மாதுயர்ப்படு முஸ்லிம்
மனம் போல ஒன்று,
மண்ணிழந்து தவிக்குதமிழ் மகன்போல ஒன்று,
சாதுமார் அரசியலைச் சார்வதனைக் கண்டு
சகியாது புலம்புபவன்
மனம் போல ஒன்று,
சூதுநிறை தொல்லியல்சார்
திணைக்களத்தின்
சூழ்ச்சிகளால் துயர்கொள்ளும்
மனம் போல ஒன்று,
ஆதனமாய் இராவணன்தான்
அன்றமைத்துக்கொண்ட
அருங்கன்னியாயிலுண் டெழுவெந்நீர்ச் சுனைகள்...

தமிழர் தம் கிணறுகளைத் தமதென்று கொள்ளும்
தகவின்மை கண்டுகொதி
மனம் போல ஒன்று,
அமிழ்தொத்த புத்திரரைக்
காணாது தேடி
அலைகின்ற அன்னையரின்
மனம் போல ஒன்று,
உமிழ்கின்ற எச்சிதனிற்கூட
இனவாத
ஓர்மவிசங் கண்டுசுடு மனம் போல ஒன்று,
கமழ்கின்ற தமிழ்த் தாயின்
கலைநகரேயான
கவின்கன்னியாயி லுண்டெழு
வெந்நீர் சுனைகள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.