எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், ஓய்வு பெற்ற நெசவு ஆசிரியையும், இலங்கை அரசியலில் நன்கறியப்பட்ட பொதுவுடமைவாதியான  கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களின் மனைவியாருமான  திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம்  மறைந்த செய்தியினை முகநூல் தாங்கி வந்தது.  இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைந்து செயற்பட்ட மீரான் வாத்தியின் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  முதுமைக்காலத்திலும் சத்தியமனை நூலகச் செயற்பாடுகளில் இயங்கிக்கொண்டிருந்தவர். நாட்டின் பிரதமர் உட்படப் பலர் தம் யாழ் மாவட்டப் பயணங்களின்போது செல்லுமிடங்களில் ஒன்றாகச் சத்தியமனை நூலகம்  அமைந்திருப்பதற்கு முக்கிய காரணம் இவரது அந்நூலகச் செயற்பாடுகளே.   

இவர் பாடசாலைக் காலத்திலேயே எழுத்திலார்வம் மிக்கவராகத் திகழ்ந்தவர். பாலபண்டிதரும் கூட.  தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்.  இலங்கையிலிருந்து வெளியாகும் தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இணைந்து பணியாற்றியவர்.  

வாழ்வில் மனைவியாக, தாயாக வாழ்வின் சவால்கள் பலவற்றைச் சந்தித்தவர். அப்போதெல்லாம் அவற்றால் துவண்டு விடாது அயராது போராடியவர். இறுதிவரை மானுட நேயம் மிக்கவராக, சமுதாயப் பிரக்ஞை மிக்கவராக இவரது இருப்பு அமைந்திருந்தது. 

முதுமையிலும் பலரைப்போல் தளர்ந்து , மூலையில் ஒடுங்கி, ஒதுங்கி  விடாது இயங்கிய் இவரது ஆற்றல் பிரமிக்கத்தக்கது. அண்மையில் இவர் தன் ஆசிரிய அனுபவங்களை   "பசுமையான நினைவுகளின் பண்ணாகம் மெய்கண்டான்" என்னும் தலைப்பில் எழுதினார்.   இவரது கவிதைகள், சிறுகதைகளின் தொகுப்பு "வெற்றிக்கு வலிகள் தேவை"  என்னும் தலைப்பில் தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடாக வெளியானது.  தன் கணவருடனான் வாழ்க்கை அனுபவஙக்ளை முகநூலில் ''வாழ்வின் சந்திப்புகள்"  என்னும் தலைப்பில் எழுதி வந்தவர்.

இருப்பு வழங்கிய வாதைகள் கண்டு வதங்கி விடாது  வாழ்ந்த இவரது வாழ்க்கை ஒரு முன் மாதிரி. இருக்கும் வரை பயனுள்ள இருப்பாக நம் இருப்பை இருக்க வைக்க வேண்டுமென்பதைத்தான் இவரது இருப்பு இங்கு எடுத்தியம்புகின்றது.  அதுவே பயனுள்ள பாடமாகவும் இருக்கிறது.

இவரது மறைவையொட்டி எழுத்தாளரும் ,, சமூக,அரசியற் செய்ற்பாட்டாளருமான சுகன் தனது முகநூற் பதிவாக,  இதயபூர்வமான, நெகிழ வைக்கும்  , முக்கியத்துவம் மிக்க குறிப்பொன்றினை எழுதியுள்ளார். அதனை  திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் நினைவாக இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.  அத்துடன் இவர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர் துயரில் நாமும் ,  பங்குகொள்கின்றோம்.

சுகனின் முகநூற் பதிவு

எழுத்தாளர் சுகனின் அஞ்சலிக் குறிப்பு:

எனது இன்னொரு வீடு தொல்புரம் - சுழிபுரம் சத்தியமனை, இன்னொரு தாயார் திருமதி வள்ளியம்மை. என் அம்மாவின் தங்கை பெயரும் வள்ளியம்மை தான். போராட்டத்தில் இணைந்த வாழ்வின் தொடக்ககாலத்தில் மீரான் மாஸ்ரரோடான தொடர்பு . 1982 இல் வட்டுக்கோட்டை "தாயகம்'' வீட்டில்  மீரான் மற்றும் சத்தியமூர்த்தியுடன்   சுகந்தன் ஏற்பாட்டில் அரசியற் கலந்துரையாடல் . 
பின் மீரான் பின் தளம் போய்விட்டார். 1983 பிற்பகுதியில் சத்தியமனைக்குப் போய் மணியத்தாருடன் உரையாடி தாயகம் சஞ்சிகை பெற்றுவருவதுண்டு. இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சி ( இடது )  சார்பான தேசிய கலை இலக்கியப் பேரவையினது    சஞ்சிகை தாயகம். 

ஒரு கம்யூனிஸ்ட் எளிமைக்கும் புரட்சிகர ஓர்மத்திற்கும் முன்  உதாரணமான குடும்பமும் வீடும் சத்தியமனை. நான்  வழக்கம்பரை முகாமில் இருந்த ஒரு நாளில் மீரான்,'' வீட்டை போயிட்டு வருவோம் வாரும் !"  என என்னை அழைத்தார். ஒரு புல்லட் புறூவ் ஜக்கெட்டும் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் PLFP ஜோர்ஜ் அப்பாஸ் உமாமகேஸ்வரனுக்கு அன்பளித்த கைத்துப்பாக்கியும் மீரானிடமிருந்தது .அன்று கார்த்திகை விளக்கீடு. கொழுக்கட்டை அவித்திருந்தார் அம்மா . 

அவசரமாக வாங்கிச் சாப்பிட்டு அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினோம் . அதுவே தாய்க்கும் மகனுக்கும் இடையில் நடந்த இறுதிச் சந்திப்பு. பின்  அவர்கள் சந்திப்பு நிகழவேயில்லை. . சிறையில் மீரானும் சத்தியமூர்த்தியும் .சிறை  வதைகளின் கோர நாட்கள் அவை. சுகு ஸ்ரீதரன், கீரன் எல்லோரும் ஒரே சிறைச்சாலை வாழ்வியர். தன் கணவர் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டத்தில் பொலிஸ் தாக்குதலிற்குள்ளாகி மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் கண்டவரும் மகனை சிறைக்கூடத்தில் கொடிய சித்திரவதை அனுபவிக்க அறிந்தவரும் அவர் ஒருவராய் எத்தனை உள உபாதைகளுடன் வாழ்வை எதிர்கொண்டிருப்பார். 

போர் ஓய்ந்து கொழும்பில்   அம்மாவை 30 வருடங்களின் பின் பார்த்தேன் .  அந்த மதிய உணவை அவர் எனக்குப் பரிமாறும்போது அம் மீ சையில் இருந்தது ஒரு இரவுக்கும் மறுநாள் காலைக்கும் உள்ள பொழுது வித்தியாசம்தான். உணவிடும் தாய்மைக்கு மகன்களில் பேதமில்லை.

"உனக்கு அம்மா அப்பா இருவருக்கும் கொள்ளி வைக்கும் பலன் குறிப்பில் இல்லை !" என அக்கா சொன்னபடியே எனக்கு அமைந்தது . போலவே மீரானுக்கும் தாய் தந்தை இருவரையும் இறந்தநாள் வரை  பார்க்கும் கொடுப்பினை கடைசிவரை  அமையவில்லை..ஆனாலும் எனக்கும் அவருக்கும்  தாய் பிள்ளை  உறவு  நெருக்கம் தொடர்ந்துவந்தது. என் அம்மா என்னை 'ஐயா'  என்று விளிப்பதைப்போலவே   அம்மாவும் பபியும்  என்னை ஐயா ! என அழைப்பது . ஆனாலும் 87 வயதிலும் அவருக்கு நினைவு தவறவில்லையென்பதோடு தொடர்ச்சியான எழுத்துப் பணியிலும் அவர் நினைவின் துல்லியத்தோடிருந்தார். 
மேலும் சிறார் நூல்களை எழுதி வெளியிடுவதற்கான தன் குறிப்பேட்டுத் தரவுகளைப் புதுப்பித்து வந்தபடியிருந்தார்.  அபூர்வமான ஆளுமை அம்மா !  மகள் பபி தன் தாயாரை இறுதிக் காலங்களில் பராமரித்த திண்ணம் மெய்சிலிர்க்க வைக்கக்கூடியதும் முன் உதாரண வாழ் நிலையுமாகும். தன் குழந்தையை விட்டு இமைக்கணமும் அகல நினையாத் தாய்போல தன் தாயாரை தனக்கேற்பட்ட கடும் உடல் நிலையையும் கவனத்தில் கொள்ளாது பராமரித்துவந்தார். வாழ்வே அதிசயமாகிப்போன காலத்தில் வாழ்கிறோம். குடும்பத்தில் பேரிழப்பும் நீள் துயரும் அம்மாவுக்கு விடுதலையும்..!