- ஓவியம் - AI -

1. பூவுலகில் காதல் புனிதமே !  

      
மண்ணிலே நல்ல வண்ணம்
வாழவே வேண்டு மாயின்
உண்மையில் காதல் தானே
உயிராக இருக்கு தன்றோ

எண்ணிடும் போதே நெஞ்சில்
இன்பமே ஊற் றெடுக்க
பண் ணிடும் பாங்கை
காதல் பண்புடன் தருகுதன்றோ

உண்ணிடும் சோறு கூட
உடலுடன் சேர வேண்டில்
கண்ணிலே காதல் வந்தால்
கஷ்டமே கழன்றே போகும்

பழம் இனிது பாலினிது
பசித்தவர்க்கு உண வினிது
உள மினிக்க செய்வதற்கு
ஊக்கமது காதல் அன்றோ

தொட்டவுடன் முகம் சிவக்கும்
தூங்காது மனம் இருக்கும்
வட்ட நிலா ஓடிவரும்
வகைவகையாய் கனவு வரும்

கஷ்டமெலாம் போனது போல்
கனமின்றி உணர் விருக்கும்
காதலது இனி தென்று
கருத்தெல்லாம் நிறைந் திருக்கும்

மத்தாலே கடைந் தெடுத்த
வாச மொடு மோரிருக்கும்
வாசலிலே பழம் பழுத்து
வாழை மரம் நின்றிருக்கும்

அம்மாவின் கை பட்ட
அருஞ்சமையல் அரு கிருக்கும்
ஆனாலும் மன மெல்லாம்
அவை நினைவில் நிற்காது

காதலே இனி தென்று
கற்பனையாய் சொல்ல வில்லை
காதலே இனி தென்று
கதை கூறி நிற்கவில்லை

மக்களது வாழ்க் கையிலே
மலர்ச்சி நிலை வருவதற்கு
காதலைப் போல் மருந்ததனை
கண்டு கொள்ள முடியாது

சாதி பேதம் பார்க்காது
சமயம் கூட நோக்காது
சோதனைகள் வந்தி டினும்
சுகமுடனே ஏற்று நிற்கும்

பேதமெலாம் மறந்து விட்டு
பிரியமுடன் இணைப் பதனால்
காதல் என்றும் இனிதாக
கால மெலாம் இனிக்கிறது

அம்மாவின் காதல் அரவணைப்பு
அப்பாவின் காதல் வழிசமைப்பு
ஆசானின் காதல் அறிவூட்டல்
ஆண்டவனின் காதல் அருளாகும்

பூவுலகில் காதல் புனிதமே
புரியாத காதல் மெளனமே
சாதனையில் காதல் வைரமே
சந்தோசம் காதல் மலர்ச்சியே


                               - ஓவியம் - AI -

2. மலரின் மலர்ச்சி மனிதனுக்குப் பாடம் !

    காலையிலே எழுந்தவுடன்
   கண்ணெதிரே கண்டேன்
   கவலையின்றிப்  பூத்திருக்கும்
   கட்டழகு ரோஜா

   வேலையிலே விருப்பின்றி
   சோம்பலிலே கிடந்தேன்
   பூத்தரோஜா தனைப்பார்த்து
   பூரிப்பு அடைந்தேன்
    
   யாருக்காய் பூக்கின்றோம்
   என்று தெரியாது
   பூக்கின்றோம் பூக்கின்றோம்
   பூத்தபடி நிற்போம்
   பூப்பதிலே சோம்பலின்றி
   பூதந்து இருப்போம்
   பூப்பார்த்த வுடனேயே
   பூரிப்பைக் கொடுப்போம்

  சோம்பல் வந்துவிட்டதென
 சோர்ந்துவிட மாட்டோம்
  சுறுசுறுப்பாய் இருந்தபடி
 சுகம்கொடுத்து நிற்போம்
  சாந்தமெங்கள் போக்குவென
 சகலருக்கும் தெரியும்
 சந்தோஷம் கொடுப்பதுவே
 எங்கள் இயல்பாகும்

மற்றவர் மகிழ்ச்சியுற
மகிழ்ந்துமே நிற்போம்
மற்றவர் மனமுடைய
வாழ்விலே நினையோம்
சோம்பலுற்று வாழ்வினிலே
சோர்ந்துவிட மாட்டோம்
சொர்க்கத்தைக் காட்டுவதே
சுகமென்று நினப்போம்

விழுகின்ற மலர்பார்த்து
விழுதழுதல் மாட்டோம்
விழுவது எழுவதற்கென
விழித்தெழிந்து நிற்போம்
அழுகின்ற தொழிலைநாம்
அழித்துமே விட்டோம்
ஆனதால் என்றென்றும்
அழகினையே தருவோம்

பறிப்பாரின் கையினைப்
பக்குவமாய்ப் பார்ப்போம்
பறித்தவர்கள் எம்மழகை
பார்த்தபடி நிற்பர்
குறித்தமலர் அழகையவர்
குதூகலத்தால் ரசிப்பர்
கொண்டாட்டம் என்றாலே
கொண்டையிலும் வைப்பர்

ஆண்டவனின் அருகினிலே
அடைக்கலமும் ஆவோம்
ஆவேசக் கைகளிலே
அசிங்கமும் படுவோம்
ஆனாலும் ஆத்திரத்தை
அடக்கியே வைப்போம்
ஆதலால் என்றுமே
அழகாக இருப்போம்

காதலிக்கு பரிசாக
எங்களையே கொடுப்பார்
கல்யாணப் பந்தலிலே
மங்கலமாய் இருப்போம்
மாலையாய் கட்டியே
சூடியே மகிழ்வார்
மணமக்கள் அணைக்க
மகிழ்ச்சியையும் கொடுப்போம்

மானிலத்தில் மலர்கள்தான்
மாண்பான படைப்பு
தன்னலமே கருதாத
தனியான படைப்பு
உதிர்ந்தாலும் பூக்கும்
உன்னதமாம் படைப்பு
உளமகிழ வைப்பதே
மலர்களின் பிறப்பு

சமயங்கள் அத்தனையும்
நேசிக்கும் படைப்பு
சாதியை மொழியை
இணைக்கின்ற படைப்பு
சமத்துவமாய் யாவருக்கும்
இருக்கின்ற படைப்பு
சந்தோசம் தருகின்ற
மலர்களின் படைப்பு

மலரும் மணமும்
மனதை மயக்கும்
மலரும் மணமும்
இறையை இணைக்கும்
மலரும் அழகும்
புவியின் சொர்க்கம்
மலர்வு என்பதே
விடிவின் ஒளியே  !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.