முகப்பு:

ஒலிகள் தொடர்ந்து பொருளை உணர்த்தும் அமைப்பை எடுத்துக்காட்டுவது மொழியின் இலக்கணமாகும், மொழியின் இயல்பை விவரிப்பதே இலக்கணம் என்பர். மொழி என்பது ஒலி மற்றும்  வரிவடிவத்தைச் சார்ந்த்து. வரிவடிவம் அவ்வப்போது மாற்றம் அடையலாம். புது வரிவடிவங்களும் எளிதில் இடம்பெற்றுவிடலாம் இவ்வகையான மாற்றங்களை காலப்போக்கில் ஏடுகளில் பதிந்து மொழியின் தன்மை சிதையாமல் காப்பதே இலக்கணத்தின் நோக்கம் எனலாம். இவ்வளப்பரிய செயல்களை தம்முள் கொண்டிருக்கும் இலக்கணம் தன்னை தாமே எவ்வாறு கட்டமைத்துக் கொள்ளவேண்டும் என்ற வரையறையும் இலக்கணத்திற்கு உண்டு. அவற்றினைக் கோட்பாடுகளாக இலக்கணிகள் தம் படைப்பினுள் வைத்து இலக்கணம் அமைத்திருப்பர். அவ்வாறு அமையப்பெற்றது இவ்விலக்கண அமைப்புமுறைக் கோட்பாடு ஆகும். இக்கோட்பாட்டினுள் நன்னூலில் இடம்பெற்றுள்ள வினையியல் எவ்வாறு ஆக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கும் முகமாக இக்கட்டுரை அமையப்பெறுகிறது.

கோட்பாடு-பொருள் விளக்கம்

கோட்பாடு என்ற சொல்லுக்குக் கொள்கை, நிலைமை, கொண்டிருக்கும் தன்மை, அனுசரிப்பு என்று கழகத் தமிழ் அகராதி பொருள் விளக்கம் தருகிறது (கழகத் தமிழ் அகராதி, ப.406). மேலும் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கோட்பாடு எனும் சொல்லுக்கு “ஒரு துறையில் ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்றுக்களின் தொகுப்பு (கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, 381). இதன்வழிக் கோட்பாடு என்பது அமைப்பு முறையை அடிப்படையாகக் கொண்ட கூற்றுகளின் தொகுப்பு என்ற கருத்தாக்கம் பெறப்படுகிறது.

அமைப்பு முறைக்கோட்பாடு- விளக்கம்

அமைப்பு முறைக்கோட்பாடு என்பது உலக வழக்கு செய்யுள் வழக்கினை அடிப்படையாக கொண்டு இலக்கணம் நுவலும் மரபுவழிப்பட்ட இலக்கண நூல்களின் பொருண்மையின் வழி உள்ளுறை ஆக்கம் பெறுவதே இக்கோட்பாட்டின் விளக்கமாக அமைகிறது.

அமைப்பு முறைக்கோட்பாட்டின் வகைப்பாடு  

1.பொருண்மை அமைப்பு முறைக்கோட்பாடு
2. நூற்பா அமைப்பு முறைக்கோட்பாடு

இரண்டு இலக்கண அமைப்பு முறைக்கோட்பாடுகளைக் கொண்டது இக்கோட்பாடு அக அமைப்பின் ஊடே தோன்றுவது. இவ்வமைப்பு முறைக்கோட்பாட்டின் வழி இலக்கணங்களின் கட்டமைப்பு, ஒழுங்கமைவு இலக்கணம் கூறும் முறை முதலியவற்றை துல்லியமாக அறிய இயலும்.

வரிசை எண்
பொருண்மை அமைப்புமுறை
நூற்பா அமைப்பு முறை

1
ஒற்றைப் பொருண்மை
விளக்கமுறை

2
இரட்டைப்பொருண்மை
விதிமுறை

3
பன்முகப்பொருண்மை
விதியும் விளக்கமும்

 
வினையியலில் இலக்கண அமைப்பு முறைக்கோட்பாடு:

பொருண்மை அமைப்பு முறைக்கோட்பாடு என்பது இலக்கணி தம் படைப்பில் தாம் கூற விரும்பும்  கருத்தினை  நூற்பாவில் ஒரு பொருள் படவே இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பொருண்மை அமையும் படி நூற்பா இயற்றுவர் அவற்றின் அடிப்படையில் தோன்றுவது இக்கோட்பாடாகும்.

1.பொருண்மை அமைப்பு முறைக்கோட்பாட்டின் வகைகள்:

1. ஒற்றைப் பொருண்மை

ஒற்றைப் பொருண்மைக் கோட்பாடு என்பது இலக்கணி தாம் படைக்க விரும்பும் படைப்பினை நூற்பாவில் ஒற்றைப் பொருண்மைக் கொண்ட கருத்தினை மட்டுமே பதிவதாகும்.

”அன்ஆன் இருமொழி ஆண்பால் படர்க்கை” (நன் 2.2.6)
அல் ஆல் இருமொழி பெண்பால் படர்க்கை  ( நன் 2.2.7)
”அர் ஆர் பவ்வூர் அகரமாற் ஈற்றல்
பல்லோர் படர்க்கைமார் வினையோடு முடிமே’’ ( நன் 2.2.8)

பொருள்:
ஆண்பால் படர்க்கை அன் ஆன் விகுதிகளைப் பெற்று வரும்.
பெண்பாற் படர்க்கை அள் ஆள் விகுதியைப் பெற்று வரும்.
பலர்பால் படர்க்கை அர் ஆர் மார் என்ற விகுதிகளைப் பெற்று வரும். மேற்சுட்டிய விளக்கத்தின் வழி ஒற்றைப் பொருண்மைக் கோட்பாடு பொருந்தி வருவதை அறிந்துக் கொள்ள முடிகிறது.

2. இரட்டைப் பொருண்மைக் கோட்பாடு:

இரட்டைப் பொருண்மைக் கோட்பாடு என்பது இலக்கணி படைக்க விரும்பும் இலக்கணத்தினுள் இரண்டு பொருண்மைகளைச் சுட்டும் விதமாக இலக்கணம் படைப்பதே இக்கோட்பாட்டின் விளக்கமாக அமைகிறது.

“பொருள் முதல் ஆறினும் தோற்றி முன் ஆறனுள்
வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பி” (நன்-2.2.2)

பொருள்:
பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் எனும் ஆறன் அடிப்படையில் தோன்றும் எனவும் செய்பவன் கருவி போன்ற ஆறனுள் செய்பவனை மட்டும் விளக்குவது குறிப்புவினைச் சொல் ஆகும். இந்நூற்பாவினுள் இரண்டு கருத்துக்கள் இடம் பெற்றதால் இரட்டைப் பொருண்மைக் கோட்பாடு பொருந்தி வருவதனை அறிந்து கொள்ள முடிகிறது.

 3. பன்முகப் பொருண்மைக் கோட்பாடு

பன்முகப் பொருண்மைக் கோட்பாடு என்பது இலக்கணி தம் இலக்கணப் படைப்பினுள் இரண்டிற்கு மேற்பட்ட விதியினையோ அல்லது விளக்கத்தினையோ சுட்டுவது இக்கோட்பாட்டின் விளக்கம் ஆகும்.

ஆம் ஆம் என்பன முன்னிலையாரையும்
எம் ஏம் ஓம் இவை படர்க்கையாரையும்
உம்மூர் கடதற இருபா லாரையும்
தன்னொடு படுக்கும் தன்மைப் பன்மை    ( நன்-2.2.13)

பொருள்:
அம், ஆம் என்னும் இரண்டு விகுதிகளை ஈற்றில் கொண்ட சொற்கள் முன்னிலை இடத்தார்குரிய வினைமுற்றுக்கள் ஆகும். ஏம்,ஏம், ஓம் என்னும் மூன்று விகுதிகளை ஈற்றில் கொண்ட சொற்கள்  படர்க்கை இடத்தார்க்குரிய வினைமுற்றுக்கள் ஆகும். உம் ஊர்ந்த கடதற என்னும் விகுதிகளை ஈற்றில் கொண்ட சொற்கள் முன்னிலை,படர்க்கை என்னும் ஈரிடத்தாரையும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மையுடன் வரும் என்பது பொருள் விளக்கம் ஆகும். இங்கு இரண்டிற்கு மேற்பட்ட பொருண்மைகள் இடம் பெற்றமையால் இவை பன்முகப் பொருண்மைக் கோட்பாட்டுடன் பொருந்தி வருகிறது எனலாம்.

2. நூற்பா அமைப்புமுறைக் கோட்பாடு

நூற்பா அமைப்புமுறைக் கோட்பாடு என்பது இலக்கணி தான் கூற விரும்பும் கருத்தினை நூற்பாவினுள் பொதிந்து கூறும் போது விதியாகவோ விளக்கமாகவோ அல்லது விதியும் விளக்கமும் இணைத்து கூறுவது இக்கோட்பாட்டின் ஆக்கமாகவும் பொருண்மையாகவும் திகழ்கிறது.

நூற்பாஅமைப்புமுறைக்கோட்பாட்டின் வகைப்பாடு

1. விளக்கமுறை
2. விதிமுறை
3. விதியும் விளக்கமும்

என்று நூற்பா அமைப்புமுறைக் கோட்பாடானது மூன்று நிலைகளில் நின்று இலக்கணம் படைத்து மொழியின் இயல்பினையும் கட்டமைப்பினையும் அமைப்பொழுங்காங்கத்தினையும்  விளக்குகின்றது.

1. விளக்கமுறைக் கோட்பாடு

விளக்கமுறைக் கோட்பாடு என்பது நூற்பாவில் விதியினைச் சுட்டாது விளக்கத்தினைக் கூறுவது இதன் பொருளாகும். தமிழ் இலக்கணம் கூற விழைகையில் விளக்கத்தினையோ அல்லது விதியினையோ குறிப்பதாக இலக்கணம் படைப்பது இலக்கணியின் இலக்கணப் படைப்புத் திறனாம் அவற்றில் வெளிப்படுவது விதியாக இல்லாது விளக்கமாக அமைந்திருப்பின் இக்கோட்பாடானதுஆக்கம் பெறுகிறது எனலாம்.
அவைதாம்

முற்றும் பெயர் வினைஎச்சமும் ஆகி
ஒன்றற்குஉரியவும் பொதுவும் ஆகும்   (நன்-2.2.3)

தெரிநிலையாகவும் குறிப்பாகவும் வரும் வினைச்சொற்கள் முற்றுவினை, பெயரெச்சம், வினையெச்சம் என மூவகைப்படும். இவை திணை பால் இடங்களுள் பொதுவாக வரும் என்பது நூற்பாவின் பொருண்மையாகும்.
வினைச்சொற்களின் விளக்கங்களை விளக்கம் முகமாக  இந்நூற்பா அமையப்பெற்றுள்ளது. தெரிநிலையாகவும் குறிப்பாகவும் வரும் வினைச்சொற்கள் முற்றுவினை பெயரெச்சம் வினையெச்சம் என மூன்று நிலைகளில் வினையின் வகைகள் இடம்பெறும். மேற்காணும் பொருண்மையின் வழி விளக்கமுறைக் கோட்பாடானது பொருந்தி வருவதை அறியமுடிகின்றது

2. விதிமுறைக் கோட்பாடு

விதிமுறைக் கோட்பாடு என்பது நூற்பாவினுள் இலக்கணி ஏதேனும் பொருண்மையை விளக்க விதியினைக் குறிப்பதே இக்கோட்பாட்டின் பொருண்மையாகும்.

செய்பவன் கருவிநிலம் செயல் காலம்
செய்பொருள் ஆறும் தருவதுவினையே     (நன்-2;.2.1)

தொழிலும் காலமும் தோன்றிப் பால்வினை
ஒழியநிற்பதுவினையெச்சமே     (நன்-2.2.22)

செய்பவன், கருவி, இடம், காலம், செயல், செய்பொருள் ஆகிய அறுவகைப் பொருளையும் தருவது வினை.

தொழிலையும், இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலங்களையும் ஐம்பாலும் வினையும்  குறைந்து நிற்கும் இடம் வினையெச்சம் ஆகும்.

வினை எவ்வப் பொருளில் வரவேண்டும் எனும் விதியைச் சுட்டியுள்ளது.

வினையெச்சம் தொழில், காலம், திணை, பால் உணர்த்தி வரும் என விதி அமைக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் நூற்பாக்களில் அதன் பொருண்மையை ஆராய்ந்த போது இலக்கணிகள் இலக்கணத்தை வரையறுக்க விதியினைச் சுட்டிச் சென்றுள்ளதை அறிந்து கொள்ளமுடிகிறது.

 3. விதியும் விளக்கமும்:

இலக்கணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பொருண்மையில் அமைக்கப்பெற்றுள்ளன. இலக்கணிகள் அப்படைப்பினில் நூற்பாவின் பொருண்மையைச் சுட்ட விதியினையும் விளக்கத்தினையும் ஒரே நூற்பாவில் கையாள்வது இக்கோட்பாட்டின் பொருண்மையாக அமைகின்றது.

செய்த செய்கின்ற செய்யும் என்பாட்டில்
காலமும் செயலும் தோன்றிப் பாலொடு
செய்வதுஆதி அறுபொருள் பெயரும்
எஞ்சி நிற்பது பெயர்எச் சம்மே   ( நன்-2;.2.20)

செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் மூவகை வாய்பாட்டுச் சொற்களில் பெயரெச்சம் வரும். இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலங்களும் தோன்ற பால் பகுப்பைக் காட்டாது அறுவகைப் பொருட்பெயர்களும் எஞ்சி நிற்பது பெயரெச்சமாகும் என்பது நூற்பாவின் பொருண்மையாகும்.

இந்நூற்பாவின் ஊடே பெயரெச்சம் எவ்வாறு வரும் என விதியையும் அது எவ்வப்பொருளில் வரும் என விளக்கத்தையும் முன்வைக்கிறது.

1. செய்த, செய்கின்ற, செய்யும் எனப் பெயரெச்சம் எவ்வாறு வரும் என விதியையும் அது எவ்வப் பொருளில் வரும் என விளக்கத்தையும் முன்வைக்கிறது.

2. முக்காலங்கள் வருமென்றும் பால் பகுப்பை உணர்த்தாது அறுவகைப் பெயர்களும் எஞ்சி நின்று பொருள் தருவது பெயரெச்சம் என விளக்கத்தினை இந்நூற்பாவினுள் முன்வைக்கிறது. மேற்கண்ட பொருண்மைகளின் வழி விதியும் விளக்கமும் பொருந்தி வருவதை அறிந்து கொள்ளமுடிகிறது.

முடிவுரை

       நன்னூலில் இலக்கண அமைப்புமுறைக் கோட்பானது நிறுவப்பட்டுள்ளது. இலக்கண அமைப்புமுறைக் கோட்பாட்டின் அக அமைப்பின் ஊடே இலக்கணங்களில் உள்ள கட்டமைப்பு, ஒழுங்கமைவு, இலக்கணம் எடுத்தியம்பும் முறை போன்றவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் இலக்கணக் கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல பொருண்மை, விதி, விளக்கம், விதியும் விளக்கமும் என்ற நிலையில் இலக்கணம் வடித்திருப்பதை இணம் காண முடிகின்றது.

துணைநின்றவை

1.    நன்னூல் சொல் கழகவெளியீடு
2.    கழகத் தமிழ் அகராதி
3.    கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
4.    தமிழ் தெலுங்கு இலக்கணப்போக்குகள் - சி.சாவித்ரி

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.