கனடாவில் இயங்கிவரும் மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களும், கல்லூரி நலன்விரும்பிகளும் சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவின்  மக்கோவான் - ஸ் ரீல் சந்திக்கு அருகே உள்ள பூங்காவில் ஒன்றுகூடிக் கொண்டாடினார்கள். கோவிட் - 19 காரணமாக இரண்டு வருடங்கள் தள்ளிப் போடப்பட்ட இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக இம்முறை நடைபெற்றது. கனடா தேசிய கீதம், தமிழ்வாழ்த்து, கல்லூரிக்கீதம், கொடிவணக்கம், மற்றும் எம்மைவிட்டுப் பிரிந்தோருக்கான அகவணக்கம் போன்றவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து காலை உணவு வழங்கப்பட்டது. அதன்பின் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று மதிய உணவு வழங்கப்பட்டது.

மதிய உணவைத் தொடர்ந்து, சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்குமான ஓட்டப்போட்டி, பந்தெறிதல், கயிறு இழுத்தல், வேகநடை போன்ற பலவிதமான விளையாட்டுகளும் இடம் பெற்றன. அங்கத்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதன் மூலம் உளரீதியாகவும் ஒன்றுகூடி மகிழ்வதே இந்த நிகழ்வின் நோக்கமாக இருந்தது. நீண்ட நாட்களின்பின் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்வோடு உரையாட முடிந்தது. இந்த நிகழ்வில் பிரான்ஸ், நோர்வே, அமெரிக்கா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் இருந்தும் வந்திருந்த பழைய மாணவர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர். போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கு மாலை 5:00 மணியளவில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை 6:00 மணியளவில் நிகழ்வு நிறைவுபெற்றது.

மகாஜனக்கல்லூரி பழைய மாணவர்கள் உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் போன்ற குழுக்களை ஆரம்பித்து அவர்களைப் பயிற்றுவித்து கடனாவில் நடக்கும் போட்டிகளிலும் பங்கு பற்றி விளையாடுவது குறிப்பிடத்தக்கது. இதைவிட இளைய தலைமுறையினருக்கான பயிற்சிப் பட்டறைகள், கணித, பொது அறிவு, தமிழ் மொழி பரீட்சைகளும் கடந்த பல வருடங்களாக நடத்தி அவர்களை ஊக்குவித்து வருகின்றனர். மற்றும் ‘மகாஜனன்’ வருடாந்த மலரிலும் இளைய தலைமுறையினரின் ஆக்கங்களை வெளியிட்டு அவர்களை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்து வருவதுடன், கோயிற் திருவிழாக்களும் செய்து வருகின்றார்கள்.

தாயகத்தில் உள்ள கல்லூரியின் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றனர். யுத்தத்தால் பழுதடைந்த கட்டிடங்களையும் நூலகத்தையும் திருத்தி அமைக்கவும், கணனி பாவனையை அறிமுகம் செய்தும், விளையாட்டுப் போட்டிகள், நினைவுகூரும் நிகழ்வுகள் போன்றவற்றுக்கு உதவி செய்தும் கல்லூரியின் முன்னேற்றத்திற்கு இங்குள்ள பழைய மாணவர்கள் உதவிக் கொண்டிருக்கிறார்கள். மகாஜனக் கல்லூரியின் சர்வதேச நூற்றாண்டு நினைவு மலர் கனடா பழைய மாணவர் சங்கத்தால் கனடாவில் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


 நடேஸ்வராக்கல்லூரி பழையமாணவர் சங்க ஒன்றுகூடல் - 2022   - குரு அரவிந்தன் -

கனடாவில் இயங்கிவரும் நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களின் ஒன்றுகூடல் ரொறன்ரோவில் உள்ள மிலிக்கன் பூங்காவில் சென்ற சனிக்கிழமை 27-8-2022 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நீண்ட நாட்களின் பின் வெவ்வேறு காலகட்டங்களில் படித்த சங்க அங்கத்தவர்கள் ஒன்றாகச் சந்தித்து உரையாடவும் முடிந்தது. காலை உணவைத் தொடர்ந்து, வருடாந்த பொதுக்கூட்டம் காலை 11:00 மணியளவில் நடைபெற்றது. அங்கத்தவர்களின் கலந்துரையாடலைத் தொடர்ந்து மதியஉணவும் அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி 120 வருடங்களை நிறைவு செய்ததை 2021 ஆண்டு கொண்டாடும் முகமாக நினைவுக் கோப்பைகளும், நினைவு ரீசேட்களும் பழைய மாணவர் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டாலும், கோவிட் - 19 காரணமாக அவற்றை வழங்க முடியாமல் இருந்தது. இந்த ஒன்றுகூடலின்போது, சிறப்பு விருந்தினருக்கும், நிர்வாகசபை உறுப்பினர்களுக்கும் அவற்றை வழங்கியதன் மூலம் அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கத்தோலிக்க பாடசாலைகளை ஆரம்பித்து மதமாற்றங்களை மேற்கொள்ள முற்பட்டபோது, இந்துமத நம்பிக்கை கொண்டவர்கள் நடேஸ்வரா, பரமேஸ்வரா, வைத்தீஸ்வரா, இந்துக்கல்லூரி, மகாஜனா போன்ற தனியார் பாடசாலைகளை இந்து மாணவர்களுக்காக அப்போது ஆரம்பித்தது நினைவிருக்கலாம்.

‘பொலியும் ஆழி வளங்கள் யாவும் நிறை காங்கேசந்துறையிலே
பொறையில் ‘நேர்மை நெறிநில்’ நீதி அறிவை ஊட்டும் முறையிலே
கலை நலங்கள் எழில் பெறும் நடேஸ்வரா கல்லூரியில்’

என்று சுப்பையா ஆசிரியர் இயற்றிய கல்லூரிக்கீதத்தில் குறிப்பிட்டது போல, இப்போது இங்குள்ள வளங்கள் எல்லாவற்றையும் மாணவர்களுக்குப் பதிலாக இராணுவமே அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

அதியுயர் பாதுகாப்பு வலயமாகக் காங்கேசந்துறை பகுதி பிரகடனப் படுத்தப்பட்டதால், கல்லூரிவீதியில் இருந்த நடேஸ்வராக்கல்லூரி இயங்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. யுத்த சூழ்நிலைகாரணமாகப் காங்கேசந்துறை நடேஸ்வராக்கல்லூரி பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருந்தது. ஊர்மக்கள், அதிபர்கள், ஆசிரியர்களின் விடா முயற்சியால் மீண்டும் பழைய இடமான கல்லூரிவீதியில் கல்லூரி இயங்க ஆரம்பித்தது. புதிய கட்டிடம், விளையாட்டு மைதான கட்டிடம் போன்றவற்றை அமைப்பதற்குப் பழைய மாணவர் சங்கங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன.

மக்கள் இடம் பெயர்ந்ததாலும், கல்லூரிவீதியின் ஒருபகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாலும் வருகைதரும் மாணவர்கள் தொகை குறைவாகவே இருக்கின்றது. கல்லூரியின் கிழக்குப்பக்கத்தில் இருந்து வரும் மாணவர்கள் வடக்கு நோக்கிப் பருத்துறைவீதி வழியாக காங்கேசந்துறை சந்திவரை சென்று சுற்றுப் பாதையால்தான் கல்லூரிக்கு நடந்து வரவேண்டிய நிலை இப்போது இருக்கின்றது. அதனால் வளர்ந்த பெண் பிள்ளைகளை அனுப்பப் பெற்றோர்கள் தயக்கம் காட்டுவதால், வசதி படைத்தவர்கள் வேறுபாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்புகின்றார்கள். ஒன்றுபட்டுச் செயற்பட்டால் இந்த நிலையை விரைவில் மாற்றி பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கை இன்னும் காங்கேசந்துறை மக்களிடையே இருக்கின்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.