அமரர் எம்ஜிஆரின் நினைவு தினம் டிசம்பர் 24. அவரை நினைத்தால் முதலில் எனக்கு நினைவு வருவது 'நான்  ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்' என்னும் பாடல்தான். காரணம்? 'எங்க வீட்டுப்பிள்ளை'தான் நான் ஓரளவு அறியும் பால்ய பருவத்தில் முதன் முதலில் பார்த்து இரசித்த முதலாவது திரைப்படம்.  வவுனியா 'நியூ இந்திரா டாக்கீஸ்'  திரையரங்கில் பார்த்த திரைப்படம். முதற்  படத்திலேயே இந்தப் பாடலும், இவரின் வசீகர ஆளுமையும் பிடித்து விட்டன.

இருந்தவரை கலையுலகிலும், அரசியல் உலகிலும் மக்கள்  திலகமாக ஒளிர்ந்தார். வாழ்ந்திருந்த காலத்தில் எவ்விதம் மக்கள் மத்தியில் விளங்கினாரோ , இன்றும் , அமரராகி 35 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும் விளங்குகின்றார் என்பதை ஊடகங்களில்,  சமூக ஊடகங்களில், குறிப்பாக யு டியூப் சானல்களில் இவரைப்பற்றி வெளியாகும் காணொளிகள் வெளிப்படுத்துகின்றன. இவரால் பயனடைந்த பலர் அவ்விதம் அடைந்த பயன்களைப்பற்றி நன்றியுடன் நினைவு கூர்கின்றார்கள்.

இவரைப்பற்றி அரசியல்வாதிகள், சக கலை உலகைச் சேர்ந்தவர்கள், மெய்ப்பாதுகாவலர்கள்,  காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் எனத் தெரிவிக்கும் தகவல்கள் இவரைப்பற்றிய நேர்மறை மிகுந்த ஆளுமையின் பல்வேறு பக்கங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன.

குறை, நிறைகள் இல்லாத மனிதர்கள் எவருமில்லர். மகாத்மா காந்தியிடம் கூடக் குறைகள் இல்லாமலில்லை. எம்ஜிஆரும் இதற்கு விதிவிலக்கானவரல்லர். ஆனால் இவர்களிடம் இருந்த குறைகளை விட நிறைகள் மேலோங்கியிருந்தன. அதனால் தான் அவர் மகாத்மா ஆனார். இவர் மக்கள் திலகமானார். இவர்களது நிறைகள் மக்களுக்குப் பல்வேறு வழிகளில் மிகுந்த பயனைத்தந்தவை. அதனால்தான் இன்றுவரை இவரை மக்கள் , இன்றுள்ள இளைய தலைமுறையினருட்படக் கொண்டாடுகின்றார்கள்.

எம்ஜிஆர் திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை அவற்றில் இடம் பெறும் ஆரோக்கியமான கருத்துகள் உள்ளடங்கியுள்ள பாடல்கள்தாம். நல்ல கருத்துகளைக் கூறும் அப்பாடல்கள் வாழ்க்கைக்கு மிகவும் உதவும் தன்மை மிக்கவை. வழிகாட்டுபவை.

உளவியல் அறிஞர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல்களை நாங்கள் வாங்கி வாசிக்கின்றோம். அவ்வகையான காணொளிகளைப் பார்க்கின்றோம். அவற்றில் கூறப்படும் முக்கியமான விடயங்களிலொன்று வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு ஆரோக்கியமான கருத்துகளை மனம் இலேசாக இருக்கும் சமயங்களில் அடிக்கடி நினைத்து வந்தால் அவை ஆழ்மனத்தில் ஆழமாகப் பதிந்து வாழ்க்கைக்கு வழிகாட்டும். அதற்காக அவை எவ்விதம் ஆரோக்கியமான கருத்துகளை உள்வாங்குவது என்பதற்கான பயிற்சிகளை எல்லாம் விபரிக்கும். மனம் இலேசாக இருக்கும் தருணங்களில் சில இயற்கையை இரசிக்கையில் , இருட்டினில் மனமொன்றிச் சினிமா பார்க்கையில், அதிகாலைகளில் , தூங்கச் செல்கையில் .. இவ்விதம் கூறலாம். ஆனால் இவற்றையெல்லாம் மிகவும் இலகுவாகச் செய்கின்றன எம்ஜிஆரின் கருத்தாழம் மிக்க திரைப்படப்  பாடல்கள்.

பலர் எம்ஜிஆரின் இவ்விதமான கருத்தாழம் மிக்க, ஆரோக்கியமான கருத்துகளைக் கூறும் பாடல்கள் எவ்விதம் தங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டின என்று விபரித்திருப்பதை நான் பல தடவைகள் வாசித்திருக்கின்றேன். அவரது இரசிகர்களான பல இலட்சக்கணக்கான பாமர மக்களுக்கு வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல்களை வாங்கிப்படிக்க நேரமில்லை. பணமுமில்லை. ஆனால் அவர்கள் படிக்கும் புத்தகங்களாக இருந்தவை எம்ஜிஆர் படப்பாடல்களே. அதனால்தான் எம்ஜிஆரை அவர்கள் 'வாத்தியார்'என்று பிரியத்துடன் அழைத்தார்கள். இத்தனைக்கும் அவர் படித்ததோ மூன்றாம் வகுப்பு வரையில்தான். அவர் படித்ததெல்லாம் வாழ்க்கைப்பள்ளியில். ஏற்ற இறக்கங்கள் நிறைந்த அப்பள்ளி அனுபவங்களை அவர் எவ்விதம் எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றியீட்டினார் என்பது பிரமிக்கத்தக்கது. ஏனையோரின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூலாக இருப்பது அவரது வாழ்க்கை என்பேன்.

இவர் நினைவாக இன்று இப்பாடலைப் பகிர்ந்துகொள்கின்றேன். இப்பாடலைக் கேட்கையில் காற்சட்டை, 'சேர்ட்'டுடன் , தோற் பையுடன் பாடசாலை செல்லும் மாணவனாக மாறி விடுகின்றேன். வவுனியா ஸ்டேசன் வீதியும், யாழ் கண்டி வீதியும் சந்திக்கும் சந்தியிலிருந்த நகரின் மூன்று திரையரங்குகளில் ஒன்றான நியூ இந்திரா டாக்கீஸின் 'எங்க வீட்டுப் பிள்ளை'கான திரைப்பட விளம்பரப் 'பான'ரை இரசித்துச் செல்லும் சிறுவனாக மாறி விடுகின்றேன்.

பாடல் வரிகள் -  கவிஞர் வாலி
பாடகர் - டி.எம்.எஸ்
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
படம் - எங்க வீட்டுப் பிள்ளை

https://www.youtube.com/watch?v=Hy-QdKcW2Cg