1.

கதை சொல்லும்போது  உம்  உம் கொட்ட வேண்டும்.
சுவாரஸ்யம் அவருக்கு இருக்காது.
சிறு குறும்புகளெனினும் கைத்தடி
என் முதுகைப் பதம் பார்க்கும்
அக்கா வலிக்கு ஒத்தடம் கொடுப்பாள்.
அம்மா உள்ளுக்குள் அழுவாள்.
அப்பா தன் கண்டிப்பை விடுவதாயில்லை.
அக்காவுக்குத் திருமணம் ஆயிற்று.
கதை சொல்ல முடியவில்லை.
பேரன் கிடைத்தான்.
அவனும் சாதுர்யமாக உம் கொட்டிக் கொண்டே  தூங்குவான்.
அப்பாவுக்கும் உள்ளூர மகிழவே...
ஒருநாள் பேரனிடமிருந்து உம் வரவில்லை.
அவனின் முதுகைப் பதம் பார்த்துவிட்டது கைத்தடி.
அக்கா கோபத்தில் வெளியேறிவிடடாள்.
அம்மா உள்ளுக்குள் அழுது தீர்த்தாள்.
கதைச்செல்ல அப்பாவுக்கு ஆள் கிடைக்கவில்லை.
சுவருடன்,மரங்களுடன்,
பூக்களுடன்
பேசி இறந்துபோனார்.

அக்கா வந்தாள்.
பேரனும் நெய் விளக்கு பிடித்தான்.
எல்லாம் ஆயிற்று.
அக்கா  போகும் போது கைத்தடியை
மறக்காமல் எடுத்து சென்றாள்.
இனி
அப்பாவின் கைத்தடி
ஆயிரம் கதைகள் சொல்லக்கூடும்.

2.

ஒற்றைக் காற்சிலம்பை
பத்திரபடுத்தி   வைத்திருக்கிறேன் நெடுநாளாய்…
தன்  விட்டுச் சீதனமாய்
பெற்றதை எனக்குத் தந்திருந்தாள்  அம்மா.
விவசாயக்கடன் கடடவென
மாமா அடிக்கடி வாங்கிச் செல்வதுண்டு.
அதில் ஒன்றை அவரே
தொலைந்து  விட்டதாகச்   சொல்லி
தானும் ஒரு நாள்   காணாமல் போனார்.
குடிகார அப்பாவும்
ஒற்றைச்சிலம்பைக்  கேட்டுப்பார்த்தார்...
அம்மா காப்பாற்றித் தந்திருந்தாள் .
இன்று அம்மாவும் இல்லை...
சப்பாத்துக் கால்கள்
வீட்டையும்,என்னையும் சூறையாடிய பின்னும்,
தனிமரமாய்..
அந்த ஒற்றைச் சிலம்பைப்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்..
காணாமலாக்கப்பட்ட
என் போராளி மாமனுக்காக..காதலுடன் ...

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.