முனைவர் மைதிலி தயாநிதி

உலகத் தமிழ்ச் சங்கத்தின் (மதுரை) ஏற்பாட்டில் நடைபெற்ற 'கனடாச் சிறுகதை இலக்கியம்' பற்றி இணையவழி இலக்கியக் கருத்தரங்கு ஒன்றினைப் பார்க்கும் & கேட்கும் சந்தர்ப்பமேற்பட்டது.  அதில் கனடாத் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய சிறப்பானதோர் ஆய்வுரையினை முனைவர் மைதிலி தயாநிதி அவர்கள் ஆற்றியிருந்தார். அதற்காக அவருக்கென் பாராட்டுகள்.

மிகவும் விரிவானதொரு தேடலை அவர் இவ்வாய்வுக் கட்டுரையினை எழுதுவதற்காகச் செய்துள்ளார் என்பதை  அவரது உரை புலப்படுத்தியது. கனடாத் தமிழ் இலக்கியத்துக்குச் சிறுகதை மூலம் பங்களிப்புச் செய்த எழுத்தாளர்கள், அவர்களது முக்கியமான சிறுகதைகள் பற்றி உதாரணங்களுடன் குறிப்பிட்டார். அவரது ஆய்வுரை சிறப்புடனும், உணர்வு பூர்வமாகவுமிருந்தது.

அவரது உரையில் அவர் குறிப்பிட்ட இலக்கியத்தில் வட்டாரத் தமிழ் வழக்கு என்னும் விடயமும், இலக்கியப்பிரதிகளைத் தரப்படுத்தல் என்னும் விடயமும்   மிகுந்த கவனத்தைப்பெற்றிருந்ததை, அவரது உரையினைத் தொடர்ந்து  இடம் பெற்ற பங்குபற்றியவர்கள் மத்தியில் இடம்பெற்ற எதிர்வினைகள் புலப்படுத்தின. இவை பற்றிய எனது கருத்துகளைப் பின்னர் தனியாகப் பதிவு செய்வேன்.

நிகழ்வில் பேராசியர் இ.பாலசுந்தரம், எழுத்தாளர் முருகபூபதி, தர்மகுலசிங்கம் , பேராசிரியர் முருகதாஸ், நா.பத்மநாப் ஐயர், நடேசன்,  உட்படக் கலை, இலக்கியவாதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். தமிழகத்திலிருதும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.  மைதிலி தயாநிதியின் உரையினைத் தொடர்ந்து இடம் பெற்ற கலந்துரையாடலும் சிறப்பாக நடைபெற்றது.

முனைவர்  மைதிலி தயாநிதி தமது உரையினை ஆய்வுக்கட்டுரையாக ஊடகங்களுக்குக் 'கனடாத் தமிழ்ச் சிறுகதைகள்' என்னும் தலைப்பில்  அனுப்பி வைப்பதும் பயன்மிக்கதாக அமையும். அத்துடன் இத்துறையில் ஆய்வினை விரிவுபடுத்தித் தனியோர் ஆய்வு  நூலாகவும் அவர் எழுதலாம். இதுபோல் ஏனைய நாடுகளில் வசிக்கும்  தமிழர்களும் தமது  நாட்டுத்  தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய ஆய்வுகளைச் செய்வதும் அவசியம். முனைவர் மைதிலி தயாநிதி அவர்களின் உரையினையும் , அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற கருத்துப்பரிமாறல்களையும் கேட்பதற்குரிய இணைய இணைப்பு: https://www.youtube.com/watch?v=8Soulhq9V2M


கருத்தரங்கில் பங்கு பற்றியவர்கள்: