முன்னுரை

    குழந்தைகளுக்கு நோய் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதல் காரணம் தாயும் தந்தையும் ஆவர். மனப்பொருத்தமுடைய ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியுடன் கூடுகின்ற காலத்தில் குழந்தைபேறு கிடைக்கும்போது பலப்பல வியாதிகள் பெற்றோர்கள் செய்கின்ற தவறினால் தோன்றக் கூடும். பெற்றோருக்கு மேகம், சூலை, வெட்டை போன்ற நோய்கள் இருக்குமாயின் உடனே அந்நோய்களைக் குணமாக்கி விட வேண்டும். அந்நோய்களைக் கொண்ட தாய் கருக்கொண்டால் குழந்தைக்குச் சிவப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொடிய சிவப்பு எனப்படும் சிவப்பாகிய சன்னி நோய் குழந்தைக்கு ஏற்பட்டால் குழந்தை இறந்துவிடவும் வாய்ப்பு உள்ளது. மேலும், மனக்கவலை, சத்தான உணவுப் பொருட்கள் இன்மை, அழுகை, உடலுறவு, பயணங்கள் அவற்றின் மூலம் தாய்க்குச் சூடு ஏற்பட்டு உடல் பாதிக்கப்பட்டால் குழந்தைக்குப் பலவித நோய்கள் உண்டாகின்றன. குழந்தைகளுக்கு நம்பிக்கையின் அடிப்படையில் சில மருத்துவமும் செய்கின்ற மரபு நாட்டுப்புற மக்களிடையே காணப்படுகிறது. இக்கட்டுரையானது நாட்டுப்புற குழந்தை மருத்துவத்தில் கையாளக்கூடிய நம்பிக்கை மருத்துவ முறைகளில் ஒன்றான தோச நோய் குறித்து எடுத்துரைப்பதாக அமைகிறது.

குழந்தை நோய்களைக் கண்டறியும் முறை

    நாட்டுப்புற மக்கள் இயல்பாக குழந்தைகளுக்கு நோய் ஏற்பட்டிருப்பதை அனுபவத்தின் வாயிலாக கூறுகின்ற மரபு உள்ளது. அவை,

1. இயல்பாய் இருக்கும் குழந்தை நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தால் உடல் உபாதைகள் ஏதோ நிகழ்ந்திருப்பதை உணரலாம்.
2. குழந்தையின் நெற்றிப்பொட்டைத் தொட்டுப் பார்க்கும்பொழுது அதிக உஷ்ணமாக இருக்கும்.
3. குழந்தையைத் தூக்கும்பொழுது இயல்பைவிட சற்று கனமாக இருக்கும்.
4. குழந்தையின் அடிவயிற்றைத் தொட்டுப் பார்க்கும்பொழுது சிறிது கடினமாக இருக்கும்.
5. சிறுநீர், மலம் நிறம் மாறி இருக்கும்.
6. நாக்கில் வெள்ளை நிறத்தில் மாவு படிந்து காணப்படும்.
7. மூக்கடைப்பு இருக்கும்.
8. உடல் களைப்பு காணப்படும்.

என்பனவற்றைக் கூறுகின்றனர்.

குழந்தை நோய்கள்

    குழந்தைகளுக்கென வரும் சில தனிப்பட்ட நோய்களைக் குழந்தை நோய்கள் எனலாம். அது பெரியோர்களுக்கு வரக்கூடிய நோய்களிலிருந்து மாறுபடக்கூடியன. குழந்தைகளுக்குத் தோன்றும் நோய்களுக்கு வயதும் உடலும் காரணமாக அமைகின்றன. சில நேரம் பெரியவர்களுக்கு வரக்கூடிய சாதாரண நோய்கள் கூட குழந்தையைத் தாக்கும்போது குழந்தை பெரியளவில் பாதிப்படைகிறது.

    நோய்கள் குழந்தையை மிக எளிதாக தாக்கக் கூடியன. ஏனெனில் குழந்தைப் பருவத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகக் குறைவாக இருப்பதே அதற்கு காரணமாகும். குழந்தை நோய்களை இரண்டு வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை, 1. கருக்குழந்தை நோய்கள், 2. பிறந்த குழந்தை நோய்கள் என்பனவாகும்.

1. கருக்குழந்தை நோய்கள்

    மனிதனுக்கு மரபுத்தன்மையால் இருநூறுக்கும் மேற்பட்ட நோய்கள் வருகின்றன. எனவே தாயின் கருவறையில் இருக்கும்பொழுது பிறப்பதற்கு முன்பு தோன்றக்கூடிய நோய்களைக் கருக்குழந்தை நோய்கள் எனக் கூறலாம். அது பெரும்பாலும் பெற்றோரிடமிருந்தே வருவதால் பாரம்பரிய நோய்களாகக் கருதப்படுகின்றன.

காக்காவலிப்பு, மூளை மந்தம், மூளி உதடு, ஈரல்குலைக் கட்டி, எயிட்ஸ், கிரந்தி, வெட்டை நோய்கள் போன்ற நோய்களையும் கருக்குழந்தை நோய்களாகக் கூறலாம். அங்ஙனம் பரம்பரை நோய்களும், பிறவிக் கோளாறுகளும் தாய் தகப்பனிடமிருந்து வருகிறது. மேற்கூறிய நோய்கள் தாய்க்கோ, தந்தைக்கோ இருந்தால் குழந்தைகளையும் தாக்கும். பெற்றோர்களின் தவறான பழக்கவழக்கங்களாலேயே கருக்குழந்தை நோய்கள் தோன்றுகின்றன. “மாதா பிதா செய்தவை மக்களுக்கு” என்ற பழமொழி பெற்றோர் செய்கிற தவறுகளுக்குப் பிள்ளைகள் பாதிக்கப்படுவதை குறிக்கிறது.

சர்க்கரை வியாதி பாரம்பரியமாக வரக்கூடிய நோய். சிகரெட் பிடித்தல், மது குடித்தல் போன்ற தீய பழக்கவழக்கங்களால் குழந்தைகள் ஊனமாகப் பிறக்கின்றன. கருவுற்ற தாய்க்குப் பால்வினை நோய்கள் இருப்பின் அது வயிற்றிலுள்ள கருவையும் பாதிக்கும். கண்குருடு, நொண்டி, செவிடு போன்ற பிறவிக் குறைப்பாடுகள், சப்பை மூக்கு, மந்தமூளை போன்றவையும் தோன்றும்.

    விசக்காய்ச்சல் கர்ப்பிணி பெண்ணுக்கு இருந்தால் நுண்கிருமிகள் நஞ்சுவழியாகச் சென்று கருக்குழந்தையைப் பாதிக்கிறது. குடல்வால் அழற்சி எற்பட்டால் கருச்சிதைவு, குறைப்பேறு உண்டாகும். கர்ப்பக் காலத்தில் எற்படும் உள்நோயின் காரணமாகக் குழந்தைகள் பிறவிக் கோளாறுகளுடன் பிறக்கின்றன. ஒரு பெண்ணுக்குக் காக்கா வலிப்பு இருந்தால் குழந்தை குறைந்த எடையுடனோ, பிறவிக் கோளாறுகளுடனோ, முதிரா நிலையிலோ பிறக்கும். காக்கா வலிப்பு பாரம்பரியமாகப் பாதிக்கின்ற நோயாகும். கிரந்தி நோயினால் கருவுற்றப் பெண் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தை நோஞ்சானாகப் பிறக்கும். கரு சிதைந்து போகும். பிறவிக் கோளாறுகளுடனோ முதிராமலோ குழந்தைப் பிறக்கும். அவ்வாறு நாட்டுப்புற மக்கள் குழந்தைப் பிறந்த பிறகு வரக்கூடிய நோய்களைத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு கருக்குழந்தைகளுக்கு வரும் நோய்களை அறிந்திருக்கவில்லை என்பது களஆய்வில் கண்டறியப்பட்டது. குழந்தை பிறவிக் கோளாறுடன் பிறந்துவிட்டால் தாய் தகப்பன் செய்த தீவினை என நாட்டுப்புற மக்கள் கருதுவதையும் உணரமுடிகின்றது.

2. பிறந்த குழந்தை நோய்கள்

    தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த பிறகு குழந்தைக்கு உண்டாகும் நோய்களையே பிறந்த குழந்தை நோய்கள் என குறிக்கப்படுகிறது. குழந்தை கருவினுள் கதகதப்பான சூழலில் இருந்து விட்டு, வெளி உலகின் பருவ நிலைகளுக்குத் தக்க உடனடியாகத் தன்னைப் பொருத்திக் கொள்வதும் (தகவமைத்துக் கொள்வது) அல்லது மாற்றிக் கொள்வதும் இயலாத ஒன்றாகும். அதிகக் குளிரும் அதிகச் சூடும் பிறந்த குழந்தையின் உடல் எற்றுக் கொள்ளாததால் சூழலுக்கேற்பக் கம்பளியாலோ பருத்தித் துணிகளாலோ போர்த்தி வைக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் பனைவெல்லம், கொடிகல்லி, இலைக்கல்லி அரைத்து நன்றாகக் குழப்பிக் குழந்தையின் நாக்கில் தடவுதல் அல்லது பனைவெல்லம், முந்திரி அவைகளை நசுக்கி நாக்கில் தடவுகின்றனர். அதனை செவ்வனே ஊட்டுதல் அல்லது சேனைக் கொடுத்தல் என்கின்றனர். இதனை சடங்காக நிகழ்த்துகின்ற மரபும் உள்ளது. இம்முறையைக் கையாளும் போதுதான் குழந்தையின் முதன்முதலில் மலம் வெளியேறுகிறது. அதனை ‘காட்டுப் பீ’ என்கின்றனர். அது கறுப்பாக இருக்கும்.

    வயிற்றில் இருக்கும்பொழுது பனிக்குடம் உடைந்து அந்த நீரைக் குழந்தை குடித்துவிட்டால் காப்பாற்ற முடியாது. குழந்தை மூச்சுத் திணறி இறக்கும். இதனால் கொஞ்சமாக அந்நீரைக் குடித்துவிட்டு வெளியே வரும் குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் இறக்க நேரிடும். அவ்வாறு பிறக்கும் குழந்தைக்குத் தற்பொழுது நவீன மருத்துவத்தில் மின்சாரத்தில் (இன்கு பேட்டர்) உயிர் பிழைக்கச் செய்கின்றனர். இதனால் நாட்டுப்புற மக்கள் வேறு விதமாக இப்பிரச்சினையைக் கையாளுகின்றனர். குளிர்ந்த நீரான பனிநீரைக் குடிப்பதால் குழந்தையின் உடல் சில்லுன்னு இருக்குமாம். அதற்கு நெல் தவிடு, வரகு உமி ஆகியவற்றினை வறுத்து எடுத்து குழந்தையின் இதயத்தில் ஒற்றடம் கொடுக்கின்றனர். இதனால் உடல் சூடேறிக் கதகதப்பைத் தருமாம். பனிக்கோர்வையாய் உள்ள நீரானது நுரையீரலைச் சுவாசிக்க விடாமல் தடுத்துவிடுகிறது என்கின்றனர். அந்தச் சூழ்நிலையில் நஞ்சுக் கொடியைத் தூக்கி எறியாமல் வெதுவெதுப்பான நீரில் போட்டெடுத்து அந்நீரினைக் குழந்தையின் மார்பில் கொஞ்சம் கொஞ்சமாய் ஊற்றிக் கொண்டேயிருந்தால் நின்றுப்போன இதயம் துடிக்கத் தொடங்குமாம். அந்நிலையில் தொப்புள்கொடி உடனே துண்டிக்கப்படக் கூடாது என்று கூறுகிறார்கள்.

நம்பிக்கை மருத்துவம்

    மக்களால் மரபுவழியாக நம்பப்படுவது நம்பிக்கை. நம்பிக்கை என்பதற்கு விசுவாசம் என்றும் பொருள் கொள்ளலாம். நம்பிக்கைக்கு இங்கிலத்தில் Hope, Faith, Belief, Confidence, Trust, Assurance போன்ற சொற்கள் உள்ளன. ஒரு செயலுக்கு இன்ன பயன் விளையுமென்று செயல் நடைபெறும் முன்னரே நம்புவது நம்பிக்கை என்று சுரேந்திரன் (1961 : 132) கூறுகிறார். காரணகாரிய தொடர்புடையது நம்பிக்கை எனவும் காரணகாரிய தொடர்பற்றது மூட நம்பிக்கை எனவும் கூறலாம். தமிழ் பேரகராதி (Vol:iv:2155) நம்பிக்கை என்பதற்கு விசுவாசம், இளை நம்பியொப்பு விக்கப்பட்டது, உண்மை என்னும் பொருள்களைக் கூறுகின்றது. வாழ்வின் ஊன்றுகோலாக, மக்களை நடத்திச் செல்வது நம்பிக்கையாகும்.

    மனிதன் கூட்டமாகச் சேர்ந்து வாழத் தொடங்கிய போது இயற்கையோடு போராடி வேண்டிய நிலை எற்பட்டது. இப்போராட்டத்தில் வெற்றியடைந்த போது தன்னம்பிக்கையும், தோல்வியை அடைந்த போது அச்சத்தையும் பெற்றான். மனிதரால் தோற்றுவிக்கப்பட்ட நம்பிக்கையும் இயற்கை மீது மனிதன் கொண்ட அச்சத்தின் பயனால் பிறந்தது. இயற்கையாக நடைபெறும் காரியங்கள் மனித சிந்தனைக்கு எட்டாத போது மனிதனே அதற்கென ஒரு காரணத்தைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற பரிகாரத்தை (நம்பிக்கையின் அடிப்படையில்) செய்து கொண்டான். நம்பிக்கைகள் பெரும்பாலும் அச்ச உணர்வின் அடிப்படையாகத் தோன்றியதாகக் காட்சியளித்தாலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களை உணராத போதும் மனித வாழ்வில் ஏற்படும் சில நிகழ்ச்சிகளுக்குக் காரணம் கற்பிக்க இயலாத போதும் மனிதமனமானது சிலவற்றைப் படைத்துக் காரணம் கற்பித்துக் கொள்கிறது. அவைகளே நம்பிக்கைகளாக உருவாகின்றன என்று நம்பிக்கையின் தோற்றம் பற்றி சக்திவேல் (1992:171) கூறுகின்றார்.

    அச்சத்தின் காரணமாக இயற்கையின் தோற்றத்தினையும் செயற்பாடுகளையும் தனது வாழ்வியல் நட்புக்களோடு இணைத்து நோக்கிய நிலையில் நம்பிக்கைகள் தோற்றம் கொண்டன என்று காந்தி (1980:104) கூறுகின்றார்.

நாட்டுப்புற நம்பிக்கைகள் தோன்றுவதற்கு மூவகைக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று செய்வினை (Magic), மற்றது நாட்டுப்புற மருத்துவம் (Folk Medicine), ஏனையது விலக்குகள் (Taboos). இம்மூன்றின் ஆதிக்கமும் குறைந்த போது அவை பற்றிய நம்பிக்கைகள் நாட்டுப்புற நம்பிக்கைகளாக எஞ்சுகின்றன என்று தமிழவன் (1976:5) கூறுகிறார். இயற்கைப் பொருட்களுக்கும், மனித செயல்களுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதன் விளைவாக நம்பிக்கை தோன்றி, வளர்ந்து வலுவடைந்து, நாளடைவில் மக்களிடம் பரவியுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

நாட்டுப்புற மருத்துவ, மந்திரச் சடங்குகளை நோய்களும் காரணங்களும் என்ற அடிப்படையில் முத்தையா (1986:13) என்பவர் பகுத்துள்ளார். அவர், 1. தெய்வத்தின் சினம், 2. தீய ஆவிகளின் செயல், 3. மந்திரவாதிகளின் செயல், 4. தீய பார்வைகள் என்று பாகுபடுத்தியுள்ளார்.

    ஞானசேகரன் (1987:6) என்பவர் மந்திரச் சடங்குகளைப் பயன்பாட்ட நோக்கில் வகைப்படுத்தலாம் என்று கூறி அதனை, 1. செய்வினைச் சடங்குகள், 2. வழிபாட்டுச் சடங்குகள், 3. வளமைச் சடங்குகள், 4. வாழ்வியல் சடங்குகள், 5. மருத்துவ மந்திரச் சடங்குகள் என்று பகுத்துள்ளார்.

    குழந்தையானது, தாயின் வயிற்றில் உருவாகுவது முதல் பிறந்து வெளி வருவது வரை நாட்டுப்புற மக்கள் பல்வேறு சடங்குகளை நம்பிக்கை அடிப்படையில் செய்கின்றனர். குழந்தை கருவில் இருந்து வெளிவந்ததில் இருந்து ஏற்படுகின்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றில் ஒன்று தோஷம் ஆகும்.

தோஷம்

    குழந்தைக்கு ஒவ்வாத உணவை குழந்தையோ தாயாரோ உண்டாலும், விலக்கப்பட்ட பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் குழந்தைகளை தொட்டாலும் இவர்கள் மூலமும் தோஷம்நோய் வரும்.  மேலும் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் குறைவதினால் ஏற்படும் பிரச்சனைகளையும் தோஷம் என்பர். குழந்தைகளுக்கு சரியில்லாதவைகளை விலக்கி சரியானவைகளை அளித்தால் தோஷமில்லை. இன்னும் சொல்லபோனால் ‘கண்ணுக்கு தெரியாத கிருமிகள் பரவும் என்றால் மக்கள் நம்ப மாட்டார்கள். எனவே ஒரே வார்த்தையில் தோஷம் என சொல்லிவிட்டனர் நம் முன்னோர்கள்.

நாட்டுப்புற மக்கள் குழந்தைகளுக்கு அசீரணக் கோளாறால் ஏற்படுகின்ற கழிச்சலே ‘தோஷம்’ என்று கூறுகின்றனர். இது குழந்தைகளுக்கு பல் முளைக்கும் பருவத்தில் ஏற்படுகிறது. எலும்பில் மச்சை என்று கூறப்படும் பசை போன்ற சத்துக் குறைந்து போவதானலேயே தோஷம் எனும் நோய் உண்டாகிறது. தோஷங்களில் பல வகையுண்டு. அவை அந்தி பட்சி தோஷம், அழிகர்ப்ப தோஷம், எச்சித் தோஷம், குளிர் தோஷம், தூங்கு பட்சி தோஷம், தேரை தோஷம், பறவை தோஷம், ஸ்திரீ தோஷம், திருஷ்டி தோஷம் ‘குருவிதோஷம்’, ‘குழிமுட்டும் தோஷம்’ என்பனவாகும்.

குழந்தையின் மீது சிலவற்றின் நிழல்கள் படுவதால் தோஷம் கிடைப்பதாகவும் அதனால் குழந்தை நோயினால் பாதிக்கப்பட்டதாகவும் நாட்டுப்புற மக்கள் நம்புகின்றனர். ‘குருவி தோஷம்’ என்பது பறவைகளால் ஏற்படுவது, ‘குழிமுட்டும் தோஷம்’ என்பது பெண்களால் ஏற்படுவது. ‘தேரை தோஷம்’ என்பது கருவுற்ற பெண் மீது தேரை விழுந்தால் குழந்தையை தேரை தோஷம் தாக்கும் என்பர். இரவு நேரங்கைளில் விளக்கு இல்லாத இருட்டில் குழந்தைக்கு பால் கொடுத்தால் எச்சில் தோஷம் தாக்கும் என்பர்.

தோஷம் தாக்கிய குழந்தை முகம் வாடி மெலிந்திருக்கும். உடலில் வலிமையற்று இருக்கும். தோஷம் தாக்கிய குழந்தை சோர்ந்து காணப்படும். கண்களெல்லாம் உள்ளடங்கியது போல இருக்கும். இத்தகைய குழந்தைகளுக்கு வாந்தியும் காய்ச்சலும் ஏற்பட்டு உணவு உண்ணாமல் காணப்படும். இதைக் கவனிக்காமல் விட்டால் குழந்தை இறக்கக் கூடும். எனவே குழந்தைக்கு தோஷம் கிடைத்து விட்டதாகக் கூறி மருந்துவம் செய்வர். குழந்தை சிறிது நேரத்தில் எழுந்து உணவு உண்டு, ஆரோக்கிய நிலைக்கு வந்து விடும்.

தேரைத் தோஷம்

     குழந்தைகளுக்கு தேரைக் குற்றம் ஏற்பட்டால் பால் குடிக்காமல் உடல் சோர்வுடன் காணப்படும். அதோடு உடல் மெலிந்து, உடல் வெளுத்து, கைகால், கண் சிறுத்துக் காணப்படும். வயிறு பெரிதாக காணப்படுவதால் மலச்சிக்கலும் ஏற்படும். இதற்கு காணிக்கார பழங்குடி மக்கள் தென்னை அல்லது பனை மரத்திலிருக்கும் தேரையினைப் பிடித்துவைத்து கொள்வர். ஒரு கண் முறி சிரட்டை (கொட்டாங்குச்சி) யினையும் ஒரு பெண்முறி (கண்ணம்) சிரட்டையினையும் ஏடுத்துக் கொள்வர். ஆண் முறிசிரட்டை (மூட்டுசிரட்டை)யில் அரை சிரட்டையளவு தண்ணீர் எடுத்து அதில் தேரையினை போட்டு பெண் முறியின் மூன்று கண்களிலும் ஒட்டை எடுத்து மூடவேண்டும். இதன் இருபக்கத்திலும் காலை வைத்து சிரட்டையின் மீது தண்ணீர் படும்மாறு குளிப்பாட்டுவர். அவ்வாறு மூன்று நாட்கள் குழந்தையினைக் குளிப்பாட்டுவார். குழந்தை குளிப்பாட்டும் நீர் சிரட்டையின் உள் போகுமாறு இருக்கம். மூன்றாம் நாள் மாலை சிரட்டைகளை திறந்து பார்க்கும்போது தேரை இறந்து இருந்தால் குழந்தைக்கு ஏற்பட்ட குற்றம் மாறி விட்டது. மூன்று நாட்களுக்கு இடையே சிரட்டையினைத் திறந்து பார்க்கக் கூடாது என்பது நியதியாகும்.
    சிறுகீரை, சிறுப்பூளை, நீராரை, பொன்னாங்கண்ணி, நீர்முள்ளி, காட்டு மல்லிகை வேர், அவுரி வேர், கரிசலாங்கண்ணி வேர், நிலக்குமிழம் வேர், முடக்கொத்தான் வேர் ஆகியவற்றை நன்றாக இடித்து அதனுடன் இரண்டு லிட்டர் நீரினை சேர்த்து அது கால் லிட்டர் அளவாக வரும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும். அதிமதுரம், ஏலக்காய், சுக்கு, திப்பிலி ஆகியவற்றை பசும்பாலில் நன்கு அரைத்து காய்ச்சி வைத்திருக்கும் கசாயத்தில் போட்டு நன்கு கலக்க வேண்டும். அதனுடன் ஒரு லிட்டர் பசும்நெய் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை இரு வேளையும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட கொடுத்து வந்தால் தேரை தோஷம் நீங்கும்.

பறவை தோஷம் / பட்சி தோஷம்

    வீடு சரியான காற்றோட்டம் இல்லாமல் பறவை வீடு போல் எல்லா பக்கமும் அடைத்திருப்பதால் ஏற்படும் வெப்பத்தாலும், கோழி, புறா, எருமை இவைகளின் எச்சம் சாணி, இவைகளில் இருந்து வரும் அசுத்தங்கள் காற்றில் கலந்து வருவதாலும், வீணாய்போன காய்கறிகளை தாயார் உண்பதாலும் பறவை தோஷம் ஏற்படும். இந்நோய் ஏற்பட்டால் குழந்தைக்கு தலை கணமாய் இருக்கும், உடல் தளர்ந்து காணப்படும், உடல் சூடேறும், நா உலரும் வலிப்பு போல் வளையும், அடிக்கடி திடுக்கிட்டு எழுந்து அழும், மலம் கழிக்கும் முன் முகம் மஞ்சளாய் மாறும்.

பறவை தோஷம் ஏற்படுமாயின் அதற்கு தேங்காய் எண்ணெயில் மஞ்சளைக் குழைத்து குழந்தையின் வயிற்றில் நன்றாகப் பூசி காலை, மாலை ஆகிய இரு நேரங்களிலும் சூரியனுக்கு நேராகக் குழந்தையினைக் காட்டுவர்.

அதிகாலை வேளையில் வீட்டை விட்டு வெளியில் குழந்தையை கொண்டு வரும் போது சீதோஷண நிலை (தட்பவெட்பநிலை) வீட்டுக்குள்ளும் வெளியிலும் மாறும். இதனை குழந்தை தாங்காது. எனவே தான் பட்சிகள் காலையில் பறந்து போகும் வேளையில் குழந்தையை வெளியே கொண்டு வர கூடாது என்று சொல்லி வைத்தனர். பட்சிகள் பறந்து செல்லும் வேளை என குறியீடு செய்தால் பட்சி பெயரிலேயே பட்சி தோஷம் என பெயர் இட்டனர்.

நாட்டுப்புற மக்கள் பக்கி (பட்சி) எனப்படும் பறவையின் நிழல் குழந்தை மீது படுவதால் தோஷம் ஏற்படும் என்று கூறுகின்றனர். அதனை, ‘பக்கி தோஷம்’ மாலை சூரியன் மறையும் அந்தி பொழுதில், இங்கும் அங்குமாகப் பறந்து சென்றுக் கொண்டிருக்கும். அந்த வேளையில் குழந்தையை வெளியே கொண்டு போனால் அப்பறவையின் நிழல் குழந்தையின் மீது பட, ‘தோஷம்’ ஏற்படும். அதுவே பக்கி தோஷம் எனப்படும்.

பட்சி தோஷம் ஏற்பட்டால் குழந்தையின் உச்சியும் கண்ணும் குழிவிழும். குடித்த பால் தங்காமல் எதிர் எடுக்கும். பறவைக் குரல் போல் அழும். கண் கலங்கும் தலைவலி உண்டாகும். குழந்தை கையில் தங்காது துடிக்கும். வயிற்றுப் போக்கு நுரை போல் உண்டாகும். அதிகமாகத் தண்ணீர் குடிக்கும், வீறிட்டு அலரும். இதற்கு நாட்டுப்புற மக்கள் பல மருத்துவ முறைகளை செய்கின்றனர்.

விடத்தேரி இலை, விழல் புல்லின் தளிர் இரண்டையும் கைப்பிடி அளவு எடுத்து நன்றாக கசக்கி குழந்தையின் தலை, உச்சி, முதலிய இடங்கள் சாற்றை கையால் பிழிந்து தடவவும். சாறு பிழிந்த மிஞ்சிய சக்கையை தாயின் மடியிலோ அல்லது குழந்தையின் இடுப்பிலோ கட்டி வைத்தால் சரியாகும்.

கடுகு, மிளகு, கரிசிலாங்கண்ணி, கிழா நெல்லி, சிறு புள்ளடி முதலியவைகளை சம அளவு எடுத்து பாலில் அரைத்து நல்லெண்ணைய் குழப்பி குடிக்க கொடுத்தால் சரியாகும்.

எச்சில் தோஷம்

    மீன் விற்பவள் மீனுடன் கூடையை வைத்திருக்கும் போதும், மீன் கூடையைக் கீழே இறக்கும் போதும், மீன் கூடையுடன் நடக்கும் போதும் கூடையின் நிழல் குழந்தை மீது பட்டால் ‘தோஷம்’ ஏற்படும். இக்கூடையின் நிழல் குழந்தையின் தாய் மீது பட்டாலும் குழந்தைக்குத் ‘தோஷம்’ ஏற்படும். குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு, முகத்தில் இருக்கும் எச்சிலைச் சரியாகக் கழுவாமல் இருந்தால் எச்சில் தோஷம் ஏற்படும் என்றும் குழந்தைக்கு இருட்டில் வைத்து உணவுக் கொடுத்தாலும் ‘எச்சில் தோஷம்’ உண்டாகும் என்றும் நம்புகின்றனர். இதனை ‘எச்சிதோயம்’ எட்சி தோஷம் என்றும் கூறுவர்.

எச்சில் தோஷம் ஏற்பட்டால் குழந்தையின்  இரத்தம் சூடேறி உடல் தேயும், உடல் நாறும், கொஞ்சமாக வயிறு கழியும், பாலுண்ணாது பதறியழும், கண்ணை தன் கைகளால் பிசையும், மயங்கி புரளவும் செய்யும்.

ஸ்திரீ தோஷம்

    மாதவிடாய் உள்ள பெண்களின் நிழல் குழந்தை மீது படுவதால் தோஷம் உண்டாகும். அதனைத் ‘ஸ்திரீ தோஷம்’ என்பர். குழந்தையை இழந்து இருக்கும் தாயின் நிழல் குழந்தை மீது பட்டாலும் ‘ஸ்திரீ தோஷம்’ ஏற்படும். மற்றும் கருச்சிதைவு செய்து கொண்டு வரும் பெண்ணின் நிழல் குழந்தை மீது படும் போதும் ‘ஸ்திரீ தோஷம்’ ஏற்படுவதாக நம்புகின்றனர். அவ்வித தோஷம் கொண்ட குழந்தையை, நோயினின்று விடுவிக்க, பலவித மருத்துவ முறைகளை மேற்கொள்ளுகின்றனர்.

அடைக்கோழி தோஷம்

    கோழிகள் முட்டையிட்டு பின் அடைக்கிடப்பது வழக்கம். அந்த அடைக்கோழியானது குழந்தையை மறுகடந்தால் ‘கோழி தோஷம்’ ஏற்படும் என நாட்டுப்புற மக்கள் நம்புகின்றனர்.

எழன்தவரைச் செடியின் (எழுத்தாணி பச்சிலை) ஏழு இலைகளைப் பறித்து ஒரு இலையினை அதன் மூட்டிலே (நிற்கும் இடத்தில்) போட்டுவிட்டு மீதமுள்ள இறுஇலைகளை கசக்கிச் சாறு பிழிந்து  குழந்தையின் தலை உச்சியில் விடவேண்டும். அதனைச் செய்யும்போது யாரும் பார்க்காதவாறு செய்ய வேண்டும். இதே போன்று மூன்று முறைச் செய்தால் தோஷம் தீரும்.

தோஷத்திற்கான மருத்துவ முறைகள்

     தோஷம் பெண் குழந்தைக்கு ஏற்பட்டால் இறந்த ஆண் குழந்தையினை அடக்கம்(சமாதி) செய்த இடத்திற்கு நடு சாமத்தில் சென்று அங்கு வளர்திருக்கும் ஏதேனும் ஒரு செடியினை வேரோடு எடுத்து வந்து, செடியின் வேரை கருப்புநூலில் கட்டி இடுப்பில் கட்டினால் தோஷம் நீங்கும். ஆண்குழந்தைக்கு ஏற்பட்டால் இறந்த பெண் குழந்தையின் சமாதியில் சென்று ஏதேனும் ஒரு செடியினை எடுத்து வரவேண்டும்.

     குழந்தையின் தொப்புள் கொடி காய்ந்து விழும்போது அதனை எடுத்துப் பவுடர் கலந்து நாழி, செரட்டை, குடுக்கை ஆகியவற்றில் போட்டு பத்திரப் படுத்திவைப்பர். சிலர் அதனை வீட்டின் மேற்கூரையில் கட்டி வைக்கின்றனர். பவுடர் சேர்த்து வைப்பதினால் தொப்புள் கொடி எளிதில் கெடுவதில்லை. நன்கு உலர்ந்த பின் அதனை வெள்ளிக் குழல் செய்து அதன் உள்ளே போட்டுக் கழுத்தில் அல்லது இடுப்பில் குழந்தையின் நிழல் படுவதால் தோஷம் ஏற்படுகிறது. நூலினை கழுத்தில் அல்லது இடுப்பில் கட்டும்போது காணிக்காரப் பழங்குடி மக்கள்,

“கரும் பறையனே கரும் பறைச்சியே
சுட்ட சுடலை கரி எடுத்து
நெற்றியில் சாத்தி
கொண்டாடும் பொருள் நிறத்தன்ன
ஒரு காதம் போகும்முன்
பல பிசாசுக்கும் பூதங்களும்
பால் குடிக்கும் பிள்ளை என்ற
முக நோக்காது பறந்தோடி நிக்கட்டு”.

என்ற மந்திரத்தை மூன்று முறை கூறி கட்டுவர். இதனால் எந்த தோஷமும் ஏற்படுவது இல்லை என்று கூறுகின்றனர்.

    குழந்தையை வெளியே கொண்ட செல்லும் போதே தோஷ இலையைக் குழந்தையின் ஆடையில் வைத்து, எடுத்து செல்வதும் உண்டு. அவ்விதம் எடுத்துச் செல்வதால் தோஷத்திலிருந்து குழந்தையைக் காக்கலாம் என்றும் நம்புகின்றனர். குழந்தைகளுக்குத் தோஷம் ஏற்பட்டால் அதனைப் போக்கத் ‘தோய இலை’ என்று பேச்சு வழக்கில் சொல்லப்படும் ‘அறுபதாம் பச்சிலை’யைப் பறித்து குழந்தையின் உடலைச் சுற்றி, தடவி விடுவர். இதனால் தோஷத்திலிருந்து குழந்தை நிவாரணம் பெறுகின்றது.

    சிலர் தோஷ இலையை மை போல அரைத்து குழந்தையின் உச்சியில் பதித்து வைத்திருப்பர். தோஷம் தீர்ந்ததும் மருந்து தானே அடர்ந்து விழுந்து விடுவதே தோஷம் தீர்ந்து விட்டதன் அடையாளமாகும். சிலர் தோஷம் தீர தோஷ எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். அது நாட்டுப்புற மருந்துக் கடைகளில் தற்போது கிடைக்கிறது. இதை வாங்கி குழந்தையின் உள்ளங்கையிலும், பாதத்திலும் தேய்க்கும் போது குணமாகி விடும். குழந்தையை வெளியே கொண்டு செல்லும் முன்பும் சிலர் அந்த எண்ணெயைக் குழந்தைக்குத் தேய்த்து எடுத்து செல்வது உண்டு. இதனால் தோஷம் ஏற்படாது என்று நம்புகின்றனர். குழந்தைக்கு வெறும் வயிற்றில் சிறிதளவு நல்லெண்ணைக் குடிக்கக் கொடுத்தால் தோஷம் தீர்ந்து விடுகிறது என நம்பப்படுகிறது. தோஷ இலையைக் குழந்தையின் தலையிலும், இடுப்பிலும் வைத்தால் தோஷம் தீரும். அது தோஷம் வராமலும் குழந்தையைக் காக்கும் என்பர். உருத்திராட்சைக் காயைக் கறுப்பு நூலில் போட்டு குழந்தையின் இடுப்பில் கட்டினால் தோஷம் தீர்ந்து விடும். தோஷ இலையை கசக்கி கிளிகட்டி அரைஞான் கயிற்றில் கட்டி விட வேண்டும். தோஷம் தீர்ந்ததும் தானே காய்ந்து உதிர்ந்து விழும் அதுவரை எடுக்கக் கூடாது.

    இவ்வாறு தோஷ நோயினின்று குணமாக்க, குழந்தைகளுக்குப் பல்வேறு மருத்துவ முறைகளை மேற்கொள்ளுகின்றனர். அனைத்தும் வயது முதிர்ந்தவர்களால் உடனடியாக மேற்கொள்ளப்படும் மருத்துவமாகும். எனினும் தற்போது, தோஷ எண்ணெய் தயாரித்து விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிகிறது.

முடிவாக..

    இன்றும் நாட்டுப்புற மக்கள் தோஷ நோய்களுக்கு நாட்டுப்புற மருத்துவர்களை நம்பியே இருக்கின்றமைக் காணமுடிகிறது. இதனை நம்பிக்கை அடிப்படையிலேயே இம் மருத்துவ முறைகளை கடைபிடிக்கின்றனர்.  ஆங்கில மருந்துவத்தில் இதை மந்தம், கழிச்சல், ஊட்ட சத்துக் குறைபாடு என்று கூறுகின்றனர். ஆனால் நாட்டுப்புற மக்கள் இதனை நிழல் படுவதாலும் தாயாரின் கவன குறைபாட்டினாலும் கண்படுவதாலும் ஏற்படுவதாக நம்புகின்றனர். இன்றும் நாட்டுப்புற மக்கள் குழந்தையை வெளியே எடுத்து செல்லும் போது கருப்பு நிற மை அல்லது கரியினை வைப்பது. அணிந்திருக்கும் ஆடையினுள் இலைகளை வைப்பது, தலையில் சிறிய இரும்பு ஆணிகளை வைத்திருக்கும் வழக்கம் காணப்படுகிறது. நம்பிக்கை அடிப்படையில் தான் குழந்தைகளுக்கு வரும் தோஷ நோய்க்கான மருத்துவமுறைகளை நாட்டுப்புற மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

துணைநூற் பட்டியல்

காந்தி, க., தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், உலக தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை, 1980
சக்திவேல், சு., நாட்டுப்புறவியல் அய்வு, மாணிக்கவாசகர் பதிப்பகம், சிதம்பரம், 1983.
சுரேந்திரன், இரா., நாட்டுப்புற இலக்கியம் நலம் தரும் விளக்கம், தேன் தமிழ்ப் பதிப்பகம், சேலம், 1961.
ஞானசேகரன், தே., மக்கள் வாழ்வில் மந்திரச் சடங்குகள், பார்த்திபன் பதிப்பகம், மதுரை, 1987.
தமிழவன், நாட்டுப்புற நம்பிக்கைகள், சர்வோதய இலக்கிய பண்ணை, மதுரை, 1976
முத்தையா, இ., நாட்டுப்புற மருத்துவ மந்திரச் சடங்குகள், அன்னம் பதிப்பகம், சிவகங்கை, 1986.
வையாபுரிப் பிள்ளை, எஸ்., (பதி) தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1956.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.