பத்து மாதம் சுமந்தேன் - உன்;
   மழலை மொழியில் துவண்டேன்
   கூவிக்கொண்டு வந்த குண்டை
   ஊதுகுழல் என்று நீ
   குதூகலித்தே கை தட்ட
   குறிபார்த்துக் கொன்றதோ என் செல்வமே
   உன்னை...

   ஐயோ!
   என் உயிரே!
   ரத்தக் கறை படிந்த உன்னை
   சுட்டியணைத்து அழகு பார்க்கிறதே வெள்ளைத்துணி
   குவிந்திருக்கும் குழந்தைச் செல்வங்களுள் - நீ என்
   அழகுத் தேவதை அம்மா! - இங்கே உன்
   சலனமற்ற உடலைத் தாலாட்டிவிட்டு
   தனிமையில் நான்
   எப்படி என் இடிமனை செல்வேன்?

   ஜேருசலேம் சியோன் மலையருகில்
   புலம்பல் சுவரில்
   தலையை முட்;டி
   புலம்புகிறார்களாம் புண்ணியவான்கள் - இல்லை
   இதயமற்ற கொடியவர்கள்
   பேரிடி விழுந்த என்தலையை எங்கே? எந்தச்
   சுவரில் நான் மோதுவேன்?
   உலகமே கொந்தளிக்கிறது
   உச்சிமோந்து வழிகின்ற கண்ணீரில்
   கயவர்கள் செயல் கண்டு
   கற்பாறைகளும் கண்ணீர் சிந்துகின்றனவே!
   எத்தனை ஆயிரம் உயிர் துறந்த பால் முகங்கள்
   இது குழந்தைகளுக்கான போராட்டமா?

   மனச்சாட்சியை நிறுத்திப் பாருங்கள்
   போராட்ட அழிவுகள் நீதியானதா?
   பெயர் இல்லாத இந்த மரணம் கொடூரமானது
   போதும்... கனவுகளை விதைத்த குழந்தைகளை
   கல்லறைகளை விதைத்துப் புதைக்காதே!
   நாகரிகமான உலகில் - நீ
   நரித்தனமான சிந்தனையைத் தூவாதே!
   நொந்துபோன உலகம் இது
   சமர் செய்து பேசி மனிதனை வாழவிடு
   வாழ்க்கை கம்பீரமானது!                          

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.