பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான லெ.முருகபூபதி அவர்களுக்கு  கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்,  2022 ஆம் ஆண்டிற்கான இயல் விருதையும், பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளை,  இலக்கியச் சாதனையாளர் விருதையும்   வழங்கிக் கௌரவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர் முருகபூபதி அவர்களைப் பாராட்டும் விழா, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய  கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் மெல்பனில் 2024  ஜனவரி  மாதம் 7 ஆம்திகதி   ஞாயிற்றுக்கிழமை  மாலை 4-00 மணிக்கு நடைபெறவுள்ளது. 112 High St, Berwick VIC - 3806, Australia என்ற முகவரியில் அமைந்துள்ள,  மூத்த பிரசைகள் மண்டபத்தில் இடம் பெறவுள்ள இந்த விழாவில், முருகபூபதியின்   இலக்கியச் சாதனைகள், சமூகநலச் செயற்பாடுகள்  என்பவற்றைப்பற்றி, அறிஞர்களும், இலக்கியவாதிகளும்,  சமூகச் செயற்பாட்டாளர்களும்  உரையாற்றவுள்ளனர்.

சிறுகதை, நாவல், கட்டுரை,பயண இலக்கியம், சிறுவர்  இலக்கியம், கடித இலக்கியம், நேர்காணல் பதிவுகள், புனைவு சாராத ஆக்கங்கள் முதலிய பல் துறைகளிலும் எழுதிவரும் அவரது படைப்புகள் முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களாக  வெளிவந்துள்ளன.

எழுத்தாளர் முருகபூபதி,  முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் வீரகேசரி  பத்திரிகையில் பணியாற்றியவர். அவரது சுமையின்  பங்காளிகள் என்ற  சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு 1976 ஆம் ஆண்டிலும்,  பறவைகள் என்ற நாவலுக்கு 2003 ஆம் ஆண்டிலும், இலங்கையில் தேசிய சாகித்திய விருதுகள் கிடைத்தன.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகள்  எங்கும் வெளிவரும் பத்திரிகைகளிலும்,  இலக்கிய இதழ்களிலும்  தொடர்ந்து எழுதிவரும் முருகபூபதி , 1987 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்.

இலங்கையில் முன்னர், நீடித்திருந்த போரினால் பெற்றோர்களை இழந்த  மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக,  கடந்த 35 வருடங்களாக உதவி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான, இலங்கை மாணவர் கல்வி நிதியம்  என்னும் அமைப்பின் நிறுவனரான முருகபூபதி, அவுஸ்திரேலியாவில்  2001 ஆம் ஆண்டிலிருந்து  தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தையும்  ஆரம்பித்து அதிலும் தொடர்ந்து இயங்கிவருகிறார்.

இவ்வாறு தமிழ் இலக்கியம், கலை, சமூகம் சார்ந்த பணிகளில் தனது வாழ்நாள் முழுவதும் இடைவிடாது இயங்கிவரும்  முருகபூபதி அவர்களுக்கு, கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளையும்  விருதுகளை  வழங்கிக் கௌரவித்தமைக்காக நடத்தப்படவிருக்கும் இந்தப் பாராட்டுவிழாவில்  கலந்துகொள்ளுமாறு, அன்பர்கள், நண்பர்கள், கலை, இலக்கிய, ஊடக ஆர்வலர்கள் அனைவரும்  அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

கிறிஸ்ரி நல்லரெத்தினம் + 61 450 450 998
சு.ஸ்ரீகந்தராசா + 61 478 060 366
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.