தந்தையர்தினக் கவிதை!

    ஈன்றெடுத்தாள் அம்மா  எனைச் சுமந்தார் அப்பா
     சான்றோனாய் என்னை சபை வைத்தார் அப்பா
     நான் தடுக்கும் வேளை தாங்கிடுவார் நாளும்
     வானளவு  உயர வாழ் வளித்தார் அப்பா

    ஊனுருக எனக்குப் பால் கொடுத்தாள் அம்மா
    உயரோங்கி நிற்க உழைப் பீந்தார் அப்பா
    தனக் கெனவே எதுவும் சேர்க்காத அப்பா
    எனக் கெனவே தேடி குவித்திட்டார் வாழ்வில்

    விருப் பென்று எதையும் வெளியிடார்  அப்பா
    பொறுப் புடனே யாவும் ஆற்றிடுவார் அப்பா
    என் உயர்வு ஒன்றே தனக்கான தென்பார்
    கண் மணியாய் கருத்தில் இருத்தினார் அப்பா

   தோழேற்றி என்னைச் சுகங் காண்பார் அப்பா
   தோழனாய் இப்போ ஆகி விட்டார் எனக்கு
   வாழ்வினிலே எனக்கு வரம் ஆனார் அப்பா
   வணங்கு கின்ற தெய்வமாய் தெரிகிறார் அப்பா

   ஊண் உறக்கம்  மறந்து உழைப்பாரே  அப்பா
   உலகமே நான் எனவே நினைப்பாரே அப்பா
   தோழ் கொடுத்து என்னைச் சுமந்தாரே அப்பா
   சுகம் அனைத்தும் கொடுத்து மகிழ்ந்தாரே அப்பா

   நாவினிக்க பேசு என வுரைப்பார் அப்பா
   நலஞ் சிறக்கும் நட்பை நாடென்பார் அப்பா
   கோப மெனும் குணத்தை மறந்துவிடு என்பார்
   குணம் என்னும் குன்றேறி நின்றிடுவாய் என்பார்

  குறை காணின் களைவார் நிறைவானால் மகிழ்வார்
   பொறை நிறைக வென்றே  மனமெண்ணி நிற்பார்
   நரை காணு முன்னே பலதேடு வென்பார்
 அரை குறையாய் கருமம் ஆற்றாதே என்பார்
      
   ஊற்றுப் போல் நில்லு உறங்காது வெல்லு
   காற்றைப் போல் இயங்கு கண்ணியத்தை ஏந்து
  நாற்றாக விளங்கு நல் விளைச்சல் நல்கு
   என்றப்பா  நாளும் எடுத் துரைத்து நிற்பார்
 
   இடர் வரா எனக்கு அணையாவார் அப்பா
   படர் துன்பம் அனைத்தும் துடைத்திடுவார் அப்பா
   விட  முடைய அனைத்தும் வெறுத்திடுவார் அப்பா
   நட  முன்னே என்று வழியாவார் அப்பா

   இலக்கிய மாவார் இலக்கண மாவார் எங்களப்பா
   குலைத்திடு தலைக்கனம் கொண்டிட மாட்டார் எங்களப்பா
   நிலைத்திட நினைப்பார் நிம்மதி நிறைப்பார் நெஞ்சிலப்பா
   நிமிர்ந்துமே நிற்பார் நீள்நிலம் வியக்க எங்களப்பா

   அப்பாவை எண்ண வெண்ண அளவில்லா ஆனந்தம்
   அப்பாவின் அருகிருந்தால் அனைத்தும் என் வசமாகும்
   அப்பா என் வாழ்னுக்கு அருமருந்தாய் ஆகிவிட்டார்
   அப்பாவை ஆண்டவனாய் அனு தினமும்  போற்றுகிறேன்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.