* புகைப்படம் - India Sublime Arts
நாட்டியத்தாரகை ரங்கா விவேகானந்தன் அவ்ர்களின் மறைவை முகநூல் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல். எமக்கு பரதநாட்டியம் என்றால் நாட்டியப் பேரொளி பத்மினி நினைவுக்கு வருவார். வையந்திமாலா நினைவுக்கு வருவார். குமாரி கமலா நினைவுக்கு வருவார். பத்மா சுப்பிரமணியம் நினைவுக்கு வருவார். இவர்கள் எல்லாரும் அறுபதுகளில், எழுபதுகளில் நாடறிந்த நாட்டியத் தாரகைகள். இவர்களைப்போல் சிலரே இலங்கையில் அறியப்பட்டிருருந்தார்கள். அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் 'குச்சுப்பிடி' ரங்கா விவேகானந்தன். இவர் புகழ்பெற்ற நீச்சல் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் சகோதரி. இவரது சகோதரி கோகிலா வரதீஸ்வரன் கனடாவில் வசித்து வருகின்றார். ரங்கா விவேகானந்தன் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர்
எழுபதுகளில் இலங்கைத் தமிழ்ப்பத்திரிகைகளில் அதிகம் இவரைப்பற்றிய செய்திகள் வரும். குச்சுப்பிடி நடனத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா , திரைப்படத்துறையில் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவருக்குக் குச்சுப்பிடி நடனத்தைக் கற்பித்தவர் இவரென்று இவரது மறைவையொட்டி வல்வை நலன்புரிச் சங்கம் வெளியிட்ட அஞ்சலிக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டியத்தில் இவரது குரு கலாநிதி வேம்பட்டி சின்ன சத்யம்.
இவர் கடந்த பல வருடங்களாக ஆர்ஜண்டினாவில் வசித்து வந்தார். 'ஆனந்தராஜம்' என்னும் நடனப் பள்ளியையும் நடத்தி வந்தார். நூற்றுக்கணக்கில் நர்த்தகிகளை உருவாக்கினார். இவரிடம் அர்ஜண்டினாப் பெண்கள் பலர் நடனம் கற்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
* இவரைப்பற்றிய ஸ்பானிஷ் மொழியில் வெளியான ஆவணக் காணொளி - https://www.youtube.com/watch?v=aU2m9jhleT8
- * நர்த்தகி ரங்கா விவேகானந்தனின் குரு கலாநிதி வேம்பட்டி சின்ன சத்யம். -
* இங்குள்ள புகைப்படங்கள் ரங்கா விவேகானந்தனின் முகநூலிலிருந்து பெறப்பட்டவை. நன்றி.
ரங்கா விவேகானந்தனின் முகநூல் பக்கம் - https://www.facebook.com/ranga.vivekanandan