மாமன்னன் திரைப்படத்தைத் தமிழ்த்திரையுலகின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக நான் இனங்காண்கின்றேன். முக்கிய காரணம் இயக்குநர் மாரி செல்வராஜ் இத்திரைப்படத்தில் கையாண்டுள்ள கரு.அதனை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காட்சிகள்.  வசனங்கள். நடிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்கள்.

கலைஞரின் பராசக்தி வசனங்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றனவோ அவ்விதம் இத்திரைப்படத்தின் சில காட்சிகள், வசனங்கள் நிலைத்து நிற்கப்போகின்றன. உதாரணங்களாகப் பின்வருவனற்றைக் கூறலாம்:

1. தகப்பன் வடிவேலைப் பார்த்து மகன் உதயநிதி கதிரையில் உட்காரச் சொல்வது. அக்காட்சியில் அற்புதமாக நடித்திருப்பார் வடிவேலு. அவரது உடல் மொழி சிறப்பாக வெளிப்பட்டிருந்தது.  கடைசியில் மகனின்  உத்தரவுக்கமைய கதிரையில் அமர்வதும், எழாமல் இருக்கும்போது காட்டும் முகபாவங்களும் மறக்க முடியாதவை.

மேலும் இக்காட்சி முக்கியமானதொரு குறியீட்டுக் காட்சி. சமூக அடக்குமுறைகளுக்கெதிராகப் போராட வேண்டுமென்பதை, அடங்கி விடக்கூடாதென்பதை எடுத்துக்காட்டும் மிகவும் வலிமையான குறியீட்டுக் காட்சி.  சமூக அநீதிகளுக்குள் அடங்கி, ஒடுங்கிக் கிடக்கும் எவரையும் அதனை எதிர்கொண்டு , எதிர்த்துப்போராட வேண்டுமென்பதை எடுத்துக்காட்டும் மிகவும் வலிமையான குறியீடாகவே இக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் மிகவும் முக்கியமானது.

2. அச்சமயத்தில் வில்லனாக வரும் Fahadh Faasil கூறும் வசனம் : 'நான் அவரை உட்காரச்சொன்னது என் அடையாளம்.  உன்னை உட்காரச் சொன்னது என் அரசியல்'  வசனகர்த்தாவை நினைவில் வைத்திருக்கச் செய்யும் வசனமிது.  Fahadh Faasil சிறந்த நடிகர். பல்வேறு விருதுகளை நடிப்புக்காகப் பெற்ற நடிகர். அவரை நன்கு பாவித்திருக்கின்றார் இயக்குநர் இத்திரைப்படத்தில்.

முதலமைச்சராக நடித்திருக்கும் லால் தேர்ந்த  நடிகர். நடிப்புக்காக விருதுகள் பல பெற்ற நடிகர்.  முதலமைச்சராக நினைவில் நிற்கும் வகையில் நடித்திருக்கின்றார.

இந்த அடையாள , அரசியலைக் காலத்தின் கட்டாயமாகத் திரையில் கொண்டு வந்ததற்காக மாரி செல்வராஜை நிச்சயம் பாராட்டலாம். நடிகர் உதயநிதியின் இத்திரைப்படம் நிச்சயம் அரசியல்வாதி உதயநிதிக்குக் கைகொடுக்கும். படத்தின் வெற்றி  படத்தை, நாயகன் உதயநிதியின் பாத்திரத்தைப் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்திருக்கும்.  அடித்தட்டு மக்கள் உதயநிதியைத் தம் சமூக நீதிக்காப் போராட வந்தவராகக் கட்டமைப்பதில் இத்திரைப்படம் வெற்றியினை ஈட்டியுள்ளது. இத்திரைப்படத்தின் வெற்றி உதயநிதியை இது போன்ற திரைப்படங்களில் தொடர்ந்தும் நடிக்க வழி வகுத்துள்ளது.
நடிகர் வடிவேலுவை இத்திரைப்படத்திலிருந்து சிறந்த குணச்சித்திர வேடங்களில் காணலாம். அவரது இரண்டாவது ஆட்டத்தைத் தொடக்கி வைத்துள்ளது மாமன்னன்.  நடிகை கீர்த்தி சுரேஷும் மனத்தில் நிற்கும் வகையில் நடித்திருக்கின்றார்.

ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்தின் இன்னுமொரு சிறப்பம்சம்.

எம்ஜிஆருக்கு ஆரம்பத்தில் கலைஞர் அமைச்சர் பதவியைக்  கொடுக்காமலிருந்ததற்குக் காரணம் எம்ஜிஆர் நடித்துக்கொண்டே அமைச்சராகவுமிருக்க ஆசைப்பட்டதுதான். ஆனால் அவரது பேரன் அமைச்சராகவிருந்துகொண்டே நடிக்கப்போவதற்கான சாத்தியங்களே அதிகமுள்ளன.  இவ்விதம் நடந்தால் அரசியல்ரீதியில் பலத்த விமர்சனங்களை உருவாக்கும்.