- முனைவர் அ.ஸ்ரீதேவி,,   உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்-641105. -முதன்முதலில் மக்கள் தோன்றிய இடம் மலையுச்சி. ஆகவே இங்கு மக்கள் விலங்குகளாக வாழ்ந்து நாளடைவில் விலங்கு வாழ்வினின்றும் வேறுபட்ட நாகரிக வாழ்வை தொடங்கிய இடமும் குறிஞ்சி நிலப்பகுதி எனலாம்.
வேட்டையாடல்:-

குறிஞ்சி நில மக்களின் முக்கியத் தொழில் வேட்டையாடுதல், தினைப் பயிரிடல், விலங்குகள் வளர்த்தல் போன்றவையாகும். பண்டைய மனிதன் முதன் முதலாக வேட்டையாடு தலையே மேற்கொண்டான் என்பதை ‘கலைக்களைஞ்சியம்’ குறிஞ்சி நிலப் பொதுமக்களின் உணவு வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியே. மான், முயல், உடும்பு, நரி, முதலிய விலங்குகளை வேட்டையாடியது. விலங்குகளால் தம் உயிருக்கு ஊறு இல்லையாயினும் விலங்கு ஊனின் மீது கொண்ட விருப்பின் காரணமாக இவற்றை வேட்டையாடினர். மக்கள் தம்மை காத்துக் கொள்ளவும், உணவுக்காகவும் ‘வேட்டைத் தொழில்’ செய்தனர். உயிரை காப்பதற்காக மேற்கொள்ளப்படும் வேட்டைத் தொழிலில் உயிரை அழித்துவிடும் அபாயமும் உண்டு. வேட்டைக்கு செல்கிறவன் கொடிய விலங்குகளால் வேட்டையாடப்பட்டு விடுவதும் உண்டு. பிற தொழில்களில் இல்லாத மரண அச்சம் இதில் உண்டு. உழைத்தால் உறுதியாக பலன் கிட்டும். அத்தகைய உறுதிப்பாடு அற்ற தொழில் வேட்டையாடுதல்.

பயிரிடுந் தொழில்:-
வேட்டை தொழில் குறிஞ்சிநிலத்து பொது மக்களுக்கு குறைவான பயனை தருவதால் மக்கள் கொடுமையால் கனி, காய், கீரைகளை உண்போராக மெல்ல மெல்ல மாறினர். குறிஞ்சிநிலத்து பொது மக்கள் கோரை, நெல், திணை, இவற்றை பயரிட நிலம் இல்லாத போது, மணம் கமழ் சந்தன மரங்களை வெட்டி நிலத்தை பயன்படுத்தி அதில் தோரை, நெல், வெண்சிறுகடுகு, இஞ்சி, மஞ்சள், மிளகு, அவரை என்று பல தானியங்களை பயரிட்டு வாழ்ந்தனர்.

“குறுங் கதிர்த் தோரை நெடுங்கால் ஐயவி
ஐவன வெண்ணெல்லொரிடல் கொள்பு நீடி
இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்”.
-  மதுரைக்காஞ்சி -

தேனெடுத்தல்:-
குறிஞ்சிநிலத்தார் பயன்படுத்திய மற்றொரு சிறந்த உணவு பொருள் தேன். மலைகளில் நிறைய தேன் கிடைத்தது.

“கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே”
-மலைபடுகடாம் -

என்னும் அடிகளிலுள்ள ‘பெருந்தேன்’ என்று மலைபடுகடாம் பேசுகிறது. தேன் அளவில் ஆற்றல் மிக்க உணவாவதோடு பிறவற்றிற்கு இனிமை கூட்டவும் பயன்பட்டது. தினை மாவொடு தேன் கலந்து உண்ட செய்தி பரக்கப் பேசப்படுகிறது. குறிஞ்சி மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சிற்றிலக்கியமே குறவஞ்சி என்பது ஆகும்.

குறிஞ்சி நிலத்து குடிமகள்:-
குறிஞ்சி நிலப்பொது மக்களாகிய குறவர்கள் தினைத்தாளால் வேயப்பட்ட சிறுகுடில்களிலும், புல்லால் வேயப்பட்ட குடில்களிலும், சரகால் வேய்ந்த குடில்களிலும் வாழ்ந்தனர்.

“இருவி வேய்ந்த குறுகாற் குரம்பை
புல்வேய் குரம்பைக் குடிதொறும்
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப”,


என்ற பாடல் வரிகளால் அறிய முடிகிறது. மலையில் வாழும் விலங்கினங்கள் உள்ளே நுழையாத அளவிற்கு கோழிக்கூடு போன்ற குடில்களில் வாழ்ந்தனர். தங்களிடம் கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டே தங்கள் குடில்களை அமைத்துக் கொண்டதை அறிய முடிகிறது.

முல்லை நிலப் பொது மக்களின் புற வாழ்க்கை:-
முல்லை நிலத்துப் பொதுமக்களை ஆயர்கள் என்றும், பெண் மக்களை ஆய்ச்சியர் என்றும் அழைப்பர்.

திவாரக நிகண்டு குறிக்கும் ஆடவர்பெயர்:

முல்லையாளர்
கோவலர்
இடையர்
பொதுவர்
கோவிந்தர்
அண்டர்
கோபாலார்

திவாரக நிகண்டு குறிக்கும் மகளிர்பெயர்:

தொறுவியர்
பொதுவியர்
குடத்தியர்
இடைச்சியர்

ஆநிரை மேய்த்தல்:

முல்லை நிலம் காடும் காடு சூழ்ந்த இடமாக திகழ்கிறது. முல்லை நிலத்துப் பொதுமக்கள் காடுகளில் வாழ்பவர்கள் ஆவார்.

‘கானத் தண்டர்’
-குறுந்தொகை -

எனும் பாடல் வரிகளால் அறிய முடிகிறது. இவர்களது முக்கிய தொழில் ஆனிரை மேய்த்தல் ஆகும்.

‘புல்லித்தாயர்
நல்லினத்தாயர்
கோவினத்தாயர்
குறுங் காற் குரவின் குவியினர் வான்பூ
ஆடுடை இடை மகன்
-----------    மாமேனி
அந்துவ ராடைப் பொதுவன்”,


என்னும் சங்க இலக்கிய அடிகளால் அறிய முடிகிறது. இவர்கள் இலையால் தொகுக்கப்பட்ட தழைக் கண்ணியையும், மாசுண்ட உடையையும், மடித்த வாயையும் உடையவர்கள் ஆவர். ஒரே ஆடையை மட்டும் அணிந்திருப்பவர்கள். தம் உரைகளின் வழி முல்லை நிலத்துப் பொதுமக்கல் மேய்த்தல் தொழிலன்றி பிற தொழிலறியாத சிறப்பினை புலப்படுத்துவதோடு, ஆனிரையோடு அவர்களது வாழ்க்கை இரண்டறக் கல்ந்து நின்ற நிலையையும் அறிய முடிகிறது. முல்லை நிலத்து பெண் மக்கள் ஆய்மகள், வைகறை பொழுதில் எழுந்து தயிர் கடைந்து மோராக்கி மெல்லிய சுமட்டின் கண் மோர்ப்பானையை ஏற்றி சென்று விற்று வருவாள். விற்றதால் கிடைத்த நெல் முதலியவற்றால் தன் சுற்றாத்தாரையெல்லாம் உண்டித்தாள். நெல் விலைக்கு பொன் வாங்காலம் பாலெருமையும், ஆவையும், எருமை நாகினையும் வாங்கியதை சுட்டும் பெரும்பாணற்றுப்படை பாடல் கொண்டு முல்லை நிலத்து ஆய்மகளுக்கு பொருளீட்டும் பொறுப்பு இருந்ததை உணரலாம்.

உழவுத் தொழில்:-
முல்லை நிலத்துப் பொதுமக்கள் ஆனிரை மட்டும் மேய்த்து வாழாமல் உழவுத் தொழிலையும் மேற்கொண்டு வாழ்ந்தனர். ‘கல்லாப் பொதுவன்’ என்ற பாடல் வரிக்கு நச்சினியார்கினியர், ந.மு.வே.நாட்டார் கூறும் உரைகளுக்கு மாறுப்பட்ட நிலையில் இருப்பதை உணரலாம். ‘வித்தையர்,முதையல் என்ற சொற்களின் ஆட்சியால் ஆயர் ஆடு, மாடுகளை மட்டும் மேய்தலோடு உழவுத் தொழிலிலும் முன்னேற்றம் கண்டனர். முல்லை நிலத்துப் பொதுமக்களே உழவுத் தொழிலுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.

‘குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நடுஞ் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில்,


என்ற பாடலில் உழவுக்கு தேவையான கொட்டிலுள்ள சகடம், உருளை, கலப்பை இவற்றையெல்லாம் சார்த்தி வைக்கப்பட்டிருந்த நிலையும், நீண்ட சுவர் புகை படிந்து காணப்பட்டதையும் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன.

உணவுமுறை:-
முல்லை நிலத்துப் பொதுமக்கள் மலையை அடுத்த ஓரளவு சமதரையில் வாழ்பவர். புல்லும் காடும் நிறைந்த நிலம், நிலத்தை திருத்தி பெரிதும் பயிரிட பக்குவம் கொண்ட அமைப்புடையது. திணையரிசியும் அதனினும் மேலாக வரகரிசியும் முல்லை நிலத்து வழங்கிய உணவு பொருட்கள் மான், முயல், முதலியவற்றை இறைச்சி உண்டு வாழ்ந்தனர். வேட்டை தொழில் அருதலை முல்லை நிலத்தில் காணலாம். வளர்ப்பு விலங்குகளில் ஆடுகளை இறைச்சிக்காகவும் ஆனினங்களை பாற்பயன் கொள்ளுதற்கும் பயன்படுத்தினர். ஆடு என்னும் சொல்லே ‘அடப்படுவது’ என்னும் பொருளில் வழங்கியது. விழாக் காலங்களில் ஆட்டிறைச்சியின் உணவு சிறப்பிடம் பெற்றது. இதனை,

“வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப
நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே”

-புறபாடல் -

கள்,சோறு,ஊன் அமைந்ததை சிறந்த உணவு என முல்லை நிலத்து மக்கள் கருதினர்.

முல்லை நிலத்து குடில்கள்:-
முல்லை நிலத்து ஆயர் குடில்கள் வரகு கற்றையால் வேயப்பட்டது. ஆட்டு மறிகள் தின்ன கூடிய அளவிற்கு தழைகளை கட்டி உள்ள குறுகிய கால்களை கொண்டது. அதன் வெளியே கிடாத் தோலை பாயாக கொண்டு அதில் துஞ்சும் காவலை உடையதாக இருப்பதை,

“குளகு அரை யாத்த குறுங்கால் குரம்பைச்
செற்றை வாயில் செறிகழிக் கதவின்,
கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின்,
அதளோன் துஞ்சுங் காப்பின் உதள,
நெடுந் தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில்
கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கும்
இடுமுள் வேலி எருப்படு உரைப்பின்”.

-பெரும்பாணற்றுப்படை -

இவ்வாறு முல்லை நிலத்துப் பொதுமக்கள் எளிமையான குடிசைகளை அமைத்து வாழ்ந்து வந்ததை அறிய முடிகிறது.

பார்வை நூல்கள்:
1.பெரும்பாணற்றுப்படை-புலவர் கா.கோவிந்தனார்.எம்.ஏ, எழிலகம், 46 செல்வ விநாயகர் கோவில் தெரு, திருவத்திபுரம்-407.
2. புறநானூறு- வே.சாமிநாத ஐயர்
3. மலைபடுகடாம்- டாக்டர் கதிர் முருகு
4. குறுந்தொகை-புலியூர் கோசிகன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர் - முனைவர் அ.ஸ்ரீதேவி,,   உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்-641105. -