்ட ஒருவர் நிச்சயம் இறந்தே போவார். ஆனால் சில நேரங்களில் உயிர் போகாது. மாறாக கை, கால் ஊனமாகிவிடும், உடலுக்கு பெரும் ஊனம் ஏற்படும். அம்மனிதர் ஆறுதல் அடையலாமே தவிர விபத்தின் விளைவுகள் கொடுமையானவைதான்.

அதைப் போலவே எதிர்த்து போராடும் நிலையில் தன் சக்தியெல்லாம் திரட்டிப் போராடிய உடல் தன்னால் இனிமேல் மன அழுத்தத்தை சமாளிக்க இயலாது என்ற நிலை வந்தவுடன் தன் முயற்சியை விட்டு விடும். அதற்கு மேல் போராட சக்தி எதுவும் இருக்காது. இந்நிலையில் மன அழுத்தம் நம் உடலில் ஏதாவது ஓர் நோயை தோற்றுவிக்கலாம். அந்நோய் உடல் காரணங்களால் ஏற்படும் நோய் அல்ல. மாறாக மனக் காரணங்களால் ஏற்படும் உடல் நோய். சில சமயங்களில் மன அழுத்தத்தின் தீவிரம் அதிகமாக இருந்தால் உயிரிழப்பும் ஏற்படலாம். இந்நிலையை எல்லாம் முடிந்த நிலை எனலாம்.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள், செப்டம்பர் 2009 இதழ் 117