முன்னுரைஇலக்கியங்கள் ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வு, வரலாறு, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. இலக்கியங்கள் வருங்கால சந்ததியினருக்கு உணர்த்திச் சென்ற அறநெறிகள் ஏராளம். அதில் சித்தர்களின் பாடல்களில் மக்கள் அறிந்துக் கொள்ளக்கூடிய நிலையாமை கருத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. அந்த வகையில் குதம்பைச் சித்தரின் பாடல்களில் காணப்படும் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.
குதம்பைச் சித்தர் பெயர்க்காரணம்
குதம்பைச் சித்தர் இடையர் குலத்தை சார்ந்தவர். இவர் மயிலாடுதுறையில் சமாதியானார் என்றும் கூறுவர். இவர் பாடலில் குதம்பாய் என்னும் மகடுஉ முன்னிலைப்படுத்திப் பாடியுள்ளார். குதம்பை என்பது பனை ஓலை சுருளுக்குப் பெயர். இதைப் பெண்கள் காதுகளில் அணிவது மரபாகும். இதனால் இவளுக்குக் குதம்பை சித்தர் எனப் பெயர் வந்தது. இவர் இல்லறத் துறவியாக இருந்து பின் அழகர் மலை என்னும் திருப்பதியில் சமாதியானார் என்றும் கூறுவர்.
கடவுளின் இயல்பு
மக்கள் இறைவனை உருவமாகவும் சோதி வடிவமாகவும் வழிபடுகின்றனர். ஆதியும் அந்தமும் ஆகிய கடவுள் ஒருவனே சோதி வடிவில் நிற்கின்றான். இதனை,
"ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
சோதியாய் நின்றானடி குதம்பாய்
சோதியாய் நின்றானடி" (குத.சித். பா.33)
என்ற பாடல் எடுத்தியம்புகிறது.
"அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி" (திருமுறை.6, பா.32)
என்னும் பாடலில் வள்ளலார் அருட்பெருஞ்சோதி வழிபாட்டு முறையை மேற்கொண்டு அச்சோதியில் இரண்டறக் கலந்தார் என்பதை அறியமுடிகின்றது.
முக்தி
ஐம்புலன்களையும் அடக்கி உலகப்பற்றை நீக்கி இறைவன் மீது பற்று வைத்தோம் என்றால் முக்தி அடையலாம். ஆமையைப் போல் ஐம்புலன்களையும் அடக்கி மௌனமாக இருப்போருக்கு முக்தி கிடைக்கும் என்பதனை,
''ஆமைபோல் ஐந்தும் அடக்கித் திரிகின்ற
ஊமைக்கு முத்தியடி குதம்பாய்
ஊமைக்கு முத்தியடி" (குத.சித் பா.54)
என்ற பாடல் வழி அறியமுடிகின்றது. வள்ளுவரும்,
''ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து" (குறள்.126)
என்னும் குறள் வாயிலாக ஒரு பிறப்பில் ஆமைப்போல் ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவனுக்கு பல பிறப்பிலும் அவனுக்கு காப்பாக அமையும் என்பது புலனாகின்றது.
உடலின் இழிவு
நம் உடலானது நாற்றம் உடையது. அதனால் தான் நாம் உடலுக்கு வாசனைப் பொருட்களைப் போட்டுக் கொள்கிறோம். குதம்பைச் சித்தர் இது எதற்கு என்கிறார். இதனை,
''பேசறு நாற்றம் பெருகும் உடலுக்கு
வாசனை ஏதுக்கடி குதம்பாய்
வாசனை ஏதுக்கடி" (குத.சித் பா.62)
என்கிறார். மேலும் போராட்டம் செய்து வியர்த்த உடம்பிற்கு நீராடுவது எதற்கு என்கிறார். இதனை,
''போராட்டம் செய்து புழுத்த வுடம்பிற்கு
நீராட்டம் ஏதுக்கடி குதம்பாய்
நீராட்டம் ஏதுக்கடி" (குத.சித் பா.67)
என்னும் பாடலின் வாயிலாக உடம்பு அழியக்கூடியது. அதற்கு எதுக்கு வாசனைப் பொருட்கள், குளித்தல் எதற்கு என்பதன் மூலம் உடல் நிலையாமையை உணர்த்துகின்றார். வள்ளுவரும்,
''புறந்தூய்மை நீரான் அமையும்" (குறள்.298) என்கிறார்.
பொய்த்தவ ஒழுக்கம்
சங்ககாலத்தில் போலித் துறவிகள் இல்லை. ஆனால், இன்றோ போலித்துறவிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். செந்நிறக்காவியை உடுத்தி தெருவில் அலையும் துறவிகளுக்கு நல்வழி கிடையாது. அதனால் உறுதியுடன் தவம் மேற்கொள்ள வேண்டும் என்பதனை,
"செங்காவி பூண்டு தெருவில் அலைவோர்க்கு
எங்காகும் நல்வழியே குதம்பாய்
எங்காகும் நல்வழியே" (குத.சித் .பா.93)
என்ற பாடலின் மூலம் உண்மையான துறவியாக விளங்க வலியுறுத்துகிறார். மேலும்,
''வெண்ணீறு பூசியே வீதியில் வந்தோர்க்குப்
பெண்ணாசை ஏதுக்கடி குதம்பாய்
பெண்ணாசை ஏதுக்கடி" (குத.சித் .பா.95)
என்ற வரிகளின் வாயிலாகத் திருநீறு பூசி வீதியில் வருபவர்க்குப் பெண்ணாசைக் கூடாது என இராமாயணத்தில் இராவணன் பொய்த்தவ வேடம் பூண்டு சீதையை அபகரித்தான் என்பதையும், விசுவாமித்திரர் தவத்தில் இருந்த போது ஊர்வசியின் மீது மையல் கொண்டார் என்ற செய்தியும் அறியமுடிகின்றது. இதனால் பொய்த்தவம் கூடாது என அறிவுறுத்துகிறார்.
செல்வ நிலையாமை
மனித வாழ்க்கையே நிலையில்லை. அதில் செல்வம், யாக்கை. உயிர் போன்றவை நிலையில்லை எனத் திருமூலர் பாடல் வழி அறியமுடிகின்றது. மேலும், சேர்த்து வைக்கும் பொன்னும் பொருளும் இறந்தபிறகு உற்றார், உறவினர், ஊரார், உடன் வருவதில்லை. உடன்பிறந்தோர், பெற்றவர் முதலிய யாரும் வருவதில்லை என்பதனை,
"தேடிய செம்பொன்னும் செத்தபோது உன்னோடு
நாடி வருவதுண்டோ? குதம்பாய்
தாடி வருவதுண்டோ?" (குத.சித் .பா.102)
வரிகளில் மனிதர்கள் இறக்கும் போது பொன்னும் பொருளும் எடுத்துச் செல்வதில்லை என்று எடுத்துரைக்கின்றார்.
"தங்கப்புட்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
வாழ்க்கை வாழத்தான் கையில் என்ன
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல"
என்ற திரையிசைப் பாடலும் மனித வாழ்வின் நிலையாமையை எடுத்துரைக்கின்றது.
"வீடு வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ"
எனும் திரையிசைப் பாடல் வாயிலாக இறக்கும் போது யாரும் உடன் செல்வதில்லை என்ற வாழ்க்கையின் எதார்த்தத்தை எடுத்துரைக்கின்றது.
உயிரோடு செல்பவை
நாம் இறக்கும் போது பொன்னோ, பொருளோ எதுவும் நம்முடன் வராது. ஆனால் நம்முடன் நல்வினை, தீவினை. செய்த தவம் செய்த கொலைப்பாவம், செய்த தர்மம் ஆகியவை வரும்.இதனை,
"நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால்
செல்வன நிச்சயமே குதம்பாய்
செல்வன நிச்சயம்" (குத.சித் .பா.112)
என்ற பாடலில் இறக்கின்ற போது நம்முடன் வருபவை எவை என்பதை எடுத்து கூறுகின்றார்.
தவச்சிறப்பு
காமத்தை வென்று கடுமையான தவத்தைச் செய்பவரைக் கண்டு எமனும் பயப்படுவான். பொய் கூறுவதை வெறுத்து ஒதுக்கி மெய்யை விரும்புவோர் தான் உண்மையானவர் என்றும், பிற உயிர்களைக் கொல்லாத விரதமும், குளிரைத் தாங்குதல், பிறர் பசியை நீக்குதல். நல்ல விரதங்கள் என்கிறார். மேலும் "யான் எனது" என்னும் பற்றுகளை விட்டவன் வானவர் ஆவார். இதனை,
"யான் என்னது என்னும் இருவகைப் பற்றற்றோன்
வானவன் ஆவானடி குதம்பாய்
வானவன் ஆவானடி" (குத.சித் .பா.129)
என்னும் பாடல் மூலம் தவத்தின் சிறப்பு அறியமுடிகிறது.
மருத்துவம்
மருத்துவம் என்பது பல்வேறு நோய்களையும் தடுப்பன மற்றும் தீர்ப்பனவுமான பல்வேறு நலப்பொருள்களின் தொகுதியாகும் நோயின் குணத்தை நன்கு ஆராய வல்லவனே மருத்துவன் ஆவான். அருத்தன் என்ற சொல் வழக்கு சங்க காலம் முதலே வழக்கத்தில் நிலவி வந்துள்ளதை, உறையூர் மருத்துவர், மருத்து நல்லச்சுதனார் எனும் சங்கப்புலவர்களின் பெயர்களைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். மருத்துவர் தாமோதரன் இயற்றிய,
"திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
மருந்துபோல் மருந்து ஆகி மனன்உவப்ப" (கலி.17)
மனவரும் பாலைகலியின் பாடலில் "மருத்துவன்" எனும் சொல் இருந்ததை அறியமுடிகின்றது. வாதம், பித்தம், சிலேத்துமம் மூன்று பிணிக்கூறுகளை அறியாதவர்கள் எந்த நோயனையும் தீர்க்க முடியாது என்கிறார். மேலும், நாடியின் சத்து வகை கொண்டு எந்த தாதுவில் கோளாறு என அறிபவனே உண்மையான மருத்துவன் என்பதனை,
"சத்துவகை தாது தன்னை அறிந்தவன்
சுத்த வயித்தியனே குதம்பாய்
சுத்த வயித்தியனே" (குத.சித் .பா.167)
என்ற பாடலில் உண்மையான மருத்துவன் எப்படி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
"நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்" (குறள்.948)
என்னும் குறளில் வள்ளுவர் நோய் இன்னதென்று ஆராய்ந்து நோயின் காரணத்தையும் ஆராய்ந்து அந்த நோயைத் தீர்ப்பவனே மருத்துவன் என்கின்றார்.
தலங்கள்
இறைவன் உறையும் தலங்களைத் தரிசிப்பதும், வேண்டுதல் வைப்பதும் தமிழர்களின் பண்பாகும். தமிழகத்தில் ஒவ்வொரு இறைவனுக்கும் தனித்தனி தலங்கள் காணப்படுகின்றன. நம்முடைய தூய்மையான உள்ளம் போன்று தெய்வம் குடியிருக்கும் சுத்தமான தலங்கள் வேறில்லை என்கிறார். மேலும், அன்புடைய பக்தர்களின் மனக்கோயிலே கடவுள் இன்புற்றிருக்கும் கோயிலாகும். இதனை,
"அன்பான பக்தர் அகக்கோயில் கர்த்தற்கே
இன்பான கோயிலடி குதம்பாய்
இன்பான கோயிலடி" (குத.சித் .பா.180)
என்னும் பாடலில் எடுத்துரைக்கின்றார். இதே கருத்திளை,
'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானாற்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே" (திரும.1823)
என்ற திருமூலர் பாடலில் உடம்பைக் கோயில் என்றும் நடமாடும் கோயில் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அறியாமை
இன்று படித்தவர்களும், படிக்காதவர்களும் நாளும் கோளும் பார்த்து நல்ல செயலைச் செய்கின்றனர் மருத்துவம் பார்ப்பதற்கும் நல்லநாள் பார்ப்பது அறியாமையே யாகும். தீராத நோயில் துன்பப்படுபவர்களுக்கு நாளும் கோளும் பார்த்து மருத்துவம் செய்வது அறியாமை என்பதனை,
"மீளா வியாதியில் மேன்மேலும் நொந்தார்க்கு
நாளேது கோளேதடி குதம்பாய்
நாளேது கோளேதடி" (குத.சித் .பா.191)
எனும் பாடலில் அறியாமையைப் பற்றி எடுத்துரைக்கின்றார். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியிலும் சகுனம் பார்ப்பதும், நற்சொல் கேட்பதும் மக்களிடையே காணப்படுகின்றது. சகுனம் பார்த்தல், சந்தியா வந்தனம் செய்தல் முதலிய மதிக்கப்பெறும் சடங்குகள் யாவும் அறியாமையின் விளைவுகள் என்பதனை,
"சாற்றும் சகுனங்கள் சந்தியா வந்தனம்
போற்றும் அறிவீனமே குதம்பாய்
போற்றும் அறிவீனமே (குத.சித் .பா.204)
எனும் பாடல் வழி தெரிவாகத் தெரிகின்றது.
முடிவுரை
இறைவன் சோதி வடிவில் இருக்கின்றான் என்றும், ஐம்புலன்களை அடக்கினால் முக்தி அடையலாம் என்றும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. உடலின் இழிவு நிலையினையும், பொருளாசைப் பற்றியும், பொய்த்தவ ஒழுக்கத்தினைப் பற்றியும், செல்வநிலையாமை பற்றியும் கூறப்பட்டுள்ளது. உயிரோடு செல்லக்கூடியவை எவை என்றும் தவச்சிறப்பின் மேன்மையினையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. உண்மையான மருத்துவர் பற்றியும் கூறப்பட்டுள்ளது. தூய்மையான உள்ளம் தான் சுத்தமான தலம் என்றும், நாளும் கோளும் பார்த்து மருத்துவம் செய்வது அறியாமை என்றும் எடுத்துரைத்துள்ளார். குதம்பைச் சித்தரின் பாடல்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகளும், அறவுரைகளும் எடுத்தியம்புகின்றன. இவற்றை அனைவரும் பின்பற்றினோமென்றால் வாழ்வில் துன்பம் ஏற்படாது என்பது உறுதி.
துணை நின்ற நூல்கள்
1.தமிழ்பிரியன், சித்தர் பாடல்கள், கற்பக புத்தகாலயம், சென்னை.
2.மு.வ, திருக்குறள், பாரி நிலையம், சென்னை.
3.வள்ளலார், அருட்பெருஞ்சோதி அகவல், திருஅருட் பிரகாச வள்ளலார் தெய்வநிலையம், வடலூர்.
4.திருமூலர், திருமந்திரம், ஸ்ரீ செண்பகம் பதிப்பகம், சென்னை.
5. அலிஸ், கலித்தொகை, நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை,
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.