தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பௌத்தர்கள் மற்றும் சமணர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ஐம்பெருங்காப்பியங்களில் மணிமேகலையும் குண்டலகேசியும் பௌத்த காப்பியங்களாக விளங்குகின்றன.

மலைவளம் காணச்சென்ற சேரன் செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகளுக்கும் சிலப்பதிகார கதையைச் சொல்லி முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே யருளுக என பணித்தவரும் தண்டமிழ் ஆசான் சீத்தலைச் சாத்தனாரே ஆவார். சீத்தலைச் சாத்தனார் பௌத்த துறவி.இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கோவலன் கண்ணகியின் வரலாறான சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் வரலாற்றை மணிமேகலை எனும் முதல் சமய மற்றும் புரட்சிக் காப்பியமாக விழாவறை காதை முதல் பவத்திறம் அறுகவென பாவை நோற்றக் காதை ஈறாக முப்பது காதைகளில் படைத்தார்.

மணிமேகலை கதைச்சுருக்கம்:

கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாகப் பிறந்தவள் மணிமேகலை. கடல் தெய்வமான மணிமேகலை என்பதையே தன் மகளுக்கு பெயரிட்டு மகிழ்ந்தான். கோவலன் கொலையுண்டதை அறிந்து மாதவி மிகுந்த துயரத்தை அடைகிறாள். மணிமேகலை இளம் வயதிலேயே பௌத்த துறவியாகிறாள்.உவவனம் சென்ற மணிமேகலையையும் அவள் தோழி சுதமதியையையும் பின்தொடர்கிறான் உதயகுமாரன். மணிமேகலையின் முற்பிறவி காதலனனான அவன் மணிமேகலையை மணக்க விரும்புகிறான்.அவனின் தொல்லையிலிருந்து அவளை மீட்ட மணிமேகலா தெய்வம் மணிபல்லவ தீவில் அவளை விடுகிறது. அங்கு மணிமேகலையது முற்பிறப்பு உணர்த்தப்படுகிறது. கோமுகிப் பொய்கையில் நிறைநிலா நாளில் ஆபுத்திரனின் அமுத சுரபி அடைகிறாள்.ஆதிரை எனும் பத்தினியிடம் முதற் பிச்சையேற்கிறாள். அள்ள அள்ள குறையாத அமுத சுரபியைக்கொண்டு காயச்சண்டிகையின் யானைப்பசியைப் போக்குகிறாள். தொடர்ந்து உலக மக்களின் பசிப்பிணியைப் போக்குகிறாள். உதயகுமாரனிடம் தப்புவிக்க காயச்சண்டிகை உருவம் பெற்றுச் செல்ல அதையும் அறிந்து தொடர்ந்து செல்கிறான். ஆனால் காயச்சண்டிகையின் கணவன் காஞ்சனன் தன் மனைவியை பின்தொடரும் பிற ஆடவனாகக் கருதி உதயகுமாரனைக் கொல்கிறான். அவனின் தாயான அரசி மணிமேகலையை சிறையிலடைக்கிறாள். உண்மையை உணர்த்தி சிறைகளையெல்லாம் மாற்றி அறக்கோட்டமாக்குகிறாள். சிறைவிட்டு வெளியேறி அறவண அடிகள் உள்ளிட்ட குருமார்களிடம் உபதேசம் பெறுகிறாள். புத்தரின் திருவடிகளை பணிந்து தொண்டு செய்து உய்கிறாள் என காப்பியம் நிறைவுபெறுகிறது.

துறவு:

மணிமேகலை ஒரு புரட்சிக் காப்பியமாக எழுதப்பட்டுள்ளது. முதல் சமயக் காப்பியமாகவும் பெண்ணை தலைமை மாந்தராகக் கொண்ட காப்பியமாகவும் துறவு காப்பியமாகவும் படைக்கப்பட்டுள்ளது. மணிமேகலை தன் தந்தைக்கு நேர்ந்த துன்பமறிந்து இளம் வயதிலேயே துறவு கொள்கிறாள்.திருமகளையொத்த அழகும் இளமையும் கொண்ட இளம்பெண் மணிமேகலை துறவு மேற்கொண்டதை அறிந்த மன்மதன் தன் வில்லை மண்ணில் வீசி விட்டு வெறுமனே நின்றானாம்.

“படையிட்டு நடுங்கும் காமன் பாவையை
ஆடவா் கண்டால் அகறலும் உண்டோ?” (மலா்வனம் புக்க காதை)

பரத்தமை மரபில் வந்த சித்ராபதி பெயா்த்தி மாதவியின் மகள் அச்சூழலிலிருந்து விடுபட்டு தூய துறவியாகிறாள்.

“காவலன் பேர்ஊர் கனையெரி ஊட்டிய
மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள்” (ஊரலர் உரைத்த காதை) என உலகியல் வாழ்விலிருந்து விடுபட்டு துறவு வாழ்வில் நாட்டம் கொண்டதை விளக்குகிறார்.

மணிமேகலையைத் தேடி வரும் உதயகுமாரனிடம் அவள் உம்மை விரும்பவில்லை துறவையே விரும்புகிறாள் என பதிலுரைக்கிறாள்.

“முருகச் செல்வி முகந்துதன் கண்ணால்
பருகாள் ஆயின்இப் பைந்தொடி நங்கை
ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி
காமற் கடந்த வாய்மையள் என்றே
தூமலா்க் கூந்தல் சுதமதி உரைப்ப”

என்று சுதமதி மணிமேகலையை தூய தவ வடிவத்தனளாக அறிமுகப்படுத்துகிறாள்.

பசிப்பிணி போக்குதல்:

பசி வந்திட பத்தும் பறந்துபோம் என்கிறாள் ஔவைப்பாட்டி. மணிமேகலையோ

“குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடுஉம்
நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்
பூண்முலை மாதரோடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி!”

என்று கூறுகிறது.

மணிமேகலையை விரும்பும் உதயகுமாரனிடமிருந்து காக்க மணிமேகலா தெய்வம் அவளை மணிபல்லவத் தீவில் கொண்டு விடுகிறது. அங்கு கோமுகிப் பொய்கையில் முன்பு ஆபுத்திரனிடமிருந்த அமுதசுரபி கிடைக்கிறது. அதில் முதன்முதலாக ஆதிரையிடம் பிச்சையேற்று அள்ள அள்ளக் குறையாத உணவினைக்கொண்டு உலக மக்களின் பசிப்பிணியை நீக்குகிறாள்.

மனிதனுடைய அன்றாடத் தேவைகளான உணவு உடை இருப்பிடம் ஆகியவற்றை வழங்குதலே அறம் என்பதை,

“அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள் மண் உயிர்க்கெல்லாம்
உண்டியும் உடையும் உறையும் அல்லது
கண்டது இல்” (ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை) என்கிறாள்.

“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே!” (பாத்திரம் பெற்ற காதை)

என்கிறாள்.

“ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை”

எனவும் இலக்கணம் கூறுகிறார்.இவ்வாறு வறியவர்களின் பசி நீக்க உணவளித்தலே தலையாய அறமாக மணிமேகலை வலியுறுத்துகிறது.

யாக்கை நிலையாமை:

இளமையும் யாக்கையும் நிலையானவை அல்ல; செல்வமும் நிலையற்றவை; அறமே நிலைத்தது, என்றும் துணையாக இருப்பது என்பதை

“இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பொருள் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே
விழுதுணையாவது” (சிறைசெய் காதை)

என்று நிலையாமையை உணர்ந்து அறச்செயல்களைச் செய்துய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது மணிமேகலை.

உதயகுமாரன் சாவினால் வருந்தும் அவன் தாயிடம் மணிமேகலை ஆறுதல் கூறுவதாக வரும் பகுதியில் உயிர் என்பது வேறு ஒரு பிறவியில் வேறோர் பிறவி எடுக்கும். அதனால் எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்கிறாள்.

“உடற்கழுதனையோ உயிர்க்கழுதனையோ
உடற்கழுதனையேல் உன்மகன் தன்னை எடுத்துப்
புறங்காட் டிட்டனர் யாரோ? உயிர்கழுதனையேல்
உயிர்புகும் புக்கில் செயப்பாட்டு வினையால்
தெரிந்துணர்வு அரியது அவ்வுயிர்க் கன்பினை யாயின்
ஆய்தொடி எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும் (சிறைவிடு காதை)

என்கிறாள். நிலையற்ற வாழ்வில் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்கிறாள்.

பிறவித்துன்பம்:

முற்பிறவி பாவத்தினாலே அடுத்தடுத்த பிறவிகள் அமைகிறது. பிறவி துன்பத்திற்கு இடமளிப்பது.பாவங்கள் நீங்கி வாழ்வதொன்றே பிறவித் துன்பத்தை அறுக்கும் வழியாகும் என்பதை

பிறந்தோர் உறுவது துன்பம் பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேரின்பம் (ஊர்அலர் உரைத்த காதை)

என்று கூறுகிறார்.

பாவங்கள் நீங்குதல்:

கள்ளுண்ணாமை, கொல்லாமை முதலான அறங்களை வலியுறுத்தி நம் செயலுக்கேற்பவே சுவர்க்கமும் நரகமும் கிடைக்கும் என்கிறது மணிமேகலை

“மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர்
கேளாய் பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின்
நல்லறஞ் செய்தோர் நல்லுல கடைதலும் அல்லறஞ்
செய்தோர் அருநர கடைதலும் உண்டென
உணர்தலின் உரவோர் களைந்தனர்.(ஆதிரை பிச்சையிட்ட காதை)

என்று கள்ளுண்ணுதலும் தம் குடிமக்களை துன்புறுத்தலும் செய்யக்கூடாது. நன்மை செய்பவரே சொர்க்கம் அடைவா். தீமைகளையும் பாவங்களையும் செய்பவா் நரகம் அடைவா் பிறவிகள் பல எடுத்தும் துன்புறுவா். எனவே நற்செயல்கள் செய்து வீடுபேறு பெறுக என வலியுறுத்துகிறது.

பத்தினி போற்றல்:

தமிழரின் பண்பாட்டில் தலைசிறந்ததாகக் கருதப்படுவது கற்பு நெறியாகும்.இதனை

நிறையில் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா
பெண்டிர் தம்குடி என்றும்
மண்டிணி ஞாலத்து மழைவளம் தரும்
பெண்டி ராயின் பிறர்நெஞ்சு புகா அர்”

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யென பெய்யும் மழை”

என்ற வள்ளுவத்தின் வழியில் பத்தினித் தெய்வங்களைப் போற்றுகிறது மணிமேகலை.

சிறைக் கோட்டம் அறக்கோட்டம் ஆக்கியது:

காயச்சண்டிகையின் உருவில் அமுத சுரபி கொண்டு சிறையில் இருக்கும் மனிதர்களுக்கு உணவினைக் கொடுத்து பசி போக்குகிறாள் மணிமேகலை. இதனை அறிந்த மாவண்கிள்ளி எனும் மன்னன் மணிமேகலையை சந்தித்து உரையாடுகிறான்

பசி என்னும் கொடுமையே மனிதர்களை திருடுதல் முதலிய தீமைகளைச் செய்ய தூண்டுகிறது. எனவே மக்களின் பசி எனும் வறுமை போக்கி சிறைச்சாலைகளையெல்லாம் இடித்து அறச்சாலைகள் உருவாக்க துணை செய்கிறாள். மணிமேகலையின் அறிவுரைக் கேட்ட மாவண்கிள்ளி சிறையிலிருந்தோரை விடுவித்து பெருந்தவத்தோர் பலரால் அறமும் ஞானமும் ஆகிய ஒழுக்கங்களை எய்துமாறு சிறைக்கோட்டத்தை கறைப்பட்டோர் இல்லாத அறக்கோட்டமாக்கினான்.

“சிறையோர் கோட்டம் சீத்து அருள்நெஞ்சத்து
அறவோர்க்கு ஆக்குமது வாழியர் என்று கூற
அருஞ் சிறை விட்டு ஆங்கு ஆய்இழை உரைத்த
பெருந் தவர் தம்மால் பெரும் பொருள் எய்த
கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம்
அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து”

என்று சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கி அறம் செய்கிறான்.

சில முடிபுகள்:

பொதுவான உலகியல் ஆசைகள் நிறைந்த வாழ்விலிருந்து விடுபட்டு எளிமை, சேவை, துறவு, பசியொழிப்பு, மதுவொழிப்பு, பரத்தமையொழிப்பு போன்ற அறச்சிந்தனைகளை வலியுறுத்துகிறது மணிமேகலை காப்பியம்.பாவங்கள் நீங்கிய தூய பொதுநலன் சார்ந்த வாழ்வையே பெரிதும் வலியுறுத்துகிறது.அதுவே அடுத்த பிறவியெனும் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான என்பதை வலியுறுத்துகிறது.இல்லற வாழ்விலும் எளிமை, தூய்மை, விருந்தோம்பல், கற்புடைமை, சொல்திறம்பாமை ஆகிய அறங்களை வலியுறுத்துகிறது. தூய தவவாழ்வும் பசியொழிப்பும் உயிர்களிடத்தில் அன்பும் கருணையும் கொள்ளுதலுமே மணிமேகலையின் சாரங்களாகக் கொள்ளலாம்.புத்தநெறி சிந்தனைகளை விளக்கும் தர்க்கங்கள் மணிமேகலையின் தனி அடையாளமாகவும் விளங்குவதை அறியலாம்.

உசாத்துணை நூல்கள்:

1. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்.
2. திருக்குறள் - திருவள்ளுவர்
3. நல்வழி - அவ்வையார்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.