பாரதி பள்ளியின் இளைய தலைமுறையினர் மேடையேற்றிய சிலப்பதிகார நாடகத்தைப் பார்த்து மெய்மறந்த நாடக ஆர்வலர்களுள் நானும் ஒருவன். சிலப்பதிகாரக் காட்சிகளை தத்துரூபமாக எம் கண்முன்னே அரங்கேற்றி எம்மை எல்லாம் மெய்சிலிர்க்க வைத்த பெருமை பாரதி பள்ளியின் முதல்வர் திரு மாவை நித்தியானந்தன் அவர்களையே சாரும். சிலப்பதிகாரத்தின் பசுமையான நினைவுகளுடன் (ஒரு வருட காலத்துக்குள்) இராமாயண நாடகத்தை பார்க்கச் சென்றேன்.

இராமாயணத்தின் முதலாம் பாகம் இசை நாடகமாக அரங்கேறியது. நாடகத்தின் ஆரம்பக் கட்டத்தில் விசுவாமித்திர முனிவர் இராமனையும் இலக்குமணனையும் அழைத்துச் செல்கின்றார். விசுவாமித்திரராக வேடம் பூண்டு நடித்தவர் சினம் கொண்ட முனிவராக காட்சியளித்தார். இராமன் இலக்குமணனாக வந்தவர்களும் தமது கதாபாத்திரங்களை திறம்பட நடித்தனர் என்றால் மிகையாகாது.

இராமன் தாடகையை வதம் செய்யும் காட்சியில் தாடகையின் நடிப்பும் ஓங்காரமான ஆட்டமும், உடலில் பாய்ந்த அம்பை பிடுங்கி கையில் பிடித்துக் கொண்டு விழுந்த தாடகையின் நடிப்பும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்து. இதன் போது ஒளியில் ஏற்படுத்திய மாற்றங்களும் வர்ணங்களும் பின் திரையில் வெளியிட்ட காட்சிகளும் மேலும் இராமாயண இசை நாடகத்தின் தத்துரூபத்தினை வெளிப்படுத்தியதென்றே கூறலாம்.

இராமனும் இலக்குமணனும் மிதிலை வீதியில் விசுவாமித்திரரின் பின்னால் நடந்து செல்லும் காட்சி, இனிமையான பாடலுடன் வருகிறது. கம்பனின் “அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்” அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து முழுநிலவில், சீதை விரகதாபத்துடன் மென்மையாகப் பாடி, வாடும் காட்சி எல்லோருடைய மனதையும் ஈர்த்தது.

இராமன் “சிவதனுசை” வளைப்பது காட்சியாக இல்லாமல், கதையாகவே சித்திரிக்கப்பட்டிருந்தது. இராமனின் முடிசூட்டு நிச்சயயார்த்தம், இராமன் சீதை திருமணம் இவை இரண்டினையும் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது, மாணவர்களின் நாட்டியங்களின் வாயிலாகக் காட்டப்பட்டமை பல்வேறு நாடக உத்திகளை திறம்பட கையாண்டு, காட்சிகளை வழி நடாத்திச் சென்ற பெருமை நாடக ஆசிரியரையே சாரும்.

இதனைத் தொடர்ந்து நாடகத்தில் திருப்புமுனை ஏற்படுகிறது. கைகேயி - கூனி உரையாடல்களும், கைகேயி - தசரதன் உரையாடல்களும் அற்புதமாக அமைந்திருந்தது. இராமனைக் காட்டுக்கு அனுப்பும் கைகேயி, எமக்கு எரிச்சலை மூட்டி, வெறுப்பின் உச்சத்துக்கு எம்மை அழைத்துச் செல்ல, மகனைப் பிரிந்து, உயிரை விடப்போகும் தசரதன் கைகேயியின் காலில் விழுந்து கெஞ்சுவதும், மயங்கி விழுவதும் கண்களில் நீரை மல்க வைத்த காட்சிகள். இந்தச் சோகம், கடைசிக் காட்சியில் உச்சத்துக்குச் செல்கிறது. மரவுரி தரித்து, சீதையுடன் இராமனும் இலக்குவனும் காடு நோக்கி நடந்து செல்வதும், அவர்களைத் தொடரும் மக்கள் கூட்டமும் கண்களை விட்டு என்றும் அகலாக் காட்சியாகவும் நாடக ஆர்வலர்களை நீங்காத சோகத்தில் ஆழ்த்தியது.

சிலப்பதிகார, இராமாயண நாடங்களில் பங்கேற்று நடித்த மாணவர்கள் யாவரும் இங்கு வளர்ந்தவர்களாக இருந்த போதும், அவர்களின் தமிழ் உரையாடல்களும் பாடல்களும் திருத்தமாகவும் தெளிவாகவும் இருந்தமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மாணவர்களின் இயல்பான நல்ல நடிப்பும், இனிமையான கூத்து மெட்டுப் பாடல்களும் இவ்விரு நாடகங்களுக்கும் வளம் சேர்த்தன. சிலப்பதிகாரத்தைப் போலவே, இந்த நாடகத்துக்கும் உடையலங்காரம் மிகச் சிறப்பான வலுவினைக் கொடுத்திருந்தது.

திரு மாவை நித்தியானந்தன் அவர்கள் இலகுவான தமிழ் மொழி நடையில் இராமாயணத்தை எழுத்துருவாக்கி, அரங்கமைத்தார். அவருடன் இணைந்து ஆசிரியர் திருமதி பகீரதி பார்த்திபன் அழகாக மேடைக்குக் கொண்டு வந்திருந்தார். திரு சிறீதரனின் கணீரென ஒலித்த குரலும், பாடல்களும், வாத்தியங்களின் ஒத்துழைப்பும் நாடகத்திற்கு மேலும் மெருகூட்டின என்றே சொல்லலாம். அவ்வப்போது கம்பனின் கவிநயம் மிக்க பாடல்கள் சிலவற்றை அப்படியே சேர்த்தமை சிறப்பாக அமைந்தது.

21 ஆம் நூற்றாண்டில் இங்கு வாழும் இளம் தலைமுறையினர், தமிழர் பாரம்பரிய இலக்கியப் பாடல்கள் கதைகளை விரும்பி, நாடகப் பாத்திரங்களில் தம்மை ஈடுபடுத்தி, மேடையில் நடிப்பது என்பது தமிழர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. மேலும் சிலப்பதிகாரம், இராமாயணம் போன்ற நாடங்கள் இங்கு வாழும் இளம் சமூகத்தினருக்கு தமிழ் மொழியை மட்டுமன்றி நமது பாரம்பரிய கலை கலாசார விழுமியங்களை வலுப்படுத்த உதவும் என்பதனையும் ஆழமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஒஸ்ரேலிய கலைவட்டாரத்தில், திரு மாவை நித்தியானந்தன் அவர்களின் மொழி நடை, இசை - நடனம், உணர்ச்சி, ஒப்பனை மற்றும் அரங்க அமைப்பு அனைத்தையும் இணைக்கும் இத்தகைய மேடை நாடகக் கலை நிகழ்ச்சிகள், தமிழ் இலக்கிய பார்வையாளர்களுக்கான விருந்து என்பதே உண்மையாகும். எழுபத்தைந்து நிமிடங்கள், சில கணங்கள் போல் சென்று மறைந்தன. பார்வையாளர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டி, மிகுதி எப்பொழுது? என்ற கேள்வியை எங்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது. முழுமையான நாடகக் காட்சியை விரைவில் எதிர்பார்க்கலாமா? ஆவலுடன் விடைபெறுகின்றேன்.



இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.