வலசைப் போகும் ஒற்றைப் பறவையின்
சுதந்திரப் பெருவெளியில் இலக்கற்றுப்
பெருமரத்தில் இளைப்பாறுகிறேன்

புதுப்பெருக்கில் கால் நனைக்கும் சிறுமியின்
துள்ளல் மிகுந்த உற்சாக மகிழ்ச்சியில்
நழுவிப் போனது தண்ணீர் மட்டுமல்ல
எனது வாழ்க்கையும்

நடந்து செல்லும் எருமையின்
தியான பவனியில் கரைந்துபோக
மறுக்கும் சிறுவனின் பயணம்

கரையோரம் வந்தமர்ந்து தலை தூக்கி
என்னைப் பார்க்கும் பாம்பிற்குத்
தெரிந்துவிட்டது மரணத்தின் வாசல்
தப்பிவிட துள்ளி எழுந்தாலும்
வசமாய் மாட்டிக் கொண்டது எனது கை விரலில்

மாலையின் கடைசிச்சொட்டு வெளிச்சத்தில்
பறந்து செல்லும் கொக்கின் தனிமை
இரவெல்லாம் தூங்கவிடாமல் தொந்தரவு செய்கிறது

சூழ்ந்த வெள்ளத்தில் இருக்க இடம் தேடி
மாடிப்படிகளில் அண்டினோம்
ஒரு பானைச் சோற்றில் ஒரு பிடி
உப்பிற்கு இரந்துண்ண மறுத்து
இயலாமையின் உக்கிரத்தில் பொழுதுகள்

நடந்து செல்லும் பாதையெல்லாம்
வாழ்ந்ததின் வழித்தடங்கள்
அந்நியமாகி என்னைப் பார்த்துப்
புருவம் உயர்த்தும் ஓணானைப் போல!




இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.