கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாள் ஜூன் 24!

கண்ணதாசன் கவிதைக்கு கற்கண்டே தோற்றுவிடும்.
அவ்வளவு சுவையினையும் அவனளித்து நின்றானே.
காதலினைப் பாடிவிடின் காமனுமே வந்திடுவான்.
தேமமதுரத் தமிழாலே திசைநுகரக் கவிதந்தான்.

பாவாணர் மத்தியிலே பக்குவமாய்க் கவிதந்தான்.
பாரதிரக் கவிதந்த பாரதிக்கு மகனானான்.
ஓவியமாய்க் கவிதந்தான் உயிர்ப்புடனும் கவிதந்தான்.
சேமமுற வாழ்வதற்கும் சீராகக் கவிதந்தான்.

சிறுகூடல் பட்டியிலே சிரித்து விளையாடியவன்.
சிந்தனைக்குக் கவிதைதரும் சிறப்பினையே பெற்றுவிட்டான்.
நோதலுக்கும் ஒத்தடமாய் நுட்பமாய்க் கவிதந்தான்.
போதிக்கும் அவன்கவிதை புதுக்கருத்தாய் மிளிர்ந்ததுவே.

சொத்துக் குவிப்பதனை சுகமாகக் கொள்ளாமல்.
வித்தகனாய் இருப்பதையே விருப்பமா யவன்கொண்டான்.
வர்த்தகச் சினிமாவில் மாட்டாமல் இருந்திருப்பின்.
வைகத்தை வாழ்விக்க வந்திருப்பான் கம்பனைப்போல்.

கவியரசு கண்ணதாசா காலமெலாம் வாழுகிறாய்.
தமிழுலகில் உன்கவிதை தானுரமாய் நிற்குமையா.
செவிநுகரக் கவிதந்த கவியரசன் நீயன்றோ.
புவிமுழுதும் உன்கவிதை புகழோடு திகழுமையா.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.