ஒருமுறை நின்று நிதானித்து விட்டு
பயணத்தை தொடருங்கள்,
தூரம் சென்றபின்
துயரப்படாமல் இருப்பதற்கு.
ஆழம் சென்றபின்
அழிந்து விடாமல் பார்பதற்கு.

நித்திரை நீண்டு விட்டால்
நீ இங்கு இல்லை.
அப்பன் பெயரை
சுமந்த அதிகாரம் முடிந்தது.
உன் பிள்ளையும்
சில காலம் உன் பெயரைச்
சுமந்து உருக்குலைந்து போவான்.
வாழ்க்கை கணக்குக்கு
சில வேளை வரவும் புரியாது.
செலவும் புரியாது.

நதியோடு கலந்துவிடு.
நாணத்தை விட்டுவிடு.
விதியோடு உறவு என்ற
விபரீதம் கடந்துவிடு.
கதியை மாற்றிவிடு.
காலத்தை கடந்துவிடு.
சதியோடு போராடி.
சாம்பலாய் ஆகாதே.
மதி கொண்டு
எழுந்துவிடு.
மமதையுடன் வாழ்ந்துவிடு.

உன் கால் சலங்கை
கேட்கவில்லை.

கண் அசைவும்
பார்க்கவில்லை.

காதல் மொழி
இசைக் வில்லை.

கருங் கூந்தல்
மணக்கவில்லை.

மென்கைகள்
தீண்டவில்லை.

மேனி இங்கு
துடிக்கிறது.
உயிர் மூச்சைப்
பறிக்கிறது.

வரலாற்றை மாற்றும்
சக்தி கல்விக்கே
உண்டென கணித்துக்
கூறிய கல்லூரி,
அரும் பெரும் ஊருக்கு
ஆசிரியர் குழுவை
அமைத்துத் தந்த கல்லூரி,
பல்வகை சமூகமும்
பாகுபாடு இன்றியே
பாடம் கற்றிட்ட கல்லூரி,
கல்வியும் கலையும்
கற்று மகிழ்ந்த
காலத்தைக் காட்டிய
கண்ணாடி,
நூற்றாண்டு கண்டு
வென்றே நிக்குது முன்னாடி,

விவேகத்தின் செயல்கள்
வேகம் அல்ல நிதானம்,
அவதானம்,
என இப்போதான் உணர்கிறேன்
சற்றுக் காலம் கடந்த ஞானம்தான்

என்னை நேசித்தவர்களும்
நான் நேசித்தவர்களும்
பொதுவாக இருக்க வேண்டும்
என்ற கட்டாயம் இல்லைதானே.
கால ஓட்டத்தில்
யார் யாரையோ தேடிச்சென்று,
கடந்து சென்றும் தான் விடுகிறோம்.
காலமும் வெளியும்
காதலை மட்டுமல்ல
கனவுகளையும்
மாற்றிவிடுகின்றது.
செயல்களும் விளைவுகளும்
சிலவேளை சேதங்களையும்
ஏற்படுத்திவிடுகின்றன.
சில எல்லைக் கோடுகளுக்குள்
இயங்கியே
மனித குலத்துக்கு துரோகம்
இழைத்து விடுகிறன.

விழிப்பு என்பது
எல்லா நிலைகளிலும்
தேவை.
இல்லையேல்
கசப்புகளைத்தான்
கண்டு கொண்டு
இருக்க வேண்டும்.