மொழி கற்பித்தலின் முகம் இன்று உலக அளவில் பல்வேறு பரிமாணங்களை எட்டிவிட்டது. நம் மாணவர்களின் கற்றல், மனனம் செய்யும் திறமையை மட்டும் தேக்கிக் கொண்டிருக்க வேண்டிய தேவை இன்று இல்லை. கற்றலின் மூலம் மாணவர்களின் கேட்டல், படித்தல், பேசுதல், எழுதுதல் மற்றும் சூழல் அறிவு, வரலாற்று அறிவு, தேவைகளைத் திறன்பட அடையத் தன்னைத் தகுதிபடுத்திக் கொள்ளும் அறிவு போன்ற பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் கல்விக்கொள்கைகளை உள்ளீடாகக் கொண்டு கற்றல் கற்பித்தல் தொடர்பான புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமே இன்றைய உலகமயமாதல் சூழலில் மொழிக்காப்பு முயற்சிகள் முழுவெற்றி பெற முடியும். “பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி மொழியாகும். அவன் வாழ்ந்ததும், வாழப்போவதும் மொழியாலே தான். மக்கள் வாழ்வில் பிறந்து மக்களால் வளர்க்கப்பட்டு மக்களின் வாழ்வை நாகரிகமுடையதாக உயர்த்தி வரும் அரிய கலை மொழியே. ஆறறிவு பெற்ற மனித சமுதாயத்தையும் ஐந்தறிவு கொண்ட விலங்குகளையும் வேறுபடுத்துவது மொழி. மனித வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க வேண்டிய உணர்வோடு முயன்று வந்த முயற்சியின் முற்றிய வளர்ச்சியே இன்றைய மொழியாகும்.” எனினும் தொடக்க காலத்தில் மனிதன் விலங்குகளிடமிருந்தே மொழியைக் கற்றுக்கொண்டான். விலங்குகள் காட்டும் சைகை, எழுப்பும் ஒலி ஆகியவற்றின் அடிப்படையில் மொழியைக் கற்கத் தொடங்கினான். மனிதனின் தோற்றம் குரங்கிலிருந்து வந்தது (பரிணாம வளர்ச்சி) என்று உறுதிப்படுத்தும் அறிவியல் ஆராய்ச்சியில், குரங்கு எழுப்பும் 31 வகை சைகைகளையும், 18 வகை முகபாவங்களையும், சில ஒலிகளையும் பயன்படுத்தி தன்னுடைய கருத்தினை வெளிப்படுத்த முயற்சிப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு விலங்கிலிருந்து மொழியைக் கற்கத்தொடங்கிய மனிதன் படிப்படியாக எழுத்துகளையும், சொற்களையும், தொடர்களையும் ஏற்படுத்தத் தொடங்கினான். வரிவடிவம், இலக்கியம், இலக்கணம் எனப் பல்வேறு வளங்களைப் பெருக்கி இன்று உலக மொழிகளுள் முன்னோடி மொழியாகவும் உயர்தனிச் செம்மொழியாகவும் தமிழ்மொழியை உயர்த்திய பெருமை ஒவ்வொரு தமிழனையும் சாறும். “ஆற்றங்கரை ஓரங்களில் வாழ்ந்த மக்களே நாகரிக வளர்ச்சி பெற்றுள்ளனர்” 2 என்ற கருத்திற்கு தக்க சான்றுகளாகச் சிந்து சமவெளி, ஹரப்பா, மொகஞ்சதரா நாகரிகங்கள் அமைந்துள்ளன.

மரபும், மரபு மாற்றமும்

எந்த ஒரு மனித சமுதாயம் இலக்கண மரபுகளின்படி தாய்மொழியைப் பயன்படுத்துகிறதோ அந்த சமுதாயமே சிறந்த சமுதாயமாகும். பண்டைத்தமிழகம் சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளாகப் பிரித்து ஆட்சி செய்யப்பட்டது. பிற்காலத்தில் சேர நாட்டைச் சேர்ந்த கொங்கு மண்டலத்தில் தமிழ்மொழி முறையாக இலக்கண முறைப்படி பயன்படுத்தப்பெறாத நிலையில், வட்டார மொழிவழக்குகள் பெருகி அதுவே ஒரு கிளைமொழியாக (மலையாளம்) தோன்றக் காரணமாகிவிட்டது என்பது மொழி வரலாறு. அதே போன்ற சூழல் தற்பொழுது உலகமயமாதல் பின்னணியில் நிகழ வாய்ப்புள்ளது. இன்று தாராளமயமாதல் (liberalization), தனியார்மயமாதல் (Privation), உலகமயமாதல் (Globalization) சூழலில் தமிழ்மொழியின் வளர்ச்சி கேள்விக்குறியாகிவிட்டது. உலகமயமாதல் சூழலில் தமிழ்மொழி கற்றல், கற்பித்தல், உலக மொழிகளுக்கு இணையாக வளரும் நிலை, நவீன சாதனங்களில் தமிழைப் பயன்படுத்தும் முறை, புதிய கலைச்சொற்களை உருவாக்குதல், மொழிபெயர்த்தல், தமிழ்மொழிக்குப் புதிய அணிகலன்களை (வளங்களை) உருவாக்குதல், உலகத்தமிழர்களை ஒரு குடையின் கீழ் இணைத்தல் எனப் பல்வேறு பங்களிப்புகளை இன்றைய நவீன, விவேகக் கையடக்கத்தொலைபேசிகள் வழங்கி வருகின்றன. பெரும்பாலான ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள் உள்ள வாசகர்களை மட்டும் நோக்கியே அக்கறை காட்டுகின்றன. ஆனால் இன்று இணையம் என்னும் அறிவியல் கண்டுபிடிப்பு உலகத்தமிழர்களை இணைக்கும் பாலமாக உள்ளது என்றால் அது மிகையாகாது. விரல் நுனியில் விரியும் விவரக் களஞ்சியமாக இணையம் இருந்தபோதிலும் அதனைப் பயன்படுத்தக் கணினி, இணைய இணைப்பு, மாற்றி (ஆழனயஅ) எனப் பல்வேறு கருவிகள் தேவைப்படுகின்றன. இன்று உலகம் அதிவேகமாக சுழன்று கொண்டிருக்கும் வேளையில் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் மனிதனுக்குக் கிடைத்த அறிய சாதனமே நவீன, விவேக அலைபேசிகள் ஆகும்.

தொழில்நுட்பமும், தமிழும்

வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்ப உலகில் நவீன மற்றும் விவேகக் கையடக்கத் தொலைபேசிகளின் (Smart Phones) வருகை மனித சமுதாயத்தின் வரமாக அமைந்துள்ளது. இணையத்தைப் பயன்படுத்திக் கணினி வழி செயல்பட்ட மனிதன் அதே பணிகளை நவீன கையடக்கக் கருவிகளிலும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டான். இந்தியாவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வில், “கழிப்பறையைப் பயன்படுத்தும் மக்களைக் காட்டிலும் (40%) கைபேசிகளைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை (80%) அதிகமாக உள்ளது” 3. நடப்பாண்டில் “உலக அளவில் செல்போன் பயனாளர் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம் (86 கோடி பேர்) என்ற புள்ளி விவரத்தையும் தருகிறது” 4 இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI). ஆரம்ப காலகட்டங்களில், அலைபேசி சந்தையில் நோக்கியா (Nokia), மோட்டரோலா (Motorola), சோனி எரிக்சன் (Sony Ericsson), சாம்சங் (Samsung), எல்.ஜி ((L.G) ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்நிறுவனங்கள் தயாரித்த ஆரம்ப கால அலைபேசிகள் ஒலி வழித் தகவல் தொழில் நுட்ப வசதி கொண்டவையாக மட்டுமே இருந்தன. இவை அலைபேசிகள் கண்டுபிடித்த கால கட்டங்களில் மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன.

தொடக்க நிலையில் அலைபேசிகள் தொலைவில் உள்ளவர்களைக் குரல் வழித்தொடர்பு கொள்ளும் நிலையில் மட்டும், (தூரத்தின் அளவை குறைக்கும் வகையில்) அமைந்திருந்தது. அலைபேசி முதலில் ஒரு தகவல் தொடர்பு சாதனமாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று அலைபேசியில் உள்ள வசதிகளால், பல அறிவியல் சாதனங்கள் வழக்கொழிந்து விடும் என்று சொல்லும் அளவிற்கு அலைபேசியில் கணிப்பான் (Calculator), கடிகாரம் (Watch), குறிப்பேடுகள் (Notes), பேருந்து, புகைவண்டிச் சீட்டுகள் முன்பதிவு செய்யும் வசதி (Online Ticket booking), தமிழ், ஆங்கில மொழிகளில் தட்டச்சு செய்யும் வசதி (Type Writing), குறுஞ்செய்தி, நிழற்படம், குறிப்புகள், குரல் அனுப்பும் வசதி (SMS/ Multimedia massage), நேரடி வங்கி சேவைகள் (Online banking), இணைய அகராதிகள் (Internet Dictionary), நேரடித் தொலைக்காட்சிகள் (Online Television), சமுதாய வலைத்தளங்கள் (Social Networks), நேரடி வர்த்தகம் (Online Trading), இணையத் தகவல் சேமிக்கும் பெட்டி (Drop box / Google Drive), நேரடி மொழிபெயர்க்கும் வசதி (Online Translate), இதர இணைய சேவைகள் (Other Internet Service) என அனைத்தையும் ஒருங்கே அமையப்பெற்ற அதிநவீன அலைபேசிகள் சந்தையில் வலம் வருகின்றன. இந்த நிலையில் மனிதனின் பல்வேறு தேவைகளை உணர்ந்து பல்வேறு வகையான குறுஞ்செயலிகள் சந்தையில் வெளிவந்த வண்ணம் உள்ளன. சந்தையில் பல முன்னணி நிறுவனங்கள் கைபேசி மற்றும் கையடக்கக் கணினிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இவ்வகைச் சாதனங்கள் இயங்குவதற்குப் பல இயங்குதளங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க இயங்குதளங்களான, ஆப்பிள், ஆன்ட்ராய்டு, பிளாக்பெரி, விண்டோஸ், சிம்பியான், படா ஆகியவை புழக்கத்தில் உள்ளன. இவ்வகை இயங்குதளங்களில் தமிழ் மொழியில் அமைந்துள்ள செயலிகளை உருவாக்கும் முறைகள், அதில் ஏற்படும் சிக்கல்கள், தமிழ் வழிச் செயலிகளின் உள்ளடக்கம், அதன் பயன்பாடுகள், தமிழ்மொழிவளர்ச்சிக்கு வழங்கிய பங்களிப்பு குறித்த ஒட்டுமொத்த மதிப்பீடாக இவ்வாய்வு அமைகிறது.

இணையம், கணினி பயன்பாட்டின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியை கையடக்கக் கைபேசிகள் பெற்றுள்ளன. தமிழ்மொழி இணையத்தில் இணைந்து, இன்று கைபேசிகளில் புகுந்து வளரத் தொடங்கிவிட்டது. இதனை உணர்ந்த உத்தமம் (INFITT) அமைப்பு பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வந்த நிலையில், கைபேசிகளில் தமிழ்மொழி வளர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் கடந்த 2011 -ஆம் ஆண்டு முதல் கையடக்கத் தொலைபேசிகளில் (Smart phone) தமிழ் மொழியைப் புகுத்துவது, அதில் ஏற்படும் சிக்கல்களைக் கண்டறிந்து களைவது, வளர்ப்பது, மேம்படுத்துவது போன்ற முயற்சிகளில் அதிக கவனம் எடுத்து வருகிறது.

இன்று உலகமயமாக்கலின் விளைவாகப் பல்வேறு பாதிப்புகளும், பயன்களும் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் மொழிக்காப்பு முயற்சி என்பது மிகக்கடினமான சவாலாக மாறிவிட்டாலும், உலகமயமாக்கத்தின் விளைவாக ஏற்பட்ட தொழிற்புரட்சியால் இன்று பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளின் வருகையால் தமிழ்மொழியைக் காக்க புதிய முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. “தமிழன் நிலத்தை அவன் வாழும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையைப் பகுத்தான். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன அவை. தமிழை இயல், இசை, நாடகம் என மூன்றாகப் பிரித்து இலக்கியங்களை வகைப்படுத்தினான். இன்று இணையத்தமிழ் என்ற புதியவகைத் தமிழ் தோன்றி அழியாப்புகழை அடைந்துள்ளது என்றால் அது மிகையாகாது” 5. எனினும் ஆரம்ப காலகட்டத்தில் கணினி, இணையத்தில் தமிழ் மொழியைப் புகுத்துவதில், பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. ஆனால் இன்று அவை அனைத்தும் சரிசெய்யப்பட்டு எட்டாத உயரத்தில் ஏறி, பறக்கத் தொடங்கிவிட்டன. இணையத்தின் வாயிலாக எட்டிய அனைத்துத் தமிழ் வளர்ச்சியையும் அடுத்த தளத்திற்கு (Platform) எடுத்துச்செல்ல வேண்டிய தேவையும் அவசியமும் இன்று ஏற்பட்டுள்ளது. அது கையடக்கத்தொலைபேசிகளில் தமிழைப் புகுத்தும் முயற்சியாகும். பழமையும் சிறப்பும் வாய்ந்த மொழி அனைத்துப் புதிய சாதனங்களிலும் பயன்படுத்தும் பொழுதுதான் அது சிறந்த இடத்தைப் பெறமுடியும்.

ஐ ஃ போனும், தமிழும்

ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பெற்றாலும் உலகில் உள்ள அனைவரும் அதனை விரும்பக் காரணம் அந்ததந்த மொழிகளில் அதன் செயலிகள் (Applications) அமைந்திருப்பதே. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் பொருட்களை விற்பதற்குக் கூட நேரடி முகவர்கள் (Delar) இல்லாத சூழ்நிலையில் இந்தியாவில் , குறிப்பாகத் தமிழகத்தில் அதிக அளவில் ஆப்பிள் ஐஃபோன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதற்கான மிக முக்கியமான காரணம் அதில் இடம்பற்றுள்ள தமிழ் வழி செயலிகளே. ஐஃபோனில் செயலிகள் பிரிவிற்குச் சென்றால் அங்கு ஏறக்குறைய 600 செயலிகளுக்கு மேல் தமிழிலேயே இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் வழிச் செயலிகள் (Tamil Applications)

தமிழ்மொழியில் இடம்பெற்றுள்ள செயலிகள் பல்வேறு பிரிவுகளில் அமைந்துள்ளன. அவற்றை பின்வருமாறு வகைப் படுத்தலாம்.

        மின் இதழ்கள்

        இணைய வானொலிகள்

        தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் - செயலிகள்

        தமிழ் தட்டச்சுக் கருவிகள்

        தமிழ் நேரடி மொழிபெயர்ப்புக் கருவிகள்

        நாளிதழ்கள் - செய்திகள்

        சமுதாய வலைத்தொடர்புகள்

        தமிழ் பிராட்காஸ்ட்

நவீன அலைபேசியில் குழந்தைகளுக்குத் தமிழ்மொழியைக் கற்றுத்தருவதில் பல்வேறு குறுஞ்செயலிகள் உதவி செய்கின்றன. அவை, I write Tamil, Trace Tamil Alphapets-1,2, Tamil Rhymes, Fun 2 Learn Tamil, Tamil Lessons-1,2, Avyaiyaar Books, Tamil Numbers, Tamil Slate, I Tamil Kids, Flash cards Tamil Lessons, ஆத்திசூடி, மழைப்பாடம், செல்லமே செல்லம், தமிழ்ப் பழமொழிகள், சங்கம், தமிழ் எழுத்து, பாட்டி சொன்ன கதைகள் என இவை அனைத்தும் குழந்தைகள் ஆர்வமுடன் தமிழ் எழுத்துகளையும் எண்களையும் எளிதில் கற்றுக்கொள்ள உதவுகின்றன. கூட்டுக்குடும்ப வாழ்விலிருந்து வேலை, பொருளாதாரம் காரணமாக தனித்து வாழும் இன்றைய சமூகத்திற்கு வீட்டில் உள்ள பெரியவர்கள் கதை சொல்லிக் குழந்தைகளை வளர்க்கும் சூழல் இல்லாத நிலையில் பாட்டி சொன்ன கதைகள் எனும் குறுஞ்செயலி இக்குறையை நிவர்த்தி செய்கிறது. தமிழ்ப்பெயர்கள் என்ற குறுஞ்செயலி குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டத் தகுதியான தமிழ்ப் பெயர்களை பட்டியலிடுகின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு பாட்டி வைத்தியம் என்ற குறுஞ்செயலி அருமருந்தாக உள்ளது. இவ்வாறு தமிழ் மொழியின் மரபு சார்ந்த பண்பாடுகளை பறைசாற்றுவதில் தமிழ்க்குறுஞ்செயலிகளுக்கு தனி இடம் உண்டு.

முடிவாக…

மதிப்பீடு என்பது கற்றல் கற்பித்தலின் இறுதியில் கற்பித்தல் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ, எப்பொழுதெல்லாம் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் இடம்பெறவேண்டிய உடன்நிகழ்ச்சியாக மதிப்பீடு நடைபெற்று வருகிறது. மதிப்பீடு மொழி, இலக்கியம் என்பதையும் தாண்டி, இசை, நடனம், விளையாட்டு என எல்லாவகையான கற்றல் கற்பித்தலிலும் இடம்பெற்றுள்ளது. மதிப்பீடு என்பதனை Value, Assessment, Mature, Judgment எனப் பல்வேறு கலைச் சொற்களுடன் இணைத்துப் பார்க்கும் நிலையில் அதன் பொருள் விரிந்து கிடக்கின்றது. இன்றைய கல்வி முறையில் மதிப்பீடுகள் மிகவும் அவசியமாக அமைந்துள்ளது. கல்வி இன்று அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், தரமான கல்வியை வழங்க மதிப்பீட்டின் தேவையை உணர்ந்து கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அந்த வகையில் கல்லூரி ஆசிரியர்களைப் போலவே பள்ளி ஆசிரியர்களுக்கும் புத்தாக்க, புத்தொளிப் பயிற்சிகளை வழங்க வேண்டும். இதில் ஆசிரியர்கள் கற்பித்தலில் புகுத்த வேண்டிய புதிய நடைமுறைகளையும், வழிகளையும் வழங்க வேண்டும்.

இன்றைய கல்விச்சூழலில் தொடக்கக் கல்வி முறைகளில் பல்வேறு மாற்றங்கள் தேவைப்படுகின்றன. ஏனெனில் அடிப்படைக் கல்வி என்பது சரியான அடித்தளத்தை உருவாக்கினால் மட்டுமே சரியான தொடர் கல்விக்குச் சிறந்த ஊக்கமாக அமையும். இதனை அறிந்த இந்திய தேசிய தேர்வு மற்றும் மதிப்பீட்டு மையத்தினைத் தோற்றுவித்த முன்னாள் இயக்குநர் பொன். சுப்பையா அவர்கள் நாடு முழுவதும் 60 மண்டல மையங்களை அமைத்து அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்களின் உண்மையான கல்வி அறிவை சோதிக்கும் வகையில் கல்வி கற்றல், கற்பித்தல், மதிப்பிடுதல் தொடர்பான பயிற்சிகளை வழங்க புதிய திட்டத்தைத் தொடங்கினார். இவ்வாறு மாணவர்களின் உண்மையான வாசித்தல் திறனை மேம்படுத்த புதிய கல்விக்கொள்கைகள் அவசியமாகிறது. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குழுவின் தலைவர் .சு. சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு புதிய பரிந்துரை ஒன்றினை வழங்கியுள்ளார். அதில் குறிப்பாக தொடக்க நிலையில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஐந்தாம் வகுப்பிலிருந்து மட்டும் தேர்வுகள் நடத்தினால் போதுமானது என்பதாகும். இன்றும் பல வெளிநாடுகளில் ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை. ஏனெனில் குழந்தைப் பருவத்தில் அனுபவத்தில் பெறவேண்டிய பல விபரங்கள் பள்ளிகளில் கிடைப்பதில்லை. தொடக்கக் கல்வி என்பது புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு மொழியைப் பயிற்றுவிக்கும்பொழுது அதனை முழுமையான ஆர்வத்துடன் கற்க வாய்ப்புள்ளது.

சான்றெண் விளக்கம்:

1. சு. சக்திவேல், தமிழ்மொழி வரலாறு, ப. 14

2. A. Karmekam kone, Ancient Famous Tamil Poets, Part-1, Pp. 51-52

3. தினமணி நாளிதழ் செய்தி, மதுரைப் பதிப்பு, நாள்: 18-06-2011, ப. 12.

4. புதிய தலைமுறை மாத இதழ், ஜூன் 2013, ப. 63.

5. சி. சிதம்பரம், உள்வழி, ப. 101.


மின்னஞ்சல் :இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.